Tuesday, December 24, 2013

வெந்தயம்......!




வெந்தயம்......!

சர்க்கரை நோய் மற்றும் கொலஸ்டிரால் என்பது நமது மக்களிடையே காணப்படும் சில பொதுவான நோய்களாகும். சர்க்கரை நோயாளிகளுக்கு அளிக்கப்படும் சிகிச்சை முறைகளுடன், வெந்தயம் உட்கொள்வது, உறுதுணையாய் செயல்படுகிறது.

* ஆரம்பக்காலத்தில், 25 கிராம் வெந்தயத்தை தினமும் இரண்டு வேலை, ஒரு வேலைக்கு 12.5 கிராம் (தோராயமாக இரண்டு தேக்கரண்டி) என்ற அளவில், இரண்டு முக்கிய உணவுகளாகிய காலை மற்றும் இரவு உணவுகளோடு எடுத்தும் கொள்ளலாம்

* வெந்தயத்தை இரவு முழுவதும் தண்ணீரில் ஊரவைத்தோ அல்லது பொடியாக இடித்து தண்ணீரிலும் மற்றும் மோரிலும் கலந்தோ உணவிற்கு 15 நிமிடங்கள் முன்னதாக எடுத்துக் கொள்ள வேண்டும்.

* இரவு முழுவதும் ஊறவைக்கப்பட்ட விதைகள் அல்லது பொடியாக இடித்தெடுக்கப்பட்ட விதைகளை, தோசை, சப்பாத்தி, இட்லி, பொங்கல், உப்புமா, தயிர், பருப்பு மற்றும் காய்கறி கூட்டுகள் செய்யும் போது அவற்றுடன் இணைந்து பயன்படுத்தலாம்.இப்படி செய்யும்போது விதைகளின் கசப்புத்தன்மை ஓரளவிற்கு குறைகிறது.

* இவைகளை தயார் செய்யும்போது உண்பவரின் ருசிப்புத்தன்மைக்கேற்ப உப்பையோ அல்லது புளியையோ சேர்த்து தயார் செய்யலாம்.

* இரத்தத்தில் சர்க்கரை மற்றும் கொலஸ்டிரால் அதிகளவு இருக்கும்வரை இவ்விதைகளை உட்கொள்ளலாம்.

* வெந்தயம் எடுத்துக்கொள்வதுடன் தினமும் நடைபயிற்ச்சி போன்ற உடற்பயிற்சிகளை செய்வதும் மிகவும் அவசியம். உடல் எடையை குறைப்பதின் மூலம், இன்சுலின் ஹார்மோனின் செயல்களை அதிகரிக்க செய்யும்.

* இவ்விதைகளை உட்கொள்ளும் நோயாளிகளில் சிலருக்கு ஆரம்பத்தில் வயிற்றுபோக்கு மற்றும் குடலில் வாயு உற்பத்தியாவது அதிகமாக காணப்படும்.

* வெந்தயத்தை உணவாக பயன்படுத்துவதுடன் பரிந்துரைக்கப்பட்ட மற்ற சர்க்கரைநோய் சிகிச்சை முறைகளையும் பின்பற்ற வேண்டும்। இப்படி பயன்படுத்தும்போது சர்க்கரை வியாதிக்கான மருந்துகளின் அளவு குறையலாம்.

*ஆயினும் உங்கள் மருத்துவர் மாத்திரமே நோயின் தன்மையை கொண்டு எடுத்துக்கொள்ள வேண்டிய மருந்தின் அளவுகளை தீர்மானிக்க முடியும்.

சர்க்கரை நோயினால் திடீரென ஏற்படும் உடல் நலக் கேடுகளுக்கு உடனடியாக மருத்துவ ஆலோசனையை நாடுவது அவசியம்.

Monday, December 23, 2013

தகவல் அறியும் உரிமைச் சட்டம்


தகவல் அறியும் உரிமைச் சட்டம்


தகவல் அறியும் உரிமைச் சட்டம் 2005ம் ஆண்டு இயற்றப்பட்டது. இச்சட்டத்தை சரியாக பயன்படுத்துவதன் மூலம் லஞ்சம் மற்றும் ஊழலை பெருமளவு கட்டுப்படுத்த முடியும்.
சட்டம் எதற்கு?
அரசு அலுவலகங்கள் பொது மக்களுக்கு தகவல் சொல்லக் கடமைப்பட்டிருந்தாலும் இச்சட்டம் இயற்றப்படுவதற்கு முன் நீங்கள் கேட்கும் தகவலை அவ்வளவு எளிதில் பெற இயலாது. நீங்கள் தகவல் கேட்டு அனுப்பும் கடிதம் குப்பைக்கு கூட செல்லும் வாய்ப்பு உள்ளது. ஆனால் இச்சட்டம் இயற்றப்பட்ட பிறகு தகவல் தர மறுத்தால் சட்டத்தை மீறுவதாகும். தண்டனை கிடைக்கும் என்ற அச்சத்தால் தகவல் கிடைக்கும் வாய்ப்பு உறுதியாகிறது.
எங்கிருந்து தகவல் பெறலாம்?
மத்திய மாநில அரசு நிறுவனங்கள், பொதுத்துறை நிறுவனங்கள், அரசு நிதி பெறும் நிறுவனங்கள் ஆகியவற்றிலிருந்து தகவல் பெறலாம். தனியார் நிறுவனங்களுக்கு இச்சட்டம் பொருந்தாது.
என்ன தகவல் பெறலாம்?
அரசு அலுவலகங்களில் உள்ள கோப்புகள். ஆவணங்கள், சுற்றறிக்கைகள். ஆணைகள், ஈமெயில்கள், நோட் பைல் எனப்படும் அலுவலக குறிப்புகள் ஆகியவை பெறலாம். இது தவிர சாலை போடுதல், அரசு கட்டுமானப் பணிகள் நடைபெறும் இடங்களில் மாதிரிகள் கேட்டுப் பெறலாம்.
எவ்வாறு பெறுவது?
ஒரு தகவல் பெறுவதற்கென தனியான படிவம் ஏதும் கிடையாது. ஒரு சாதாரண வெள்ளைத் தாளில் வேண்டிய தகவல்களை கேட்டு விண்ணப்பிக்கலாம்.
கட்டணம் விவரம்
மத்திய அரசும். தமிழ்நாடு அரசும் தகவல் பெற ரூ.10/- என கட்டணம் நிர்ணயித்துள்ளன. இக்கட்டணத்தை ரொக்கமாகவோ, வரைவேலையாகவோ, நீதிமன்ற கட்டண வில்லை மூலமாகவோ செலுத்தலாம். நகல் பெறுகையில் ஒரு தாளுக்கு ரூ. 2/- எனக் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
யாரிடம் தகவல் கேட்பது?
ஒவ்வொரு அரசு அலுவலகத்திலும் உதவிப் பொதுத் தகவல் அலுவலர் அல்லது பொதுத்தகவல் அலுவலர் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர். இப்பொதுத் தகவல் அலுவலர்களின் மத்திய அரசுக்கான பட்டியல் www.tn.gov.in என்ற தளத்திலும் உள்ளன.
தகவல் ஏன் கேட்கிறோம் என சொல்ல வேண்டுமா?
பிரிவு 6 (2)ன்படி தகவல் கேட்பவர் எதற்காக தகவல் கேட்கப்படுகிறது என்ற விபரத்தை தெரிவிக்க வேண்டியதில்லை. பதில் அனுப்ப ஒரு தொடர்பு முகவரியைத் தவிர வேறு எந்த விபரத்தையும் அளிக்க வேண்டிய அவசியம் இல்லை.
எவ்வளவு நாட்களில் தகவல் பெறலாம்?
பிரிவு 7 (1)ன் படி ஒரு பொதுத் தகவல் அலுவலர் 30 நாட்களில் தகவல் தர வேண்டும். கேட்கப்படும் தகவல் ஒரு நபரின் உயிர்ப்பாதுகாப்பு பற்றிய செய்தியாக இருந்தால் 48 மணி நேரத்தில் தர வேண்டும்.
மேல் முறையீடு
பொதுத் தகவல் அலுவலர் 30 நாட்களில் தகவல் தரவில்லையென்றாலோ, அல்லது அவர் அளித்த தகவல் திருப்திகரமாக இல்லையென்றாலோ அந்தந்த துறைகளில் பிரிவு 19ன் கீழ் உள்ள மேல் முறையீட்டு அதிகாரியிடம் 30 நாட்களுக்குள் முதல் மேல் முறையீடு செய்யலாம்.
மேல் முறையீட்டு அதிகாரியின் பதில் திருப்திகரமாக இல்லையெனில் 90 நாட்களுக்குள் பிரிவு 19 (3)ன் கீழ் மாநில தகவல் ஆணையரிடம் இரண்டாவது மேல் முறையீடு செய்யலாம்.
தமிழ்நாடு மாநில தகவல் ஆணையம்,
273/378, அண்ணாசாலை, (வானவில் அருகில்),
தேனாம்பேட்டை, சென்னை – 600 018.
போன் : 044-24357580, 24312841, 24312842
தகவல் தராவிட்டால் தண்டனை உண்டா?
பிரிவு 20ன் கீழ் குறிப்பிட்ட காலத்துக்குள், உரிய நியாயமான காரணங்கள் எதுவுமின்றி தகவல் தர மறுத்தாலோ, தவறான தகவல் அளித்தாலோ அரைகுறையான முழுமையற்ற தகவல்கள் அளித்தாலோ, தகவல்களை அழித்தாலோ பிரிவு 20ன் கீழ் அதிகபட்சமாக ரூ.25,000/- அபராதம் மற்றும் துறை நடவடிக்கை எடுக்க தகவல் ஆணையத்துக்கு அதிகாரம் உண்டு.
விதி விலக்குகள் :
பிரிவு 8ன் படி நாட்டின் இறையாண்மைக்கு ஊறு விளைவிக்கும், நீதிமன்றத்தால் தடை செய்யப்பட்டிருக்கும், சட்டமன்ற, பாராளுமன்ற உரிமைகள் மீறும், வியாபார ரகசியங்கள், வெளிநாடுகளிலிருந்து அரசுக்கு வந்த ரகசியங்கள், காவல் துறையின் ரகசிய தகவலாளர்களுக்கு ஆபத்து ஏற்படுத்தும் தகவல்கள், புலனாய்வில் உள்ள வழக்குகள், அமைச்சரவை கூட்ட குறிப்புகள் போன்றவை இச்சட்டத்திலிருந்து விலக்கு அளிக்கப் பட்டுள்ளது.
மேலும் பிரிவு 24ன் கீழ் மத்திய மற்றும் மாநில அரசுகளால் பட்டியலிடப்படும் பாதுகாப்பு மற்றும் உளவுத் துறை நிறுவனங்கள் ஆகியன இச்சட்டத்திலிருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளன.
எவ்வாறு இச்சட்டத்தை உபயோகமாய் பயன்படுத்தலாம்?
இச்சட்டத்தை பயன்படுத்திட சட்டமன்ற உறுப்பினர் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்களின் தொகுதிமேம்பாடு நிதி எவ்வாறு செலவிடப்படுகிறது என்று கேட்கலாம். நகராட்சி மற்றும் ஊராட்சிகளில் வழங்கப்படும் நிதிகள் எவ்வாறு செலவிடப்படுகிறது எனக் கேட்கலாம். ஊழல் நடைபெறக் கூடும் என்று சந்தேகப்படும் அலுவலகங்களில் தகவல் கேட்கலாம். உங்கள் தெருக்களில் போடப்படும் சாலைகளிலோ அரசு கட்டுமானப் பணிகளிலோ மாதிரிகள் எடுத்து சோதனைக் கூடங்களுக்கு அனுப்பலாம். டெண்டர் விபரங்களைக் கேட்கலாம்.
தகவல் கேட்பவரை மிரட்டினால் என்ன செய்வது?
தகவல் கேட்பவரை மிரட்டுவது சில நேரங்களில் நிகழ்ந்துள்ளது. குறிப்பாக காவல் துறையினரிடம் தகவல் கேட்கையில் இது போல் நிகழும் வாய்ப்பு உள்ளது. அவ்வாறு நேர்ந்தால், எந்த தகவலை கேட்கையில் மிரட்டல் வந்ததோ, அதே தகவலை மாநிலத்தில் பல்வேறு இடங்களில் இருந்து நண்பர்களையோ உறவினர்களையோ, அதே தகவலை கேட்டு பல விண்ணப்பங்களை அனுப்பச் செய்யுங்கள். இது மிரட்டலை நிச்சயம் நிறுத்தும். இதையும் மீறி மிரட்டல் தொடர்ந்தால் வழக்கறிஞர்களை அணுகவும்.

