Tuesday, February 21, 2012

மாசு :- பூமியை அச்சுறுத்தும் ஆபத்து


மாசு :- பூமியை அச்சுறுத்தும் ஆபத்து

பூமியை அச்சுறுத்தும் மாசு என்னும் அரக்கனிடமிருந்து நம் பூமி பந்தை காப்போம் .

சுற்றுப்புறச் சூழல் மாசு உருவாக்கியிருக்கும் மிகப்பெரிய சவால் உலக
வெப்பம் அதிகரிப்பு என்று உலக நாடுகள் ஒத்துக் கொண்டிருக்கின்றன.
பூமியின் வெப்ப அளவு அதிகரிப்பது என்பது ஏதோ ஒரு காலநிலைச் செய்தி போல
வாசித்து கடந்து போக வேண்டியதல்ல. இது மிகப்பெரிய மாற்றங்களை பூமியில்
ஏற்படுத்தி மனித குலத்துக்கே மாபெரும் அச்சுறுத்தலாய் உருமாறிவிடும்.

1995க்குப் பிறகு பூமியின் வெப்பம் பெருமளவுக்கு அதிகரித்திருக்கிறது.
இது பூமியின் சாதாரண வெப்ப அளவின் விகிதத்தை பெருமளவுக்கு மீறியிருப்பது
கவலைக்குரிய செய்தி. நீராவி, கரியமில வாயு, ஓசோன், மீத்தேன், நிட்ரஸ்
ஆக்சைடு போன்றவற்றின் அளவு பூமியில் அதிகரித்திருப்பது பூமியின் வெப்ப
அதிகரிப்புக்கு முக்கிய காரணமாகும். காடுகளை அழிப்பதும், எரிபொருட்களின்
வெப்பமும் பூமியின் வெப்ப நிலை ஏற்றத்துக்கு இன்னும் சில காரணங்கள்.

முதலாவதாக உலக வெம்மை அதிகரிப்பினால் கடல் மட்டம் உயரும். கடல் மட்டம்
உயர்வதனால் பல நிலப்பரப்புகள் கடலுக்குள் மூழ்கிப் போகும் அபாயம் உண்டு.
பங்களாதேஷ், நெதர்லாந்து, இங்கிலாந்தின் சில பகுதிகள் தாழ்வாக
இருப்பதனால் முதல் பாதிப்பு அடையும் வாய்ப்பு இருப்பதாகவும்
ஆராய்ச்சியாளர்கள் எச்சரிக்கிறார்கள்.
வெப்பம் சீராக இல்லாமல் அதிகரிப்பது இயல்பாய் நடந்து கொண்டிருக்கும்
காலநிலையை முற்றிலும் சிதைத்து விடுகிறது. வெள்ளப் பெருக்கு, வெப்ப
அலைகள் பூமியில் வீசுதல், சூறாவளி போன்ற பல இயற்கைச்சீற்றங்களுக்கும் இது
காரணமாகி விடுகிறது.

தென் துருவப் பகுயில் வானில் விழுந்துள்ள ஓசோன் ஓட்டை இன்னொரு மிகப்பெரிய
அச்சுறுத்தலாக விளங்குகிறது. காற்றில் ஏற்படும் மாசு
(குளோரோபுளூரோகார்பன்) இதன் முக்கிய காரணியாக விளங்கும் அதே நேரத்தில்
குளிர்சாதனப் பெட்டி, பிரிட்ஜ், தானியங்கி விற்பனை இயந்திரங்கள்
போன்றவற்றிலிருந்து வெளியாகும் வாயுவும் இந்த ஓசோன் ஓட்டைக்கு
குறிப்பிடத்தக்க காரணமாக விளங்குவதாக விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர்.

புற ஊதாக் கதிர்களின் தாக்கத்திலிருந்து பூமியைப் பாதுகாக்கும் ஓசோன்
படலம் வலுவிழப்பதால் தோல் புற்று நோய் உட்பட பல்வேறு நோய்கள் மனிதனுக்கு
வருகின்றன. தொடர்ந்து ஓசோன் படலம் வலுவிழந்தால் பூமியில் மனிதர்கள் உட்பட
உயிரினங்களே அழிந்து போகும் என்பது அதிர்ச்சித் தகவல்.

