Tuesday, April 18, 2017

சிதம்பர இரகசியம்....!

சிதம்பரம் நடராஜர் கோயிலில் உள்ள சில அற்புதமான ரகசியங்கள் ஆச்சர்யங்கள் இவைகள் தான்."
சிதம்பரம் நடராஜர் கோயில் ரகசியம் என்று பலரும் பல விசயங்களை கூறிவரும் வேலையில், அந்த கோயிலில் இருக்கும் அறிவியல்,பொறியியல்,புவியியல்,கணிதவியல்,மருத்துவவியல் குறித்த ஆச்சர்யங்களின் சில தகவல்கள்.
முன்னோர்கள் செய்த எல்லா செயல்களும் ஒரு தெளிவான சிந்தனையை நோக்கியே பயணித்துள்ளது, அப்படி இருக்க அவர்கள் நிர்ணயித்த பிரம்மாண்டமான கற்கோவில்களுக்கு பின் இருக்கும் சில அற்புதங்களை ஏற்கனவே உங்களிடம் பகிர்ந்திருக்கிறேன், அந்த வகையில் சிதம்பரம் நடராஜர் கோயிலில் உள்ள சில அற்புதமான ரகசியங்கள் இவைகள் தான்."
(1) இந்த கோயில் அமைந்திருக்கும் இடமானது உலகின் பூமத்திய ரேகையின் சரியான மையைப் பகுதி என்று கூறப்படுகின்றது. ( Centre Point of World's Magnetic Equator ).
(2)பஞ்ச பூத கோயில்களில் ஆகாயத்தை குறிக்கும் தில்லை நடராஜர் ஆலயம், காற்றை குறிக்கும் காலஹஸ்தி ஆலயம், நிலத்தை குறிக்கும் காஞ்சி ஏகாம்பரேஸ்வர ஆலயமும் சரியாக ஒரே நேர்கோட்டில் அதாவது சரியாக 79 Degrees, 41 minutes East தீர்க்க ரேகையில் (LONGITUTE ) அமைந்துள்ளது, இன்று google map உதவியுடன் நாம் வானத்தின் மேல் இருந்து பார்ப்பதை போன்று பார்த்தால் மட்டுமே விளங்கும் இந்த துல்லியம் அன்றைக்கு கணிக்கப்பட்டது ஒரு பொறியியல்,புவியியல் மற்றும் வானவியியலின் உச்சகட்ட அதிசயம்.
(3) மனித உடலை அடிப்படையாக கொண்டு அமைக்கப்பட்டிருக்கும் சிதம்பரம் கோயிலில் 9 நுழைவு வாயில்களும், மனித உடலில் இருக்கும் 9 வாயில்களை குறிகின்றது.
(4) விமானத்தின் மேல் இருக்கும் பொற் கூரை 21,600 தங்கத்தகடுகளை கொண்டு வேயப்பட்டுள்ளது, இது மனிதன் ஒரு நாளைக்கு சராசரியாக 21600 தடவைகள் சுவாசிக்கிறான் என்பதை குறிக்கின்றது (15*60*24 = 21,600).
(5) இந்த 21,600 தகடுகளை வேய 72,000 தங்க ஆணிகள் பயன்படுத்தப்பட்டுள்ளது, இந்த 72,000 என்ற எண்ணிக்கை மனித உடலில் இருக்கும் ஒட்டுமொத்த நாடிகளை குறிக்கின்றது.இதில் கண்ணுக்குத் தெரியாத உடலின் பல பாகங்களுக்கு சக்தியை கொண்டு சேர்ப்பவையும் அடங்கும்.
(6) திருமந்திரத்தில் " திருமூலர்"
மானுடராக்கை வடிவு சிவலிங்கம்
மானுடராக்கை வடிவு சிதம்பரம்
மானுடராக்கை வடிவு சதாசிவம்
மானுடராக்கை வடிவு திருக்கூத்தே
என்று கூறுகிறார், அதாவது " மனிதன் வடிவில் சிவலிங்கம், அதுவே சிதம்பரம், அதுவே சதாசிவம், அதுவே அவரின் நடனம்". என்ற பொருளைக் குறிகின்றது.
(7) "பொன்னம்பலம்" சற்று இடது புறமாக அமைக்கப்பட்டுள்ளது, இது நம் உடலில் இதயத்தை குறிப்பதாகும்.இந்த இடத்தை அடைய ஐந்து படிகளை ஏற வேண்டும், இந்த படிகளை "பஞ்சாட்சர படி" என்று அழைக்கப்படுகின்றது, அதாவது "சி,வா,ய,ந,ம" என்ற ஐந்து எழுத்தே அது. "கனகசபை" பிற கோயில்களில் இருப்பதை போன்று நேரான வழியாக இல்லாமல் பக்கவாட்டில் வருகின்றது. இந்த கனக சபை தாங்க 4 தூண்கள் உள்ளன,இது 4 வேதங்களை குறிக்கின்றது,
(8)பொன்னம்பலத்தில் 28 தூண்கள் உள்ளன, இவை 28 ஆகமங்களையும், சிவனை வழிபடும் 28 வழிகளையும் குறிக்கின்றன, இந்த 28 தூண்களும் 64 + 64 மேற் பலகைகளை கொண்டுள்ளது (BEAM ), இது 64 கலைகளை குறிக்கின்றது, இதன் குறுக்கில் செல்லும் பல பலகைகள்(CROSS BEAMS) , மனித உடலில் ஓடும் பல ரத்த நாணங்களை குறிக்கின்றது.
(9) பொற் கூரையின் மேல் இருக்கும் 9 கலசங்கள், 9 வகையான சக்தியை குறிக்கின்றது.அர்த்த மண்டபத்தில் உள்ள 6 தூண்கள், 6 சாஸ்திரங்களையும்,அர்த்த மண்டபத்தின் பக்கத்தில் உள்ள மண்டபத்தில் உள்ள 18 தூண்கள், 18 புராணங்களையும் குறிக்கின்றது.
(10) சிதம்பரம் நடராஜர் ஆடிக்கொண்டிருக்கும் ஆனந்த தாண்டம் என்ற கோலம் "cosmic dance" என்று பல வெளிநாட்டு அறிஞர்களால் அழைக்கபடுகின்றது. —

Monday, April 17, 2017

உடல் வளர்க்க... உயிர் வளர்க்க! - பிராணாயாமக் கலை

உடல் வளர்க்க... உயிர் வளர்க்க!
இன்றைய அவசர யுகத்தில், மூச்சுவிடக்கூட நேரமில்லாமல் ஓடிக்கொண்டே இருக்கிறோம். சுற்றுப்புறக் காற்றும் சுத்தமாக இல்லை. மாசு படிந்த காற்றை சுவாசிப்பதன் விளைவு, சுவாசப் பிரச்னையால் அவதிப்படுபவர்களின் எண்ணிக்கை இன்று அதிகரித்துக்கொண்டே போகிறது. இதனால், சளி, இருமல், ஆஸ்துமா, அலர்ஜி... போன்ற பல்வேறு நோய்களும் வரிசைகட்டி நம்மை வாட்டுகின்றன.  
'தியானம், பிராணாயாமம், யோகா செய்தாலேபோதும்; நோய் எதுவும் நெருங்காது’ என்று ஆளாளுக்கு அட்வைஸ் பண்ணுவதும், பிராணாயாமப் பயிற்சி எப்படிச் செய்வது என்பது பற்றி கூகுளில் தேடுவதும், யாரிடம் கற்பது என்று குருவைத் தேடி ஓடுவதுமாக ஒருவிதத் திணறலுடனே காலமும் ஓடுகிறது.  
