Tuesday, May 31, 2016

திருச்செந்தூர் அதிசயம்................!




தென் தமிழகத்தின் கடைக்கோடியில் உள்ள அசுரரையும், சுனாமியையும் வென்ற திருச்செந்தூர் முருகன் கோயில் -
ஒரு கட்டிடக் கலை அதிசயம் !.
பொதுவாக யாரும் கடற்கரையை ஒட்டி பெரிய கட்டிடங்கள் கட்டுவதில்லை.
கடற்கரைப் பகுதிகளில் நிலத்தடி நீர்மட்டம் தரைக்கு மிக அருகில் இருக்குமாதலால் இங்கு கட்டப் படும் கட்டிடங்கள் விரைவில் பலவீனமாகி விடும்.
அப்படியே கட்டினாலும் தரை மட்டத்திலிருந்தும் கடல் மட்டத்திலிருந்து உயரமான மேடைகளை அமைத்து அதன் மேல்தான் கட்டுவார்கள்.
ஆனால்,
திருச்செந்தூர் முருகன் கோயில் கடற்கரையிலிருந்து வெறும் 67 மீ தொலைவில் அமைக்கப்பட்டுள்ளது.
133 அடி உயரமுள்ள இந்த திருக்கோயிலின் ராஜ கோபுரம், கடற்கரையிலிருந்து 140மீ தொலைவில்தான் அமைந்துள்ளது.
எல்லாவற்றையும் விட பெரிய வியப்பு இந்த கோயிலின் கருவறை. இது தரை மட்டத்திலிருந்து 15 அடியும், கடல் மட்டத்திலிருந்து 10 அடியும் தாழ்வான இடத்தில் கட்டப்பட்டுள்ளது !.
திருச்செந்தூர் விவரங்கள் தொல்காப்பியம், புறநானூறு, அகநானூறு, திருமுருகாற்றுப்படை சிலப்பதிகாரம் போன்ற சங்ககால இலக்கியங்களில் காணப்படுவதை நாம் கருத்தில் கொண்டால், இந்த கோயில் கட்டப்பட்டு குறைந்தது 3000 ஆண்டுகளுக்கு மேல் இருக்குமென்று நாம் அறிந்து கொள்ளலாம்.
இவ்வளவு ஆபத்தான இடத்தில், கடலுக்கு மிக அருகில் துணிந்து கட்டப்பட்ட இந்த திருக்கோயில் இத்தனை ஆண்டுகளாக எந்தவித பாதிப்புகளுமில்லாமல் கம்பீரமாக நிற்பதை பார்க்கும்போது நமது முன்னோர்களின் கட்டிடக்கலை அறிவும் திறமையும், கடவுள்
மேல் அவர்களுக்கிருந்த நம்பிக்கையும் நம்மை வியப்பில் மூழ்கடித்து விடுகிறது!

Monday, May 30, 2016

மூலிகைப் பொடிகளின் பெயர்களும், அதன் பயன்களும்:-



மூலிகைப் பொடிகளின் பெயர்களும், அதன் பயன்களும்:-
*அருகம்புல் பவுடர் :- அதிக உடல் எடை, கொழுப்பை குறைக்கும், சிறந்த ரத்தசுத்தி
*நெல்லிக்காய் பவுடர் :- பற்கள் எலும்புகள் பலப்படும். வைட்டமின் "சி" உள்ளது
*கடுக்காய் பவுடர் :- குடல் புண் ஆற்றும், சிறந்த மலமிளக்கியாகும்.
*வில்வம் பவுடர் :- அதிகமான கொழுப்பை குறைக்கும். இரத்த கொதிப்பிற்கு சிறந்தது
*அமுக்கலா பவுடர் :- தாது புஷ்டி, ஆண்மை குறைபாடுக்கு சிறந்தது.
*சிறுகுறிஞான் பவுடர் :- சர்க்கரை நோய்க்கு மிகச் சிறந்த மூலிகையாகும்.
*நவால் பவுடர் :- சர்க்கரை நோய், தலைசுற்றுக்கு சிறந்தது.
*வல்லாரை பவுடர் :- நினைவாற்றலுக்கும், நரம்பு தளர்ச்சிக்கும் சிறந்தது.
*தூதுவளை பவுடர் :- நாட்பட்ட சளி, ஆஸ்துமா, வரட்டு இருமலுக்கு சிறந்தது.
*துளசி பவுடர் :- மூக்கடைப்பு, சுவாச கோளாருக்கு சிறந்தது.
*ஆவரம்பூ பவுடர் :- இதயம் பலப்படும், உடல் பொன்னிறமாகும்.
*கண்டங்கத்திரி பவுடர் :- மார்பு சளி, இரைப்பு நோய்க்கு சிறந்தது.
*ரோஜாபூ பவுடர் :- இரத்த கொதிப்புக்கு சிறந்தது, உடல் குளிர்ச்சியாகும்.
*ஓரிதழ் தாமரை பவுடர் :- ஆண்மை குறைபாடு, மலட்டுத்தன்மை நீங்கும்.வெள்ளைபடுதல் நீங்கும், இது மூலிகை வயாகரா
*ஜாதிக்காய் பவுடர் :- நரம்பு தளர்ச்சி நீங்கும், ஆண்மை சக்தி பெருகும்.
*திப்பிலி பவுடர் :- உடல் வலி, அலுப்பு, சளி, இருமலுக்கு சிறந்தது.
*வெந்தய பவுடர் :- வாய் புண், வயிற்றுபுண் ஆறும். சர்க்கரை நோய்க்கு சிறந்தது.
*நிலவாகை பவுடர் :- மிகச் சிறந்த மலமிளக்கி, குடல்புண் நீக்கும்.
*நாயுருவி பவுடர் :- உள், வெளி, நவமூலத்திற்க்கும் சிறந்தது.
*கறிவேப்பிலை பவுடர் :- கூந்தல் கருமையாகும். கண்பார்வைக்கும் சிறந்தது.
*வேப்பிலை பவுடர் :- குடல்வால் புழு, அரிப்பு, சர்க்கரை நோய்க்கு சிறந்தது.
*திரிபலா பவுடர் :- வயிற்றுபுண் ஆற்றும், அல்சரை கட்டுப்படுத்தும்.
*அதிமதுரம் பவுடர் :- தொண்டை கமறல், வரட்டு இருமல் நீங்கும், குரல் இனிமையாகும்.
*துத்தி இலை பவுடர் :- உடல் உஷ்ணம், உள், வெளி மூல நோய்க்கு சிறந்த்து.
*செம்பருத்திபூ பவுடர் :- அனைத்து இருதய நோய்க்கும் சிறந்தது.
*கரிசலாங்கண்ணி பவுடர் :- காமாலை, ஈரல் நோய், கூந்தல் வளர்ச்சிக்கு சிறந்தது.
*சிறியாநங்கை பவுடர் :- அனைத்து விஷக்கடிக்கும், சர்க்கரை நோய்க்கும் சிறந்தது.
*கீழாநெல்லி பவுடர் :- மஞ்சள் காமாலை, சோகை நோய்க்கு சிறந்தது.
*முடக்கத்தான் பவுடர் :- மூட்டு வலி, முழங்கால்வலி, வாததுக்கு நல்லது.
*கோரைகிழங்கு பவுடர் :- தாதுபுஷ்டி, உடல் பொலிவு, சரும பாதுகாப்பிற்கு சிறந்தது.
*குப்பைமேனி பவுடர் :- சொறிசிரங்கு, தோல் வியாதிக்கு சிறந்தது.
*பொன்னாங்கண்ணி பவுடர் :- உடல் சூடு, கண்நோய்க்கும் சிறந்தது.
*முருஙகைவிதை பவுடர் :- ஆண்மை சக்தி கூடும்.
*லவங்கபட்டை பவுடர் :- கொழுப்புசத்தை குறைக்கும். மூட்டுவலிக்கு சிறந்தது.
*வாதநாராயணன் பவுடர் :- பக்கவாதம், கை, கால் மூட்டு வலி நீங்கும்.
*பாகற்காய் பவுட்ர் :- குடல்வால் புழுக்கள் அழிக்கும். சர்க்கரை நோய் கட்டுக்குள் இருக்கும்.
*வாழைத்தண்டு பவுடர் :- சிருநீரக கோளாறு, கல் அடைப்புக்கு மிகச் சிறந்தது.
*மணத்தக்காளி பவுடர் :- குடல் புண், வாய்புண், தொண்டைபுண் நீங்கும்.
*சித்தரத்தை பவுடர் :- சளி, இருமல், வாயு கோளாறுகளுக்கு நல்லது.
*பொடுதலை பவுடர் :- பேன் உதிரும், முடி உதிரிவதை தடுக்கும்.
*சுக்கு பவுடர் :- ஜீரண கோளாறுகளுக்கு சிறந்தது.
*ஆடாதொடை பவுடர் :- சுவாச கோளாறு, ஆஸ்துமாவிற்கு சிறந்தது.
*கருஞ்சீரகப்பவுடர் :- சக்கரை, குடல் புண் நீங்கும், நஞ்சு வெளிப்படும்.
*வெட்டி வேர் பவுடர் :- நீரில் கலந்து குடித்துவர சூடு குறையும், முகம் பொலிவு பெறும்.
*வெள்ளருக்கு பவுடர் :- இரத்த சுத்தி, வெள்ளைப்படுதல், அடிவயிறு வலி நீங்கும்.
*நன்னாரி பவுடர் :- உடல் குளிர்ச்சி தரும், சிறுநீர் பெறுக்கி, நா வறட்சிக்கு சிறந்தது.
*நெருஞ்சில் பவுடர் :- சிறுநீரக கோளாறு, காந்தல் ஆகியவற்றை நீக்கும்.
*பிரசவ சாமான் பவுடர் :- பிரசவத்தினால் ஏற்படும் அதிகப்படியான இழப்பை சரி செய்யும், உடல் வலிமை பெறும். தாய்பாலுக்கு சிறந்தது.
*கஸ்தூரி மஞ்சள் பவுடர் :- தினசரி பூசி வர முகம் பொலிவு பெறும்.
*பூலாங்கிழங்கு பவுடர் :- குளித்து வர நாள் முழுவதும் நறுமணம் கமழும்.
*வசம்பு பவுடர் :- பால் வாடை நீங்கும், வாந்தி, குமட்டல் நீங்கும்.
*சோற்று கற்றாலை பவுடர் :- உடல் குளிர்ச்சி, முகப்பொலிவிற்கு பயன்படும்.
*மருதாணி பவுடர் :- கை , கால்களில் பூசி வர பித்தம், கபம் குணமாகும்.
*கருவேலம்பட்டை பவுடர் :- பல்கறை, பல்சொத்தை, பூச்சிபல், பல்வலி குணமாகும். —

