Wednesday, June 29, 2016

காய்கறி வடை எப்படிச் செய்வது?





என்னென்ன தேவை?
உருளைக்கிழங்கு - 2
கேரட், கோஸ், சின்ன வெங்காயம் (நறுக்கியது) தலா 2 கைப்பிடியளவு
பச்சை மிளகாய் - 3
இஞ்சித் துருவல் - அரை டீஸ்பூன்
பொட்டுக்கடலை மாவு - கால் கப்
கடலைப் பருப்பு ஒரு டீஸ்பூன்
கறிவேப்பிலை, மல்லித் தழை - சிறிதளவு
எண்ணெய், உப்பு தேவையான அளவு

எப்படிச் செய்வது?

உருளைக் கிழங்கை வேகவைத்து மசித்துக்கொள்ளுங்கள். கடலைப் பருப்பை ஊறவையுங்கள். வாணலியில் சிறிது எண்ணெய் விட்டு கேரட், கோஸ், சின்ன வெங்காயம், பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய், இஞ்சித் துருவல் சேர்த்து நன்றாக வதக்கிக்கொள்ளுங்கள். ஆறியதும் அதனுடன் பொட்டுக்கடலை மாவு, கடலைப் பருப்பு, தேவையான அளவு உப்பு, பொடியாக நறுக்கிய கறிவேப்பிலை, மல்லித் தழை சேர்த்து தேவைப்பட்டால் கொஞ்சம் தண்ணீர் சேர்த்துப் பிசைந்துகொள்ளுங்கள்.
பிசைந்த கலவையைச் சிறு சிறு வடைகளாகத் தட்டி, சூடான எண்ணெயில் போட்டுப் பொரித்தெடுங்கள். சிறு தீயில் வேகவைப்பது நல்லது. இதையே உருண்டையாகப் பிடித்து கடலை மாவில் நனைத்து போண்டாவாகவும் செய்யலாம்.

நன்றி : ராஜபுஷ்பா

சீஸ் டோஸ்ட் எப்படிச் செய்வது?





என்னென்ன தேவை?
பிரெட் துண்டுகள் 6
புதினா ஒரு கப்
தக்காளி 2
பச்சை மிளகாய் 2
தனி மிளகாய்த் தூள் அரை டேபிள் ஸ்பூன்
புளி சுண்டைக்காய் அளவு
வெல்லம் நெல்லிக்காய் அளவு
துருவிய சீஸ் அரை கப்
நெய், உப்பு தேவையான அளவு

எப்படிச் செய்வது?

தக்காளி, பச்சை மிளகாய், மிளகாய்த் தூள், புளி, வெல்லம் இவற்றை ஒன்றாக அரைத்துக்கொள்ளுங்கள். பிரெட் துண்டின் மீது இந்த விழுதைத் தடவி அதன் மேல் இன்னொரு பிரெட்டை வையுங்கள். அதன் மேல் துருவிய சீஸ் வைத்து, பிரெட்டால் மூடி டோஸ்ட் செய்யுங்கள். காலை உணவாகவோ மாலை நேரத் தேநீருடனோ சாப்பிடலாம்.

நன்றி : மேகலா

அக்கார வடைசல் எப்படிச் செய்வது?



என்னென்ன தேவை?  
தினை அரிசி - ஒரு கப்
பாசிப் பருப்பு - அரை கப்
பால் - 3 கப்
வெல்லம் பொடித்தது - இரண்டரை கப்
நெய் - அரை கப்
முந்திரிப் பருப்பு, உலர் திராட்சை - தலா 10
ஏலக்காய்த் தூள் - அரை டீஸ்பூன்
எப்படிச் செய்வது?
தினை அரிசி, பாசிப் பருப்பு இரண்டையும் வெறும் வாணலியில் வாசனை வரும்வரை வறுத்துக்கொள்ளுங்கள். ஆறியதும் தண்ணீர்விட்டுக் களைந்து, அதனுடன் 3 கப் பாலைச் சேர்த்து குக்கரில் வேகவையுங்கள். 3 விசில் வந்ததும் இறக்கிவையுங்கள். சூடு ஆறியதும் குக்கரைத் திறந்து சாதத்தை ஒரு குழிக்கரண்டியின் அடிபாகத்தால் மசித்துவிடுங்கள்.
பொடித்த வெல்லத்துடன் சிறிது தண்ணீர் விட்டு அடுப்பில் வையுங்கள். வெல்லம் நன்றாகக் கரைந்ததும் வடிகட்டி, ஐந்து நிமிடங்கள் கொதிக்கவிடுங்கள். கெட்டியானல் போதும், பாகு பதம் தேவையில்லை. வேகவைத்திருக்கும் சாதத்தை இந்த வெல்லக் கரைசலில் சேர்த்துக் கிளறுங்கள். இப்போது பாதி நெய்யை ஊற்றுங்கள். எல்லாம் சேர்ந்து கெட்டியானவுடன் அடுப்பை அணைத்துவிடுங்கள். மீதியுள்ள நெய்யைச் சூடாக்கி அதில் முந்திரிப் பருப்பு, ஏலக்காய்த் தூள், உலர் திராட்சை ஆகியவற்றைச் சேர்த்து வறுத்து, அக்கார அடிசிலில் கொட்டிக் கிளறுங்கள்.
என் அம்மா இதற்கு 3 கப் வெல்லம் போட்டுச் செய்வார்கள். வெல்லம் அதிகமாகப் போட்டால் நெய்யும் அதிகமாகச் சேர்க்க வேண்டும். இனிப்புப் பிரியர்கள் 3 கப் வெல்லம் போட்டு, நெய்யும் இன்னும் ஒரு கால் கப் அதிகமாக விட்டுச் செய்யலாம். சுவை அள்ளிக்கொண்டு போகும்.

நன்றி : பிருந்தா ரமணி

Tuesday, June 28, 2016

கதம்ப சாதம் எப்படிச் செய்வது?