''உடலிலும் மனதிலும் சக்தியைப் பெருக்கி, இரண்டிலும் கோளாறுகள் ஏற்படாமல் பார்த்துக்கொள்வதும், வெளியில் உள்ள காற்றுக்கும், உடலில்  இருக்கும் காற்றுக்கும் பாலமாக உள்ள சுவாசத்தைக் குறிப்பிட்ட வகையில் மாற்றி அமைத்துக்கொள்ளக்கூடியதுமான அற்புதக் கலைதான் 'பிராணாயாமம்’ '' 

''முனிவர்களும் யோகிகளும் நமக்கு அளித்த மிகப் பெரிய வரப்பிரசாதம்தான் இந்தப் 'பிராணாயாமக் கலை’. தீர்க்கமான சிந்தனையும் தெளிவான அறிவும் அமைய உதவும் கலை இது. மூச்சுக்காற்றானது, உள்ளே வருவதும் வெளியே போவதும் நிகழாமல் போனால், உயிர் ஓர் உடலில் நிலை கொள்ளாது.  
துக்கமான உணர்வில் ஒருவிதமாகவும், வியப்பு உணர்வில் இன்னொரு விதமாகவும், சோர்வாக இருக்கும்போதும்  ஒரு வகையாகவும், உள்ளத்தில் மகிழ்ச்சி பொங்கும்போது வேறு ஒரு வகையாகவும் மூச்சின் தன்மை இருப்பது இயற்கை.  
இதைத்தான் அந்தக் காலத்தில், மனம் ஒவ்வோர் உணர்வில் இருக்கும்போதும் சுவாசம் எப்படி நடக்கிறது என்பதைக் கண்டறிந்து, நமக்கு எந்த உணர்வு தேவையோ அந்த உணர்வு உண்டாகும்படி சுவாசத்தை மாற்றி அமைத்துக்கொண்டனர்.
சுவாசமானது,  ஒரு மணி நேரத்துக்கு ஒரு முறை, மூக்கின் இடது பக்கத் துவாரத்தில் இருந்து வலது பக்க துவாரத்தின் வழியாக மாறிமாறி நடைபோடுவதை அறிந்தனர். இதன் நன்மை தீமைகளைக் கண்டறிந்து, இரு துவாரங்கள் வழியிலும் ஒரே நீளமும் தன்மையும் இருக்கும்படியாக மூச்சை வலமிருந்து இடமாகவும், இடமிருந்து வலமாகவும் மூச்சுப்பயிற்சி செய்வதைக் கண்டுபிடித்தனர்.  
உடலை உரப்படுத்தி, மனதை நிலைப்படுத்தி, சுவாசத்தையும் மூச்சையும் ஒழுங்குப்படுத்தி, அதன் மூலம் பயனடைய பிராணாயாமக் கலையை அறிந்து சாத்திரமாக்கினர். மனம் இல்லையேல் மனிதன் இல்லை. அந்த மனதைக் கட்டுப்படுத்தவே பிராணாயாமம் உதவுகிறது.
சுவாசத்தை நாம் மூக்கு வழியாக உள்ளிழுத்ததும், அது தொண்டை வழியாக மூச்சுக்குழலுக்குப் போகிறது. பிறகு, இடம் வலம் பிரியும் குழல்களின் வழியே நுரையீரல்களில் இருக்கும் பல்லாயிரக்கணக்கான காற்று அறைகளுக்குச் செல்கிறது. இது நம் மார்பில் அடங்கியிருந்தாலும், இதை வெளியே எடுத்துப் பிரித்துப் பரப்பி வைத்தால் 1,40,000 சதுர அடி பரந்திருக்குமாம்!
சுவாசிக்கும் ஐந்து இடம்
மூக்கு வழியாக சுவாசிக்கும்போது, உட்புகும் காற்றானது, பிராணன், அபானன், உதானன், வியானன், சமானன் என்ற  ஐந்து இடங்களில் இருந்து ஐந்து வேலைகளைப் புரிகின்றது.
1. பிராணன்:  உடலின் மேலே இயங்கும் இது 'தலைமை சுவாசம்’ எனப்படுகிறது.  மேலும், நுரையிரலை இயக்கி சுவாசம் மற்றும் ரத்த ஓட்டத்தை நிகழ்த்துவதோடு புலன்களையும் இயக்குகிறது.
2. அபானன்: கீழ் உடலில் இருந்து கீழ்நோக்கிய வேலைகளை நிகழ்த்துகிறது. கழிவுகளை வெளியேற்றுகிறது. 'குதம்’ எனும் மலத்துளையே இதனுடைய இடம்.
3. உதானன்: உடலை எழுந்து நிற்கச் செய்வது, மேல் நோக்கி இயங்கும். உணவை விழுங்குதல், உறங்க வைப்பது. தொண்டையில் இருக்கும் இது, உயிர் பிரிகையில் ஸ்தூல உடலில் இருந்து நுட்ப உடலைப் பிரிக்கிறது.
4. சமானன்: உணவைச் செரித்து, சக்தியை ரத்தத்தில் கலக்கச் செய்வது. தொப்புள் பகுதி இதனுடையது. வாயுக்களைச் சமப்படுத்தும்.
5. வியானன்: ரத்த ஓட்டத்தை நடத்துகிறது. உடலின் உறுப்புகளிலும் பரவி வேலை செய்கிறது.
தேவைகள்
நம்மை நாமே பயிற்சிக்குத் தயார் செய்துகொள்ளத் தேவையானவை:
 தேர்ந்த குரு
 பயிற்சிக்கு ஏற்ற இடம்
 முறையான உணவு
 தகுந்த காலம்
 நாடிகள் பற்றிய அறிவும் தூய்மையும்
 உடல் தூய்மை
 தொடர்ச்சி பயிற்சி
குரு: அதிக நேரம் மூச்சை நிறுத்திப் பழகவும், வகை வகையான பிராணாயாமங்களில் திறமை பெறவும் சிறந்த குருவின் நேரடிப் பார்வையில் பயிற்சி செய்வது.  
ஏற்ற இடம்: மூச்சுப்பயிற்சிக்கு என்று தனியாக ஓர் இடம் வைத்துக்கொண்டால் நல்லது. திறந்தவெளி, இயற்கைக் காட்சிகள் நிறைந்த சூழல், கடற்கரை, ஆற்றங்கரை, வீட்டின் மொட்டைமாடி... என நல்ல காற்றும் வெளிச்சமும் வரும் இடமாகத் தேர்வு செய்யவேண்டும்.  
முறையான உணவு: மனதுக்கும் உணவுக்கும் நெருங்கியத் தொடர்பு உண்டு. ஆன்மிகம், யோகம் போன்ற பயிற்சிகளைப் பழகுபவர்களுக்கு மன அமைதி அவசியம். மனதை சாந்தமாக வைத்திருக்க, சாத்வீக உணவு உட்கொள்வதே நல்லது. இதனால், உள்ளேயோ, வெளியேயோ மூச்சைக் கும்பகம் செய்யும்போது, விரும்பும் நேரம் வரை நிறுத்த முடியும்.  
எளிதில் ஜீரணமாகக்கூடிய தானிய உணவுகள், சாறுள்ள பழங்கள், பச்சைப் பயறு, காய்கறிகள், எலுமிச்சம்பழச் சாறு, பால், வெண்ணெய், நெய், கைக்குத்தல் அரிசி, சிவப்பரிசி, கோதுமை, கம்பு, கேழ்வரகு மாவால் ஆன உணவுகள் ஆகியவை  எடுத்துக்கொள்ளலாம்.
