Tuesday, June 28, 2016

எள்ளோரை எப்படிச் செய்வது?



என்னென்ன தேவை?
குதிரைவாலி அரிசி - ஒரு கப்
வறுத்து அரைக்க:
கறுப்பு எள் - 50 கிராம்
காய்ந்த மிளகாய் - 3
உளுந்து - ஒரு டேபிள் ஸ்பூன்
பெருங்காயத் தூள் - கால் டீஸ்பூன்
எண்ணெய், உப்பு - தேவையான அளவு
தாளிக்க:
கடுகு, கடலைப் பருப்பு - தலா ஒரு டீஸ்பூன்
வேர்க்கடலை - ஒரு டேபிள் ஸ்பூன்
கறிவேப்பிலை - ஒரு ஆர்க்கு
முந்திரிப் பருப்பு - 6
நல்லெண்ணெய் - 3 டேபிள் ஸ்பூன்
எப்படிச் செய்வது?
குதிரைவாலி அரிசியைத் தண்ணீர் விட்டுக் களைந்து, 1: 2 என்ற விகிதத்தில் தண்ணீர் ஊற்றி குக்கரில் 3 விசில் வரும்வரை வேகவையுங்கள். சூடு ஆறியதும் ஒரு பெரிய தாம்பாளத்தில் கொட்டி, மேலே ஒரு டேபிள் ஸ்பூன் எண்ணெய் ஊற்றி ஆறவையுங்கள்.
எள்ளைத் தண்ணீர் விட்டுக் களைந்து வடிகட்டி, தண்ணீர் இல்லாமல் வையுங்கள். வாணலியை அடுப்பில் வைத்துச் சூடானதும் எள்ளைப் போட்டு வறுத்தெடுங்கள். அதே வாணலியில் ஒரு டீஸ்பூன் எண்ணெய் விட்டு காய்ந்த மிளகாய், உளுந்து, பெருங்காயத்தை வறுத்தெடுங்கள். ஆறியதும் எள்ளைத் தவிர மற்ற பொருட்களை அரைத்து, கடைசியாக எள்ளைப் போட்டு அரையுங்கள்.
வாணலியில் எண்ணெய் ஊற்றிக் காய்ந்ததும் கடுகு, கடலைப் பருப்பு, வேர்க்கடலை, முந்திரிப் பருப்பு, கறிவேப்பிலை ஆகியவற்றைப் போட்டு வறுத்து, அதை சாதத்துடன் சேர்த்துக் கிளறுங்கள். வறுத்து அரைத்த பொடியையும் தேவையான அளவு சாதத்துடன் கலந்தால் சுவையான எள்ளோரை தயார்.

No comments:

Post a Comment