கஷ்டங்கள் போக்கும் பைரவர் எளிய பரிகாரங்கள்..................!




கல்வியில் வெற்றிபெற:
புதன்கிழமைகளில், புதன் ஹோரையில் மரிக்கொழுந்து மாலை அணிவித்து, புனுகு பூசி, பாசி பருப்பு பொடி கலந்த அன்னத்துடன் பருப்பு பாயசம் நிவேதனம் செய்து, பைரவரை அர்ச்சித்து வழிபட வேண்டும்.
வியாபார வெற்றிக்கு:
புதன்கிழமைகளில் காலை 10.30 முதல் 12 மணிக்குள் பைரவருக்கு சந்தனக் காப்பு செய்து, மரிக்கொழுந்து மாலை அணிவித்து, புனுகு பூசி, பாசிப் பயறு சுண்டல், பாசிப் பயறு பாயாசம், பாசிப்பயறு பொடி கலந்த அன்னம், கொய்யாப் பழம் இவைகளை நிவேதனமாக வைத்து, அர்ச்சித்து பைரவரை வழிபட வேண்டும்.
பணக் கஷ்டம் நீங்கிட:
மண் அகலில் தாமரைத் திரி போட்டு, நெய் விளக்கு ஏற்றி ஞாயிற்றுக்கிழமை ராகு கால நேரம் அல்லது தேய்ப்பிறை அஷ்டமி அல்லது பவுர்ணமி அல்லது வெள்ளிக்கிழமைகளில் ஸ்ரீ சொர்ண ஆகர்ஷண பைரவ பூஜையைத் துவக்கி 108 நாட்கள் செய்ய வேண்டும்.
மாங்கல்ய தோஷம் நீங்க:
தனது கணவரின் உயிருக்கு ஏதேனும் ஆபத்து ஏற்படுமோ, அதனால் தங்களது மாங்கல்யத்துக்கு ஆபத்து ஏற்படுமோ என்று பயப்படும் பெண்கள் செவ்வாய்க்கிழமை எமகண்டத்தில் பைரவருக்கு சந்தனக் காப்பு செய்து, விரலி மஞ்சல் மாலை சூட்டி, மஞ்சள் கயிறு (தாலிக் கயிறு) சமர்ப்பித்து, சர்க்கரைப் பொங்கல், பால் பாயாசம், பானகம், நிவேதனம் செய்து, சக சுமங்கலிப் பெண்களுக்கு, மஞ்சள் குங்குமம், ஜாக்கெட் துணியுடன் வசதி இருந்தால் புடவையும் கொடுத்து, பைரவரை வழிபட வேண்டும்.
இழந்த பொருள் கிடைக்க:
மானம், மரியாதை, கவுரவம், இடம், சொத்து போன்ற நீங்கள் இழந்த பொருள் மீண்டும் உங்களுக்குக் கிடைத்திட, பைரவர் முன் 27 மிளகை மூட்டையாகக் கட்டி தீபம் ஏற்றி விட்டு, வராகிக்கு முன் சிறிது வெண் கடுகை மூட்டையாகக் கட்டி தீபம் போட்டு வழிபட வேண்டும்.
அஷ்டமிநாளில் வழிபட்டு மேன்மை அடையுங்கள்

Saturday, May 28, 2016

“எல்–நினோ” என்றால் என்ன?