சுற்றுப்புறச் சூழல் பாதுகாப்பு என்பது சாதி, மத, இன, மொழி, நாடு
வேறுபாடுகளற்று மனிதகுலம் முன்னெடுத்துச் செல்லவேண்டிய மிகவும்
முக்கியமான ஒன்றாகும். இவற்றை தவறவிடும் ஒவ்வொரு தருணங்களிலும் பூமியின்
ஆயுளைக் குறைத்துக் கொண்டிருக்கிறோம் என்பதை அனைவரும் உணரவேண்டும்.

அன்றாடம் நிகழ்த்தும் சிறு சிறு செயல்களின் மூலம் நமது சுற்றுப்புறத்தைக்
காக்கும் கடமை நம் அனைவருக்கும் உண்டு.

பொதுவிடங்களில் குப்பைகளைச் சேர்க்காமல் குப்பைத் தொட்டியில் குப்பைகளைப்
போடுதல். பொதுவிடங்களில் தேவையற்றவற்றை எரித்து காற்றை மாசுப்படுத்துதல்,
தண்ணீரை தேவையற்ற விதத்தில் தேங்க விடுதல், கழிவு நீர் தேங்குமிடங்களில்
அடைப்புகள் ஏற்படுத்துதல், போன்றவற்றைத் தவிர்க்க வேண்டும்.

1970களில் சிப்கோ இயக்கம் இந்தியாவில் நடைபெற்றது. மரங்களை அரவணைத்து
மரம் இயற்கையைப் பாதுகாப்போம் எனும் கோஷங்கள் மகாத்மா காந்தியை
முன்மாதிரியாகக் கொண்டு நடத்தப்பட்டது. மரம் நடுதலும், இயற்கைப்
பராமரித்தலும் மிகவும் அவசியம்.

சைக்கிள் போன்ற வாகனங்களையோ, மின் வாகனங்களையோ இயக்குவதன் மூலம் ஒரு
வருடத்திற்கு 16,000 பவுண்ட் கரியமில வாயுவை பூமியில் கலக்காமல்
தடுக்கலாம். வாகனம் வாங்கும்போது அதிக மைலேஜ் கிடைக்கக் கூடிய
வாகனங்களைப் பயன்படுத்துவதன் மூலமும் சுற்றுப் புறத்தில் கரியமில
வாயுவின் அளவைக் குறைக்க முடியும்.வாகனத்தைச் சரியாகப் பராமரிப்பதன்
மூலமும் காற்று மாசுபடுவதைத் தடுக்க முடியும். வாகன சக்கரங்களைச் சரியாக
வைத்திருப்பதும், காற்று வடிகட்டியை சரியாகப் பராமரிப்பதும் கூட
வருடத்திற்கு ஆயிரம் பவுண்ட் கரியமில வாயுவைக் குறைக்கிறது.

சரியான புகைச் சோதனை செய்யப்படாத வாகனங்கள் சாலைகளில் செல்ல அரசு
கடுமையான தடை விதிக்க வேண்டும். அமெரிக்க தலைநகரான வாஷிங்டனில் மட்டும்
ஆண்டுக்கு ஒன்றரை இலட்சம் டன் எடையுள்ள காற்று மாசு இந்த புகைச்சோதனையின்
மூலம் தவிர்க்கப்படுவதாக வாஷிங்டன் எமிஷன் கண்ட் ரோல் தெரிவித்துள்ளது.
அமெரிக்கா போன்ற நாடுகளில் கட்டாயமாக்கப்பட்டுள்ள இந்த சட்டம் இந்தியா
போன்ற வளரும் நாடுகளிலும் பிழையின்றிப் பின்பற்ற வேண்டும்.