Thanks: keetru.com

Sunday, December 15, 2013

அறுகம்புல்




அற்புத மூலிகை அறுகம்புல்

நாம் உண்ணும் பெரும்பாலான உணவுகள் அமிலத்தன்மை உடையவை ஆகும். இவை உடல் நலத்தைக் கெடுக்கின்றன. அதேவேளை அறுகம்புல் சாறு காரத்தன்மை உடையது. இது எமது ஆரோக்கியத்திற்கு உகந்ததாகும். இன்றைய காலகட்டத்தில் அறுகம்புல் சாற்றைக் குடிக்க விரும்புவோர் ஆயுர்வேத மருத்துவரை அணுகி அவரது அறிவுறுத்தலின்படி அருந்தலாம்.

அறுகம்புல் (Cynodon dactylon) ஒரு மருத்துவ மூலிகையாகும். வாதம், பித்தம், சளி(கபம்) ஆகிய முக்குற்றங்களினால் உண்டாகும் நோய்கள், ஈளை, கண் புகைச்சல், குருதிப் பித்தம், சிறு நச்சுப் பூச்சிகளின் கடி ஆகியவற்றுக்கு நல்லதொரு மருந்து. குருதி தூய்மையடைய, வியர்வை நாற்றம் போக்க, உடல் அரிப்பைப் போக்க , நமைச்சல் தீர, வெள்ளைப்படுதல் நீங்க மருந்தாக உதவுகிறது..

அறுகம்புல் கட்டி, வீக்கம் என்பவற்றைக் குணப்படுத்தும். சிறுநீரைப் பெருக்கும். இரத்தக் கசிவைத் தடுக்கும். மென்மையான மலமிளக்கி. இதனால் மலச்சிக்கல் நீங்க வழி உண்டாகும். இனி அறுகம் புல்லின் அற்புதத்தன்மைகள் சிலவற்றைப் பார்ப்போம். அறுகம்புல் அமிலத்தன்மையைக் குறைக்கின்றது. நரம்பு மண்டலத்திற்கு உறுதியும் ஊட்டமும் அளித்து உடல் பலவீனத்தைப் போக்கும் ஆரோக்கியம் அளிக்கும் டொனிக் ஆகச் செயற்படுகின்றது.

உடலிலிருந்து நச்சுப் பொருட்களை அகற்றி இரத்ததோட்ட மண்டலத்தை தூய்மைப் படுத்துகின்றது. அனைத்து நோய்களுக்கும் மூலகாரணமான மலச்சிக்கலைப் போக்க உதவுகின்றது. அறுகம்புல்லில் பச்சயம் பரிணமித்துள்ளது. வாழ்வளிக்கும் உயிர் ஆற்றல், புரதம் கனிம உப்புக்கள் பலவும் உண்டு

காலையில் ஒரு தேக்கரண்டி அறுகம்புல் பொடியைச் சாப்பிட்டு நீர் அருந்த வேண்டும். காலை உணவிற்கு ஒரு மணி நேரம் முன்னதாக இதனை மேற்கொள்வது சிறந்தது. இப்பொடியைத் தேனில் குழைத்தும் உட்கொள்ளலாம். குழந்தைகளும் பொடியை விழுங்குவது மிகவும் எளிய வழியாகும்.


செம்பருத்தி




கர்ப்பப்பை பிரச்சனைகளைத் தீர்க்கும் செம்பருத்தி

செம்பருத்தி செடியின் பூக்கள் தலை முடி அழகுக்காக பல வழிகளில் பயன்படுகிறது. செம்பருத்திப் பூ அதிக மருத்துவக் குணங்களைக் கொண்டது. இவற்றின் இலை, பூ, வேர் என அனைத்தும் மருத்துவத் தன்மையுள்ளவை.

அஜீரணக் கோளாறால் வயிற்றில் வாய்வுக்கள் சீற்றமடைந்து வயிற்றின் உட்புறச் சுவர்களைத் தாக்குகின்றன. இதனால் வாயிலும் புண்கள் உருவாகின்றன. இப்படி வயிற்றுப்புண், வாய்ப்புண்ணால் பாதிக்கப் பட்டவர்கள் தினசரி 5 அல்லது 10 பூக்களின் இதழ்களை சாப்பிட்டு வந்தால் புண்கள் குணமாகும்.

கர்பப்பை பாதிப்பினால் கருவுறாமல் இருப்பவர்களுக்கும், வயது அதிகம் ஆகியும் ருதுவாகாமல் இருக்கும் பெண்களுக்கும் செம்பருத்திப்பூ சிறந்த மருந்து. செம்பருத்திப் பூவின் இதழ்களை அரைத்து மோரில் கலந்து தினமும் சாப்பிட்டு வந்தால் வெகுவிரைவில் கருப்பையில் உள்ள நோய்கள் குணமாகும். பூப்பெய்தாத பெண்களும் பூப்பெய்துவார்கள்.

மாதவிலக்குக் காலங்களில் ஏற்படும் உபாதைகளைக் குறைக்கும். செம்பருத்திப் பூவை நிழலில் உலர்த்தி பொடி செய்து கசாயமாகக் காய்ச்சி அருந்தி வந்தால், மாதவிலக்குக் காலங்களில் ஏற்படும் அடிவயிற்று வலி, தலையிடி, மயக்கம் போன்றவை குறையும்.

இருதய நோயாளிகள் செம்பருத்திப் பூ இதழ், வெள்ளைத் தாமரையின் இதழ் எடுத்து கஷாயம் செய்து பாலில் கலந்து அருந்தி வந்தால் இரத்தக் குழாயில் உள்ள அடைப்பு நீங்கி இருதய நோய் குணமாகும்.

தலையில் பொடுகு, பேன், ஈறு தொல்லைகள் அதிகமாக இருக்கும். இவர்கள் எவ்வளவுதான் மருந்துகள், ஷாம்புகள் உபயோகித்துப் பார்த்தாலும் அவர்கள் முழுமையாக இந்த தொல்லையிலிருந்து விடுபடமுடிவதில்லை. இதற்கு அருமையான மருந்து செம்பருத்திதான். செம்பருத்தி பூவின் இதழ்களை அரைத்து தலையில் தேய்த்து குளித்து வந்தால் பேன், பொடுகு நீங்கும்.


Tuesday, December 3, 2013

பிரசவ வலி வரப் போவதற்கான 6 அறிகுறிகள்



பிரசவ வலி வரப் போவதற்கான 6 அறிகுறிகள்

பெண்களுக்கு வரும் வலிகளிலேயே பிரசவ வலி மிகவும் கொடியது. ஏனெனில் எந்த வலியை வேண்டுமானாலும் தாங்க முடியும், ஆனால் பிரசவ வலி வந்தால், அதைத் தாங்கிக் கொள்வது என்பது கடினமானது. ஆகவே கர்ப்பமாக இருப்பவர்கள், பிரசவ வலி வரப் போகிறது என்பதைத் எப்படி நிச்சயம் தெரிந்து கொள்ள வேண்டும். அவ்வாறு பிரசவ வலி வருகிறதென்றால், அதற்கென்று சில அறிகுறிகள் உள்ளன. அந்த அறிகுறிகளை முன்பே தெரிந்து கொண்டால், அந்த வலி ஆரம்பிப்பதற்கு முன்பே மருத்துவமனைக்கு சென்று விடலாம். இப்போது அந்த அறிகுறிகள் என்னவென்று பார்ப்போமா!