“எல்–நினோ” என்றால் என்ன? அது எப்படி ஏற்படுகிறது? தமிழ் நாட்டின் அதன் பாதிப்புக்கள் என்ன? என்பதை இந்த கட்டுரையில் பார்ப்போம். “எல்–நினோ” என்பது, பூமத்திய ரேகைக்கு அருகில் இருக்கும் பசிபிக் கடலில், வெப்ப சலனத்தால் ஏற்படும் பருவ நிலை மாற்றம். இது ஸ்பெயின் வார்த்தை. இந்த பருவ மாற்றத்தால், பசுபிக் கடலில் ஏறத்தாழ 50 ஆயிரம் சதுர கிலோ மீட்டர் பரப்பளவில், கடல் நீர் சூடாகி, அதன் மூலம் பருவ நிலையில் மாற்றத்தை ஏற்படுத்துகிறது. அதே நேரத்தில் வளி மண்டலத்திலும் பாதிப்பை ஏற்படுத்துகிறது. இதில் குறிப்பாக பெரு நாட்டின் கடல் பகுதியில், சூடேறிய கடல் நீரின் நீரோட்டம் பொதுவாக, டிசம்பர் மாதம் உருவாகிறது. பசுபிக் கடலில் உருவாகும் இந்த எல்-நினோ” பருவ மாற்றம், இந்திய மகாசமுத்திரம், அரபிக்கடல், வங்க கடல் போன்ற பகுதிகளிலும் பருவ மாற்றத்தை ஏற்படுத்தி விடுகிறது. இதன் மூலம், மழை பெய்ய வேண்டிய இடத்தில் மழை பெய்யாத நிலையும், தேவையற்ற இடத்தில் மிகவும் அதிகமான மழையும், சில இடத்தில், ஒரே நேரத்தில் மழை கொட்டோ கொட்டு என்றும் கொட்டும்.
“எல்–நினோ” காரணமாக, பருவ காற்றுகள் திசை மாறும்., பருவ காற்றுகளின் பலம் குறையலாம்., அல்லது அதிகரிக்கலாம். கடலில் மீன்கள், ஓரிடத்தை விட்டு, வேறொரு இடத்துக்கு இடம் மாறிச்செல்லும்.இதனால் மீன்பிடி தொழிலும், மீனவர்களும் பாதிப்புக்கு உள்ளாவார்கள். “எல்–நினோ”-பருவ மாற்றத்திற்கு உதாரணமாக, பெரு நாட்டில் எப்போதும் வறண்டு கிடக்கும் அப்யூரிமேக் நதிப்பகுதியில், அளவுக்கு அதிகமாக மழை பெய்து, பெரும் சேதத்தை விளைவித்துள்ளது. அந்த ஆறு கரை புரண்டு ஓடி இருக்கிறது., இதனால் லட்சக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டனர். இது போல, சாச்சுரா பாலை வனப்பகுதியில் பெரு மழை பெய்து, அங்கு பெரிய ஏரியை உருவாக்கி விட்டது. இந்த “எல்–நினோ” பருவ மாற்றத்தினால், பசுபிக் கடலில் இருந்த சில சிறிய தீவுகள், காணாமல் போய் விட்டன., அதே நேரத்தில் புதிதாக சில தீவுகள் உருவாகியுள்ளன. மேலும் “எல்–நினோ” உருவாகும் கடல் பகுதிக்கு மேலே வானில் பாறை போன்ற மேகங்கள் உருவாகி, மழை தரும் மேகங்களை தடுத்து நிறுத்தியும், அவற்றை திசை மாற்றிடவும் செய்வதால், மழை பெய்ய வேண்டிய இடத்தில் மழை பெய்யாமல் போகும். திசை திரும்பிய மழை மேக கூட்டம், வேறு ஒரு பகுதிக்கு சென்று கொட்டி, பெருத்த சேதத்தை ஏற்படுத்தி விடும். இந்த செயலை “ஜெட் டிரீம்ஸ்” என்று ஆங்கிலத்தில் குறிப்பிடுகிறார்கள்.
பூமியை சுற்றிய வளி மண்டலத்தில் மீத்தேன், நீராவி, கரியமில வாயு, ஓசோன், நைட்ரஸ் ஆக்ஸைட் ஆகிய வாயுகள் உள்ளன.இவற்றின் மீது பட்டுதான், சூரிய ஒளி பூமி மீது படுகிறது. இதனால், சூரிய ஒளியின் வெப்பம் குறைந்து விடுகிறது. இந்த இயற்கையான பருவ செயலை, “எல்–நினோ” மாற்றி விடக்கூடிய சக்தி கொண்டது. இப்படி மாறி விடும் பட்சத்தில், பூமியின் ஒரு பகுதியில் உஷ்ணம் அதிகரிக்கும்., மற்றொரு பகுதியில் உஷ்ணம் குறைந்து, பனிக்கட்டிகள் படரும். இப்படித்தான், ஆர்டிக், அண்டார்டிக் கண்டம் பகுதியில் பனிக்கட்டிகள் உறைந்துள்ளன. இதில், நாளுக்கு நாள் ஆயிரக்கணக்கான டன் பனிக்கட்டிகள் உஷ்ணத்தால் தண்ணீராக மாறி, கடலில் கலக்கிறது. இதனால், கடலின் நீர் மட்டம் அதிகரிக்கும்.உலகில் பருவத்தில் மாற்றங்கள் ஏற்படுவதால், தட்ப வெட்ப நிலை சீர்குலையும் ஆபத்தும் உள்ளது. நன்கு சிந்தித்து பார்த்தால், இந்த பருவ நிலை மாற்றத்தாலும், “எல்–நினோ” தாக்கத்தாலும், இமய மலையிலுள்ள பனிக்கட்டிகள் மொத்தமாக உருகினால், கங்கை, பிரம்ம புத்திரா போன்ற ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்படும். இதே பருவ மாற்றத்தால், இமய மலையில் பனிக்கட்டிகள் உருவாக வில்லை என்றால், கங்கையும், யமுனாவும், காவிரியும், வறண்டு போய் விடும். இது போன்ற ஆபத்துக்களும், இந்தியாவை மிகப்பெரிய அளவில் எதிர் நோக்கி இருக்கின்றன. வறட்சி ஏற்பட்டால், விவசாயம் குறையும்., பஞ்சம் ஏற்படும்.
இந்த “எல்—நினோ”, தமிழ்நாட்டையும் பாதிக்கும் அபாயம் இருக்கிறது. வங்க கடலில், 2 லட்சத்துக்கும் அதிகமான வகைகளில், பவள பாறைகள் இருக்கின்றன. இதில் பல லட்சம் டன் மீன்கள் வளருகின்றன. இந்த பகுதியில் பவள பாறைகள் 0.5 டிகிரி வெப்பம் அதிகரித்தால் கூட, மீன்கள் இந்த பவளப்பாறை பகுதியில் வாழ முடியாது. ஏற்கனவே இந்த பகுதியில் மூன்றில் இரு மடங்கு மீன்கள் அழிந்து விட்ட நிலையில், மேலும் பருவ மாற்றம் ஏற்பட்டால், இந்த பகுதியில் மீன்பிடி தொழில் கேள்விக்குறியாகி விடும்.