பொருட்கள் வாங்கும்போது பிளாஸ்டிக் பைகளை விலக்கிவிட்டு, மட்கிப் போகும்
பைகளை உபயோகிப்பதும், குறைந்த அளவு பைகளை உபயோகிப்பதும் சுற்றுப்
புறத்தைப் பாதுகாக்கும். மின் உபகரணங்கள் பயன்படுத்தாத வேளையில் அணைத்து
வைத்திருப்பது கூட காற்றின் மாசைக் கட்டுப்படுத்துகிறது.

கழிவுகளை அழித்து புதிய பொருட்கள் தயாரிக்க முடியுமெனில் அதை
கண்டிப்பாகச் செய்வது மாசுகளை பெருமளவு குறைக்கிறது. பிளாஸ்டிக்,
கண்ணாடி, துணிகள், காகிதம் போன்றவை அழித்து மீண்டும் தயாரிக்க இயலும்.

தண்ணீரை மிகச் சிக்கனமாகச் செலவு செய்யவேண்டும் என்றும் உலகின் எந்த
மூலையில் செலவு செய்யப்படும் ஒரு துளி நீரும் ஒட்டுமொத்த உலகிற்கே
இழப்பாகும் என்றும் உலக அறிக்கைகள் தெரிவிக்கின்றன.

உலகையே அச்சுறுத்தும் இந்தப் பிரச்சனையில் தனி மனித ஈடுபாடே ஒரு தீர்வை
நல்கமுடியும். எனவே சமூக விழிப்புணர்வு ஏற்படுத்தவும், செயலாக்கவும்
ஒவ்வொருவரும் முன்வருதல் வேண்டும். அதுவே வருங்கால தலைமுறையினருக்கு
தரமான பூமியை நல்கும்.



PL.SUBRAMANIAN B.E., (M.E), 
HEAD OF THE DEPARTMENT/ ECE, 
SUBRAMANIAN POLYTECHNIC COLLEGE, RAYAVARAM

Monday, February 20, 2012

நட்பு


நன்றி : http://nature.mywebdunia.com/2008/09/10/1221034523352.html


நட்பு வேண்டும்



மழலைப் பருவத்தில்
பார்த்து வியக்க
ஒரு நட்பு...

குழந்தைப் பருவத்தில்
ஓடி விளையாட
ஒரு நட்பு...

காளைப் பருவத்தில்
ஊர் சுற்ற
ஒரு நட்பு...

வாலிபப் பருவத்தில்
பேசி ரசிக்க
ஒரு நட்பு...

முதிர்ந்த பின்
அனுபவங்களைப்
பகிர்ந்து கொள்ள
ஒரு நட்பு...

நட்புகள் ஆயிரம் இருந்தும்
நட்பின் தேவை குறையவில்லை...

தேவையின் போது
தோள்களில் சாய
நட்பு வேண்டும்...

துன்பத்தின் போது
கண்ணீர் துடைக்க
நட்பு வேண்டும்...

மகிழ்ச்சியின் போது
மனம் மகிழ
நட்பு வேண்டும்...

நானாக நானிருக்க
நட்பே...
நீ எனக்கு
நட்பாக வேண்டும்...

உயிரில் பூத்த தோழமை...




உயிரில் பூத்த தோழமை...

ஒரு காத்திருப்பின்
இடைவேளையில்
நட்பில் கரைந்த
ஞாபகங்கள்!!

தனக்கு வேண்டியதை
`தா`என்று கேட்கவும்
கேட்காமலே
எடுத்துக் கொள்ளவுமான
உரிமைப் பத்திரம்!
மௌனத்தின் பாஷை
இத்தனை
தெளிவாய் இருக்குமா
உயிரில் கேட்கிறதே!!

ஒவியம் வரைகையில்
தூரிகையின்
பெருமூச்சு
புரியும் நிதானம்
புலன்களில்…
வண்ணங்களை
வாரியிறைத்து
எனக்கு மட்டுமாய்
இயற்கை
சந்தோஷிக்கிறது!

ஒரு சந்தோஷத்தின்
வேதனையை
ஒரு வேதனையின்
சந்தோஷத்தை
இதயம் உணர்கிறது!