உப்பு, புளிப்பு, காரம், கசப்பு மிகுந்த உணவுகளை உண்பதைத் தவிர்க்கவேண்டும். சமைத்து வெகுநேரம் ஆன, பழைய, கெட்டுப்போன உணவுகளைச் சாப்பிடக் கூடாது. பச்சைக் காய்கறிகள், தேங்காய் போன்றவற்றைச் சாப்பிடலாம். அதிகம் வெயிலில் அலைவதோ, நெருப்புக்கு அருகில் இருப்பதோ கூடாது.  
அரை வயிறு உணவும், கால் வயிறு காற்றும், கால் வயிறு தண்ணீரும் உட்கொள்ள வேண்டும். அதிகப் பசியுடனோ, சாப்பிட்ட உடனோ பிராணாயாமம் செய்யக்கூடாது.
தகுந்த காலம்: மார்ச் முதல் ஏப்ரலில் அதாவது வசந்த காலத்தில் பயிற்சியைத் தொடங்கலாம். இலையுதிர் காலமான செப்டம்பர் முதல் அக்டோபர் வரைகூட, பயிற்சியைத் தொடங்க ஏற்ற காலம். பிற்பகலில் காற்றில் சூடு அதிகம் இருப்பதால், பயிற்சிகளை தவிர்த்துவிடலாம். காலை 4 மணியில் இருந்து 6 மணி வரையிலான குளிர்ந்த சமயத்தில் பயிற்சி செய்வது உசிதம்.
நாடிகள் பற்றிய அறிவும் தூய்மையும்: அதிகாலை வெயில் வருமுன் பழகுதல் நல்லது. மாலை சூரியன் மறையும் நேரம் அதாவது 6 மணிக்குச் செய்யலாம்.
முதலில் நாடி சுத்தீயில் தொடங்கும்போது, காலை, நண்பகல், மாலை, நள்ளிரவு என நான்கு வேளைகளில் பழகுவார்கள். இப்படி ஒரு மாதம் செய்து, நாடிகளைத் தூய்மை செய்துகொள்ளலாம்.  
உடல் தூய்மை: தினமும் காலையில் எழுந்ததும், பல் துலக்கி, கை, கால்களை நன்றாக கழுவவேண்டும்.  பிறகு, கடவுளை வணங்கிவிட்டு, பயிற்சியை மேற்கொள்ளவேண்டும்.
உடல் சுத்தம் மனதையும் புத்துணர்ச்சியாக்கும். கோபம், வெறுப்பு, கூடாத உணவு, மாறான நடவடிக்கை, கூடா குணம், நடத்தைக் கோளாறு உள்ளவர்களுக்குப் பிராணாயாமக் கலை கை கூடாது.
தொடர் பயிற்சி: அன்றாட கடமைகளை செய்வது போல், மூச்சுப்பயிற்சியையும் தொடர்ந்து செய்துவந்தால், ஆர்வம் அதிகரிக்கும்.  தினமும் ஒருவித புத்துணர்ச்சி கிடைப்பதை உணரமுடியும்.
கடவுள் மீதான நம்பிக்கை, உணவு, பேச்சு, செயல், உறக்கம்... என எதிலும் மிதமாக இருத்தல், அக்கறையுடனும் விடாமுயற்சியுடனும் ஈடுபடுதல் இதுவே பிராணாயாமத்தில் வெற்றிபெறத் தேவையான தகுதிகள்.  
பிராணாயாமத்தின் நிலைகள்
மூச்சை உள்ளிழுப்பது, கும்பகம் செய்வது, வெளிவிடுவதில் உள்ள ஏற்றத்தாழ்வை வைத்து, பிராணாயாமத்தை முதல் நிலை, நடு நிலை , உயர் நிலை என மூன்று நிலைகளாகப் பிரிக்கலாம்.
முதல் நிலை:
இது சாதாரணப் பிராணாயாமம்.
'தாழ்ந்த வகை’ எனப்படும் இந்த முதல் விதத்தில், 12 முறை உள்ளே இழுத்து (பூரகம் செய்து), 48 முறை உள்ளே வைத்திருந்து (கும்பகம் செய்து), 24 முறை மூச்சை வெளியே (ரேசகம்) விடுவது.  (ஒரு முறை என்பது, கண் மூடி கண் திறக்கும் கால அளவு. இதை ஒரு மாத்திரை என்றும் கணக்கிடலாம்.)
ஒரு மாதம் வரை திணறல், சிரமம் இல்லாதபடி செய்ய பழகியதும், நடுநிலைக்குப் போகலாம்.
நடு நிலை:
இதில், மூச்சை 16 முறை உள்ளிழுத்து 64 முறை நிறுத்தி, சீராக 32 முறை வெளியே விடலாம்.  உடம்பில் வியர்வை வழியும். அதைத் துண்டால் துடைத்துக்கொள்ளாமல் வெறும் கைகளாலேயே துடைப்பது நலம்.
இந்தவிதமான பிராணாயாமத்தை மூன்று மாதங்களுக்குத் தொடர்ந்து பழகிட வேண்டும். இதன் பிறகே உயர்நிலை பிராணாயாமத்தை அடையவேண்டும்.
உயர் நிலை:
இதில் 24 முறை மூச்சை உள்ளே இழுக்கவும். உடனே, 96 முறை  உள்ளே நிறுத்திக் கும்பகம் செய்யவும்.  கும்பகம் செய்தவுடன் 48 முறை வெளிவிடவும்.  இப்படி ஒழுங்காக உயர்த்தி, திணறல் இன்றியும், மூச்சை விரைவின்றி சீராகவும் இழுக்கவும் விடவும் பழகவேண்டும்.  
காலை 4 மணிக்கு அதாவது சூரிய உதயத்துக்கு முன் எழுந்து விரும்பும் தெய்வத்தை வணங்கிவிட்டு, பிராணாயாமத்தை ஆசன நிலையில் பயிற்சி செய்யவேண்டும்.  
காலை 11 மணி, மாலை 5 மணி, இரவு 11 மணி என வைத்துக்கொண்டு நான்கு முறை பயிற்சியில் ஈடுபடவேண்டும்.  ஒரு தடவையில் 80 என்று 320 பிராணாயாமங்கள் ஒரு நாளில் பயிற்சி செய்வதுதான் தீவிர பயிற்சி.
பலன்கள்: பயிற்சியில் நாம் பிரணவ மந்திரத்தை ஜெபிக்குபோது உடலில் வெப்பம் உண்டாகிறது. இது அழுக்குகளைப் போக்கும். புது நிலையில் நாடிகள் தூண்டப்படுகின்றன. சிலருக்கு, உடலின் பல பாகங்களில் வலிகூட ஏற்படலாம். இருந்தாலும் பயிற்சியை முறைப்படி விடாமல் செய்து வரவேண்டும்.  உடல் வெப்பத்துக்கு ஏற்ப, பால், வெண்ணெய் ஆகியவை பயன்படுத்தவேண்டும்.  எண்ணெய்க் குளியல் அவசியம் தேவை.
எளிய பிராணாயாமங்கள்
உடலின் உதவியின்றி மனம் ஒன்றும் செய்ய முடியாது. மனம் அனுசரிக்காமல் உடலாலும் ஒன்றும் சாதிக்க முடியாது. ஆகவே, இவை இரண்டையும் ஒன்றுடன் ஒன்று சேர்ந்து செயல்படுமாறு பழக்கப்படுத்திக் கொள்ளவேண்டும்.
தலைவலி, வயிற்றுவலி, சூடு, குளிர்... என வேறு உபாதைகளுடன் உடல் இருந்தால், அது நோய் கொண்ட நிலை. இந்த நிலையில் மனதால் பிரயோகப் பயிற்சிகள் செய்ய முடியாது. ஆகவே, உடலை ஆசன சாத்திரப்படி பல ஆசனங்களால் ஆரோக்கியமாக வைத்துக்கொள்ளவேண்டும். உடல் நினைவே இன்றி இயங்க முடியும்போதே நாம் உடல் நல ஆரோக்கியத்துடன் இருக்கிறோம் என்று பொருள்.