“எல்—நினோ” தாக்கத்தின் காரணமாக, தமிழ்நாட்டில் இந்த ஆண்டு மழை இன்னும் ஒரு மாதம் வரை ஆங்காங்கு நீடிக்கலாம். அடுத்த ஆண்டு மார்ச் வரை தமிழ்நாடு உள்ளிட்ட தென்மாநிலங்களில் நல்ல மழை இருக்கும் என்றும் ஐ.நா. ஆய்வறிக்கை கூறுகிறது. அதே நேரத்தில் “எல்—நினோ”வின் தாக்கம் அடுத்த ஆண்டு (2016) மிக பெரிய அளவில் இருக்கும் என்றும், ஐ.நா. அறிக்கை கூறுகிறது. கம்போடியா, மத்திய மற்றும் தென் இந்திய பகுதிகள், கிழக்கு இந்தோநேஷியா, பிலிப்பைன்ஸ், தாய்லாந்து ஆகிய நாடுகளில் அடுத்த ஆண்டு “எல்—நினோ”வின் பாதிப்புகளை உணர முடியும் என்றும் ஐ.நா. ஆய்வறிக்கை கூறுகிறது. தென் கிழக்கு ஆசிய நாடுகளில் குறிப்பாக இந்தியாவின் தென் பகுதி, இலங்கை ஆகிய நாடுகள், வெள்ளத்தை சந்திக்க வேண்டியது இருக்கும் என்றும் ஐ.நா. அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. அதே நேரத்தில், பசுபிக் நாடுகள், பபுவா நியூகினியா, திமோர், உள்ளிட்ட பல நாடுகளில் வறட்சி காணப்படும் என்றும், 2015—16—ல் ஏற்படும் “எல்-நினோ” தாக்கம், முந்திய 1997—98—ல் ஏற்பட்டதை விட அதிக சக்தியுள்ளதாக இருக்கும் என்றும் இந்திய தென் பகுதியில் பெருமழை பெய்யும் என்றும், இதனால் மேலும் வெள்ள சேதம் ஏற்படும் என்றும் , ஐ.நா. அறிக்கையின் மூலம் தெரிய வருகிறது. பிலிப்பைன்ஸ், இந்தோ னேஷியா போன்ற நாடுகளில் வறட்சியும் ஏற்படலாம்.
சங்க காலத்தில், மாதம் மும்மாரி பொழிந்தது என்று குறிப்பிடப்பட்டுள்ளது. முற்காலத்தில் சம்பா பயிர் 6 மாத பயிராகும். அந்த அரிசியே மிகவும் சத்தானதாகவும் இருந்தது. இப்போது அது போன்ற 6 மாத பயிரை பயிரிட இப்போது முடிய வில்லை. காரணம், பருவ நிலை மாற்றம் காரணமா, மாதம் மும்மாரி என்பது, மாதம் ஒரு முறை மழை பெய்வதே கேள்விக்குறியாகி விட்டது முந்திய ஆண்டுகளை நாம் மறந்திருக்க மாட்டோம். இதனையும் தவிர, தற்போது தமிழ் நாட்டில் குளிர்காலத்தின் அளவு 11 நாட்கள் குறைந்து விட்டது என்பதையும் கவனிக்க வேண்டும். கோடைகாலத்தின் அளவு அதிகரித்து விட்டது. காரணம், பருவ நிலை மாற்றமே.
முற்காலத்தில் மழை பெய்ததும், கிராமப்பகுதிகளில் சிவப்பு நிற பட்டுடல் கொண்ட சிறிய உயிரினங்கள் (பட்டுப்பூச்சி) தரையில் ஊர்ந்து செல்வதை நாம் பார்த்திருக்கலாம். இப்போது அது போன்ற உயிரினங்களை காண முடிய வில்லை. ஏன் ? பருவ நிலை மாற்றத்தால், இது போன்ற பட்டுப்புழுக்கள் உள்பட 50 வகையான உயிரினங்கள் அழியும் நிலைக்கு சென்று விட்டன. வாழை இலையில் சாப்பிட்ட நாம், இன்று “பிளாஸ்டிக்” வாழை இலையில் சாப்பிடுகிறோம். எந்த ஒரு பொருளையும் பார்சல் செய்ய பிளாஸ்டிக் தாளை பயன் படுத்துகிறோம். இவையெல்லாம் நமது நாட்டில் சுற்றச்சூழலை காலப்போக்கில் மிகப்பெரிய அளவில் பாதிக்கும் என்பதில் மாற்றமில்லை.எனவே, “எல்-நினோ” காரணமாக, தமிழ்நாடு உள்பட இந்தியா பாதிப்புக்கு உள்ளாகாதவாறு, நாம் தான் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். இதற்கு, பூமி சூடாகாதவாறு காப்பது, மனிதர்களின் கடமை. இந்த நிலையில் பாரீஸ் நகரில் நடந்த பருவ நிலை மாற்ற மாநாட்டில்,” புவி வெப்ப மயமாதலை 2 டிகரி செல்சியசுக்கு கீழாக குறைக்க வேண்டும்” என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது, மரம் வளர்ப்போம்! சுற்றுச் சூழலை காப்போம்!!!!!!!.
“எல்-நினோ”வினால் ஏற்பட்ட பாதிப்புகள்
*பெரு நாட்டில் 1525-ல் முதல் எல்-நினோ கண்டுபிடிக்கப்பட்டது.
*1789–93:இந்தியாவில் 60 ஆயிரம் பேர் மரணத்துக்கும், தென் ஆப்பிரிக்காவில் கடும் பஞ்சத்துக்கும் எல்-நினோ காரணமாக இருந்தது.
*1982–83:வெப்ப மண்டல பிரதேசங்களில் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் இறந்தனர். ரூ. 1,300 கோடி மதிப்புள்ள பொருட்சேதமும் ஏற்பட்டது.
*1990–95:இந்திய உள்பட உலகம் முழுவதும் பருவ நிலை மாற்றங்கள் ஏற்பட்டது.
*1997–98:எல்-நினோ காரணமாக உலகின் ஒரு பகுதியில் வெள்ளப்பெருக்கும், வேறு சில பகுதிகளில் வறட்சியும் ஏற்பட்டு ஏறத்தாழ 2,100 பேர் இறந்துள்ளனர். உலகம் முழுவதும் ஏற்பட்ட சேத மதிப்பு ரூ. 3,300 கோடி டாலர்.
*2003: ஐரோப்பாவில் ஏற்பட்ட வெப்ப அலையால், 80 ஆயிரம் பேர் உயிரிழந்தனர்.