தாய்மடி மேல்
தலை வைத்தழும்
சுதந்திரம் போல்…
உள்ளார்ந்த தோழமையில்
உயிர் சிலிர்க்கிறது!
உன்னை நானும்….
என்னை நீயுமாய்
பகிரும் பொழுதுகளில்
பசியில்லை…..
தாகமில்லை……
மனவெளியில்
மகிழ்ச்சி
ஆயிரம் மழைத் துளிகளாய்
வர்ஷிகின்றது!!!

காதலின் சுகம்
போலவே
நட்பின் இதமும்
ஒரு புதிராய்
அதிரும் மனதின்
தலை தடவுகிறது!!!

ஒரு
நட்பின் புன்னகைக்கு
உதடுகள்
தேவையில்லை
இதயம் போதுமே!!!
 

Sunday, February 19, 2012


உணர்வுக் கவிதைகள் - அன்புள்ள அம்மாவுக்கு ...



குறிப்பு - இக்கவிதை தஞ்சை மருத்துவக் கல்லூரியில் தாய்ப்பால் வார விழாவையொட்டி நடைபெற்ற கவிதைப்போட்டியில் இரண்டாம் பரிசு பெற்றது.

ன்புள்ள அம்மாவுக்கு
அன்பு (?) மகன் எழுதும்
அழகிய மடல் .

ச்சரியப்படாதே !
அம்மா
கடிதங்கள் ஆச்சரியம் தான்
கணினி உலகில்.
பாசங்கள் ஆச்சரியம் தான்
மனிதம் மடிந்த - இந்த மண்ணில்.

ன்றுமே! நீ எனக்கொரு
அதிசயம் அம்மா
அதிசயங்களே கண்டு வியக்கும்
அதிசயம் நீ அம்மா!

நான் கேள்விப்பட்டதுண்டு...
அம்மம்மா சொன்னார்கள்;
என்னை சுமப்பதற்கு முன்பு
"மலடி" என்ற பட்டத்தை 
மூன்றாண்டு சுமந்தயாமே !
அம்மம்மா சொன்னார்கள்.

ப்பத்தா சொன்னார்கள்;
மணம் முடிந்த முதல்
அரை வருடம் உனக்கு
அடுப்பங்கறை அத்துப்படி இல்லையாமே !
அப்பத்தா சொன்னார்கள்.

ப்பா சொன்னார்கள்;
அடுத்த வீட்டுடன் 
அடிக்கடி
அடிதடியில் நிற்பாயாமே !
அப்பா சொன்னார்கள்.

த்தனை முறை அழுதிருப்பாய் ..
இத்தனை குற்றச்சாட்டுகளுக்கு.
அத்தனைக்கும் மகுடமாய்
உன்னை நான் அழவைத்தேனே!
அன்றைய நாள்
என்னென்ன நினைத்திருப்பாய்?

த்தனையும் நான் அறிவேன்!
அம்மா! நான் அறிவேன்.

னைத்து குற்றங்களும்
மன்னிக்கப்படும் ஒரே நீதிமன்றம்
உன் உள்ளம் தான் அம்மா
குற்றவாளி நானாக இருக்கையில் மட்டும்.

ண்மையில் தான் படித்தேன்
தாய்ப்பால் ...
அறிவை வளர்க்குமென்று
அதிகமாய் வளர்ந்ததால் என்னவோ! - உன்னை 
அனுப்பி வைத்துவிட்டேன்.

ன்று ஒரு நாள் 
அநாதைச்  சிறுவன்...
அர்த்தநாரீஸ்வரர் சாலையில்
" அம்மா தேடி அலைகிறேன் " - என்றான்
அவனை அழைத்து
அவனைக் கேட்டேன் - அம்மா 
அவன் சொன்னான்.

தாய் -  தெய்வம்     
அதனால் தான் என்னவோ ! - அவள்
காட்சி கிடைக்கிறது
தவமிருப்பவர்களுக்கு மட்டும்"

மேலும் சொன்னான்...
" பிறந்தவுடன் எறிந்து விட்டார்கள் ;
தப்பில்லை ... தாய்ப்பால் தந்தபின்பு எறிந்திருக்கலாம்
நானாவது நடந்திருப்பேன் - என்
தமிழ் போல் நொண்டாமல்.
 