* பிரசவ வலி வருவதற்கான அறிகுறிகளில் முக்கியமானது முதுகு வலி தான். எப்போது முதுகு வலி சாதாரணமாக வரும் வலியைவிட, அளவுக்கு அதிகமாக வருகிறதோ, அதை வைத்து பிரசவ வலி வரப்போகிறது என்பதைத் தெரிந்து கொள்ளலாம்.

* கர்ப்பமாக இருக்கும் போது குழந்தையின் வளர்ச்சியினால் கருப்பை விரிவடையும். அதுவே குழந்தை வெளியே வர ஆரம்பிக்கிறதென்றால், அதாவது பிரசவ வலி வரப்போகிறதென்றால், அந்த கருப்பை சுருங்குவதற்கு ஆரம்பமாகும். அவ்வாறு கருப்பை சுருங்கும் போது எந்த ஒரு வலியும் இருக்காது. ஆனால் நன்கு கூர்ந்து கவனித்தால், கருப்பை சுருங்குவதை அறியலாம். ஆகவே அதை வைத்து நன்கு தெரிந்து கொள்ளலாம்.

* கருப்பை வாய்க்குழாயிலிருந்து அதிகமான அளவில் சளி போன்ற திரவம் வெளியேற ஆரம்பிக்கும். அவ்வாறு வருவதுப் போல் தெரிந்தால், அதை வைத்தும் அறிந்து கொள்ள முடியும்.

* சில நேரங்களில் கருப்பையிலிருந்து இரத்தம் வடிய ஆரம்பிக்கும். அவ்வாறு நிகழ்ந்தால், உடனே மருந்துவரை அணுக வேண்டும்.

* ஏழாவது மாதத்திற்கு மேல் அடிக்கடி சிறுநீர் அவசரமாக வருவது போன்று இருக்கும். ஆனால் அதுவே பிரசவம் நடைபெறப் போகிறதென்றால், அப்போது சற்று வித்தியாசமாக உணர்வீர்கள். சொல்லப்போனால், வயிற்றில் ஒன்றுமே இருக்காது, இருப்பினும் அவசரம் என்பது போல் இருக்கும். ஏனெனில் அது வயிற்றில் இருக்கும் குழந்தை வெளியே வருவதற்கான ஒரு அறிகுறி.

* ஏழாம் மாதத்திலிருந்து வயிற்றில் உள்ள குழந்தையின் அசைவை நன்கு உணர முடியும். ஆனால், பிரசவ வலி வருவதற்கு முன், குழந்தையின் அசைவு குறைந்துவிடும். ஏனெனில் அப்போது குழந்தை வெளியே வருவதற்கு ஒரு சரியான ஒரு நிலையை அமைந்து இருப்பதே ஆகும்.

மேற்கூறியவையே பிரசவ வலி வரப்போவதற்கான அறிகுறி. ஆகவே இந்த மாதிரியான அறிகுறிகளை நீங்கள் உணர்ந்தால், உடனே மருத்துவமனைக்கு செல்வது நல்லது. மேலும் வேறு என்ன அறிகுறிகள் இருக்கும் என்பது உங்களுக்கு தெரிந்தால், அதை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

Thursday, November 28, 2013

விளாம்பழம்







விளாம்பழம் பல வியாதிகளை குணப்படுத்தும் சிறந்த பழமாகும். இதில் இரும்பு சத்தும், சுண்ணாம் புச்சத்தும், வைட்டமின் ஏ சத்தும் உள்ளது. இப்பழத்துடன் வெல்லம் சேர்த்து பிசைந்து 21 நாட்கள் சாப்பிட்டு வந்தால் பித்தம் சம்மந்தமான அனைத்து கோளாறுகளும் குணமாகும். பித்தத்தால் தலை வலி, கண்பார்வை மங்கல், காலையில் மஞ்சளாக வாந்தி எடுத்தல், சதா வாயில் கசப்பு, பித்த கிறுகிறுப்பு, கை கால்களில் அதிக வேர்வை, பித்தம் காரணமாக இளநரை, நாவில் ருசி உணர்வு அற்றநிலை இவைகளை விளாம் பழம் குணப் படுத்தும். விளாம்பழத்திற்கு ரத்தத்தில் கலக்கும் நோய் அணுக்களை சாகடிக்கும் திறன் உண்டு. எனவே எந்த நோயும் தாக்காமல் பாதுகாக் கும். அஜீரண குறைபாட்டை போக்கி பசியை உண்டுபண்ணும் ஆற்றலும் விளாம்பழத்திற்கு உண்டு. முதியவர்களின் பல் உறுதி இழப்பிற்கு விளாம்பழம் நல்ல மருந்து

மரகதலிங்கம்





மரகதம் பெரில் வகையைச் சேரந்த ஒரு கனிமம். வனேடியம் என்ற மூலகம் மரகதத்திற்கு பச்சை நிறம் தருகிறது. பச்சை நிறம் கொண்ட மரகதம் ஒளிரும் தன்மையுடையது. இதில் சிலிக்கான், அலுமினியம், மக்னீசியம் போன்ற இரசாயனக் கலவைகள் அடங்கியுள்ளன. இக்கற்கள் மிக மென்மையானவை; எளிதில் நொறுங்கும் தன்மை உடையவை. கண்ணாடிப் பாத்திரம் ஒன்றில் பாலை ஊற்றி அதில் மரகதத்தைப் போட்டால் பால் முழுவதும் பச்சை நிறமாகத் தோன்றும். நீர் நிறைந்த பாத்திரத்தில் போட்டால் நீர் முழுவதும் பச்சையாகத் தோன்றும். இப்படிப்பட்ட குணமுடைய கல் மிக விலை உயர்ந்த கல் ஆகும்.

மேற்கு ரஷ்யாவின் உரல்ஸ் மலைப்பகுதியில் விலை மதிப்புமிக்க மரகத கற்கள் தோண்டி எடுக்கப்படுகின்றன.
கடந்த ஆண்டு இப்பகுதியில் 3 ஆயிரத்து 187 கேரட் மதிப்புள்ள மரகத கல் கண்டுபிடிக்கப்பட்டது. இந்த கற்களை பட்டை தீட்டும் நிறுவனத்தில் கடந்த ஆண்டு 50 கிலோ மரகத கற்கள் ஏலம் விடப்பட்டது. இதில் 10 லட்சம் அமெரிக்க டாலர்கள் அரசுக்கு கிடைத்தது.இந்நிலையில் 5 ஆயிரம் கேரட் தரம் கொண்ட சுமார் ஒரு கிலோ எடையுள்ள அரிய வகை உயர்ரக பச்சை மரகத கல் ஒன்று இப்பகுதியில் மீண்டும் கிடைத்துள்ளது.

இந்த மரகத கல்லை லிங்கமாக செய்து வழிபடலாம் .

மரகதலிங்கம் ஒரு வகை சிவலிங்கம் ஆகும்,

புதனுக்கு உரிய மரகதத்தை, லிங்க வடிவில் வழிபடுவது மிக சிறந்த பலனை அளிக்கும் என்று புராணங்கள் கூறுகின்றன.

மரகத லிங்கத்தை இந்திரன் வழிப்பட்டதாக புராணங்கள் கூறுகின்றன.இவ்வாறு மரகத லிங்கத்தை வழிபட்டால் தீராத வியாதிகள் குணமடையும் என்பது முன்னோர் வாக்கு.

மரகதலிங்கத்தை வணங்குவதால் கல்வி,பதவி,போன்றவற்றில் சிறந்து விளங்கலாம் .

சகல தோஷங்களும் இவ்வழிபாட்டினால் நீங்கும் . மரகதலிங்களுக்கு செய்யப்படும் பால் அபிஷேகம் மிகச்சிறந்த மருத்துவ சக்தியைக் கொண்டது.

ஏழு மரகதலிங்கங்கள் இந்திரன் மூலம் முசுகுந்த சோழச்சக்ரவர்த்திக்குக் கிடைத்தாக சொல்லப்படுகிறது. இந்த மரகதலிங்கங்களை இந்திரனே பூஜித்து வந்தாராம். முசுகுந்த சக்ரவர்த்தி 12 ஆம் நூற்றாண்டில் வேதாரண்யம்,திருக்குவளை, திருக்கரவாசல், திருவாரூர், திருநள்ளாறு, நாகப்பட்டினம், திருவாயுமூர் ஆகிய ஏழு இடங்களில் உள்ள சிவன் கோவில்களுக்கு (சப்த விடங்க தலங்கள்) விலைமதிப்பில்லாத மரகதலிங்கங்களை மக்கள் வழிப்பாட்டிற்காக அமைத்துக் கொடுத்துள்ளார்.
சப்தவிடங்கத தியாகத் தலங்களில் மரகதலிங்களுக்கு செய்யப்படும் பால் அபிஷேகம் மிகச்சிறந்த மருத்துவ சக்தியைக் கொண்டது. இரவில் மரகதலிங்களின் மேல் சாற்றி காலையில் வழங்கப்படும் சந்தனமும் மிகச்சிறந்த மருத்துவ சக்தி வாய்ந்தது.

Monday, October 7, 2013

முருங்கைகீரை







கீரைக்காக மாடியில் முருங்கை வளர்ப்பு

நமது நாட்டின் தாவர செல்வங்களை நாம் சிறப்பாக உபயோகப்படுத்தா விட்டாலும் மற்ற நாடுகள் அறிந்து சிறப்பாக உபயோகப்படுத்துகின்றனர். இயற்கையை பாதுகாப்பதில் வெட்டிவேர் என்றால் நமது உடலை பாதுகாப்பதில் முருங்கையைக் கூறலாம். முருங்கையின் தாயாகம் இந்தியாதான் என்றாலும் இன்று ஆப்பிரிக்க நாடுகளில் இதன் பயன்பாடு மிக அதிகம். முருங்கை வளர்ப்பதை ஒரு இயக்கமாகக் கொண்டுள்ளனர். குறிப்பாகத் தாய்மார்களுக்கும் குழத்தைகளுக்கும் தேவையான சத்துக்களை குறைந்த செலவில் எளிய முறையில் கொடுக்க முருங்கைக் கீரையை பெருமளவில் பயிரிடுகின்றனர். 300 வித நோய்களைக் குணபடுத்துவதாகவும் நோய்களை உண்டாக்கும் அசுத்த நீரைச் சுத்தப்படுத்தவும் கண்டறிந்துள்ளனர்.