எளிமையான ஓர் ஆசனத்தில் நீண்ட நேரம் உட்காரக்கூடிய பக்குவத்துக்கு நாம் தயாராக வேண்டும். நெஞ்சு, கழுத்து, தலை போன்றவை ஒரே நேர்க்கோட்டில் இருக்க வேண்டும். உடல் முன்னால், பின்னால், இடம், வலம் என எப்படியும் சாயாமல், வளையாமல் நேராக உட்கார்ந்து, நிமிர்ந்திருக்க வேண்டும்.  
தொடர்ந்து உட்காரும்போது ஆசன நிலை சரியாக அமைந்துவிடும். சற்றே குண்டாக இருப்பவர்களுக்கு பத்மாசனம் உடனே வந்துவிடாது. ஆசனம், சரியாக வரும் வரை பயிற்சியைத் தொடங்காதிருக்க வேண்டியதில்லை. ஆசன நிலையுடன் இதையும் பழகிவரலாம்.
வயோதிகர்களும் முடியாதவர்களும் நாற்காலியில் உட்கார்ந்தபடியே பிராணாயாமம் செய்யலாம்.  
            
ஒழுங்குமுறை
பிராணனின் வெளித்தோற்றம் - உடல்மூச்சு. எனவே, ஒழுங்கற்று நடக்கும் மூச்சை முதலில் ஒழுங்குபடுத்தவேண்டும்.  இதில் இருந்து பிராணாயாமம் தொடங்கிவிடுகிறது.
இதில் ஜெயித்தால் உடல், மன இயக்கங்கள், பிறருடைய செயல்கள், பிரபஞ்ச இயற்கை... என எல்லாவற்றையும் படிப்படியாகக் கட்டுப்படுத்தும் திறன் வந்தடையும்.
மனநிலைக்கு ஏற்ப மூச்சு விரைவாகவும் மெதுவாகவும் இல்லாமல், அதை அடக்கி, மாற்றி அமைக்கும்போது,  மாறுபடும் மனநிலையைக்கூட மூச்சு கட்டுப்படுத்திவிடுகிறது.
பலன்கள்: உடலும் மனமும் கட்டுப்பட்டு இருக்கும். நினைத்ததைச் சாதிக்க முடியும். நல்ல தோற்றப் பொலிவு, உடல் பலம், மன உறுதி, மகிழ்ச்சியான வாழ்க்கையைப் பெறலாம். வீரியமும் ஒருமுகப்பட்ட மனமும் எதையும் வசீகரிக்கும் சக்தியும் மேம்படும்.
சுவாசக் கணக்கு
ஒருவர் நாள் ஒன்றுக்கு சுமார் 21,600 முறை மூச்சை உள்ளிழுத்து வெளிவிடுகிறார். அவர் வேகவேகமாக மூச்சு விடும்போது, இந்த எண்ணிக்கை சீக்கிரமே குறைந்து, ஆயுளும் குறைகிறது. யோகி, ஆயுளை ஆண்டுக்கணக்கால் அளவிடுவது இல்லை. மூச்சுக் கணக்கில்தான் அளக்கின்றனர். உயிராற்றல் அதாவது பிராணன், வெளி மூச்சுக்குப் பிறகு உள்ளே இழுத்துக்கொள்ளும் மூச்சின் அளவிலேயே அதிகரிக்கவோ, குறையவோ செய்யும். ஒருவர், நிமிடத்துக்கு 15 முறை மூச்சை இழுப்பதால் ஒரு நாளைக்கு 21,600 முறை சுவாசிக்கிறார் என்று கணக்கிடப்படுகிறது.
சுவாச ஒழுங்கு
உள்ளிழுக்கும் மூச்சை மெதுவாக இழுத்துப் பழகுவதுபோல, வெளிவிடுவதையும் மெள்ளச் செய்தால், இதுவே சுவாச ஒழுங்கு.உள்ளிழுப்பதை 'சுவாசம்’ என்றும், வெளிவிடுவதை 'பிரச்வாசம்’ என்றும் கூறுவர். இரண்டின் வேகத்தையும் குறைத்தால் அதை நிகழ்த்தும் பிராணன் நமக்கு லாபமாகிறது. ஆகவே, நிமிடத்துக்கு 15 முறை மூச்சுவிடும் மனிதனுக்கு, 100 ஆண்டு ஆயுள். ஒரு நிமிடத்துக்கு நான்கே மூச்சுவி டும் ஆமை எத்தனை காலம் வாழ்கிறது தெரியுமா? 400 ஆண்டுகள்! ஆச்சரியமாக இருக்கிறதுதானே!? பிராணாயாமம் மூலம் சக்தி அதிகரிக்கிறது. சக்தி இல்லையெனில் சுகம் இல்லை. எனவே, பிராணனே உடலுக்கான பலத்தையும் சுகத்தையும் தரவல்லது.  
பிராணாயாமங்களிலும் பல வகை  
சீத்காரி - உடல் வெப்பத்தைத் தணிக்கும்.
சீதளி - உடல் குளிர்ச்சியை உணரச் செய்யும்.
உஜ்ஜாயி - மார்புப் பகுதி நலம் அடையும்.
பிரமரீ - வண்டு போல ரீங்காரம் செய்வது.
நாடி சுத்தீ - நாடிகளைத் தூய்மையாக்குதல்.
பிளவனீ - வயிற்றில் பிராணனை நிரப்புதல்.
சுரியபேதா - பிங்கலை வழி பூரகம் செய்தல்.
  மேல் உடலைத் தூய்மையாக்கும்.
மூர்ச்சா - மூர்ச்சை வரும் வரை செய்தல்.
கபாலபாதி - கபாலத்தை ஒளிமிகச் செய்தல்.
பிராணாயாமத்துக்கான எளிய  பயிற்சிகள்
நாடி சுத்தீ
நாடிகள் அழுக்குகளால் அடைப்பட்டு இருந்தால் அவற்றுள் வாயு வடிவப் பிராணன் நுழைய முடியாது. எனவே, நாடிகளைத் தூய்மையாக்கும் முறைகளில் நிர்மானு, சமானு என்ற இரண்டு வகைகள் உண்டு. நிர்மானு என்பது, உடலைத் தூய்மை ஆக்கும் முறைகளில் நாடி சுத்தம் செய்வது. சமானு என்பது வேதமந்திர பீஜ மந்திரத்துடன் மூச்சை இழுத்துவிட்டுச் செய்வது.
பிராணாயாமத்தின் பொதுவான அளவு 1:4:2. அதாவது, உள் மூச்சு ஒன்று, கும்பகம் நான்கு, வெளி மூச்சு இரண்டு. இப்படி ஒரே ஒரு பிராணாயாமம் தினமும் பழகினாலும் போதும்.  
செய்முறைகள்:
1 முதலில் கால்களைக் குறுக்காகப் போட்டுப் பத்மாசனத்தில் அமரவும். கண்களை மூடி, புருவ மையத்தில் மனதைப் பதிக்கவேண்டும். வலது கையின் பெருவிரலையும், கடை மூன்று விரல்களையும் பிரித்துக்கொண்டு மூக்கைப் பிடியுங்கள். வலது பெருவிரலால் மூக்கின் வலதுபக்கத் துளையை அடைத்துக்கொள்ளவும்.  இடது மூக்குத் துளை வழியே முடிந்தமட்டும் மூச்சை ஒரே சீராக ஓசையின்றி உள்ளே இழுங்கள். உடனே, அதே மூக்குத் துளை மூலம் மூச்சை மெள்ள, சீராகத் தொடர்ந்து வெளியே விடுங்கள். மீண்டும் மீண்டும் 12 முறை இப்படிச் செய்யவும். இது ஒரு சுற்று.