தேடல் தான் வாழ்க்கை என்றான்  
தேடித் திரிகிறானாம் தினத்தோறும்
அவன் அன்னையை...
தேகத்தில் வலிமையில்லாமல்.

றுதியாக அவன் கேட்டுக் கொண்டான்
"தந்து விடுங்கள்
தைரியத்தை தூக்கி எரியும் முன்பே - இல்லை
கொன்று விடுங்கள்
எங்களை மண்ணில் மலரும் முன்பே "

வன் வார்த்தையில்
வந்து சென்றதம்மா - உன் முகம்.

மைகளுக்குள் சிறைபிடிக்க
முடியவில்லை...
சிதறிவிடுகிறது என் கண்ணீர் - அன்று 
நீ சிந்தியது போல.

தற்குள்  அவள் கேட்டு விடுவாள்; 
உன்னை மறக்காமல்...
" இன்னமும் உங்க அம்மா ஞாபகம் போகலையா?"        

ன்னமா! யோசிக்கிறாய்
கடிதம் எதற்காக என்று தானே ?

இதோ சொல்லி விடுகிறேன்

ன்னைவிட்டுச் சென்றவரிடம் கேட்டுச்சொல் ...
இரண்டு இடம் காலியாய் இருக்குமா? என்று.

ன் மகன் 
இரண்டு மாதமாய் தேடி அலைகிறான் - எங்களுக்கான
முதியோர் இல்லத்தை.



-சத்தியசீலன்@கிறுக்கல்கள்100


அம்மா!

மழலையாய் அவள் முகம்
எனக்கு அன்பு காட்டியது!
விடலையாய் அவள் முகம்
என் வழியை காட்டியது!
பருவமாய் அவள் முகம்
உருவம் காட்டியது
முதுமையில் அவள் முகம்
என்னை காட்டுகிறது!

அம்மா என்ற குரலுக்கும்,
அந்த ஒலிக்கும்,
இன்றும் மழலை போல் தான்
ஓடத்தோன்றுகிறது!

60 வெறும் எண் தானே?- கடந்தாலும்
அவள் என் பெண் தானே?
அம்மா என்ற
சொல்லுக்கு வயதேது?
வருத்தம் என்றால்
தஞ்சமடைய வேறிடமேது?

60ம் 70ம் வந்திருக்கும்
அம்மாவின் அன்பும், பாசமும்
தினமும் தொடர்ந்திருக்கும்,
அவை நிலைத்திருக்கும் என
என் மனமும் இறைவனிடத்தில்
தினமும் சொல்லியிருக்கும்…!

அம்மா



நன்றி :வித்யாசாகர்
ன் வாழ்வின் ஓவியத்தை
வரையும் தூரிகையே -
உந்தன் வளர்ப்பின் வண்ணத்தில்
அழகுடன் மின்னுபவன் நான்;
பாட்டின் ஜதிபோல
எனக்குள் என்றும் ஒலிக்கும் உயிர்ப்பே – உன்
அசைவில் மட்டுமே அசைந்து -
நீ அணைந்தால் அணையும் விளக்கு நான்;
டைபாதையின் முட்களை மிதித்து – என்
கால்வலிக்கா பூமிமலர்களாய் பூத்துப் போன – அர்ப்பணமே
உன் அன்பிற்கு – அன்றும் இன்றும்
நீ மட்டுமே; நீ மட்டுமே; உனக்கு ஈடானாய்!
ண்மையில், காற்றின் சப்தத்தை
இசையாக்கிக் கொடுத்த ஒரு
யாழின் பெருமை -
உன்னையே சாரும் அம்மா!
னியும், வாழ்க்கை என்று ஒன்று உண்டெனில்
இன்னொரு பிறப்பென்று ஒன்று உண்டெனில்
நீ யாருக்கு வேண்டுமாயினும் அம்மாவாக இரு
நான் – உனக்கு மட்டுமே பிள்ளையாக – பிறப்பேனம்மா!!
————————————————————————
வித்யாசாகர்

நிலா



   நன்றி : நிலா ரசிகன் ரஜின்

ஆம்! நிலவு...