என்னென்ன தேவை?
பச்சரிசி - ஒரு கப்
துவரம் பருப்பு (வேக வைத்தது) - முக்கால் கப்
வெள்ளைப் பூசணிக்காய் - சிறு துண்டு
கத்திரிக்காய், உருளைக் கிழங்கு - தலா 2
தக்காளி - 1
பீன்ஸ் - 5
புளி - எலுமிச்சை அளவு
மஞ்சள் தூள் - அரை டீஸ்பூன்
மல்லித் தழை - சிறிதளவு
உப்பு - தேவையான அளவு
வறுத்து அரைக்க:
காய்ந்த மிளகாய் - 6
கடலைப் பருப்பு - ஒரு டேபிள் ஸ்பூன்
மல்லி விதை - 3 டேபிள் ஸ்பூன்
வெந்தயம் - ஒரு டீஸ்பூன்
மிளகு, சீரகம் - தலா ஒரு டீஸ்பூன்
தேங்காய்த் துருவல் - 3 டேபிள் ஸ்பூன்
எண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன்
தாளிக்க:
கடுகு, உளுந்து - தலா 1 டீஸ்பூன்
பெருங்காயத் தூள் - அரை டீஸ்பூன்
கறிவேப்பிலை - சிறிது
எண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன்
எப்படிச் செய்வது?
அரிசியைக் களைந்து குக்கரில் போட்டு, கொஞ்சம் கூடுதலாகத் தண்ணீர் வைத்துக் குழைவாக வடித்துக்கொள்ளுங்கள். வறுத்து அரைக்கக் கொடுத்துள்ளவற்றை வறுத்து, தண்ணீர் சேர்த்து அரைத்துக்கொள்ளுங்கள். காய்களைச் சற்றுப் பெரிய துண்டுகளாக நறுக்கிவையுங்கள். வாணலியை அடுப்பில் வைத்து அதில் எண்ணெய் ஊற்றிக் கடுகு, உளுந்து போட்டுத் தாளியுங்கள். பிறகு பெருங்காயத் தூள், கறிவேப்பிலையைப் போட்டு, காய்கறித் துண்டுகளைச் சேர்த்து ஒரு நிமிடம் வதக்குங்கள்.
மஞ்சள் தூள் போட்டுக் கிளறி, காய் மூழ்கும் அளவுக்குத் தண்ணீர் ஊற்றி வேகவிடுங்கள். காய்கள் வெந்ததும் புளியைக் கரைத்து ஊற்றுங்கள். அரைத்து வைத்திருக்கும் விழுது, உப்பு சேர்த்துக் கலந்து கொதிக்கவிடுங்கள். புளியின் பச்சை வாசனை போனதும் வேகவைத்த துவரம் பருப்பைப் போடுங்கள். எல்லாம் சேர்ந்து கொதித்து வரும்போது அடுப்பை அணைத்துவிடுங்கள்.
இந்தக் குழம்பை சாதத்தில் ஊற்றிக் கிளறுங்கள். சற்றுத் தளர இருக்க வேண்டும். வாசனைக்கு ஒரு டீஸ்பூன் நெய் சேர்த்துக் கொள்ளலாம். மல்லித்தழை தூவிப் பரிமாறுங்கள். இதில் சொல்லியிருக்கும் காய்கள்தான் போட வேண்டும் என்கின்ற அவசியமில்லை. வெண்டைக்காய், பரங்கிக்காய், முருங்கைக்காய், வாழைக்காய், கேரட், பச்சைப் பட்டாணி என்று எதை வேண்டுமானாலும் சேர்த்துக்கொள்ளலாம்.

நன்றி : பிருந்தா ரமணி

சீயம் எப்படிச் செய்வது?






என்னென்ன தேவை?

மேல் மாவுக்கு:
பச்சரிசி - ஒரு கப்
உளுந்து - ஒரு டேபிள் ஸ்பூன்
உப்பு, எண்ணெய் - தேவையான அளவு
பூரணம் செய்ய:
பொட்டுக்கடலை பொடி, தேங்காய்த் துருவல் - தலா அரை கப்
பொடித்த வெல்லம் - முக்கால் கப்
ஏலக்காய்த் தூள் - அரை டீஸ்பூன்
நெய் - ஒரு டேபிள் ஸ்பூன்

எப்படிச் செய்வது?

முதலில் பச்சரிசி, உளுந்து இரண்டையும் தண்ணீர் விட்டு ஊறவைத்து மையாக அரைத்துக்கொள்ளுங்கள். இதனுடன் சிறிது உப்பு சேர்த்துக் கலந்து வைத்துக்கொள்ளுங்கள்.
வாணலியில் நெய் விட்டு, காய்ந்ததும் தேங்காய்த் துருவல், பொடித்த வெல்லம் போட்டுக் கிளறுங்கள். இரண்டும் சேர்ந்து வரும்போது பொட்டுக்கடலை பொடியைத் தூவிக் கிளறி இறக்குங்கள். ஏலக்காய்த் தூள் போட்டுக் கலந்துவையுங்கள். ஆறியதும் பெரிய நெல்லிக்காய் அளவு உருண்டைகளாகப் பிடித்துவையுங்கள்.
வாணலியில் எண்ணெய் ஊற்றிக் காயவிடுங்கள். பூரண உருண்டையை, அரைத்து வைத்திருக்கும் மாவில் முக்கியெடுத்து எண்ணெயில் போட்டுப் பொரித்தெடுங்கள்.

எள்ளோரை எப்படிச் செய்வது?



என்னென்ன தேவை?
குதிரைவாலி அரிசி - ஒரு கப்
வறுத்து அரைக்க:
கறுப்பு எள் - 50 கிராம்
காய்ந்த மிளகாய் - 3
உளுந்து - ஒரு டேபிள் ஸ்பூன்
பெருங்காயத் தூள் - கால் டீஸ்பூன்
எண்ணெய், உப்பு - தேவையான அளவு
தாளிக்க:
கடுகு, கடலைப் பருப்பு - தலா ஒரு டீஸ்பூன்
வேர்க்கடலை - ஒரு டேபிள் ஸ்பூன்
கறிவேப்பிலை - ஒரு ஆர்க்கு
முந்திரிப் பருப்பு - 6
நல்லெண்ணெய் - 3 டேபிள் ஸ்பூன்
எப்படிச் செய்வது?
குதிரைவாலி அரிசியைத் தண்ணீர் விட்டுக் களைந்து, 1: 2 என்ற விகிதத்தில் தண்ணீர் ஊற்றி குக்கரில் 3 விசில் வரும்வரை வேகவையுங்கள். சூடு ஆறியதும் ஒரு பெரிய தாம்பாளத்தில் கொட்டி, மேலே ஒரு டேபிள் ஸ்பூன் எண்ணெய் ஊற்றி ஆறவையுங்கள்.
எள்ளைத் தண்ணீர் விட்டுக் களைந்து வடிகட்டி, தண்ணீர் இல்லாமல் வையுங்கள். வாணலியை அடுப்பில் வைத்துச் சூடானதும் எள்ளைப் போட்டு வறுத்தெடுங்கள். அதே வாணலியில் ஒரு டீஸ்பூன் எண்ணெய் விட்டு காய்ந்த மிளகாய், உளுந்து, பெருங்காயத்தை வறுத்தெடுங்கள். ஆறியதும் எள்ளைத் தவிர மற்ற பொருட்களை அரைத்து, கடைசியாக எள்ளைப் போட்டு அரையுங்கள்.
வாணலியில் எண்ணெய் ஊற்றிக் காய்ந்ததும் கடுகு, கடலைப் பருப்பு, வேர்க்கடலை, முந்திரிப் பருப்பு, கறிவேப்பிலை ஆகியவற்றைப் போட்டு வறுத்து, அதை சாதத்துடன் சேர்த்துக் கிளறுங்கள். வறுத்து அரைத்த பொடியையும் தேவையான அளவு சாதத்துடன் கலந்தால் சுவையான எள்ளோரை தயார்.

புளியோதரை எப்படிச் செய்வது?