100 கிராம் முருங்கை இலையை கீழ்கண்ட பொருட்களுடன் சம எடையில் ஒப்பீடு.

ஆரஞ்சை இருப்பதை விட 7 மடங்கு வைட்டமின் c அடங்கியது .
காரட்டில் இருப்பதை விட 4 மடங்கு வைட்டமின் A அடங்கியது
பாலில் இருப்பதை விட 4 மடங்கு சுண்ணாம்பு சத்து அடங்கியது
பாலில் இருப்பதை விட 2 மடங்கு புரோட்டின் சத்து அடங்கியது
வாழை பழத்தில் இருப்பதை விட 3 மடங்கு பொட்டாசியம் அடங்கியது
ஸபினாச் கீரையில் இருப்பதை விட 2 மடங்கு இரும்புச்சத்து அடங்கியது
இவ்வளவு பயனுள்ள முருங்கையை எளிமையாக கீரைக்காக மாடியில் வளர்க்கலாம். வறட்சியை தாங்கி வளர்க்கூடியது. செடி முருங்கை இதற்கு ஏற்றது. விதை மூலம் உற்பத்தி என்பதால் வளர்ச்சியை கட்டுக்குள் வைத்திருக்க முடியும்.

வேர் பகுதியில் நீர் செல்லுமாறு சிறு குழாயை வைத்தால் நீரின் தேவையை வெகுவாகக் குறைக்கலாம். மாடி என்பதால் சூரிய ஒளிக்கு பஞ்சம் இல்லை. கீரைக்காக வளர்ப்பதால் 5 அடிக்குள்ளாகவும் அடிக்கடி பறிக்கவும் வேண்டும். இல்லையேல் பூச்சித் தாக்குதல் சமயங்களில் காப்பது சற்று கடினம், காற்று காலங்களில் ஒடியும் அல்லது நிலை சாயும்.15 அல்லது 20 நாட்களுக்கு ஒரு முறை கீரையை உபயோகிக்கலாம்.

சில மண்புழுக்களையும் இலைமக்கும் உபயோகித்தால் அடுத்த இரண்டு ஆண்டுகளுக்கு நல்ல சத்தான கீரை கிடைக்கும்.

Saturday, October 5, 2013

நெய் !!



எண்ணற்ற மருத்துவப் பயன்கள் கொண்ட நெய் !!

நெய்யில்லா உண்டி பாழ் என்பது சித்தர்கள் கூற்று. இதை இன்றைய அறிவியல் பூர்வமாக ஆராய்ந்தால் அதன் மருத்துவ குணங்கள் நமக்கு வியப்பளிக்கும். எண்ணற்ற மருத்துவப் பயன் கொண்ட நெய் எவ்வாறு காய்ச்சப்படுகின்றது என்பதைப் பற்றி முதலில் அறிவோம்.

பாலை நன்றாக காய்ச்சி ஆறிய பின் அதில் சிறிதளவு தயிரை கலந்து மூடிவைத்து 6 அல்லது 8 மணி நேரத்திற்குப் பின் எடுத்துப் பார்த்தால் அது முழுவதும் தயிராக மாறியிருக்கும்.

இந்த தயிரில் சிறிது நீர்விட்டு மத்தால் கடைந்தால் வெண்ணெய் தனியாக பிரிந்துவிடும். இதனை சட்டியில் இட்டு காய்ச்சும் போது அது உருகும். அதில் வெற்றிலை அல்லது முருங்கை இலையை போட்டால் நன்றாக பொரியும். நல்ல வாசனை உண்டாகும். பின் அதனை இறக்கி வடிகட்டி பத்திரப்படுத்திக் கொள்ளலாம். இவ்வாறு எடுக்கப்படும் நெய்யானது வெகுநாட்கள் வரை கெடாமல் இருக்கும். இத்தகைய நெய்யில்தான் மருத்துவ குணங்கள் அதிகம் உள்ளது.

2000 ஆண்டுகளுக்கு முன்பே சித்த ஆயுர்வேத மருத்துவத்தில் நெய்யின் பயன்பாடு அதிகம் இருந்து வந்துள்ளது. மருத்துவக் குணம் வாய்ந்த மூலிகைகளில் உள்ள அணுக்களின் சுவர்களை ஊடுருவக்கூடிய தன்மை நெய்க்கு இருப்பதால் இத்தகைய மருந்து தயாரிப்பில் நெய்யை அதிகம் பயன்படுத்துகின்றனர்.

மருந்துக்கள் கெடாமல் பாதுகாக்க நெய்யே சிறந்த பொருளாகும். நெய்யை ரசாயனம் என்று ஆயுர்வேத மருந்தாளர்களால் அழைக்கப்படுகிறது. ஏன் என்றால் முழு உடல் நலம் கொடுத்து நீண்ட ஆரோக்கியத்தைக் கொடுக்கும் குணம் நெய்க்கு உண்டு.

இதுபோல் சித்த மருத்துவத்திலும் மருந்துகளுக்கு துணைமருந்தாகவும், மருந்துகள் கெடாமல் பாதுகாப்பதற்கும் நெய்யையே பயன்படுத்தி வந்துள்ளனர்.

ஒரு ஸ்பூன் நெய்யில் 14 கிராம் கொழுப்பு சத்துக்கள் நிறைந்துள்ளது.

ஜீரண சக்தியைத் தூண்ட

நெய் வயிற்றில் உள்ள அமிலத்தன்மையை சமன் செய்து வயிறு மற்றும் குடல் பகுதியில் உள்ள மியூகஸ் லையனிங் பகுதியை வலுவாக்குகிறது.

நெய்யில் உப்பு, லேக்டோஸ் போன்ற சத்துக்கள் கிடையாது. இதனால் பால் மற்றும் பால் பொருட்கள் ஒத்துக்கொள்ளாதவர்கள் நெய்யை உபயோகித்துக்கொள்ளலாம்.

நெய் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது. கேன்சர், வைரல் நோய்களை தடுக்கிறது.

நெய்யில் CLA - Conjulated Linoleic Acid உள்ளது. இது உடல் பருமனாவதைத் தடுக்கிறது.

அதுபோல் ஒமேகா 3 என்ற கொழுப்பு அமிலம் நெய்யில் உள்ளதாக அண்மையில் கண்டறிந்துள்ளனர்.

இது மூளைக்கு சிறந்த டானிக்.

நெய்யில் Saturated fat - 65%

Mono - unsaturated fat - 32%

Linoleic - unsaturated fat -3%

இத்தகைய மருத்துவக் குணம் வாய்ந்த நெய்யை உணவில் எவ்வாறு பயன்படுத்த வேண்டும் என்பதை அறிந்துகொள்வோம்.

நெய் உருக்கி மோர் பெருக்கி....

அதாவது நெய்யை நன்கு உருக்கி சுடு சாதத்தில் சேர்த்து கலந்து சாப்பிட வேண்டும். நெய்யை உருக்கி சாப்பிடுவதால் உடலுக்கு குளிர்ச்சியைக் கொடுத்து உஷ்ணத்தைத் தணிக்கும்.

தோசை வார்க்கும் போது எண்ணைய்க்கு பதிலாக நெய் சேர்த்துக் கொள்ளலாம். நெய் சேர்த்த பட்சணங்களை உண்ணலாம்.

மலச்சிக்கலைப் போக்கும். வாத, பித்த, கபத்தின் சீற்றங்களைக் குறைத்து அதனதன் நிலையில் நிறுத்தி நோய்களின் தாக்கத்தைத் தடுக்கும்.

* ஞாபக சக்தியை தூண்டும்

* சரும பளபளப்பைக் கொடுக்கும்

* கண் நரம்புகளைப் பலப்படுத்தி கண் பார்வை தெளிவடையச் செய்யும்.

உடல் வலுவடைய

சிலர் எப்போதும் சோர்வுடன் உடல் வலுவில்லாமல் காணப்படுவார்கள். சிறிது தூரம் நடந்தால்கூட அவர்களுக்கு மேல் மூச்சு வாங்கும். உடனே அமர்ந்து விடுவார்கள். கால்கள் அதிகமாக வலிப்பதாகக் கூறுவார்கள். இதற்கு காரணம் உடலில் சத்தின்மையே...

இவர்கள் தினமும் மதிய உணவில் நெய்யை சேர்த்து வந்தால் உடலுக்குத் தேவையான சத்துக்கள் கிடைக்கும்.

குடற்புண் குணமாக

குடற்புண் (அல்சர்) கொண்டவர்கள் பசியின்மையால் அவதியுறுவார்கள். சரியான நேரத்திற்கு உணவு சாப்பிடாமலும், அதிக பட்டினியாகவும் இருப்பவர்களின் வயிற்றில் ஜீரண அமிலங்கள் சுரந்து குடலின் உட்புறச் சுவர்களை புண்ணாக்கி விடுகின்றன. மேலும் வாயுக் கோளாறு உள்ளவர்களுக்கும், உணவில் அதிக காரம் சேர்த்துக் கொள்பவர்களுக்கும், மது போன்ற போதை வஸ்துக்கள் உபயோகிப்பவர்களுக்கும், மன அழுத்தம் கொண்டவர்களுக்கும் குடல் புண்ணாகிவிடும். இதனால் வாயிலும் புண்கள் உருவாகி, ஒருவித நாற்றம் வீசும்.

இவர்கள் உணவில் நெய் சேர்த்து சாப்பிட்டு வந்தால் குடலின் உட்புறச் சுவர்களில் உள்ள புண்கள் ஆறுவதுடன், சுரப்பிகள் பலப்படும். மலச்சிக்கல் நீங்கும். நன்கு ஜீரண சக்தியைத் தூன்டும்.