நமை சூழ்ந்த எழில் எத்துனையாயினும்,
நிலவு ரம்யமான படைப்புதான்.

இரவை அலங்கரிப்பது,...
சாமகால காட்சியில் கதாநாயகனாய் உலாவருவது.

உலகின் நிகழ்வுகளை 
ஓசையின்றி நோட்டமிடும் ஒற்றை கண்'ணது,


கண்கள் உறங்கும் நேரம் விழிக்கிறது,
கண்விழிக்கும் போது மறைகிறது...

எதைச் சொல்ல இரவில் காய்ந்து,
பின் சொல்லாமலேயே பகலில் ஓய்கிறது???

குளுமையை மட்டுமே தன்மையாகக் கொண்டது.
பார்க்கும் விழிகளுக்கும்,விழிவழி மனதிற்கும்
குளுமையை தாராளமாய் தருவது.

ஈரேழு நாட்களிலே தேய்தலும்,..வளர்தலுமாய்
வாழ்க்கை தத்துவத்தை வடிவாய் உரைப்பது.

தத்துவமா??
ஆம்.வாழ்வெனில் அதில் மகிழ்வு,உயர்வென்ற வளர்ச்சிகளும்,
தோல்வி,துன்பமென்ற தேய்வுகளும் இருக்குமென....

மழலைகள் சோறுங்க
பல கதைகள் உனைத்தொட்டு,

மழலைமாறி நான் வளர,
இருளில் துணையாக வீடுவரை என்னுடன்,
முற்றத்திலும் நீ...கொல்லையிலும் நீ
திண்ணையிலும் நீ,ஓட்டின் இடுக்கிலும் நீயென,
என்னுடன் ஓடி,ஒழிந்து விளையாடி...

பதின்மத்தை நான் எட்டும் போது,
பலகனவுகள் கண்முன்னே
கனவுகளை கதைப்பதும் உன்முன்னே..

விழுதாய் நான் விழ வேராய்த் தாங்கிய,
என முன்னோர் கண்டதும் அதே நிலவு.
அன்னார் முகங்களை தன் ஒளியால் பதிந்ததும் அதே நிலவு,
இன்று என் முகத்தையும் பதிவாக்கிக் கொள்கிறது.
நாளைநான் முன்னோராகிப்போக..
என்வழியின் முகமும் பதிவாகும்.

நிலவு பழமையை உணர ஒப்பற்ற ஊடகமாய் நம் முன்.
காலம் மாற காட்சிகளும் மாறிடும்....
ஆனால்,அனைவரும் கண்ட காட்சி...மாறாக் காட்சியது நிலவு மட்டுமே..
காலச்சுவடாக ஏட்டில் கண்ட மனிதன் யாவரும் நிலவுக்கு பரிச்சியம்.
அவன் கண்ட,அவன் களித்த அதே நிலவு இன்று நம்முன்...

பல்வேறு காலங்கள்,பல்வேறு ரசனைகள்
பன்னாட்டு மக்கள்,பலகோடி சிந்தனைகள்
பலவித பருவம்,பன்நூறு எண்ணங்கள்,
என அத்துனைக்கும் பன்பரிமாணமாய்
நீ காட்டும் ஒற்றை முகம்...

தனக்குள் எத்துனை செய்திகளை கட்டிவைத்தும்!!!...
பார்வைக்கோ எளிய கோ(ல)ளமாய்....(Pause)

விழி விரியும் பிரம்மிப்பு அடங்கவே இல்லை...
நிலவைப் பார்த்து அல்ல....
நிலவைப் படைத்தவனைப் பார்த்து...

ஆம்...
பிரம்மாண்டங்களை ஆக்கிவிட்ட
ஏகனின் பிரம்மாண்டமான எளிய படைப்பு...

மனிதன் எத்தனை முயன்றாலும் இயலாததைப் படைத்து,
அதில் சிந்திக்க ஏகத்துக்கும் பொதித்து
அவனிருப்பை சாட்சி சொல்லும் அத்தாட்சியாக,,,

நிதமும் சுற்றுகிறது நிலவு....