Image result for புளியோதரை

சாதம் - 2 கப்
நல்லெண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்
கறிவேப்பிலை - ஒரு ஆர்க்கு
வேர்க்கடலை - ஒரு டேபிள் ஸ்பூன்
முந்திரிப் பருப்பு - 10
புளிக்காய்ச்சல் தயாரிக்க:
புளி - 100 கிராம்
காய்ந்த மிளகாய் - 3
கடுகு, உளுந்து, மஞ்சள் தூள் - தலா ஒரு டீஸ்பூன்
ஊறவைத்த கடலைப் பருப்பு - 2 டீஸ்பூன்
பெருங்காயத் தூள் - அரை டிஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
நல்லெண்ணெய் - அரை கப்
புளிக்காய்ச்சல் பொடி தயாரிக்க:
காய்ந்த மிளகாய் - 3
தனியா, கருப்பு எள் - தலா ஒரு டேபிள் ஸ்பூன்
வெந்தயம் - ஒரு டீஸ்பூன்
எப்படிச் செய்வது?
வாணலியில் எண்ணெய் ஊற்றிக் காய்ந்த மிளகாய், கடுகு, உளுந்து போட்டுத் தாளியுங்கள். பிறகு ஊறவைத்த கடலைப் பருப்பு, பெருங்காயத் தூள், மஞ்சள் தூள் ஆகியவற்றைச் சேர்த்து, புளியைக் கெட்டியாகக் கரைத்து ஊற்றுங்கள். பச்சை வாசனை போகும்வரை கொதிக்கவிடுங்கள். அடுப்பை சிம்மில் வைத்தால் எண்ணெய் பிரிந்து மேலே வந்து நிற்கும். அதுதான் பதம். அப்போது தேவையான அளவு உப்பைப் போட்டுக் கலந்து அடுப்பை அணைத்துவிடுங்கள். ஆறியதும் உலர்வான பாட்டிலில் எடுத்து வையுங்கள்.
புளிக்காய்ச்சல் பொடி தயாரிக்கக் கொடுத்துள்ளவற்றில் காய்ந்த மிளகாயை மட்டும் சிறிது எண்ணெய் விட்டு வறுத்தெடுங்கள். தனியா, வெந்தயம், கருப்பு எள் ஆகியவற்றை ஒவ்வொன்றாகப் போட்டு வாசனை வரும்வரை வறுத்தெடுங்கள். எள்ளைத் தண்ணீர் விட்டுக் களைந்து, வறுத்துக்கொள்ளுங்கள். ஆறியதும் அனைத்தையும் ஒன்றாகச் சேர்த்துப் பொடித்துக்கொள்ளுங்கள்.
வடித்த சாதத்தை அகலமான தாம்பாளத்தில் போட்டு அதன் மேல் நல்லெண்ணெயைப் பரவலாக ஊற்றுங்கள். அதன் மீது கறிவேப்பிலை, புளிக்காய்ச்சல், புளியோதரைப் பொடி சேர்த்துக் கலந்துவிடுங்கள். முந்திரிப் பருப்பு, வேர்க்கடலையை எண்ணெயில் வறுத்துச் சேருங்கள். அனைத்தையும் ஒன்றாகக் கலந்தால் மணமும் சுவையும் நிறைந்த புளியோதரை தயார்.

சர்க்கரை வியாதியை குணமாக்கலாம் - ஆவாரம்பூ ஒரு அற்புத மூலிகை

ஆவாரம் பூ


ஆவாரை பூத்திருக்க சாவாரைக் கண்டதுண்டோ..” என்ற மருத்துவப் பழமொழி உண்டு. ஆவாரம் பூ எண்ணற்ற மருத்துவ குணங்களைக் கொண்டது. இது நோய்களைக் குணப்படுத்துவதால் நோயினால் மனிதன் இறப்பதை தடுக்கிறது.


இன்றைய உலக மக்கள் தொகையில் பாதிபேர் சர்க்கரை நோயால் அவதிப்படுகின்றனர். இந்த சர்க்கரை நோயைக் கட்டுப்படுத்தும் குணம் ஆவாரைக்கு உண்டு. அரைப்பலம் ஆவாரம் பட்டையை நன்றாய் இடித்து ஒரு மண்கலயத்தில் போட்டு அரைப்படி நீர் விட்டு அடுப்பில் வைத்து சுண்டக் காய்ச்சி வடிகட்டி தினம் இரு வேளை 1.5 அவுன்ஸ் வீதம் கொடுத்துவர மேக ஓட்டம் , ரத்த மூத்திரம், பெரும் தாகம் ஆகியவை குணமாகும். பூச்சூரண்த்தையோ, பூவைக் குடிநீராக்கிப் பாலில் கலந்தோ, இதழ்களைக் கறிக்கூட்டாகவோ நாள் தோறும் பயன்படுத்த மேக வெட்டை, தேக உட்சூடு, உடல் நாற்றம், உடலில் உப்புப் பூத்தல் வரட்சி, ஆயாசம் நீங்கும். உடலுக்குப் பலத்தைத் தரும், தேகம் பொன்னிறமாகும்.


மேலும் மேனிக்கு தங்க நிறத்தைக் கொடுக்கும் தங்கநிறப் பூவும் இதுதான். நீரில் ஆவாரம் பூக்கள் அல்லது காயவைத்த ஆவாரம் பூ பொடி சேர்த்து கொதிக்க வைத்து வடிகட்டி, குடிநீராக அருந்தி வரலாம். இது உடல் சூடு, பித்த அதிகரிப்பு, நீர்க்கடுப்பு, அதிக உதிரப்போக்கு, ஒழுங்கற்ற மாதவிடாய், குடற்புண் வயிற்றுப்புண் போன்றவை நீங்கும். நீரிழிவு நோயாளிக்கு இது மிகவும் சிறந்த மூலிகைக் குடிநீர் ஆகும். இரத்தத்தைச் சுத்தப்படுத்தும், உடலில் உள்ள தேவையற்ற கழிவுகளை வியர்வை மூலம் வெளியேற்றி, சருமத்திற்கு மினுமினுப்பைக் கொடுக்கும். பெண்களுக்கு உண்டாகும் வெள்ளைப் படுதலை அறவே நீக்கும். இதனைத் தொடர்ந்து அருந்தி வந்தால், உடலை நோயின்றி அரோக்கியமாக வைத்துக் கொள்ளலாம்.