பிறகு, வலது மூக்கைத் திறந்து மற்ற மூன்று விரல்களால் இடது மூக்கை அடையுங்கள். பெருவிரலை எடுத்து மூக்கின் வலது பக்கமாக முடிந்த அளவு மூச்சை மெள்ள உள்ளே இழுங்கள். உடனே, அதே மூக்கு மூலம் மூச்சைச் சீராக வெளியே விடுங்கள். இதையும் 12 முறை செய்தால் ஒரு சுற்று. மூச்சை இழுக்கும்போதும் விடும் போதும் 'ஓம்’ அல்லது ஏதாவது மந்திரத்தை ஜபிக்கலாம்.
முதல் வாரம், ஒரு சுற்று இரு மூக்கிலும் சேர்த்துச் செய்யுங்கள். இரண்டாம் வாரத்தில் இரண்டு சுற்றும், மூன்றாம் வாரத்தில் மூன்று சுற்றும் செய்யுங்கள். ஒரு சுற்றுச் செய்தவுடன் சில நிமிடங்கள் ஓய்வெடுத்துக் கொள்ளலாம். இந்த ஓய்வில் சாதாரணமாகவே சுவாசிக்கலாம். இதுவே ஓய்வுதான்.
இந்தப் பயிற்சியில் உள்ளே மூச்சை நிறுத்தும் கும்பகம் இல்லை. உங்கள் திறமைக்கேற்ப அதிகச் சுற்றுகளைப் பழகலாம்.
பலன்கள்: இது மூச்சை ஒழுங்குப்படுத்தும்.  இதனால் மூச்சளவு ஒரே சீராகி, நாள்பட்ட நோய்களையும் தீர்க்கும். உடலில் பலமும் கூடும்.  
2 இரு மூக்குத் துளைகளின் மூலமும் முடிந்த அளவுக்கு மூச்சை ஓசையின்றி ஒரே சீராக மெள்ள இழுத்து, நுரையீரல்களில் நிரப்பிக்கொள்ளவும். உடனே, அதேபோல இரண்டு மூக்குத் துளைகள் மூலமும் மூச்சை வெளியே விடவும். இதை 12 முறைகள் செய்ய ஒரு சுற்றாகும். நேரம், திறமைக்கு ஏற்ப அதிகச் சுற்றுகள் செய்யலாம். இதிலும் கும்பகம் இல்லை.
3உங்களுக்குத் தெரிந்த ஆசனம் எதுவோ அதுபோல் அமருங்கள். மூக்கின் வலதுபக்கத் துளையை வலப் பெருவிரலால் மூடி, மூக்கின் இடதுபக்கத் துளையில் சுவாசத்தை இழுங்கள். இடது துளையை மூடியவாறு வலது மூக்கு வழியாக மெள்ள இழுத்த காற்றை வெளியே விடுங்கள். வலமூக்கு வழியே முடிந்த அளவு காற்றை உள்ளிழுங்கள். இடமூக்கைத் திறந்து அதன் மூலம் உள்ளே இழுத்த காற்றை வெளியே விடுங்கள். இதிலும் கும்பகம் இல்லை. 12 முறை இதைச் செய்யலாம்.  இது, ஒரு சுற்றுக் கணக்கு. இதில் மூக்கு மாற்றிச் செய்வதே சிறப்பு.
4நாற்காலி, சோபாவில் வசதியாக அமர்ந்துகொள்ளுங்கள். இரு மூக்குத் துளைகள் மூலம் எவ்வளவு முடியுமோ அவ்வளவு மூச்சை உள்ளே இழுங்கள். முடிந்தவரை உள்ளே நிறுத்திக்கொள்ளுங்கள். பிறகு வெளியே சீராக மெள்ள நியமப்படி வெளியே விடுங்கள். இது எளிய கும்பகமாகும். உள்ளிழுத்தல், நிறுத்தல், வெளியேவிடலில் குறிப்பிட்ட விகிதம் எதுவும் அளவாக இல்லை. ஆனால், நன்கு இழுப்பது, முழுவதும் வெளிவிடுவதும், சுகமாக இருக்கும் வரை மட்டுமே அடக்குதலும் உண்டு.
பலன்கள்: ரத்த ஓட்டம் சீராகும். களைப்பு அகலும். உடல் உறுப்புகளிடையே ஒழுங்கு, ஒருங்கிணைப்பு உண்டாகும்.  மனம் ஒருநிலைப்படும். கோபம், தீய சிந்தனை அகலும். மன உறுத்தல், உளைச்சல் நீங்கும். படிப்பவர்களுக்கு நல்ல ஞாபகசக்தி தங்கும். மன ஆற்றல் அதிகரிக்க இந்தப் பயிற்சியைப் பழகலாம். சோர்வு இருக்காது. 30 வருட ஆஸ்துமா பிரச்னைகூட தீரும். ஒரு முறை செய்துவிட்டாலே அடிக்கடி செய்யத் தூண்டும் பயிற்சி இது.  
சீத்காரி
இதற்கு 'குளிரானது’ என்று பொருள். செய்வது மிகவும் எளிது. இந்தக் கோடை காலத்தில் இதைச் செய்வதன் மூலம் உடல் வெப்பத்தைத் தணித்துக்கொள்ளலாம்.
ஏதேனும் ஓர் ஆசனம் போட்டு அமருங்கள். இரு வரிசைப் பற்களையும், சேர்த்து வைத்துக்கொள்ளுங்கள். வாய்க்குள் நாக்கை மேலண்ணத்தில் ஒட்டியவாறு  கொஞ்சம் மடித்துக்கொள்ளுங்கள். 'இஸ்ஸ்ஸ்...’ என்று காற்றை வாய்வழியே உள்ள பல் இடுக்கு வழியாக உறிஞ்சவேண்டும். முடிந்தவரை கும்பகம் செய்யலாம்.
காரம் நாவில் பட்டதும், அல்லது ஜில்லென ஐஸ் பட்டால் 'ஸ்..ஸ்’ என்று காற்றை இழுப்பது போலத்தான். பிறகு,  மெள்ள  மூக்கின் வழியே காற்றைச் சீராக வெளியேற்றுங்கள்.
வாயால் இழுத்து மூக்கால் வெளிவிடுவதால், முடிந்தவரை பற்கள் ஒன்றாக சேர்ந்தபடி இருக்கவேண்டும். கும்பகம் செய்யும்போது நாக்கின் நுனி மேலண்ணத்தில் தொட்டு அமுத்தியிருக்கவேண்டும். காலை, மாலையில் 10 முறை செய்யப் பழகுங்கள்.  
 
சவாசனத்தில் பிராணாயாமம்
இது உடல் முழுவதுக்குமான பிராணாயாமம்.
சூடு இல்லாத சமமான ஒரு தரையில் விரிப்பைப் போட்டு, தரையில் முதுகு படும்படி மல்லாந்து படுங்கள்.  கைகளையும் கால்களையும் நன்றாக நீட்டிக்கொள்ளுங்கள். உடல் உறுப்புகளை விறைப்பு இன்றி கிடத்துங்கள். பக்கவாட்டில் நீண்டு கிடக்கும் கைகளில் உள்ளங்கைகள் மேலே பார்த்தபடி இருக்கட்டும். மூட வேண்டாம். பாதங்கள் நேரே சற்று விலகி இருக்கட்டும். உடலின் தசைகள், நரம்புகள், உறுப்புகள் எல்லாம் தளர்ந்து இருக்கட்டும். அகலமாக இருந்தால் கட்டிலில் கிடந்து இதைப் பண்ணலாம்.