கியாரண்ட்டி , வாரண்ட்டி என்றால் என்ன..?




கியாரண்ட்டி என்றால் என்ன..?

வாரண்ட்டி என்றால் என்ன..?

கியாரண்ட்டி’ என்றால் ‘உத்திரவாதம்’ என்பது எல்லோருக்கும் தெரிந்ததே. ‘வாரண்ட்டி’ என்பதும் கிட்டத்தட்ட அதே பொருளைக் குறிக்கும் சொல்தான். ஆனால் சட்டத்தின் பார்வையில் ‘கியாரண்டி’ என்றால் ‘பொருளை மாற்றிக் கொடுப்பது,’ வாரண்டி என்றால் ‘சர்வீஸை’க் குறிப்பது. அதாவது, ஒரு பொருள் வாங்கிய பின்னர் ஒரு குறிப்பிட்ட காலத்திற்குள் அது சரியாக வேலை செய்யாவிட்டால், மாற்றிக் கொடுப்பார்கள். ஆனால் தற்போது, பொருளை மாற்றிக் கொடுப்பதில்லை. ரிப்பேர்தான் செய்து கொடுக்கிறார்கள்.

சமீபத்தில் ‘லாப்_டாப்’ தொடர்பான ஒரு வழக்கு நடந்தது. ஒரு ‘சயன்டிஸ்ட்’ தன்னுடைய புதிய கண்டுபிடிப்பை, ஒரு செமினாரில், ‘லாப்டாப்’ மூலமாக விளக்கிக் கொண்டிருக்கும்போது, மானிட்டர் வெறுமையாகிவிட்டது. மேற்கொண்டு எப்படி தொடர்வது என்று தெரியாமல், தவித்து, எப்படியோ சமாளித்திருக்கிறார். உடனே, ‘லாப்_டாப் வாங்கிய நிறுவனத்தைக் கேட்டதில்’ அவர்கள் கூலாக, ‘நீங்கள் ‘லாப்_டாப்பை’ சரியாக ‘பிளக்கில்’ செருகவில்லை. அதனால் அது எங்கள் தவறு இல்லை. இதற்கு நாங்கள் ஒன்றும் செய்யமுடியாது’ என்று தட்டிக்கழித்துவிட்டார்கள். மேலும் வற்புறுத்தி, ‘கியாரண்ட்டி’ கொடுத்திருப்பதால், மாற்றிக் கொடுக்க வேண்டும் என்றவுடன், நாங்கள் கியாரண்ட்டி கொடுக்கவில்லை. வாரண்ட்டி என்றுதான் ‘கார்டு’ கொடுத்திருக்கிறோம். அதனால் மாற்றிக் கொடுக்க முடியாது. வேண்டுமானால் ரிப்பேர் செய்து கொடுக்கிறோம்’ என்றார்கள் ஆனால் ரிப்பேர் செய்ய முடியாமல், ‘லாப்_டாப்’ உபயோகமில்லாமல் போய்விட்டது. ‘கியாரண்ட்டி_வாரண்ட்டியை’ வைத்துக் கொண்டு எப்படி விளையாடிவிட்டார்கள் பாருங்கள்!

பொருட்களை விற்பனை செய்யும்போது, உபயோகிக்கும் முறையை விளக்க ‘இன்ஸ்ட்ரக்ஷன் மேனுவல்’ கொடுக்கிறார்கள். ஆனால் அதிலிருந்து நம்மால் எதுவும் புரிந்து கொள்ள முடிவதில்லை.

மேலே சொன்ன ‘லாப்_டாப்’ விஷயம் போல் ‘மைக்ரோவேவ் அவன்’ பற்றிய ஒரு செய்தி. பெரும்பாலான ‘மைக்ரோ வேவ் அவன்’கள், 15 ஆம்பியர், கரண்டைத் தாங்கும் சுவிட்சுகளில்தான் வேலைசெய்யும். பல வீடுகளில் இந்த வசதி இருக்காது. இதனால், சிலர், ‘அவன் வேலை செய்யவில்லையென்று’ பதட்டப்படுவார்கள். வேறு சிலர், ஆர்வக் கோளாறு காரணமாக இயங்கவைக்க வேண்டுமென்று ஏதாவது செய்து, ‘மைக்ரோ_வேவ் அவனை’ ரிப்பேர் செய்துவிடுவார்கள். அப்படி ரிப்பேரானால், இந்த ‘கியாரண்ட்டி_வாரண்ட்டி’ வார்த்தைகளைப் போட்டு நம்மைக் குழப்பி, ஏமாற்றிவிடுவார்கள். ‘15 ஆம்ஸ் சுவிட்ச்’ இல்லாதவர்கள், ஒரு ‘சுவிட்ச் கன்வெர்டர்’ வாங்கி பிளக்கில் செருகினால், ‘அவன்’ வேலை செய்யும். இதை அவர்கள் எப்படி உபயோகிக்க வேண்டும் என்பதைத் தெளிவாகப் போடுவதில்லை.

நுகர்வோர் பாதிப்படையும்போது பாதிப்பு ஏற்படுத்தியது, அரசாங்கமாக இருந்தாலும்கூட நஷ்டஈடு கொடுக்க வேண்டும். ஒரு முறை, ‘டிமாண்ட் டிராஃப்ட்’ சாதாரண தபாலில் ஒருவருக்கு அனுப்பப்பட்டது. பெறுநர், அனுப்புனர் முகவரிகள் மிகச் சரியாக இருந்தும். அனுப்பியவருக்கே திரும்பி வந்துவிட்டது. போஸ்டல் டிபார்ட்மெண்டில் அனுப்புவரின் முகவரியை, பெறுபவரின் முகவரியைவிட பெரிதாக எழுதி இருந்ததால் இந்தத் தவறு நடந்ததாக, நுகர்வோர் நீதிமன்றத்தில், பதில் மனு தாக்கல் செய்தார்கள். ஆனால் இந்தப் பதிலை ஏற்றுக் கொள்ளாத நீதிமன்றம், பாதிக்கப்பட்டவர்க்கு நஷ்ட ஈடு கொடுக்க உத்தரவிட்டது. ‘நெற்றிக்கண் திறப்பினும் குற்றம் குற்றமே!’

யார் நுகர்வோர்?

தனி ஒருவர் பொருள் வாங்கினால், நுகர்வோராகக் கருதப்பட்டு, அவருக்கான உரிமைகளை, நுகர்வோர் நீதிமன்றத்திற்குக் கொண்டு சென்று தீர்வுபெற முடியும். ஆனால் வாங்கும் பொருள் வியாபார நோக்கத்திற்காகப் பயன்படுத்தப்பட்டால், நுகர்வோர் நீதி மன்றத்தில் தீர்வு பெற முடியாது.

-Via- நெல்லை களஞ்சியம்



அஜீரண தொல்லையிலிருந்து விடுபட ஓமம்!




அஜீரண தொல்லையிலிருந்து விடுபட ஓமம்!

அஜீரணத்தால் ஏற்படும் வயிற்று வலிக்கு 50 கிராம் ஓமத்தை ஒரு சட்டியில் வறுத்து அதை முறத்தில் கொட்டித் தேய்க்க உமி நீங்கிச் சுத்தமாகும். அதைப் புடைத்து அம்மியில் வைத்து அத்துடன் அதே அளவு பனை வெல்லத்தையும் சேர்த்து அரைத்து அதில் சிறிதளவு காலை மாலை இரு வேளை வீதம் சாப்பிட்டு வெந்நீர் அருந்திவர வயிறு குணமாகும். உப்புசமும் நீங்கும்.

முருங்கை இலையை உப்புச் சேர்த்து லேசாக நசுக்கி கசக்கிப் பிழிந்து வரும் சாற்றில் இரண்டு ஸ்பூன் சாப்பிட உடனே வயிற்றுவலி ந“ங்கும்.

வெந்தயத்தை ஓர் இரவு ஊற வைத்து மறுநாள் காலையில் எடுத்து தயிரில் சேர்த்துச் சாப்பிட வயிற்றுவலி குணமாகும்.

சுக்கு, மிளகு, திப்பிலி வகைக்கு 10 கிராம், பனை வெல்லம் 5 கிராம் இவற்றில் சுக்கைத் தோல் நீக்கிவிட்டு பின் மற்ற சரக்குகளையும் தூளாக்கி அத்துடன் பனை வெல்லத்தையும் சேர்த்து அரைத்துக் காலையில் சிறிதளவு உள்ளுக்கு அருந்தி வர அஜீரண சம்பந்த வயிற்றுவலி குணமாகும்.

குழந்தை வயிற்று வலியால் துடித்தால் வசம்பு சுட்ட சாம்பலுடன் சிறிது தேன் சேர்த்துக் குழைத்து நாக்கில் தடவி விடுவதோடு, வசம்பு சுட்டகரியைச் சிறிது நீர்விட்டு குழைத்து வயிற்றில் கனமான பற்று போட்டுவந்தால் குணமாகும்.

வயிற்றுக் கடுப்பு அதிகமாக இருக்குமானால் தொட்டால் சிணுங்கி செடியின் இலையை அரைத்து சுண்டைக்காயளவு தயிரில் கலந்து சாப்பிட குணமாகும்.

சிறிது பெருங்காயத்தை பொரித்து நீர் மோரில் சேர்த்து அத்துடன் கறி மஞ்சள் தூளில் ஒரு சிட்டிகை போட்டு கலக்கி ஒரு நாளைக்கு மூன்று வேளை அருந்தினால் வாயு சம்பந்த வயிற்றுவலி நீங்கும்.

இஞ்சிச்சாறுடன் 1 டீஸ்பூன் எலுமிச்சை சாறு கலந்து, கல் உப்பைப் பொடித்துச் சேர்த்துக் குடித்தால், செரிமானக் கோளாறு சட்டென சரியாகும்.