Thanks:  machamuni

சர்க்கரை வியாதியை குணமாக்கலாம் ( பாகம் 10 ) தை படித்துவிட்டு இந்தக் கட்டுரையைத் தொடர்ந்து படிக்கவும் . அப்போதுதான் தொடர்பு விட்டுப் போகாமல்  புரியும் .
ஆவாரம் பூ 1ஆவாரம் பூ
ஆவாரம் பூ 2ஆவாரம் பூ 3
ஆவாரம்பூ
ஆவாரம்பூ என்பது தங்கச் சத்துள்ளது என்பதால் தங்கத்திற்கு சமமாக கருதப்பட்டு விஷுக்கனி தரிசனத்தில் இடம் பெற்றுள்ளது . சாதாரணமாக தங்க பற்பத்தின் விலையும் அதிகம் . தங்கத்தின்விலையும் அதிகம் . சரியாக முடியாத தங்க பற்பம் சிறுநீரகத்தைப் பாதிக்கும் .ஆனால் ஆவாரம்பூ என்பது  இயற்கையால் இயற்கையாக முடித்து வைக்கப்பட்டுள்ள தங்க பற்பம் . அதே சமயம்  ஆவாரம்பூ மிக எளிதாக , விலையில்லாமல்  அங்கங்கே பூத்துக் கிடக்கிறது .  
ஒரு முறை மூலிகை ஆராய்ச்சி செய்ய கொல்லி மலைக்குச் சென்ற மாணவர்கள் அங்கே ஒரு சித்தரைக் கண்டார்கள் . அவர் உடல் ஒளி வீசும் பொன்னிறமாக இருந்தது . அவரிடம் அந்த மாணவர்கள் கேட்டார்கள் உங்கள்  ஒளி வீசும் பொன்னிற உடலுக்கு காரணம் என்ன என்று கேட்டார்கள் . அதற்கு அவர் சொன்னார் ” ஆவாரம்பூ என்ற இந்த பொன் மூலிகைதான் எனது  இந்த  பொன்னிற ஒளி வீசும் உடலுக்கு காரணம் “என்றார் . “ஆவாரம்பூ  காலையில் ஒரு கைப்பிடி , மாலையில்  ஒரு கைப்பிடி பல ஆண்டுகளாக சாப்பிட்டு வருகிறேன் ” என்றார் . “அதன் விளைவாக ஆவாரம்பூவில் உள்ள  தங்கச் சத்து எமது உடலில் ஊறி உடல் இப்படி மாறியது ” என்றார் .அவ்வளவு  சிறப்பு வாய்ந்த மூலிகை இந்த ஆவாரம்பூ .
” ஆவாரை பூத்திருக்க சாவாரைக் கண்டதுண்டோ என்று முது மொழி உண்டு  ” ஆவாரை பொதுவாகவே ஒரு காய கற்ப மூலிகை.அதன் சிறப்புக்களையும் உபயோகிக்கும் முறைகளையும் காண்போம்.
ஆவாரம்பூ
தங்கமேனவே சடத்திற்கு காந்தி தரு
மங்காத நீரை வறட்சிகளை – யங்கத்தா
மாவைக் கற்றாழை மணத்தை யகற்றிவிடும்
பூவைச் சேராவாரம் பூ
– ( பதார்த்த குண விளக்கம் )-
குணம்:-ஆவாரம்பூ பிரமேக  நீர் , வறட்சி , உடம்பிற் பூத்த உப்பு , கற்றாழை நாற்றம் இவைகளை நீக்கும் . தேகத்திற்குப் பொற்சாயலைத் தரும் .
செய்கை:- சங்கோசனகாரி, சமனகாரி
உபயோகிக்கும் முறை:- ஆவாரம் பூவை நன்றாய் அலம்பி பச்சைப் பயறுடன் ,கூட்டி பாகப்படி கூட்டமுது செய்து உண்பது  வழக்கம் . இதனால் மது மூத்திரம் , இரத்த மூத்திரம் , பெரும்பாடு  ( பெண்களுக்கு ஏற்படும் பெரு உதிரப் போக்கு (அதாவது மாதாந்திர விலக்கு மட்டில்லாமல் உதிரமாகப் போவது  ) பெண்களுக்கு ஏற்படும் வியாதிகளில் இது உயிரையும் கொல்லும் என்பதால் இதற்கு பெரும்பாடு என்று சித்த வைத்தியத்தில் அழைப்பர் ) , உட்காங்கை , தாகம்  இவைகள் போகும் .
இன்னும் நிழலில் இதழ்  இதழாக சீலையில் போட்டு வதங்கி வரும் சமயம் புஷ்பத்தை எடுத்து  இரண்டு எடைசீனாக் கற்கண்டு போட்டு ஆட்டி வழித்து எடுக்க குல்கந்து போலிருக்கும் , இத்துடன் போதிய அளவு அப்பட்டமான தேன் கூட்டி கலந்து  பிசைந்து சில தினம் ரவியில் வைத்து வேளைக்கு 1/4பலம்அளவிற்கு (ஒரு பலம் என்பது 35 கிராம்) தினம் இரண்டு வேளை சாப்பிட்டு வர அதிக நன்மையைத் தரும் . இந்தப் பூவை உலர்த்தி வேளைக்கு கால் பலம் கியாழமிட்டு பால் சர்க்கரை கூட்டி  காப்பி போல் சாப்பிடுவதுண்டு . இதனால் நீரிழிவு , உட்சூடு ,நீர்க்கடுப்பு  ,முதலியவைகள்குணமாகும்.
இந்தப் பூவை உலர்த்தி நலுங்கு மாவுடன் கூட்டி தேய்த்து ஸ்நானம் செய்து வரகற்றாழை நாற்றம் ,உடம்பில் உப்பு பூத்தலை நீக்கும் . இன்னும் நல்ல தேகத்தை தரும்.
ஆவாரை
சொல்லுதற்கு மட்டோ தொலையாத மேக நீர்
செல்லா மொழிக்கு மெரிவகற்று – மேல்லவச
மாவாரை பம்பரம் போலாட்டுந் தொழிலணங்கே!
யாவாரை மூலி யது
– ( பதார்த்த குண விளக்கம் )-
குணம்:-ஆவாரைச் செடியானது  சர்வப் பிரமேக மூத்திர ரோகங்களையும் , ஆண் குறி எரி  வந்தததையும் குணமாக்கும் .
செய்கை:- சங்கோசனகாரி, வித்திற்கு காம விர்த்தினி
உபயோகிக்கும் முறை:-அரைப்பலம் ஆவாரம் பட்டையை நன்றாய் இடித்து ஒரு மட்கலயத்தில் போட்டு முக்கால் படி சலம் விட்டு அடுப்பில் வைத்து சிறுக எரித்து , வீசம் படியாக சுண்டக் காய்ச்சி வடிகட்டி , தினம் இரு வேளை 1 1/ 2 , அவுன்ஸ் ( 45 மில்லி லிட்டர் ) வீதம் கொடுத்து வர மது மேகம் (சர்க்கரை நோய் ) , ரத்த மூத்திரம் (ரத்த வெட்டை ), பெரும்பாடு( பெண்களுக்கு ஏற்படும் பெரு உதிரப் போக்கு (அதாவது மாதாந்திர விலக்கு மட்டில்லாமல் உதிரமாகப் போவது  ) பெண்களுக்கு ஏற்படும் வியாதிகளில் இது உயிரையும் கொல்லும் என்பதால் இதற்கு பெரும்பாடு என்று சித்த வைத்தியத்தில் அழைப்பர் ) ,இவைகள் போகும் .
இத்துடன் இதர சரக்குகளை கூட்டி லேகியமாகவும்  ,  சூரணமாகவும் , கியாழமாகவும் கொடுப்பது உண்டு . அவற்றுள் சில முறைகளாவன
ஆவாரைப் பஞ்சக சூரணம்
ஆவாரையிலை , ஆவாரம்பூ , ஆவாரம் பட்டை , ஆவாரம் வேர் , ஆவாரங்காய் வகைக்கு வகைக்கு வராகனெடை 4 ,கடலைழிஞ்சிப்பட்டை, மருத மரப்பட்டை , நாவல் மரப்பட்டை  , தண்ணீர் விட்டான் கிழங்கு , பாதிரி வேர் , வகைக்குப் பலம் 2 , மரமஞ்சள் , கல்நார் வகைக்குப் பலம் ஒன்று , குரோசாணி ஓமம்  பலம் கால் , ஆகிய இவற்றை இடித்துச் சூரணம் செய்து வைத்துக் கொள்க . வேண்டும் போது வேளைக்கு  1 தோலா நிறையுள்ள சூரணத்தை கால் படி சலத்தில் போட்டு அரைக்கால் படியாக சுண்டக் காய்ச்சி வடிகட்டி தினம் 2 வேளை சிறிது சர்க்கரை கூட்டிக் கொடுத்து வர மது மேகம் (சர்க்கரை நோய் )  , தேக  காங்கை ( சர்க்கரை நோயாளர்களுக்கான உடல் , கை கால்களில் ஏற்படும் எரிச்சல் ) , அதீத   தாகம் , முதலியவைகள் நீங்கும் . இன்னமும் இக்கியாழம் நாவிற்கு ருசியாக  இருக்க வேண்டின் சிறிது நாட்டுப்  பசுவின்   பாலையும் கூட்டிக் கொள்ளலாம் . இதனால் இதன் குணங் கெடாது .