இரு மூக்குத் துளைகள் மூலமாக ஓசையின்றி மூக்கு சுருங்குதலோ, விரிதலோ இல்லாமல் மெள்ள சீராக மூச்சை உள்ளே இழுங்கள். முடியும் வரை சிரமம் இல்லாத வரையில் மூச்சை உள்ளே நிறுத்துங்கள். விடத் தோன்றும்போது இரு மூக்கின் வழியாகவும் மெள்ளச் சீராக மூச்சை, தொடர்ச்சியாக வெளியே விடுங்கள்.
இப்படி காலையில் 10 முறையும், மாலையில் 10 முறையும் செய்து பழகுங்கள். மூச்சை இழுக்கும்போதும் விடும்போதும் 'ஓம்’ என்று ஜபிக்கலாம். கும்பகத்தின்போதும் ஜபிக்கலாம்.  
பலன்கள்: மனமும் உடலும் பூரண ஓய்வுகொள்கிறது. கொஞ்சம் வயதானவர்கள் சுகமாக இதைப் பயிற்சிக்கலாம். மனக்கொதிப்பு, மன அழுத்தம், மறதி, படபடப்பு, ரத்த அழுத்தம், சர்க்கரை நோய் போன்றவை குணமாகும். இதயம் இதமாக இருக்கும்.
    
நடந்துகொண்டே பயிற்சி
தோள் பட்டைகள் பின் செல்ல, தலை நிமிர்ந்து நடக்க வேண்டும். ஓர் அடிக்கு ஒன்று என, மூன்று அடிகள் எடுத்து, மூன்று 'ஓம்’ அல்லது ஏதாவது ஒரு மந்திரம் சொன்னபடி மெள்ள மூச்சை இழுங்கள். பிறகு, 12 அடிகள் எடுத்து வைத்து 12 'ஓம்’களை ஜபித்து மூச்சை உள்ளே நிறுத்தி வையுங்கள். பிறகு, ஆறு அடிகள் எடுத்துவைத்து ஆறு 'ஓம்’களைச் சொல்லி மெள்ள மூச்சை வெளியே விடவேண்டும். இது ஒரு சுற்று.  
இதன் பிறகு, சற்று ஓய்வாக நடக்கலாம். காலடி வைக்கும்போது 'ஓம்’ எனச் சொல்வது சிரமமாகத் தெரிந்தால், காலடி எடுத்து வைத்தல் பற்றிக் கவலைப்பட வேண்டாம். அதிக வேலைச் சுமையுள்ளவர்கள் வாக்கிங் போகும்போது காலையிலும் மாலையிலும் இதைச் செய்யலாம். சுத்தமான காற்றில் நடந்தபடியே பிராணாயாமம் செய்வது, உடலுக்கு மிகவும் சந்தோஷத்தைத் தரும். அமர்ந்திருந்து செய்தே பழகியவர்கள், இப்படி நடந்தபடியே செய்யலாம்.  
பலன்கள்: தாகமாக இருக்கும்போது இந்தப் பயிற்சியைச் செய்தால் தாகம் தீரும். முக அழகு கூடும். உடல் வலிமை உண்டாகும். பசி, தாகம், தூக்கத்தை வெல்லலாம். விஷத்தைக்கூட முறியடிக்கும் வல்லமை பெற்ற இந்தப்பயிற்சி, உடல் வெப்பத்தையும் குறைக்கும்.
நின்றுகொண்டே பிராணப் பயிற்சி செய்வது நல்ல பலனைத் தரும்.
சீதளிப் பிராணாயாமம்
இதுவும் குளிர்ந்த பிராணாயாமம்தான். சீதளம் எனில், குளிர்ச்சி என்று பொருள். கோடையில் வெளியில் அதிகம் அடிக்கும்போது செய்தால் குளிர்ச்சியாக இருக்கும். உடலில் இருந்து வெப்பம் காதுகள் வழியே வெளியேறுவதை உணரமுடியும்.
ஆசனத்தில் வசதியாக உட்கார்ந்துகொள்ளுங்கள். இரு உதடுகளின் இடையிலும் நாக்கைத் துருத்தி குழல் போல் மடித்து வெளியே நீட்டவும். இருபுறமும் மடிந்த நாக்கு நடுவில் குழல்போலப் பள்ளமாக இருக்கும். 'ஷ்’ என்று சீறும் ஓசையுடன் காற்றை வாய் வழியாக உள்ளே இழுத்திடுங்கள். பிறகு காற்றை விழுங்கிடுங்கள். சுகமாகப் படும்வரை மூச்சை உள்ளே அடக்கிக் கும்பகம் செய்திடுங்கள். (வெப்பத்தை மட்டும் குறைத்துக்கொள்ள விரும்புபவர்கள் கும்பகம் செய்ய தேவையில்லை.)  
பிறகு இரு மூக்குகளின் வழியே மெள்ள சீராக வெளியே விடுங்கள். இந்தப் பயிற்சி செய்வது எளிது. 10 முதல் 20 முறை பயிலலாம். நிற்கும்போது, நடக்கும்போது, எந்த நிலையிலும் எப்போதும் செய்யலாம்.
பலன்கள்: இது உடலை குளிர்விக்கும். செரிமானத்தைச் சரி செய்யும். பித்தக் கோளாறுகள், கபத் தொல்லை, தீராத நோய்களின் வீக்கம், புண், காய்ச்சல், இருமலை போக்கும். நா வறட்சி ஏற்படாது. தாகத்தைத் தீர்க்கும்.
நோய், களைப்பை அகற்றலாம்!
மனிதனின் உயர்வைக் கட்டுப்படுத்துவது களைப்புதான். அதன் அதீதம் அல்லது நீட்டிப்பே நோயை உண்டாக்குகிறது. வலி, வீக்கம், உடல் உறுப்பு கெடுதலுடன் அதிகம் முடியாமை  போன்றவை நோயினால் வருவதே. களைப்பை நீக்கும் பிராணாயாமம் நோயையும் விலக்குகிறது. காரணம், எல்லாமே மூச்சுதான்!
ஆழ்ந்து சுவாசிப்பதே ஆரோக்கியம் நீட்டிக்க உதவிடும். இருந்தாலும், பிராணனை மையப் படுத்தும் நுணுக்கங்கள் சில.  
 பிராணனை வெளியிலிருந்து உள்ளே இழுங்கள். வயிற்றில் அப்படியே நிரப்புங்கள்.
 தொப்புளுக்கு நடுவிலும், மூக்கின் முனையிலும், இரு கால் பெருவிரல்களிலும் இந்தப் பிராணன் இருப்பதாக மனதில் ஆழ்ந்து எண்ணவேண்டும். இது, அந்தந்த இடங்களில் பிராணனை மையப்படுத்தும்.
 இதை, சூரிய உதயத்துக்கு முன்பும், சூரியன் மறையும் மாலை வேளையிலும் செய்யலாம்.
 இப்படிச் செய்யும்போது அனைத்து நோய்களில் இருந்தும் விடுபடமுடியும். உடனடி பலனாகக் களைப்பு நீங்கும்.
தொப்புள் பகுதியில் பிராணன் நிறுத்தப்படுவதால் எல்லா நோய்களும் விலகுகின்றன. காரணம், அங்கே எல்லாப் பாகங்களுடனும் தொடர்புள்ள நாடிகள் வந்து சேரும் பகுதி உள்ளது. 'தம் கட்டுதல்’தான் இந்த மூச்சுப் பயிற்சி.  எனவே, அது நீட்டிக்கும்போது களைப்பும் காணாமல் போய்விடும்.