Saturday, May 7, 2016

எட்டு’ போட்டு நடை பயிலுங்கள்!















 இது ஒரு புதிய விஷயம். கொஞ்சம் கவனம் செலுத்திப் படியுங்கள். படித்தபிறகு இதனை செய்துவந்தீர்கள் என்றால் இந்தப் பயிற்சியினால் நீங்கள் அடையப்போகும் பயன்கள் மிகவே அதிகம். உலகில் அவ்வப்போது எல்லா விஷயங்களிலும் சில புதிய புதிய பாணிகளும் நடைமுறைகளும் பழக்கவழக்கங்களும் அறிமுகமாகிக்கொண்டே இருக்கும். முதலில் அவற்றை ஏற்றுக்கொள்ளாமல் புறக்கணிக்கும் நம்முடைய மனம் காலப்போக்கில் வேறு வழியில்லாமல் அதனை ஏற்றுக்கொள்வதற்கும் பின்பற்றுவதற்கும் அவசியமேற்பட்டு பின்பற்றத் துவங்கிவிடும்.  அறிமுகமான நேரத்தில் பெரிதாகவும் பிடிவாதமாகவும் ஒன்றை ஏற்றுக்கொள்ள மறுத்திருப்போம். நம்முடைய அன்றாட வாழ்க்கை முறையிலேயே இதற்கான நிறைய உதாரணங்கள் கிடைக்கும். ஆரம்பத்தில் பல் துலக்க பற்பொடி வந்தபோது அதற்கு மாற மறுத்தவர்கள் எத்தனைப் பேர்?  அப்புறம் பிரஷ்ஷும் பேஸ்ட்டும் வந்தபோது வேப்பங்குச்சியையும் ஆலம்விழுதையும் விட்டுவிலக மறுத்தவர்கள் எத்தனைப்பேர்? (இருப்பதிலேயே அதுதான் சாலச்சிறந்தது என்பது வேறு விஷயம்)  இன்னமும்கூட நகரத்தில் இருக்கும் சில பெரியவர்கள் ஊருக்குப் போகும்பொழுது தங்களுக்கு வேண்டிய ஆலங்குச்சிகளையும் வேப்பங்குச்சிகளையும் கொண்டுவந்து ஸ்டாக் வைத்துக்கொண்டு உபயோகித்துக்கொண்டிருக்கிறார்கள். இதில் இதனை ரஜனி அறிமுகப்படுத்தினார் என்ற கூமுட்டை வாதம் வேறு. அது கிடக்கட்டும். சிறிது நாட்களுக்கு முன்பு பார்த்தோமென்றால் யோகாசனத்தை நிறையப் பேர் ஒப்புக்கொள்ளவில்லை. ஒப்புக்கொள்ளாதது மட்டுமல்ல கேலி பேசி நிராகரித்துக் கொண்டும் இருந்தனர். முக்கியமாக டாக்டர்கள் யோகாசனத்துக்கு எதிராகவே இருந்தனர். இப்போது நிறைய டாக்டர்கள் தங்களிடம் வரும் நோயாளிகளுக்கு யோகாசனம் சிபாரிசு செய்கிறார்கள். இன்னமும் நிறைய டாக்டர்கள் அவர்களே யோகாசனம் பயின்று தினசரி யோகா செய்து பலனை அனுபவித்து வருகிறார்கள். ஆல்டர்னேட் தெரபி என்று சொல்லக்கூடிய பல மாற்றுமருத்துவ விஷயங்கள் நிறைய காலமாக ஆங்கில மருத்துவர்களால் நிராகரிக்கப்பட்டு இன்றைக்கு ஒவ்வொன்றாக ஏற்றுக்கொள்ளப்பட்டு வருகின்றன. காரணம் நிறைய மக்கள் வெறும் ஆங்கில மருத்துவர்களுக்காகவும் மருந்துகளுக்காகவும் காத்திருக்காமல் அவர்களுக்கு எதில் சுகம் கிடைக்குமோ அந்த மருத்துவ முறைகளுக்கு மாறிவருகிறார்கள். ‘வேறு வழியில்லை உங்களுக்கு ஆபரேஷன் செய்ய வேண்டும்’ என்று டாக்டர்களால் சொல்லப்பட்ட எத்தனை நோயாளிகள் திரும்பவும் அவர்களிடமே ஆபரேஷனுக்காக வந்திருக்கிறார்கள் என்ற கணக்கை எடுத்துப்பார்த்தால் இதற்கான விடை கிடைத்துவிடும். ‘சரி டாக்டர் நான் வீட்டில் ஆலோசித்துவிட்டு வருகிறேன்’ என்று சொல்லிச் செல்லும் நிறைய நோயாளிகள் இந்த வியாதி ஆபரேஷன் இல்லாமலேயே குணமாகிறதா என பல்வேறு மருத்துவமுறைகளை நாடிச்செல்வதும் அங்கு சென்று பரிபூரண குணம் அடைவதும் பதிவு செய்யப்படாத கணக்கில் வராத தகவல்களாகவே இருக்கின்றன.(அவற்றில் சில குணமடைவதில்லை என்பது எல்லாவற்றிற்கும் பொதுவான ஒன்று) இப்படி ஆங்கில மருத்துவமுறையை விட்டு ‘வெளியேவரும்’ நோயாளிகள் யாருமே தாங்கள் குணமடைந்ததும் மறுபடி அந்த ஆங்கில மருத்துவரைத் தேடிச்சென்று தாங்கள் குணமடைந்ததைச் சொல்வதே இல்லை என்பதுதான் இதிலுள்ள சோகம். இந்தக் காரணத்தினால்தான் மாற்று மருத்துவ முறைகளால் குணம் அடைய முடியும் என்ற செய்தியே ஆங்கில மருத்துவத்திற்கும் மருத்துவ விஞ்ஞானத்திற்கும் ஒப்புக்கொள்ள முடியாத ஒரு விஷயமாகவும் எள்ளிநகையாடும் கேவலமானதொரு விஷயமாகவும் இருந்துவருகிறது. மாற்றுமருத்துவ முறைகளான பாரம்பரிய முறைகளைத் தவிர மருந்து மாத்திரைகள் இல்லாத மருத்துவமுறைகள் சிலவற்றை ஆங்கில டாக்டர்கள் மட்டுமல்ல சித்தவைத்தியர்கள், ஆயுர்வேத வைத்தியர்கள், ஹோமியோபதி மருத்துவர்கள் போன்ற ஆங்கில மருத்துவர்களால் ‘ஒப்புக்கொள்ள மறுக்கப்பட்ட’ இந்த