கால் ஆணி சரியாக ஒரு எளிய வைத்தியம்:
தக்காளியை இரண்டாக வெட்டி, அதன் சதைப் பகுதியை ஆணியின் மேல் வைத்து, மீதி அரை தக்காளியால் அதை மூடி, ஒரு துணியால் கட்டிக் கொண்டு தூங்கவும். கூடவே ஓமத்தை பொடி செய்து, சம அளவு சர்க்கரை சேர்த்து, 1 டீஸ்பூன் அளவு இரவில் சாப்பிடவும். 1 வாரம் இரண்டையும் செய்து வர, கால் ஆணி குணமாகும்.

மணத்தக்காளி வாய் புண்ணுக்கு நல்லது எனத் தெரியும். மணத்தக்காளிக் கீரையை காரமில்லாமல் பச்சைப் பருப்புடன் சேர்த்து சமைத்தோ, கீரையை லேசாக வதக்கி, வதக்கிய மிளகாய், தேங்காய், உப்பு சேர்த்து அரைத்து தயிரில் கலந்தோ சாப்பிட, நீண்ட நாள் இருமலால் உண்டான தொண்டைப் புண்ணும், ரணமும் ஆறும்.

இஞ்சியைக் கழுவி, தோல் நீக்கி சின்னத் துண்டுகளாக வெட்டவும். சுத்தமான தேனில் அதை நான்கைந்து நாட்கள் ஊற வைக்கவும். தினம் இதில் ஒரு துண்டு சாப்பிட்டு வர, சருமச் சுருக்கங்கள் நீங்கி, இளமை ஊஞ்சலாடும்.

முட்டைக்கோஸை மிக்சியில் போட்டு, தண்ணீர் விடாமல் பொடியாகும்படி சுற்றவும். அத்துடன் கொஞ்சம் உப்பும் மிளகுத்தூளும் கலந்து, கொஞ்சம், கொஞ்சமாகச் சாப்பிட, எப்படிப்பட்ட கபமும் காணாமல் போகும். முட்டைக்கோஸ் வேக வைத்த தண்ணீரை வெதுவெதுப்பாகக் குடிப்பதும் பலன் தரும்.

திடீரென காது வலிக்கிறதா?
பூண்டை உரித்து, ஒரு மெல்லிய துணியில் சுற்றி, வலிக்கிற காதுக்குள் 1 மணி நேரம் வைத்திருக்கவும். 2-3 நாட்களுக்கு அப்படிச் செய்தால், காது வலி சரியாகும். சீழ் வடிவதும் நிற்கும்.

வேம்பு - மருத்துவ குணங்கள்




வேம்பு - மருத்துவ குணங்கள்
1. வேப்பம்பட்டை விட்டு விட்டு வருகிற ஜீரத்திற்கு உதவுகிறது.
2. ரத்தத்தைச் சுத்திகரிக்கும் குணமிருப்பதால் குஷ்ட நோய்க்குக் கொடுக்கப்படுகிறது.
3. வயிற்றில் பூச்சித் தொந்தரவு உள்ளவர்களுக்கு இளந்தளிர்களை உப்புடனும் மிளகுடனும் அரைத்துக் கொடுக்கப்படுகிறது.
4. காமாலை நோய்க்கு வேப்பிலைச் சாற்றைத் தேனுடன் கலந்து கொடுக்கப்படுகிறது.
5. புண்களைச் சுத்தம் பட்டைக் கஷாயம் பயன்படுகிறது.
6. வேப்பிலையும், மஞ்சளையும் சேர்த்தரைத்து பற்றை அம்மைப் புண்களில் மருந்தாகப் பூசப்படுகிறது.
7. வேப்பெண்ணெய் புண்களை அகற்றுவதற்காக மேலே பூசப்படும்.
8. புத்தகங்களை அரிக்கும் பூச்சிகளை அகற்றுவதற்கு நூல் நிலையங்களில் வேப்பிலை பயன்படுகிறது.
9. வேப்பம்பூ, வாந்தி, ஏப்பம், பித்தம் ஆகியவற்றைப் போக்கும்.
10. வேப்பம் பழத்தின் ரசத்தை எடுத்து சரும வியாதியுள்ளவர்களுக்கு கொடுத்து வந்தால் நோய் தீரும்.

C.F.L .பல்புகள் உடைந்தால்...? என்ன செய்யலாம்...! என்ன செய்யக் கூடாது...!



C.F.L .பல்புகள் உடைந்தால்...?

என்ன செய்யலாம்...! என்ன செய்யக் கூடாது...!

சி. எஃப். எல். பல்புகள் கைத்தவறி விழுந்து உடைந்துவிட்டால் , உடனே அந்த இடத்தை விட்டு வெளியேறிவிட வேண்டும் என்று பிரிட்டிஷ் சுகாதாரத்துறை எச்சரித்துள்ளது . ஏனென்றால் இந்த பல்புகளுக்குள் உள்ள மெர்க்குரி திரவம் , ஆர்சனிக் , துத்தநாகத்தைவிட அதிக விஷத்தன்மையுள்ளது . இந்த விஷத்தை நுகர்ந்தாலோ அல்லது சருமத்தில் பட்டாலோ , மைக்ரேன் தலைவலி , மூளை பாதிப்பு , உடல் அசைவுகள் , பாதிக்கப்பட்டு நிலை தடுமாறுதல் போன்றவை ஏற்படுமாம் . அலர்ஜி பிரச்னை உள்ளவர்களுக்கு சரும பாதிப்புகளும் ஏற்படுமாம் .

சி. எஃப். எல் .பல்புகள் உடைந்துவிட்டால் என்ன செய்ய வேண்டும் ?

* உடனே அந்த அறையிலிருந்து வெளியேறி விட வேண்டும் . அந்த நெடி மூக்கில் ஏறக்கூடாது . பதினைந்து நிமிடங்கள் ஆனபின் அப்புறப்படுத்தலாம் . நொருங்கிக் கிடக்கும் கண்ணாடித் துகள்கள் காலில் படாமல் பார்த்துக் கொள்ளவும் .

* வேக்வம் க்ளீனரால் சுத்தப்படுத்தக் கூடாது . வேக்வம் உறிஞ்சப்பட்டால் , அது உள்ளே ஒட்டிக்கொள்ளும் . அதைத் திரும்ப உபயோகிக்கும் போது மெர்க்குரித் துகள்கள் மற்ற அறைகளுக்கும் பரவி , மிக மோசமான உடல் உபாதைகளை ஏற்படுத்தும் .

* கைகளில் ரப்பர் கிளவுஸ் போட்டுக்கொண்டு சாதாரண துடைப்பத்தால் சுத்தப்படுத்தலாம் .

* உடைந்தத் துகள்கள் மற்றும் திரவத்தை ஒரு பிளாஸ்டி பையில் சேகரித்து , ' சீல் ' செய்யவும் . சாதாரண குப்பைத் தொட்டியில் போடாமல் , கார்ப்பரேஷன் ' ரீசைக்ளீங் பின்' னில் கொண்டு சேர்த்தால் , அவர்கள் பாதுகாப்பாக அப்புறப்படுத்தி விடுவார்கள் .

வாய்வுப் பிடிப்பு, சுளுக்கு..!




வாய்வுப் பிடிப்பு, சுளுக்கு..!

வாய்வுப் பிடிப்பு, சுளுக்கு இந்த இரண்டுக்கும் சித்த வைத்தியத்தில் முழுமையான நிவாரணம் இருக்கு. இதுக்கான மருத்துவத்தைப் பார்க்கலாம்.

ஒரு கைப்பிடி முடக்கத்தான் இலையை எடுத்து, 3 டம்ளர் தண்ணியில் போட்டுக் கொதிக்க வைக்கணும். அதை அரை டம்ளரா சுண்ட வச்சு பெரியவங்களுக்குத் தரலாம். சின்னக் குழந்தைகளுக்கு அரை பாலாடை கொடுத்தாப் போதும். ஒருமுறை இதைச் சாப்பிட்டு வந்தாலே பிரச்னை சரியாகிடும்.

மேல சொன்ன மருந்தைச் சாப்பிடுறதோட, இப்ப சொல்லப் போற வைத்தியங்களில் எது முடியுதோ அதைச் செய்ய சுளுக்கும் வாய்வுப் பிடிப்பும் ஓடியே போயிடும்.

5 கிராம் முருங்கைப்பட்டை, ஒரு கணு சுக்கு, புளியங்கொட்டை அளவு பெருங்காயம், ஒரு டீஸ்பூன் கடுகு எடுத்து, தண்ணி விட்டு அரைச்சு, கூழான பதத்துல கரண்டியில வச்சு சூடு காட்டணும். பின் இளஞ்சூட்டில் அதை சுளுக்கோ, வாய்வுப் பிடிப்போ இருக்குற இடத்துல 'பத்து'ப் போடணும். இதை இராத்திரியில போட்டு, காலையில கழுவிடணும்.

தழுதாளை இரண்டு கைப்பிடி அளவு எடுத்து, நாலு லிட்டர் தண்ணியில் போட்டுக் கொதிக்க வைக்கணும். இந்தத் தண்ணியை இளஞ்சூடாக ஆறவிட்டு, வாய்வுப் பிடிப்பு இருக்குற இடத்துல் தினமும் ஊற்ற வேண்டும்.

வாதநாராயணன் இலையும் இதுமாதிரிக் கோளாறுகளைச் சரி பண்ணும். வாதநாராயணன் இலையை ஒரு கைப்பிடி எடுத்து, அதைப் பச்சையா அரைச்சு, வாய்வுப் பிடிப்பு/சுளுக்கு இருக்குற இடத்துல பத்துப் போட்டு 3 மணி நேரம் கழிச்சுக் கழுவணும்.

சுளுக்கு/வாய்வுப் பிடிப்புக்கு இந்த மூணுமே நல்ல மருந்து!

அடிபட்டதால சில பேருக்கு உள்ளுக்குள்ள வீக்கம் இருக்கும். நடக்கவே கஷ்டப்படுவாங்க.. அப்படிப்பட்டவங்களுக்கு அற்புதமான மருந்து குன்றிமணி. காய்ஞ்ச குன்றிமணி விதைகளை இரண்டு ஸ்பூன் அளவு எடுத்து, தோலை எடுத்துட்டு, பருப்பை மட்டும் தண்ணியில் ஊற வைக்கணும். காலையில் ஊற வச்சதை சாயங்காலம் எடுத்து அரைச்சு, இரும்புக் கரண்டியில சுட வைக்கணும்.