மூக்கின் முனையில் மையப்படுத்துவதால் காற்றினுடைய தனித்தனிப் பொருள்கள் அத்தனையையும் ஆளும் திறன் உண்டாகும். அசுத்தம் நீங்கி, தூய பிராணன் நிலைபடும்.
கால் பெருவிரல்களில் நிறுத்தப்படுவதால் உடல் லேசாகும். உடல் கனம் நீங்குவது என்பது அழுக்கு நீங்குவதுதான்.
கும்பகம்:
குறிப்பிட்ட கால அளவில் மூச்சை நிறுத்துவதே கும்பகம் எனப்படும். அதாவது, மூச்சைச் சலனமின்றி, சஞ்சாரம் இன்றி ஓரிடத்தில் அடக்கிவிடுவது அல்லது நிறுத்திவிடுவது. இதையே பிராணன் ஆயமம் = பிராணாயாமம் என்கிறார்கள். இதைச் சார்ந்த மற்ற மூச்சு முறைகளும் அந்தப் பெயரிலேயே கூறப்படுகின்றன.
தம் கட்டுதல் என்கிறோமே அதுதான் இது. இதுவே பலம் ஆகிறது. பளு தூக்கும்போதோ, பேசும்போதோ பிராணாயாமம் நடக்கிறது. 'மூச்சைப் பிடித்துக்கொண்டு வேலை செய்கிறான்’ என்பார்கள்.  இது 'தம்’, 'ஸ்டாமினா’ எனப்படும் மூச்சை அடக்கும் திறனையே குறிப்பதாகும்.  
அந்தர்முக கும்பகம் - மூச்சை உள்ளே நிறுத்துவது.
பஹிர்முக கும்பகம் - வெளியே மூச்சை நிறுத்துவது.
கேவல(தனி) கும்பகம் - உடனடியாக சுவாசம் தடைப்படுவது. அதாவது, மூச்சை உள்ளே இழுத்தல், வெளியே விடுதல் இல்லாமல் ஒருவருக்குள் மூச்சு திடீரென நிற்பது. இதுவே கேவல கும்பகம்.
மந்திரங்கள்:
பிராணாயாமப் பயிற்சியில் மூச்சை அளக்கவே மந்திரம் கூறப்படுகிறது.  'ஓம்’ எனும் பிரணவ மந்திரம், நாபிக் கமலத்தில் இருந்து உச்சரிக்கப்படுவதால், சுவாசத்தை சீராக இயக்கும். மந்திரத்தை ஜபித்தபடி செய்யும் பயிற்சியால் மனமும் ஒருநிலைப்படும். கும்பகத்தோடு மந்திரம் நல்ல பலனைத் தரும். காயத்ரி, ஓம், விருப்பமான தெய்வ மந்திரம், பஞ்சபூத பீஜாட்சரங்கள் சொல்லலாம். இவை, மூச்சின் அளவை அறியவும் உதவி செய்யும். மூச்சை முடிந்தவரை உள்ளிழுத்து, விடுவதும் கும்பகம் செய்வதும் இயற்கையாக அமைந்துவிடும். மந்திர நீளத்தில் சுவாசிப்பதும் கும்பகிப்பதும் அப்படியே.
கால அளவு:
மூச்சை வெளியிலோ, உள்ளேயோ நிறுத்தும் இடத்தையும் காலத்தையும் மாத்திரைகளின் மூலமாக அளக்கப்படும். கண்ணிமைத்துக் கண் திறப்பது ஒரு மாத்திரை. கையை மூடிவிட்டு திறக்கும் அளவே ஒரு மாத்திரையின் கால அளவை நிர்ணயித்துள்ளனர். மூச்சு விட்டு மூச்சு இழுப்பது ஓர் அளவே. சிறுசிறு நிகழ்ச்சிகளால் இப்படிக் கால அளவு கணிக்கப்படும். 'ஓம்’ என்பது அ, உ, ம அடங்கிய ஓர் எழுத்து.  இதைக் கொண்டும் மூச்சின் காலம் அளக்கப்படும். இதுவே ஆன்மிகமானது; நற்பயன் தருவது.  எனவே, பலரும் இந்தக் கால அளவை 'ஓம்’ என்றே அளந்துகொள்வார்கள்.
தரை விரிப்பு:      
தரைவிரிப்போ, பருத்தித் துணி, பலகை அல்லது கம்பளி இன்றி வெறும் தரையில் உட்கார்ந்து பிராணாயாமம் செய்யக் கூடாது. இதனால் உடலின் பிராணனை தரை இழுத்துக் கொண்டுவிடும். பூச்சிகளால் இடையூறு ஏற்படலாம். தரையின் சூடோ, குளிரோ உடலைத் தாக்கலாம்.  
ஆசன அவசியம்
18 ஆசனங்களைப் பழகினால், பிராணாயாமப் பயிற்சியில் இடையூறு இருக்காது. அஜீரணமோ, மலச்சிக்கலோ, வாயுத் தொல்லையோ இருக்காது. இது, நாடிகளைத் தூய்மை செய்ய மிகவும் உதவும். சூட்டையும் குளிரையும் தாங்கும் சக்தி நமக்குள் பெருகும். மேலும், உடலை நிமிர்த்தி உட்காரும் முறையும் ஒழுங்குப்படும்.
காலத்துக்கேற்ப பயிற்சி!
வெயிலின்போது காலையில் மட்டும் பயிற்சி செய்தால் போதும். உடலில் உஷ்ணம் மிகுந்தால், உடலில் வெண்ணெய் தடவியும், தலையில் நெல்லிக்காய் எண்ணெய், தேங்காய் எண்ணெயைத் தடவி சிறிது நேரம் கழித்து குளிக்கலாம்.  சர்க்கரை அல்லது கற்கண்டை தண்ணீரில் கரைத்துக் குடிக்கலாம்.  நீர் மோராக கரைத்துக் குடிக்கலாம்.  துண்டை தண்ணீரில் நனைத்து உடலில் போட்டுக்கொள்ளலாம்.  அடிக்கடி உடலில் தண்ணீர் படும்படி செய்யலாம்.  இவை அனைத்தும் உடல் உஷ்ணமாகாமல் தடுக்கும்.
குளிர்ச்சியைத் தரவல்ல கேப்பைக் கூழில் மோர் கலந்து, வெண்டைக்காய், வெந்தயம் சேர்த்து உண்ணலாம்.  இரவிலும் பகலிலும் வாழைப்பழம், ஆரஞ்சுப்பழம் சாப்பிடலாம்.  
தக்காளி, முலாம், தர்ப்பூசணி போன்ற பழங்கள் உடலுக்குக் குளிர்ச்சியைத் தரும்.
குளியல்
குளித்துவிட்டுதான் பிராணாயாமம் செய்ய வேண்டும் என்பது இல்லை.  குளித்தால் தலையில் ஈரம் இல்லாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். மெல்லிய துணியால் தலையை மூடிக்கொண்டு செய்யலாம்.  சிலருக்கு ஆசனம் போட குளித்தால்தான் உடல் வளையும்.  குளியல் குளிர்ந்த நீரிலா, வெந்நீரிலா என்று இடம், காலம் பார்த்து தேர்வு செய்துகொள்ளலாம்.  
செயலில் ஆரோக்கியம்!