Thanks : திரு அமீர் சுல்தான்


Thursday, June 23, 2016

யோக முத்திரைகள்


யோக முத்திரைகள்



பெரும்பாலான உடல் ஆரோக்கியக் குறைபாடுகள் ஐந்து வகை மூலங்களின் சமத்துவமின்மையால் ஏற்படுகிறது. பஞ்ச பூதங்கள் என்று அழைக்கப்படும் நிலம், நீர், நெருப்பு, காற்று, ஆகாயம் ஆகியன சமநிலையில் இருப்பதற்குத் தியானம் உதவுகிறது. இந்த ஐந்து வகை மூலங்கள் வேறுவிதமாக நிலம், நீர், நெருப்பு, மரம், உலோகங்கள் என சீனப் பாரம்பரிய மருத்துவத்தில் கூறப்படுகிறது. (1)
இந்த ஐந்து வகை மூலங்களும் ஒன்றுக்கொன்று பூரண தொடர்புடையதாக காணப்படுகிறது. மரம்  நெருப்பு  நிலம்  உலோகம்  நீர்  மரம் என்னும் ஒன்றுகொன்று தூண்டும் விதத்திலும் மற்றும் நிறுத்தும் விதத்திலும் காணப்படுகிறது. இவை எல்லாம் உடலின் இயக்கத்திற்கு இன்றியமையாதது, யோகாசனம், தியானம் செய்வதன் மூலம் இவற்றைக் கட்டுப்படுத்தி அவற்றின் சமநிலையைப் பேணுவதன் மூலம் உடல் ஆரோக்கியம் சீர்படும். இவை சிலவகை முத்திரைகள் மூலம் பெறப்படுகிறது. ஒழுங்கான முத்திரை உபயோகமும் தியானமும் எம் வாழ்வில் ஆரோக்கியத்தை உண்டாக்கும். 
நம்முடைய ஐந்து விரல்களும் ஐந்து மூலங்களைக் குறிப்பிடுகின்றன.

கட்டை விரல் - நெருப்பையும் சுட்டுவிரல் - காற்றையும் நடுவிரல் - ஆகாயத்தையும் மோதிர விரல் - நிலத்தையும் சுண்டு விரல் - நீரையும் குறிக்கின்றன.
பழைய காலங்களில் முனிவர் நாட்கணக்கில் கடும் தவம் புரிந்தனர் என்றெல்லாம் கேள்விப்படுகின்றோம் அவர்களுக்கு எந்தவிதமான நோயும் அணுகாமல் இருப்பதற்குரிய காரணிகளுள் இதுவும் ஒன்றாக இருந்திருக்கலாம். முத்திரை இந்து சமயத்திலும் பௌத்தமதத்திலும் குறிப்பிடப்பட்டுள்ளன. முத்திரைகளைப் பற்றிய படிப்பு தத்வ யோகம் ( Tatva Yoga ) என அழைக்கப்படும்.

இனி, முத்திரை வகைகளைப் பற்றிப் பார்ப்போம். பொதுவாக தியானத்தில் 20 – 45 நிமிடங்கள் உங்களுக்குத் தேவையானதென நீங்கள் கருதும் முத்திரையைத் தெரிவு செய்து கொண்டு ஆழ்ந்த சுவாசத்தில் ஈடுபடுதலே போதுமானதெனக் கருதப்படுகிறது, எனினும் சிலமுத்திரைகளுக்கு மந்திரங்களைப் பயன்படுத்துவர்.

1. ஞான முத்திரை : அறிவு முத்திரை

ஞானம் என்றாலே அறிவுதானே, இந்த முத்திரை அறிவைப் பெருக்கும். அறிவு முத்திரை என்றும் இதனை அழைக்கலாம். 
முறை: கட்டை விரலின் நுனியானது சுட்டு விரலைத் தொடுமாறு மற்றைய விரல்கள் நீட்டப்பட்டும் அமையத் தியானம் செய்ய வேண்டும். நீங்கள் இருந்துகொண்டோ அல்லது நின்றுகொண்டோ அல்லது படுத்துக்கொண்டோ செய்யலாம். 
இடம்: எந்தவொரு அமைதியான இடமும் இதற்கு உகந்தது.
நேர அளவு: இந்த முத்திரைக்கு குறிப்பிடும்படியாக நேர அவகாசம் தேவையில்லை, எந்த நேரத்திலும் இதனைச் செய்யலாம்.
பலன்கள்: அறிவு முத்திரையல்லவா, அறிவைக் கூட்டும். கட்டை விரலின் நுனியானது அகஞ்சுரப்பிகளின் (முக்கியமாக கபச்சுரப்பி – pituitary ) மையமாக விளங்குகிறது. விரல்கள் அமுக்கப் படுவதால் இந்தச் சுரப்பிகள் நன்கு வேலை புரிகின்றன.
ஆகவே இந்த முத்திரை,
• ஞாபக சக்தியைக் கூட்டும், மூளையைக் கூர்மையாக்கும்.
• கிரகிக்கும் செயற்பாட்டைக் கூட்டும், மேலும் தூக்கமின்மையை நீக்கும்.
• ஒழுங்கான பயிற்சியின் மூலம் மன உள நோய்களான ஹிஸ்டீரியா, மன எரிச்சல் போன்றவற்றைக் குணப்படுத்தும். மனம் சாந்தமடையும்.
2. பிருத்வி முத்திரை : பூமி முத்திரை 

பிருத்வி என்றால் சமஸ்கிருதத்தில் பூமி மாதா என்பதாகும். 
முறை: மோதிர விரலின் நுனிப்பகுதி கட்டை விரலின் நுனியுடன் தொட ஏனைய விரல்கள் நீட்டப்பட்டிருத்தல்.
நேர அளவு: வரையறை இல்லை

பலன்கள்: எந்தவித உடல் சோர்வினையும் நீக்கும்.
• உடல் பலவீனமற்றவருக்கு நிறையைக் கூட்டும்.
• தோலின் கட்டமைப்பை உகந்ததாக்கி தோலினை பளபளப்பாக வைத்திருக்க உதவும்.
• உற்சாகமாகவும் சுறுசுறுப்பாகவும் உடலினைப் பேணுவதன் மூலம் ஆரோக்கியத்தை பாதுகாக்கும்.
 