வகையினர்கூட ஏற்றுக்கொள்வதில்லை என்பதுதான் இதிலுள்ள பெரிய வேடிக்கை. ஆனால் இன்றைக்கு என்ன நடக்கிறது? பல தனியார் மருத்துவ மனைகளில் ரெய்கி இப்போது அங்கீகரிக்கப்பட்ட சிகிச்சையாக இருக்கிறது. பல மருத்துவமனைகளில் பிராணிக் ஹீலிங் சிகிச்சைமுறைக்கு வழிசெய்திருக்கிறார்கள். சில மருத்துவமனைகளில் அக்குபஞ்சர் மற்றும் அக்குபிரஷர் சிகிச்சைகளும் சேர்த்தே கொடுக்கப்படுகின்றன. இவையெல்லாம் நல்ல மாற்றத்திற்கான அடையாளம். எல்லாத்துறைகளிலும் உள்ள நல்ல விஷயங்களை மேற்கொள்வதும் கடைப்பிடிப்பதும் மற்ற துறைகளை விடவும் ஆரோக்கிய துறைக்கு மிகவும் உகந்த விஷயங்கள். ஆரோக்கியத்திற்கான பயிற்சி முறைகளிலேயே உலகம் பூராவும் எல்லா மருத்துவத்துறைகளாலும் அங்கீகரிக்கப்பட்ட ஒரு பயிற்சி நடைப்பயிற்சிதான். இதனைத் தவறென்று எந்த மருத்துவ முறைகளும் சொல்லவில்லை. சொல்லமுடியாது. தினசரி நடைபயிலுங்கள் என்றுதான் எல்லா டாக்டர்களும் எல்லா மருத்துவர்களும்(சித்த ஆயுர்வேத யுனானி ஹோமியோ ரெய்கி அக்குபிரஷர் இன்னோரன்ன) சொல்கிறார்கள். மக்களுக்கும் தாமாகவே ஒரு விழிப்புணர்வும் வந்திருக்கிறது.  ஆதலால்தான் இப்போதெல்லாம் கடற்கரைகள், பூங்காக்கள், நடைபாதைகளில் நடைபயிலும் கூட்டத்தினரின் எண்ணிக்கை கூடிக்கொண்டே போகிறது. பல ஆண்டுக்காலமாய் நடைபயிற்சி மேற்கொள்ளும் பலபேருக்கு இன்றைக்கு சுதந்திரமாய் நடைப்பயிற்சியை மேற்கொள்ள முடியாத நிலைமை. அவ்வளவு கூட்டம்! தினசரி நடைபயிலுகின்றவர்களும் சரியான முறையில் நடக்கின்றார்களா என்றால் கிடையாது. பல பேர் தேமேயென்றுதான் நடந்துகொண்டு இருக்கிறார்கள். சில பேர் ஜோடி போட்டுப் பேசிக்கொண்டே நடக்கிறார்கள். சில பேர் வேடிக்கைப் பார்த்துக்கொண்டே நடக்கிறார்கள். எல்லாமே தவறு. நடைப்பயிற்சி என்பது எப்படி இருக்கவேண்டும் என்பதற்கு பாரதியின் வரிகளே நல்ல உதாரணம். ‘நிமிர்ந்த நன்னடை நேர்கொண்ட பார்வை’ என்றான் பாரதி. இது வேண்டும். வாக்கிங் என்பது எப்படி இருக்கவேண்டும் என்பது பற்றி லேனா தமிழ்வாணன் அழகாகச் சொல்லுவார். “Walking என்பது ஆங்கில வார்த்தை. “Walk like a King என்பதுதான் வாக்கிங் என்பதன் அர்த்தம்” என்பார். துவண்டு போய் கூனிக்குறுகி ஏதோ சம்பிரதாயத்துக்கு நடப்பது போல் நடக்கக்கூடாது தலைநிமிர்ந்து ஒரு அரசன் போல் செருக்குடன் வேகமாக நடைபயில வேண்டும் என்பது அர்த்தம். சரி; நாள்தோறும் நடைபயில வேண்டும் என்று தீர்மானிக்கிறோம். ஒருநாள் கூட தவறவிடாமல் நடை பயிலமுடியுமா என்பது சந்தேகமே. ஏதேதோ காரணங்களால் மாதத்திற்கு இரண்டு மூன்று நாட்கள் கூட தவறவிடும்படி ஆகிவிடும். மழை வந்துவிட்டோலோ பனி அதிகமாக இருந்தாலோ குளிர் அதிகம் இருந்தாலோ அன்றைக்கு நடைக்கு விடுமுறை விடவேண்டி இருக்கும். சமயங்களில் நாம் தினசரி நடைபயில தேர்ந்தெடுத்த இடத்தைப் பள்ளங்களாக்கி வெட்டிப்போட்டு சாலைப்பணி செய்துகொண்டிருப்பார்கள். மைதானங்களில் அகால நேரத்திற்கு வந்து தேவையில்லாமல் கிரிக்கெட் விளையாடிக்கொண்டிருப்பார்கள். முதல் இரண்டு நாட்கள் சமதரையாய் இருந்த சாலை ஒரே இரவு மழையில் மேடும் பள்ளமுமாகப் பல் இளிக்கும். மற்றும் வாகனப்புகை, போக்குவரத்து நெரிசல்கள், நாய்களின் தொல்லை ஒழுங்கற்ற பாதைகள் என்று நிறைய தடங்கல்கள் இருக்கின்றன. இவையெல்லாவற்றையும் தாண்டி தினசரி நடக்கவேண்டும். அதுவும் நீண்ட தூரம் நடக்கவேண்டும். நீண்ட நேரம் நடக்கவேண்டும் என்ற எல்லாமும் ஒரே நேரத்தில் ஒரே ‘சிஸ்டத்தில்’ நடைபெறுவதற்கு சுலபமான மாற்றுவழி ஒன்றுண்டு. அதுதான் எட்டு நடை! எட்டு நடை நடப்பதற்கு அதிக பட்சம் பதினாறு அடி நீளமும் எட்டு அடி அகலமும் கொண்ட இடம் போதுமானது. இந்த இடத்தில் 8 வரைந்து கொள்ளுங்கள். அந்த எட்டின் மீது கீழிருந்து ஆரம்பித்து மேலே போய் திரும்பவும் வளைந்து கீழே வரவேண்டும். அவ்வளவுதான் ரொம்பவும் சுலபம். அதாவது எட்டிற்கு- மேல் ஒரு வட்டமும் கீழேயொரு வட்டமும் இருக்கிறது இல்லையா? ஒரு வட்டத்தினுடைய