பிறகு, இதை வீக்கம் உள்ள இடத்தில், இளஞ்சூட்டில் தினமும் இராத்திரி பத்துப் போடணும். இதை நாலு நாள் தேய்ச்சாலே வலியும் வீக்கமும் சரியாகிடும். தேவைப்பட்டால் ஒரு வாரம் கழிச்சுத் திரும்பவும் இதே வைத்தியத்தைச் செய்யலாம்.

சுளுக்கு, அடிபட்ட வீக்கம் இந்த இரண்டுக்கும் பிரண்டை நல்ல மருந்து. ஒரு கணு பிரண்டை, சிறு துண்டு மஞ்சள், கால் ஸ்பூன் உப்பு, புளியங்கொட்டை அளவு புளி எடுத்து, நல்லா அரைச்சு, சுட வச்சு, கூழ் பதமானதும் இளஞ்சூட்டுல் பூசி வந்தா நல்ல சுகம் கிடைக்கும்.


Friday, September 20, 2013

சேவை



காந்திதேசமென்று
கண்டம் விரியக்கத்தி
கந்தக கலாச்சாரம் மேவும்
கலவர பூமியே

சொந்தம் நீயென்று
சொர்ப்பனத்தில் இருந்தோம்
விந்தைகள் புரிந்து நீ
விளையாடுகிறாய் விற்பனமாய்

வெந்தபுண்ணில்
வேலினைப்பாச்சி
குந்தகம் செய்வதா - உன்
குறுகிய அரசியல்

பந்தயக்குதிரைகளாய்
பாரெல்லாம் அலையும்
நிந்தனை புரிந்துமா
நீ தருகிறாய் ஆயுதம்!

சிந்தை நிறைந்த
சிங்கார ஆட்சியா உன்னிடத்தில்
பந்தயம் போட்டு வெடிக்குது குண்டுகள்
பார்த்துக்கொள் உன்னை

குந்த நிலமுமின்றி
குண்டு மழையினிலே
பந்தம் பல தொலைத்து
பாழான எங்களிடமா? - நாம்

சிந்தும் கண்ணீரின் ஏழ்மை - உனை
சிரிக்க வைக்கிறதா?
சந்தனப் பேழையில் சுதந்திரம்
சயனித்தவனை சாய்த்த பூமியல்லவா

வந்தொருமுறை எம்மேல்
வாரியிறைத்த சேறு - உலக
சந்தி சிரித்துமா
சதியை நீ விடவில்லை- உலகை

முந்தும் முயற்சியிலே
முதுகில் குத்தவும்
சொந்த நலனுக்காய்
சொரணை இழப்பதுவும்

அந்ந அகிம்சா முர்த்திக்கு
அவமானம் என்றுணர் - நல்லைக்
கந்தன் காலடியில் அகிம்சைக்
காவியம் புதுப்பித்த
மைந்தன் தேசமிது
மலை வரினம் பணியாது!

Thanks: தலைத்தீவான்

சேவை





  சேவை

எழுத்ததை அறிவிப்பான் இறைவனாம் என்றே-என
   எண்ணியே ஆசிரியர் பணிசெய்ய நன்றே
அழுத்தமாய் பசுமரத் தாணியைப் போன்றே-நீர்
    ஆற்றிட வந்தீராம் சேவையாம் இன்றே
செழித்திட உலகது வேண்டுதல் நன்றே-என்
    சிரம்தாழக் கரம்கூப்பி செப்புதல் ஒன்றே
அழியாது இயற்கையைக் காப்பீரா மென்றே-வகுப்பு
    அறைதனில் மாணவர் முன்னாலே நின்றே
   
பருவங்கள் மாறிட உலகமே மாறும்-இதை
   படிக்கின்ற மணவர் உணரவே கூறும்
வருங்கால உலகமே அன்னாரின் கையில்-அதை
   வகுப்பது வகுப்பறை அறிவீரா பொய்யில்
தருகின்ற அழிவிற்கு ஜப்பானே சாட்சி-முன்னர்
   தமிழ்நாடு கண்டதும் அழியாத காட்சி
திருமிகு இப்பணி செய்திடின் நீரும்-நல்ல
   திருப்பணி யாகவே மலர்ந்திடும் பாரும்

பலவாறு பருவங்கள் மாறிட யிங்கே-தினம்
   பார்கின்றோம் யார்செய்த தவறுதான் எங்கே
நிலமகள் நடுங்கியே குலுங்கிட அந்தோ-தம்
  நெடும்வாயே திறந்துயிர் விழுங்கிட தந்தோம்
அலையாக பேராழி புகுந்திட உள்ளே-உலகு
  அழிகின்ற காட்சிகள் திரையது சொல்ல
விலையாக அழிப்பதோ நாள்தோறும் தன்னை-மேலும்
  விடுவாளா எண்ணுங்கள் இயற்கையாம் அன்னை

சுற்றும் சூழலும் கெட்டேதான் போச்சே-தினம்
   சுற்றிடும் உலகெங்கும் மாசாக ஆச்சே
கற்றும் பாடமே தெளியவே இல்லை-என்ன
   காரணம் யாருக்கும் புரியவே இல்லை
பெற்றவள் இயற்கையாம் அன்னையைக் காத்தே-நாம்-
   பேணுவோம் உலகென்னும் நம்பெரும் சொத்தே
மற்றெவர் போனாலும் மாணவர்  சேவை–உலக
   மக்களின் வாழ்வுக்குச் செய்திடும்  சேவை

         Thanks:          புலவர் சா இராமாநுசம்

Thursday, September 12, 2013



முதலாம் இராசராச சோழன்

இராசராச சோழன் காலத்தில் சோழ நாடு.1014 C.E.
ஆட்சிக்காலம் கி.பி. 985 - கி.பி. 1012
title இராசகேசரி
தலைநகரம் தஞ்சாவூர்
அரசி உலக மாதேவியார்
வானவன் மாதேவியார்
சோழ மகாதேவியார்
பிள்ளைகள் இராசேந்திர சோழன்
மாதேவடிகள்
குந்தவை
முன்னவன் உத்தம சோழன்
பின்னவன் இராசேந்திர சோழன்
தந்தை சுந்தர சோழன்
பிறப்பு தெரியவில்லை
இறப்பு கி.பி. 1014
முதலாம் இராசராச சோழன் சோழர்களின் புகழ் பெற்ற மன்னர்களுள் ஒருவனாவான். 'சோழ மரபினரின் பொற்காலம்' என்று போற்றத்தக்க வகையில் ஆட்சி செய்த இம்மன்னனின் ஆட்சிக்காலம் கி.பி 985 முதல் கி.பி 1012 வரையாகும். இவன் மகன் முதலாம் இராசேந்திரன் காலத்தில் சோழநாடு கடல் கடந்து பரவிய பெருமைக்கு அடிகோலியதும் இம்மன்னனே. இராசராச சோழனின் முப்பதாண்டு ஆட்சிக்காலமே சோழப் பேரரசின் வரலாற்றில் மிக முக்கியமாக விளங்கியது. ஆட்சி முறை, இராணுவம், நுண்கலை, கட்டடக்கலை, சமயம், இலக்கியம் ஆகிய பல்வேறு துறைகளில் புதிய எழுச்சியைக் கண்ட சோழப்பேரரசின் கொள்கைகள் இவனுடைய ஆட்சியில் உருப்பெற்றவையே.
இவன் கி.பி 957 முதல் கி.பி 973 வரை சோழ நாட்டை ஆண்ட சுந்தர சோழனுடைய இரண்டாவது மகனாவான். சுந்தர சோழனுக்கும் சேர நாட்டு வானவன் மாதேவிக்கும் ஐப்பசி திங்கள் சதய நன்னாளில் பிறந்த இவனது இயற்பெயர் "அருண்மொழிவர்மன்". இராஜகேசரி அருள்மொழிவர்மன் என்ற பெயராலேயே தன் ஆட்சியின் தொடக்க காலத்தில் இம்மன்னன் அழைக்கப்பட்டான். இவன் ஆட்சியின் 3ம் ஆண்டு முதலே ராச ராச சோழன் எனப்பட்டான் (988) தந்தை இறந்ததும் இவன் உடனடியாகப் பதவிக்கு வரவில்லை. 12 வருடகால உத்தம சோழனின் ஆட்சிக்குப் பின்னரே இவன் ஆட்சிப் பொறுப்பை ஏற்றுக்கொண்டான். விசயாலய சோழன் நிறுவிய சோழ அரசு இவன் காலத்திலும் இவன் மகன் இராசேந்திர சோழன் காலத்திலும் மிக உயர்நிலை எய்தியது. இராசராசனின் காலம் பிற்காலச் சோழர் வரலாற்றில் மட்டுமன்றித் தென்னிந்திய வரலாற்றிலேயே ஒரு பொற்காலமாகும்.
 இராஜராஜனின் கல்வெட்டுகள் பல, ஈழத்தில் உள்ளன. ஈழத்தைச் சோழர் கைப்பற்றியதைக் கொண்டாடும் வகையில் பொலன்னறுவையில் இராஜராஜன் சிவனுக்கு ஒரு கற்றளி எடுப்பித்தான். பொலன்னறுவை நகரின் சுவர்களுக்குள் அமைந்துள்ள இந்த அழகிய சிவாலயம் ஈழ நாட்டில் காணப்படும் புராதனச் சின்னங்களில் இன்றளவும் நன்கு பாதுகாக்கப்பட்டுள்ளது. இதன் கட்டட அமைப்பைக் காணும் பொழுது இது கி.பி 10 மூதல் 12ம் நூற்றாண்டுகளுக்குள்ளேயே கட்டப்பட்ட சோழர்காலத்துக் கோயில்கள் போன்றே(தஞ்சை பெரிய கோயில் இவ்வகைக் கோயில்களில் மிகவும் சிறந்தது) அமைந்துள்ளது

Tuesday, September 10, 2013


பிறக்கும் ஒவ்வொரு நாளுக்கும்
ஒவ்வொரு வண்ணம், ஒவ்வொரு வடிவம்.