3. வாயு முத்திரை : காற்றிற்கான முத்திரை

முறை: சுட்டு விரலை கட்டை விரலின் அடிப்பகுதியிலும் கட்டை விரலால் சுட்டுவிரலின் மேல் இலகுவாகத் அழுத்தியும் மற்றைய விரல்கள் நீட்டியும் இருக்க வேண்டும். 



நேர அளவு: 45 நிமிடங்கள் இவ்வாறு இருத்தலின் மூலம் நோயின் தாக்கம் 12 – 24 மணி நேரங்களுக்குள் குறைந்து விடும். இரண்டு மாதங்களுக்குத் தொடர்ந்து செய்தல் சாலச் சிறந்தது.
பலன்கள்: 
• மூட்டு வாதம், ஏனைய வாத நோய்கள் ( rheumatism, arthritis, gout) மற்றும் பார்க்கின்சன் வியாதி
• கழுத்து முதுகென்பு அழற்சி (Cervical Spondilytis) முக நரம்பு செயலிழப்பு (facial paralysis)
• வாயுத்தொந்தரவு, செரிமானக் கோளாறு

4. சூரிய முத்திரை


முறை: மோதிரவிரலை மடக்கி அதன் மேல் கட்டை விரலால் அழுத்துதல்
நேர அளவு: ஒரு நாளைக்கு இரு தடவை 5 - 15 நிமிடங்கள்
பலன் : 
• தைரோய்ட் சுரப்பியின் மையத்தை கூர்மையாக்கும்
• உடலில் கொழுப்பைக் கரைத்து நிறையைச் சீர் படுத்த உதவும்
• பதட்டத்தைப் போக்கும்
• சமிபாட்டுக் கோளாறுகளைத் தீர்க்கும்
 
5. பிராண முத்திரை : உயிர் முத்திரை


முறை: கட்டை விரல் நுனியைச் சுண்டுவிரல் மற்றும் மோதிரவிரல் நுனிகள் தொடுமாறு வைத்துக் கொள்ள ஏனைய விரல்களை நீட்டி வைத்திருத்தல்.
நேர அளவு: எக்காலத்திலும் வரையறையின்றி செய்யலாம்.
பலன்: உயிர் முத்திரை அல்லவா. உயிரின் சக்தியைப் பெருக்கும். பலவீனமானோர் தேக வலுப பெறுவர். குருதிக்குழாய் அடைப்புகளைச் சரிபடுத்தும். இதனை ஒழுங்காக பயிற்சி செய்தால் நன்கு உற்சாகமுள்ளோராக மாறுவோம்.
• நோயெதிர்ப்புச் சக்தியைக் கூட்டும்
• கண் பார்வை சிறப்புற உதவும், கண் சம்பந்தமான வியாதிகளைக் குறைக்கும்
உயிர்ச்சத்துக் குறைபாட்டால் ஏற்படும் விளைவுகளைச் சீர்படுத்தும், களைப்பைப் போக்கும்..
 
6. பச்சன் முத்திரை : சமிபாட்டு சம்பந்தமானது.


பாபா படம் மூலம் அனைவரும் அறிந்த முத்திரை (ஆனால் முத்திரை பிடிப்பதில் சிறு வேறுபாடு உண்டு) 
உணவு சமிபாடு அடைவதுடன் தொடர்புடையது.
முறை: நடு விரல், மோதிர விரலின் நுனிகள் கட்டை விரலின் நுனியுடன் இணைத்து மற்றைய விரல்கள் நீட்டப்பட்டிருத்தல்.
நேர அளவு: நாளாந்தம் 45 நிமிடங்கள் எனக் கூறப்படுகிறது. எவ்வளவு அதிக நேரம் செய்கிறோமோ அதற்கேற்ப பலன் கூடும். சாப்பிட்ட பின்னர் பயன்படுத்துவது உகந்தது.

பலன்: எமது உடலின் கழிவுத் தொகுதியைச் சீராக வைத்திருக்க உதவுகிறது.
• நீரிழிவு நோயைக் கட்டுப்படுத்தும்
• மலச்சிக்கல், மூலவியாதி போக்கும்
• கழிவுகளை வெளியேற்ற உதவுகிறது
 
7. லிங்க முத்திரை : வெப்பம் மற்றும் சக்திக்கான முத்திரை





முறை:
 இரு கரங்களின் விரல்களையும் ஒன்றுடன் ஒன்று கோர்த்துக்கொள்ளவும், பின்னர் இடது கட்டை விரலை உயர்த்தி, அதனை வலது கட்டை விரல் மற்றும் சுட்டு விரல்களுக்குள் சுற்றி வருமாறு அடக்கவும்.
நேர அளவு: எந்த நேரமும் உகந்தது, ஆனால் நீண்ட நேரம் செய்தல் தவிர்க்கப்படல் நல்லது.

பலன்: இந்தச் செயன் முறை எமது உடலில் வெப்பத்தை உருவாக்குகிறது. பால், நெய் தண்ணீர் மற்றும் பழச் சாறு போன்றவைகளை இந்த முத்திரையைப் பயன்படுத்தும் போது எடுப்பதால் கூடுதலான பலன்கள் கிடைக்கும்.
• சளி உருவாதலைக் கட்டுப்படுத்தும், சுவாசப்பைக்கு சக்தியைக் கொடுக்கும்.
• சளிக்காய்ச்சல் சுவாசக்குழாய் நோய்களைக் குணப்படுத்தும்.
• உடலுக்குப் புத்துணர்ச்சி அளிக்கும்.
 
8. அபான வாயு முத்திரை : இதய முத்திரை 

முறை:
சுட்டு விரலின் நுனியானது கட்டை விரலின் அடிபகுதியைத் தொடவேண்டும், பின்னர் நடுவிரலின், மோதிர விரலின் நுனிகளும் கட்டை விரலின் நுனியோடு தொடவேண்டும் சுண்டு விரல் மட்டும் நீட்டப்பட்டு இருக்கும். 

நேர அளவு: எவ்வளவு நேரமும் செய்யலாம். இதய மற்றும் உயர் அழுத்த நோய் உள்ளவர்கள் ஒவ்வொரு நாளும் இருதடவைகள் 15 நிமிடங்களுக்குச் செய்து வருதல் மிக்க சிறப்பைத் தரும்.
பலன்: இதயத்திற்கு அனுகூலத்தைத் தரும். ஒரு ஊசி மருந்தினைப் போல மார்படைப்பினைக் குறைக்க உதவும். மேலும் வாயுவை உடலில் நீக்க உதவும்.
• இதயத்தை வலுப்படுத்தி இதயதுடிப்பைச் சீராக்கும்.
• கழிவுத் தொகுதியை ஒழுங்குபடுத்தும்
• சமிபாட்டை ஒழுங்காக்கும்.
 
9. வருண முத்திரை : நீருக்கான முத்திரை
varunamuthirai.jpg

சுண்டு விரல் நுனியையும் கட்டைவிரல் நுனியையும் சேர்த்துக் கொள்ளவும், மிகுதி மூன்று விரல்கள் நீட்டப்பட்டிருத்தல் வேண்டும். 
பலன் : உடலின் நீர்ச் சமநிலையைப் பேணுகின்றதில் உதவுவதோடு நீர்ப் பற்றாக்குறையால் வரும் எல்லா நோய்களையும் வருவதைத் தவிர்க்க உதவும்..
• இரைப்பை-குடல் அழற்சியால் ஏற்படும் வலியைத் தடுக்கிறது
• உடல் நீர் சமநிலை பேணுகிறது.
• தோல் சம்பந்தமான நோய்களைக் குணமாக உதவுகிறது.