நீளம் எட்டு அடியாக இருக்கட்டும். இன்னொரு வட்டத்தின் நீளம் இன்னொரு எட்டு அடி. மொத்தம் பதினாறு அடி. அகலம் ஒரு எட்டு அடி. இப்போது நீங்கள் மொத்த பதினாறு அடிக்கும் வருகிற மாதிரி ஒரு எட்டு வரையுங்கள். இந்த எட்டின் வரையறைக்குள் நீங்கள் நடக்கவேண்டும். அதாவது கீழிருந்து இடதுபுறமாக ஆரம்பிக்கிறீர்கள் என்றால் இடதுபுறமாக வளைந்து மேலே சென்று அந்த வட்டத்தின் ஊடாகவே வலதுபுறமாய் வளைந்து கீழிறங்கி திரும்பவும் இடது வளைவு உடனே வலது வளைவு என்று இப்படியே நடையால் எட்டு வரைகிற மாதிரியே நடந்துகொண்டே இருக்கவேண்டும். மொத்தம் அரை மணி நேரம் நடக்க வேண்டும். ஒரு நாளைக்கு இரண்டுமுறை நடப்பது நல்லது. மொத்த நீளம் பதினாறு அடி என்பதை பதினெட்டு, இருபது, இருபத்தி நான்கு என்று இடவசதிக்கேற்ப அதிகப்படுத்திக்கொள்ளலாம். அதற்குமேல் அதிகமாக வேண்டாம். அது வளைந்து வளைந்து நடக்கும் எட்டு நடையாக இல்லாமல் சாதாரண நடைபோல் ஆகிவிடும். இதிலுள்ள ரகசியமே இடதுபக்கம் பாதி உடனடியாக வலதுபக்கம் பாதி திரும்பவும் இடது வலது என்று மாறிக்கொண்டே இருப்பதுதான். இந்த வட்டத்திற்கும் அந்த வட்டத்திற்குமாக சுற்றிச்சுற்றி நடந்துகொண்டே இருக்கவேண்டும். நேர்நடைக்கு இங்கே அதிகம் இடமில்லை. இந்த எட்டு நடையை உங்கள் வீட்டு ஹால் பெரிதாக இருந்தால் கொஞ்சம் நாற்காலி சோபாக்களை மாற்றிப்போட்டு அல்லது சிறிது நேரத்திற்கு அப்புறப்படுத்திவிட்டு உள்ளேயே இடமேற்படுத்திக் கொள்ளலாம். இல்லாவிட்டால் வீட்டு வராந்தாவை உபயோகப்படுத்திக் கொள்ளலாம். உங்கள் வீட்டு மொட்டை மாடியை இதற்கென பயன்படுத்திக் கொள்ளலாம். சாக்பீஸால் எட்டு வரைந்துவிட்டு அதன் மீதேயே நடக்கலாம் மொட்டை மாடியில் நிரந்தரமாக இடம் செய்துகொள்ள வேண்டுமெனில் வெள்ளை பெயிண்டால் வரைந்துகொண்டு அதன்மீது நடக்கலாம்.   அடையாளத்திற்காக இந்த முனையில் ஒரு பொருளையும் அடுத்த முனையில் ஒரு பொருளையும் வைத்துவிட்டு அதனைச் சுற்றிச்சுற்றி வருவதுபோல நடக்கலாம். குறுக்கே போவதற்காக நடுவில் ஒரு பொருளையும் வைத்துக்கொள்ளலாம். இந்த முறையில் வீட்டுக்குள்ளேயே அல்லது வீட்டின் மேல்பகுதியிலேயே அல்லது வீட்டின் வராந்தாவிலேயே என்று வீட்டுக்கருகிலேயே மொத்த நடையும் முடிந்துவிடுகிறது. யோகா செய்வதை விடவும் கூடுதலாக இரண்டு பங்கு இடமிருந்தால் எட்டு நடைப்பயிற்சி முடிந்துவிடும். அரைமணி நேரம் நடந்தால் மொத்தம் மூன்று கிலோமீட்டர் நடை ‘கவராகிவிடும்.’ இதில் முக்கியமாக கவனிக்கவேண்டிய ஒரு அம்சம் இத்தனை நடந்தாலும் நடந்துமுடிந்த பின்னர் மூச்சுவாங்குவதோ களைப்படைந்துவிடுவதோ கொஞ்ச நேரம் நம்மை ஆசுவாசப்படுத்திக் கொள்வோம் என்று தோன்றுவதோ இருக்காது. ஆனால் சாதாரண நடையில் அப்படியில்லை. ஒரே வேகத்தில் மூன்று கிலோ மீட்டர் நடந்தால் நிச்சயம் மூச்சு வாங்கும். கொஞ்ச நேரம் ரெஸ்ட் எடுக்கலாம் என்று தோன்றும். இங்கே அப்படியில்லை என்றால் என்ன அர்த்தம்? நடையின் போதேயே நம்முடைய உடம்பிற்கு வேண்டிய சக்தியை இந்த நடையே பெற்றுவிடுகிறது என்று அர்த்தம். இன்னொன்றையும் நீங்கள் கவனிக்கவேண்டும். உடற்பயிற்சி செய்யும்போது நிறைய சக்தி செலவாகும். உடற்பயிற்சி முடிந்தவுடன் உடம்பெல்லாம் தளர்ந்து போய்விடும். மேல்மூச்சு கீழ்மூச்சு வாங்கும். சாதாரண நிலை வருவதற்கு சிறிது நேரம் ஓய்வெடுக்க வேண்டும். யோகாவில் அப்படி இருக்காது. ஒவ்வொரு ஆசனத்திற்கும் மாற்று ஆசனம் என்று முறைப்படி செய்துவிட்டு எழும்போது உடம்பில் சுறுசுறுப்பு மிகுந்து காணப்படுமே தவிர ஓய்ந்துபோனது போல் இருக்காது.மூச்சுப்பயிற்சியின் போதும் இப்படித்தான். மூச்சுப்பயிற்சி முடிந்தவுடன் உடம்பு இன்னமும் வலிமைப் பெற்றது போன்ற உணர்வுதான் இருக்கும். இந்த எட்டு நடையிலும் இப்படித்தான். எட்டு நடை நடக்கும்போதேயே உங்கள் கைகளில் ரத்த ஓட்டம் மிகுந்து பரபரவென்ற உணர்வை அடையலாம். இதுதான் சரியான அளவில் ரத்த ஓட்டம் நடைபெறுகிறது என்பதற்கு அடையாளம்.