கதிரவ னுடனே பிறந்த போதும்
கறுப்பில் முழுகிக் கிடக்கும் சில நாள்-
முகிலின் நடுவே பிறந்து வந்து
மழையாய்க் கண்ணீர் பொழியும் சில நாள்-
கீழை வானச் சிவப்பில் குளித்து
தகதக தகவென ஜொலிக்கும் சில நாள்-
பசுமை எழிலில் தானும் தோய்ந்து
புன்னகை மிளிர வலம்வரும் சில நாள்-
நீல வானைக் கையில் ஏந்தி
நேசக் கரத்தை நீட்டும் சில நாள்-
அமைதி யென்னும் விளக்கைக் கொண்டு
ஆனந்த ஒளியை ஊட்டும் சில நாள்-

ஒவ்வொரு நொடியும் பின்னிப் பிணைந்து
இணைந்தே நடக்கப் பிடிக்கும் சில நாள்-
முழுக்க முழுக்கத் தவிர்த்துத் தனியே
துவண்டு கிடக்க, கடக்கும் சிலநாள்-

பிறக்கும் ஒவ்வொரு நாளுக்கும்
ஒவ்வொரு வண்ணம், ஒவ்வொரு வடிவம்.
வளரும் அன்பில் நிறங்கள் மாறும்
நாள் ஒவ்வொன்றிலும் நலமே சேரும்.

Thanks : --கவிநயா




Saturday, August 24, 2013

உடலைப் பாதுகாக்கும் பருப்பு வகைகள்:





உடலைப் பாதுகாக்கும் பருப்பு வகைகள்:

உடலை சீராக இயக்குவதற்கு புரோட்டீன்கள் மிகவும் இன்றியமையாதது. அத்தகைய புரோட்டீன்கள் நிறைய உணவுகளில் உள்ளன. அதிலும் அசைவ உணவு பிரியர்கள் என்றால், இறைச்சி, முட்டை போன்றவை உள்ளது. ஆனால் சைவ உணவு பிரியர்களுக்கு புரோட்டீன் சிறப்பான முறையில் அமைந்திருப்பது பருப்பு வகைகளில் தான்.

மேலும் பருப்புக்களில் புரோட்டீன் மட்டுமின்றி, வேறு சில ஊட்டச்சத்துக்களும் நிறைந்துள்ளன. அந்த வகையில் இதனை உணவுகளில் அதிகம் சேர்த்து வந்தால், உடலில் ஏற்படும் பல பிரச்சனைகளை தவிர்க்கலாம். அது மட்டுமல்லாமல், பருப்புகளிலேயே பல வகைகள் உள்ளன.

அவை ஒவ்வொன்றிலும் ஒவ்வொரு சத்துக்கள் நிறைந்துள்ளன. அவற்றில் பொதுவான ஒன்று எது என்றால், அது குறைவான கலோரி இருப்பது தான். இதனால் உடல் எடை அதிகரிக்கும் என்ற கவலை இல்லாமல் இருக்கலாம்.

மேலும் இதனை தொடர்ச்சியாக சாப்பிட்டு வந்தால், புற்றுநோய், இதயநோய், மாரடைப்பு, பக்கவாதம், டைப் 2 நீரிழிவு போன்றவற்றின் தாக்கத்தில் இருந்து தப்பிக்கலாம். இப்போது பருப்புக்களின் வகைகளையும், அதில் உள்ள சத்துக்களையும் பார்ப்போம்.

துவரம் பருப்பு.......... துவரம் பருப்பில் நல்ல அளவில் புரோட்டீன், ஃபோலிக் ஆசிட் மற்றும் அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளன. மேலும் இதில் காம்ப்ளக்ஸ் கார்போஹைட்ரேட் மற்றும் நார்ச்சத்து அதிகம் இருப்பதால், குடல் இயக்கம் சீராக இருந்து, மலச்சிக்கல் பிரச்சினை ஏற்படுவதை தடுக்கலாம்.

பாசிப்பருப்பு........... பாசிப்பருப்பில் வைட்டமின் `ஏ, பி, சி, ஈ' மற்றும் கனிமச்சத்துக்களான கால்சியம், இரும்புச்சத்து மற்றும் பொட்டாசியம் அதிகம் உள்ளது. மேலும் உடல் எடையை குறைப்பதற்கு உதவியாகவும் இருக்கும். அதுமட்டுமல்லாமல், அதிகப்படியான புரோட்டின் மற்றும் நார்ச்சத்தால், இது உடலில் உள்ள கொலஸ்ட்ராலின் அளவை குறைக்கும்.

பச்சை பயறு............ இந்த பயறு மஞ்சள் நிறத்தில் இருக்கும். இதிலும் புரோட்டீன், கால்சியம், பொட்டாசியம், `பி' காம்ப்ளக்ஸ் வைட்டமின்கள் மற்றும் நார்ச்சத்து அதிகம் உள்ளது. எனவே இதனை சாப்பிட்டால், உடலில் உணவுகள் எளிதல் செரிமான மடைவதோடு, உடல் எடை மற்றும் கொலஸ்ட்ரால் குறையவும் உதவியாக இருக்கும்

கொண்டைக் கடலை......... கொண்டைக் கடலையில் ஃபோலிக் ஆசிட், மாங்கனீசு, இரும்புச்சத்து, காப்பர், மக்னீசியம் போன்றவை அதிக அளவில் இருக்கிறது. ஆகவே கொலஸ்ட்ரால் குறைவதோடு, இதய நோய் ஏற்படுவதற்கான வாய்ப்பும் குறையும். மேலும் இது உடல் சக்தியையும் அதிகரிக்கும்.

மைசூர் பருப்பு........... மைசூர் பருப்பின் சிறப்பு என்னவென்றால், அதில் கரையக்கூடிய நார்ச்சத்து இருப்பதால், அது உடலில் உள்ள பித்தக்கற்களை வெளியேற்றிவிடும். மேலும் ஃப்ளேவோன்ஸை அதிகம் கொண்டதால், புற்றுநோய் தாக்கத்தில் இருந்தும் காப்பாற்றும். அதுமட்டுமின்றி, இது உடலில் ரத்தத்தை அனைத்து உறுப்புகளுக்கும் சீராக கொண்டு செல்லும்.

சுண்டல்...... கொண்டைக் கடலையில் ஒரு வகை தான், இந்த சுண்டல். இதனை உணவில் அதிகம் சேர்த்து வந்தால், இதயம் ஆரோக்கியமாக இருக்கும். புரோட்டீன், காம்ப்ளக்ஸ் கார்போஹைட்ரோட், வைட்டமின்கள், இரும்புச்சத்து, கால்சியம், ஃபோலேட் மற்றும் நார்ச்சத்து அதிகம் நிறைந்திருப்பதால், அது கருப்பைக் குழாயில் பிரச்சினை ஏற்படுவதையும், ரத்த சோகை பிரச்சனையையும் தடுக்கும்.

கடலைப் பருப்பு........... கடலைப் பருப்பில் ஃபோலிக் ஆசிட், மாங்கனீசு, இரும்புச்சத்து, காப்பர் மற்றும் மக்னீசியம் போன்றவை நிறைந்துள்ளது. இதில் செரிலை விட, இரண்டு மடங்கு அதிகமாக புரோட்டீன் நிறைந்திருப்பதால், இதனை அதிகம் சாப்பிட உடல் வலுவோடு ஆரோக்கியமாக இருக்கும். குறிப்பாக இதனை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால், நீரிழிவு மற்றும் கரோனரி இருதய நோய் போன்றவை ஏற்படுவது குறையும் என்று கண்டுபிடிக்கப் ட்டுள்ளது.

சிவப்பு காராமணி............ சிவப்பு காராமணியில் `பி' காம்ப்ளக்ஸ் வைட்டமின்கள் மற்றும் பல்வேறு கனிமச்சத்துக்கள் அடங்கியுள்ளது. மேலும் வைட்டமின் பி6, இரும்புச்சத்து, மக்னீசியம், பாஸ்பரஸ் மற்றும் பொட்டாசியம் அதிகம் நிறைந்துள்ளது.

ஆகவே இது புற்றுநோய், கொலஸ்ட்ரால் போன்றவை ஏற்படுவதைக் குறைக்கும். இதில் நிறைந்துள்ள வைட்டமின் கே, மூளையின் செயல்பாட்டை சீராக வைக்கும். குறிப்பாக இது எலும்புகளை வலுவோடு வைப்பதற்கு பெரிதும் உதவியாக உள்ளது.

தட்டை பயறு...... தட்டை பயறை குழம்பு வைத்து சாப்பிட்டால், அதன் சுவைக்கு ஈடு இணை எதுவும் இருக்க முடியாது. அத்தகைய தட்டை பயறில் கரையக்கூடிய நார்ச்சத்து இருப்பதால், இது இருதய நோய் ஏற்படுவதை தடுக்கும். மேலும் இதில் பொட்டாசியம், இரும்புச்சத்து, வைட்டமின் சி மற்றும் ஜிங்க் நிறைந்துள்ளது. இதனால் தசைச் சுருக்கம் ஏற்படுவதைத் தடுக்கும்.

உளுத்தம் பருப்பு...... இட்லிக்கும், தாளிப்பதற்கு பயன்படுத்தும் உளுத்தம் பருப்பில், கொழுப்பு குறைவாகவும், புரோட்டீன் மற்றும் நார்ச்சத்து அதிகம் அடங்கியுள்ளது. மேலும் இதில் அத்தியாவசிய வைட்டமின்கள் மற்றும் கனிமச்சத்துக்கள் நிறைந்திருக்கிறது. சொல்லப்போனால், இது இறைச்சிக்கு பதிலாக ஒரு சிறந்த உணவுப் பொருள் என்றும் சொல்லலாம்.

நன்றி: மாலை மலர் இணையதளம்