Wednesday, June 15, 2016

பயன்தரும் சில வீட்டுக் குறிப்புகள் !



 பயன்தரும் சில வீட்டுக் குறிப்புகள் !
*********
வெள்ளி சாமான்களை பீரோவில் வைக்கும்போது அதற்குள் கற்பூரத்தைப் போட்டு வைப்பது நல்லது.
*********
கடையில் மூக்குப் பொடி வாங்கித் தண்ணீரில் கரைத்து எறும்புப் புற்றின் மேல் தெளித்து விடுங்கள். எறும்புகள் மாயமாய் மறைந்து போகும்.
*********
காய்ந்த எலுமிச்சை, ஆரஞ்சுத் தோல்களை அலுமாரியில் வைத்தால் பூச்சிகள் அணுகாது.
*********
பிரஷர் குக்கரை உபயோகபடுத்தாத நேரங்களில் மூடி வைக்கக் கூடாது.
*********
பிரிட்ஜ் இல்லாதவர்களுக்கு இட்லி மாவு, தோசை மாவு புளித்துப் போகாமல் தடுக்க அரைத்த மாவை பிளாஸ்டிக் டப்பா அல்லது பக்கெட்டில் போட்டு மூடினால் புளித்துப் போகாமல் இருக்கும்.
*********
வீட்டில் குளிர்சாதனப் பெட்டி இல்லாதவர்கள் காய்கறிகளின் மீது ஈரத் துணியைப் போட்டு மூடி வையுங்கள். வாடாமல் இருக்கும்.
*********
பொருட்களை கறையான் அரிக்காமல் இருக்க கற்பூரத்தைப் பொடி செய்து தூவி வையுங்கள்.
*********
அசைவம் சமைத்த பிறகு பாத்திரங்களில் வீசும் துர்நாற்றத்தை நீக்கப் பாத்திரங்களில் சிறிதளவு புளியைத் தடவிப் பிறகு வழக்கம் போல் கிளீனிங் பவுடர் அல்லது சோப்பு போட்டுத் தேய்க்க வேண்டும்.
*********
இஞ்சியை ஈரத்துணியில் சுற்றித் தண்ணீர்க் குடத்தின் மேல் வைத்திருந்தால் பத்து நாள் வரை புதிதாகவே இருக்கும்.
*********

Friday, June 10, 2016

இளமையோடு வாழ திருமூலர் கூறும் எளிய வழி!



மூலிகைகள்.!

என்றும் இளமையோடு வாழ திருமூலர் கூறும் எளிய வழி!

நமது உடலில் நோய் தோன்றக் காரணம் என்னவெனில், உஷ்ணம், காற்று, நீர் ஆகியவை தன்னளவில் இருந்து மிகுதல் அல்லது குறைவதால் தான். 

இதனாலேயே நோய் தோன்றுகிறது.

உஷ்ணத்தால் பித்த நோய்களும், காற்றினால் வாத நோய்களும், நீரால் கப நோய்களும் உண்டாகின்றன.

நமது தேகத்தை நீட்டித்து, ஆயுளை விருத்தி செய்ய திருமூலர் சித்தர் எளிய வழியை கூறுகிறார்.

ஒருவனுடைய உடல், மனம், ஆன்மா ஆகிய மூன்றையும் தூய்மை செய்யும் வல்லமை கடுக்காய்க்கு உண்டு என்று குறிப்பிடுகிறார் திருமூலர்.

கடுக்காய்க்கு அமுதம் என்றொரு பெயரும் உண்டு.

தேவர்கள் பாற்கடலைக் கடைந்தபோது தோன்றிய அமிர்தத்திற்கு ஒப்பானது கடுக்காயாகும்.

"பெற்ற தாயைவிட கடுக்காயை ஒருபடி மேலானது என்று கருதுகின்றனர் சித்தர்கள்.

கடுக்காய் வயிற்றில் உள்ள கழிவுகளை யெல்லாம் வெளித்தள்ளி, அவனுடைய பிறவிப் பயனை நீட்டித்து வருகிறது.

கடுக்காயின் சுவை துவர்ப்பாகும்.

நமது உடம்புக்கு அறுசுவைகளும் சரிவரத் தரப்பட வேண்டும்.

எச்சுவை குறைந்தாலும் கூடினாலும் நோய் வரும்.

நமது அன்றாட உணவில் துவர்ப்பின் ஆதிக்கம் மிகவும் குறைவு.

துவர்ப்பு சுவையே ரத்தத்தை விருத்தி செய்வதாகும்.

ஆனால் உணவில் வாழைப்பூவைத் தவிர்த்து பிற உணவுப் பொருட்கள் துவர்ப்புச் சுவையற்றதாகும்.

பின் எப்படி ரத்த விருத்தியைப் பெறுவது?

அன்றாடம் நமது உணவில் கடுக்காயைச் சேர்த்து வந்தால், நமது உடம்புக்குத் தேவையான துவர்ப்பைத் தேவையான அளவில் பெற்று வரலாம்.

கடுக்காய் அனைத்து நாட்டு மருந்துக் கடைகளிலும் கிடைக்கும்.

கடுக்காயை வாங்கி உள்ளே இருக்கும் பருப்பை எடுத்து விட்டு, நன்கு தூளாக அரைத்து வைத்துக் கொள்ளவும்.

இதில் தினசரி ஒரு ஸ்பூன் அளவு இரவு உணவுக்குப்பின் சாப்பிட்டு வர, நோயில்லா நீடித்த வாழ்க்கையைப் பெறலாம்.

கடுக்காய் குணப்படுத்தும் நோய்கள்:

கண் பார்வைக் கோளாறுகள்,
காது கேளாமை,
சுவையின்மை,
பித்த நோய்கள்,
வாய்ப்புண்,
நாக்குப்புண்,
மூக்குப்புண்,
தொண்டைப்புண்,
இரைப்பைப்புண்,
குடற்புண்,
ஆசனப்புண்,
அக்கி, தேமல், படை,
தோல் நோய்கள்,
உடல் உஷ்ணம்,
வெள்ளைப்படுதல்,
மூத்திரக் குழாய்களில் உண்டாகும் புண்,
மூத்திர எரிச்சல், கல்லடைப்பு,
சதையடைப்பு, நீரடைப்பு,
பாத எரிச்சல், மூல எரிச்சல்,
உள்மூலம், சீழ்மூலம், ரத்தமூலம், ரத்தபேதி, பௌத்திரக் கட்டி,
சர்க்கரை நோய், இதய நோய்,
மூட்டு வலி, உடல் பலவீனம்,
உடல் பருமன், ரத்தக் கோளாறுகள்,
ஆண்களின் உயிரணுக் குறைபாடுகள் போன்ற அனைத்துக்கும் இறைவன் அருளிய அருமருந்தே கடுக்காய்.

இதை பற்றி சித்தர் கூறும் பாடல்...