எட்டுநடையால் ஏற்படும் பலன்கள் என்னென்ன தெரியுமா? ரத்த அழுத்தம் என்கின்ற பி.பி குணமாகும். இரண்டு மாதங்களுக்குள் சர்க்கரை நோய் கட்டுக்குள் வரும். உடம்பில் தேவையற்று இருக்கும் அதிகக் கொழுப்பு கரைந்துபோய் இதய நோய் சம்பந்தப்பட்ட  பிரச்சினைகள் விலகும். ரத்த ஓட்டம் சீர்ப்படும். ஜீரணம் சரியாகி மலச்சிக்கல் மறையும். தூக்கமின்மை சரியாகும். அப்புறமென்ன? இன்னமும் மிச்சம் மீதி இருக்கின்ற அத்தனைப் பிரச்சினைகளும் ஓடிப்போய்விடும். ரத்தம் சுத்தமடைந்து ரத்த ஓட்டம் சீரடைந்தாலேயே உடம்பில் உள்ள எல்லா வியாதிகளும் அகலும் என்பதுதான் அடிப்படை சித்தாந்தம். அதனை நோக்கி நம்மைச் செலுத்துகிறது இந்த எட்டுநடை. இந்த எட்டுநடை கொரியா தைவான் ஜப்பான் போன்ற கிழக்காசிய நாடுகளில் மிகுந்த உபயோகத்தில் உள்ளது. WHANG SHUJIN BAGUA ZHANG(வாங் ஷுஜின் பாகுவா ஜங்) என்ற பெயரில் அங்கு இந்த நடைப்பயிற்சி பயிற்றுவிக்கப்படுகிறது. நம்ம நாட்டிலும் இந்த நடை இருந்திருக்கிறது. ‘இரு ஒரு எட்டு நடந்திட்டு வந்திர்றேன்’ என்று அந்தக் காலத்துப் பெரியவர்கள் இதைத்தான் சொல்லியிருப்பார்கள். புரிந்துகொள்ள முடியாத நம்முடைய சமூகம்தான் ஒரு எட்டு போய்வந்திர்றேன் என்று அவர்கள் சொன்னது அருகிலுள்ள இடத்தை என்கிற மாதிரி தப்பாக அர்த்தம் பண்ணிக்கொண்டிருக்கிறது என்றும் நினைத்துப் பார்க்கத் தோன்றுகிறது. நேராக நடந்துவிட்டு வருவதற்கும் இப்படி எட்டு நடப்பதற்கும் எப்படி இத்தனை மாறுபாடுகள் என்று பார்த்தோமானால் இந்த நடையே அக்குபிரஷரை அடிப்படையாகக் கொண்டுதான் அமைந்திருக்கிறது. ‘ ட்விஸ்ட் டான்ஸ்’ என்பது இதன் மூலமாக இருக்கும் என்று சொல்லப்படுகிறது. இதை அடிப்படையாக வைத்துத்தான் டுவிஸ்டு எக்சர்சைஸ் என்று பார்க் ஜாவ் வூ (Park jao woo) என்ற சுஜோக் அக்குபிரஷர் மாஸ்டர் இந்த எக்சர்சைஸை வடிவமைத்திருந்தார். இந்த உடற்பயிற்சியின் எளிமையான வடிவம்தான் இந்த நடை என்று கொள்ளலாம். இந்த எட்டுநடைப் பயிற்சி இந்தியாவின் சில பகுதிகளில் ஒரு சில ஹாலிஸ்டிக் முகாம்களில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தமிழ்நாட்டில் சேலம் பகுதியில் எஸ்.ஸ்ரீநிவாஸன் என்கிற யோகா நிபுணர் இதனை பரப்புவதில் முதன்மையானவராக இருக்கிறார். அரிசிப்பாளையம் மெயின்ரோட்டில் உள்ள அவரது முகாமில் இதற்கான பயிற்சியும் ஆலோசனைகளும் வழங்கப்படுகின்றன.  இதுபற்றிய சிறு புத்தகங்களையும் தமிழிலும் ஆங்கிலத்திலுமாக வெளியிட்டிருக்கிறார். அவரது முயற்சியால் அருகிலுள்ள பூங்காவில் எட்டு நடை நடப்பதற்கான வழித்தடம் போடப்பட்டு காலையும் மாலையும் நிறையப் பொதுமக்கள் அதனைப் பயன்படுத்த ஆரம்பித்திருக்கின்றனர்.  சேலம் ஆனந்தா இறக்கத்திலுள்ள ஸ்ரீ வேணுகோபால சுவாமி நந்தவனத்தில் எட்டு நடை நடக்க எட்டுநடைப் பாதை போடப்பட்டுள்ளது. அங்குள்ள அயோத்தியா பட்டணத்தைச் சேர்ந்த ஒருவர் பதினாலு ஆண்டுகளாக சர்க்கரை நோயினால் பாதிக்கப்பட்டு எந்த மருந்திலும் குணம் கிடைக்காமல் போய் கடைசியில் எட்டுநடை நடந்து குணம்பெற்றவுடன் தாம் கட்டிக்கொண்டிருக்கும் புது வீட்டில் எட்டுநடை நடப்பதற்கான அக்குபிரஷர் டைல்ஸ் பதித்த நடைபாதையை நாற்பதாயிரம் செலவில் அமைத்திருக்கிறார். இந்த எட்டுநடைப் பயிற்சியினால் கவரப்பட்ட பெங்களூர்த் தமிழ்ச்சங்கத் தலைவர் திரு கோ.தாமோதரன் இது பற்றிய குறிப்புப் புத்தகங்களை வாங்கி தமது மகன் திருமணத்திற்கு வருபவர்களுக்கு இலவசமாக விநியோகிக்க முடிவு செய்திருக்கிறார். என்னிடம் ரெய்கி சிகிச்சைப் பெற வரும் பலபேரிடம் நான் இந்த நடைப்பயிற்சியை அறிமுகப்படுத்தி வருகிறேன். இதற்கான பலன்கள் அபரிமிதமாக இருக்கின்றன. ரொம்பவும் குண்டாக இருந்த ஒரு என்ஜினியர் பெண்மணி நடக்க ஆரம்பித்த இரண்டே வாரங்களில் தமது உடல் பருமன் கணிசமாகக் குறைந்திருப்பதாக மகிழ்ச்சியுடன் தெரிவித்தார். கிருஷ்ணராஜ் என்ற நண்பர் 105|180 என்றிருந்த பிபி நடைப்பயிற்சிக்குப்பின் 95|145 க்கு இறங்கியிருப்பதாகச் சொன்னார். பதினைந்து நாட்கள் மட்டுமே நடந்த நடைப்பயிற்சியில் ஏற்பட்டிருக்கும் மாற்றம் இது. பல்ஸ் ரேட்டும் 96-ல் இருந்து 76-க்கு வந்திருக்கிறது. பைபாஸ் சர்ஜரி செய்து கொண்டிருப்பவர் இவர். தன்ராஜ் என்ற மற்றொரு நண்பர். இவருக்கு நீண்ட நாட்களாக கண்களில் இருந்து நீர் வடிந்துகொண்டே இருந்திருக்கிறது. ஆங்கில மருத்துவம், சித்த வைத்தியத்தின் சொட்டுமருந்து, ஹோமியோ சிகிச்சை எது செய்தும் நிற்காத அந்தக் கண்ணீர் இந்த நடைப்பயிற்சியினால் முற்றிலுமாக நின்று போயிருக்கிறது. அவரது எடை குறைந்திருப்பது மட்டுமின்றி அருமையான தூக்கமும் வருகிறதாம். கால்முழங்காலில் மூட்டுவலி இருந்த நண்பர் ஒருவரும் இருபது நாட்களிலேயே மூட்டுவலி போய்விட்டதாகத் தெரிவிக்கிறார். எல்லாருக்கும் குறிப்பாக வீட்டைவிட்டு வெளியில் வரமுடியாது என்றிருக்கும் பிரபலங்களுக்கும் முக்கியஸ்தர்களுக்கும் விஐபிகளுக்கும் வீட்டிற்குள்ளேயே அல்லது வீட்டு காம்பவுண்டிற்குள்ளேயே நடப்பதற்கு மிக அற்புதமானதொரு பயிற்சி இது. இங்கு இணைக்கப்பட்டுள்ள விடியோவில் எப்படி நடப்பது என்பதை ஒரு பெண்மணி சொல்லித்தருகிறார். ஆனால் அது குறுகிய இடத்தில் நடைபோடுவதாக உள்ளது. நீங்கள் இடத்தின் நீளத்தை மேலே குறிப்பிட்டுள்ள அளவுகளில் அதிகப்படுத்திக்கொள்ளுங்கள். காசு பணம் என்ற ஒற்றைப் பைசா செலவின்றி இப்படியொரு அருமையான வைத்தியமா?  எல்லோரும் எட்டுநடை நடப்போம் வாருங்கள்! 

Thanks : amudhavan