"காலை இஞ்சி கடும்பகல் சுக்கு மாலை கடுக்காய் மண்டலம் உண்டால் விருத்தனும் பாலனாமே.-"

காலை வெறும் வயிற்றில் இஞ்சி-

நண்பகலில் சுக்கு-

இரவில் கடுக்காய் என தொடர்ந்து
ஒரு மண்டலம் (48 நாட்கள்) சாப்பிட்டுவர, கிழவனும் குமரனாகலாம் என்பதே இந்தப் பாடலின் கருத்தாம்.

எனவே தொடர்ந்து கடுக்காயை இரவில் சாப்பிட்டு வர நோய்கள் நீங்கி இளமையோடு வாழலாம்.

கடுக்காய் வீடுகளில் கண்டிப்பாய் இருக்க வேண்டிய பொக்கிஷமாகும்.

"ஆரோக்ய வாழ்வுக்கு நாட்டு வைத்தியம் அவசியம்"

"இதை அனைவருக்கும் பகிர்வோம்"

"ஆரோக்ய பாரதத்தை உருவாக்குவோம்"

தகவல் சித்த மருத்துவம்

சிதம்பர ரகசியங்கள்



சிதம்பரம் நடராஜர் கோயிலில் உள்ள சில அற்புதமான ரகசியங்கள் ஆச்சர்யங்கள் இவைகள் தான்."
சிதம்பரம் நடராஜர் கோயில் ரகசியம் என்று பலரும் பல விசயங்களை கூறிவரும் வேலையில், அந்த கோயிலில் இருக்கும் அறிவியல்,பொறியியல்,புவியியல்,கணிதவியல்,மருத்துவவியல் குறித்த ஆச்சர்யங்களின் சில தகவல்கள்.
முன்னோர்கள் செய்த எல்லா செயல்களும் ஒரு தெளிவான சிந்தனையை நோக்கியே பயணித்துள்ளது, அப்படி இருக்க அவர்கள் நிர்ணயித்த பிரம்மாண்டமான கற்கோவில்களுக்கு பின் இருக்கும் சில அற்புதங்களை ஏற்கனவே உங்களிடம் பகிர்ந்திருக்கிறேன், அந்த வகையில் சிதம்பரம் நடராஜர் கோயிலில் உள்ள சில அற்புதமான ரகசியங்கள் இவைகள் தான்."
(1) இந்த கோயில் அமைந்திருக்கும் இடமானது உலகின் பூமத்திய ரேகையின் சரியான மையைப் பகுதி என்று கூறப்படுகின்றது. ( Centre Point of World's Magnetic Equator ).
(2)பஞ்ச பூத கோயில்களில் ஆகாயத்தை குறிக்கும் தில்லை நடராஜர் ஆலயம், காற்றை குறிக்கும் காலஹஸ்தி ஆலயம், நிலத்தை குறிக்கும் காஞ்சி ஏகாம்பரேஸ்வர ஆலயமும் சரியாக ஒரே நேர்கோட்டில் அதாவது சரியாக 79 Degrees, 41 minutes East தீர்க்க ரேகையில் (LONGITUTE ) அமைந்துள்ளது, இன்று google map உதவியுடன் நாம் வானத்தின் மேல் இருந்து பார்ப்பதை போன்று பார்த்தால் மட்டுமே விளங்கும் இந்த துல்லியம் அன்றைக்கு கணிக்கப்பட்டது ஒரு பொறியியல்,புவியியல் மற்றும் வானவியியலின் உச்சகட்ட அதிசயம்.
(3) மனித உடலை அடிப்படையாக கொண்டு அமைக்கப்பட்டிருக்கும் சிதம்பரம் கோயிலில் 9 நுழைவு வாயில்களும், மனித உடலில் இருக்கும் 9 வாயில்களை குறிகின்றது.
(4) விமானத்தின் மேல் இருக்கும் பொற் கூரை 21,600 தங்கத்தகடுகளை கொண்டு வேயப்பட்டுள்ளது, இது மனிதன் ஒரு நாளைக்கு சராசரியாக 21600 தடவைகள் சுவாசிக்கிறான் என்பதை குறிக்கின்றது (15*60*24 = 21,600).
(5) இந்த 21,600 தகடுகளை வேய 72,000 தங்க ஆணிகள் பயன்படுத்தப்பட்டுள்ளது, இந்த 72,000 என்ற எண்ணிக்கை மனித உடலில் இருக்கும் ஒட்டுமொத்த நாடிகளை குறிக்கின்றது.இதில் கண்ணுக்குத் தெரியாத உடலின் பல பாகங்களுக்கு சக்தியை கொண்டு சேர்ப்பவையும் அடங்கும்.
(6) திருமந்திரத்தில் " திருமூலர்"
மானுடராக்கை வடிவு சிவலிங்கம்
மானுடராக்கை வடிவு சிதம்பரம்
மானுடராக்கை வடிவு சதாசிவம்
மானுடராக்கை வடிவு திருக்கூத்தே
என்று கூறுகிறார், அதாவது " மனிதன் வடிவில் சிவலிங்கம், அதுவே சிதம்பரம், அதுவே சதாசிவம், அதுவே அவரின் நடனம்". என்ற பொருளைக் குறிகின்றது.
(7) "பொன்னம்பலம்" சற்று இடது புறமாக அமைக்கப்பட்டுள்ளது, இது நம் உடலில் இதயத்தை குறிப்பதாகும்.இந்த இடத்தை அடைய ஐந்து படிகளை ஏற வேண்டும், இந்த படிகளை "பஞ்சாட்சர படி" என்று அழைக்கப்படுகின்றது, அதாவது "சி,வா,ய,ந,ம" என்ற ஐந்து எழுத்தே அது. "கனகசபை" பிற கோயில்களில் இருப்பதை போன்று நேரான வழியாக இல்லாமல் பக்கவாட்டில் வருகின்றது. இந்த கனக சபை தாங்க 4 தூண்கள் உள்ளன,இது 4 வேதங்களை குறிக்கின்றது,
(8)பொன்னம்பலத்தில் 28 தூண்கள் உள்ளன, இவை 28 ஆகமங்களையும், சிவனை வழிபடும் 28 வழிகளையும் குறிக்கின்றன, இந்த 28 தூண்களும் 64 + 64 மேற் பலகைகளை கொண்டுள்ளது (BEAM ), இது 64 கலைகளை குறிக்கின்றது, இதன் குறுக்கில் செல்லும் பல பலகைகள்(CROSS BEAMS) , மனித உடலில் ஓடும் பல ரத்த நாணங்களை குறிக்கின்றது.
(9) பொற் கூரையின் மேல் இருக்கும் 9 கலசங்கள், 9 வகையான சக்தியை குறிக்கின்றது.அர்த்த மண்டபத்தில் உள்ள 6 தூண்கள், 6 சாஸ்திரங்களையும்,அர்த்த மண்டபத்தின் பக்கத்தில் உள்ள மண்டபத்தில் உள்ள 18 தூண்கள், 18 புராணங்களையும் குறிக்கின்றது.
(10) சிதம்பரம் நடராஜர் ஆடிக்கொண்டிருக்கும் ஆனந்த தாண்டம் என்ற கோலம் "cosmic dance" என்று பல வெளிநாட்டு அறிஞர்களால் அழைக்கபடுகின்றது. —