இடது கைக்கு ஏதாவது தலையணையை அண்டக் கொடுத்து படிப்பது, டி.வி. பார்ப்பது போன்ற செயல்களில் ஈடுபடலாம்.  தூங்கும்போது எப்போதும் இடதுபுறம் ஒருக்களித்துப் படுங்கள். எப்போதும் பகலில் வலதுபுறம் சாய்ந்து வலதுபுற கைக்கு அடியில் ஏதாவது திண்டை வைத்துக்கொண்டு படிக்கலாம். அலுவலகம் எனில், வலதுபுறம் சாய்ந்த நிலையில் வேலையைப் பாருங்கள்.  இடதுகாலின் மேல் வலதுகாலைப் போட்டுக்கொள்ளுங்கள். இயற்கையாகவே இப்படி நடக்கலாம்.  ஆனால், பிறருக்கு விநோதமாகப் படக்கூடாது என்பதைக் கவனத்தில் கொள்ளவேண்டும். சுவாசம் சுகமானது!
                                                                            நன்றி : டாக்டர் விகடன்

திருமூலர் - "திரு மந்திரம்"


இளமையை நீட்டிக்கும் ஆரோக்கியத்தை தக்க வைக்கும்... திருமூலரின் எளிய வழிமுறைகள்..!
"உணவே மருந்து" என்பது அந்தக் காலம். "மருந்தே உணவு" என்பது இந்தக் காலம். ஒரு பக்கம் வளர்ந்து வரும் தொழில்நுட்பத்தால் எத்தகைய கொடுமையான நோயையும் குணப்படுத்தமுடியும் என்னும் நிலை உள்ளது. மறு பக்கம் மருத்துவமனைக்குச் செல்லும் நோயாளிகளின் எண்ணிக்கை என்னவோ அதிகரித்துக் கொண்டுதான் இருக்கிறது. நோயை நீக்கி இன்பத்தைப் பெறுவதற்கு என்ன செய்யலாம் ? என்றும் இளமையோடு வாழவும், ஆரோக்கியமான தலைமுறையை உருவாக்கவும் திருமூலர் கூறும் எளிய வழியைப் பின்பற்றலாம்.
திருமூலர், முதலில் உடம்பைக் குற்றமுடையது என்று எண்ணியிருந்தார். பின்பு இறைவன் குடியிருக்கும் கோயில் தான் உடம்பு என்பதை உணர்ந்து, அதனைப் பாதுகாக்க வேண்டும் என்ற உணர்வைப் பெற்றதாக அவரே கூறியிருக்கிறார். மருத்துவமுறை, பார்வதி தேவி பரமசிவன் மூலம் நந்தி தேவருக்கு சொல்லப்பெற்று, அவர் மூலம் திருமூலருக்கு சொல்லப்பெற்றதாகப் புராணங்கள் கூறுகின்றது. சரி, நோய் மற்றும் மருத்துவமுறையைப் பற்றி திருமூலர் கூறுவதைக் காண்போம்...
* உடலில் உயிர் இருக்க வேண்டுமென்றால் புணர்ச்சியைக் குறைத்து உணவை அளவோடு எடுத்துக்கொள்ள வேண்டும். "அளவான உணவு" என்பது, உணவு அரை வயிறு, நீர் கால் வயிறு மற்றும் காற்று கால் வயிறு என்பதே அந்தக் கணக்கு .
* மாலை வேளையில் யோகம் பயின்றால் உடலிலுள்ள கபம் அகலும். மதிய வேளையில் யோகம் பயின்றால் கொடிய வாதம் நோய் நீங்கும்.காலை வேளையில் யோகம் பயின்றால் உடலிலுள்ள பித்தம் நீங்கும் நரை, திரை மாறும்.உடம்பில் வாதம் மிகுந்தால், எரிச்சல் உண்டாகும். கை, கால், விலாச் சந்து, இடுப்புச் சந்துகளில் மிகுதியான வலி ஏற்படும் என்று கூறியுள்ளார்.யோகத்தை முறையாகப் பயின்றால் வாதம் பித்தம் , சிலேத்துமம் சமப்பட்டு, உடல் இளமை பெறும் என்பதைத் திருமந்திரத்தில் கூறியுள்ளார்.
*சுவாசம் வாய் வழியாக வந்தால் அது மரணத்திற்கான அறிகுறி. சுவாசம் ஆழமானதாகவும் நீளமானதாகவும் இருக்க வேண்டும் என்று அவர் கூறியுள்ளார். அதற்குச் சிறந்த வழி பிராணாயாமம். அதாவது , "பிராணனைக் கட்டுப்படுத்தி நெறிப்படுத்துதல்" என்று பொருள். மூச்சுக்காற்றின் இயக்கத்தை நெறிப்படுத்தி இயக்குவதன் மூலம் ஆயுளைக் கூட்டியும், குறைத்தும் மாற்றி நிறுத்த முடியும். மூச்சுப்பயிற்சியில் தேர்ந்தவர்களின் முகம் மலர்ந்திருக்கும், மனம் லேசாகும்,கண்களில் ஒளி இருக்கும்
பிராண இயக்கத்தைக் கொண்டே ஆயுள் கணக்கிடப்படுகிறது. ஆனால் ஒவ்வொரு விரற்கடையளவு சுவாசம் அதிகரிக்க அதிகரிக்க ஆயுள் அதற்கேற்ப குறையும் என்பதைக் குறிப்பிட்டுள்ளார்.
ஆறு விரற்கடை அளவு சுவாசம் வெளியேறினால் 80 ஆண்டுகள் வாழலாம்.
ஏழு விரற்கடை அளவு சுவாசம் வெளியேறினால் 62 ஆண்டுகள் வாழலாம்.
எட்டு விரற்கடை அளவு சுவாசம் வெளியேறினால் 50 ஆண்டுகள் வாழலாம்.
ஒன்பது விரற்கடை அளவு சுவாசம் வெளியேறினால் ஆயுட்காலம் முப்பதாகும்.
10 விரற்கடை அளவு சுவாசம் வெளியேறினால் ஆயுட்காலம் 28 ஆண்டுகள் ஆகும்.
15 விரற்கடை அளவு சுவாசம் வெளியேறினால் ஆயுட்காலம் இருபத்தைந்து.
*திருமூலர், கருவின் தோற்றம், வளர்ச்சி, ஆண் பெண் குழந்தைப் பிறப்பு, ஊனத்துடன் குழந்தைப் பிறப்பதற்கான வாய்ப்பு முதலிய செய்திகளையும் திருமந்திரத்தில் கூறியுள்ளார். உதாரணமாக, உறவின் போது ஆணிடம் சுவாசம் வலப்பக்கம் இருக்குமாயின் குழந்தை ஆணாக இருக்கும். ஆணிடம் சுவாசம் இடப்பக்கம் இருக்குமாயின் பெண் குழந்தைப் பிறக்கும். ஆண் பெண் இருவருக்கும் நல்ல முறையில் சுவாசம் ஓடினால் அழகான, அறிவான குழந்தைப் பிறக்கும் இதுபோன்றக் கருத்தை இப்பாடலில் கூறியுள்ளார்.
"குழவியும் ஆணாம் வலத்தது வாகில்
குழவியும் பெண்ணாம் இடத்தது வாகில் "
தாய் வயிற்றில் மலம் மிகுந்தால், குழந்தை மந்தமாகப் பிறக்கும்.
"மாதா உதரம் மலமிகில் மந்தனாம்
மாதா உதரம் சலமிகில் மூங்கையாம்
மாதா உதரம் இரண்டொக்கில் கண்ணில்லை
அவர் கூறும் கருத்தில் எத்தகைய உண்மை உள்ளது என்பதைத் தெரிந்து கொள்ளலாம்.
* மேலும் உடலிலுள்ள வாயுக்களில் ஒன்றான "தனஞ்சயன்" என்னும் வாயுவினால் கால்வாதம், கூன், சிரங்கு முதலான நோய்கள் உருவாகும். "கூர்மன்" என்னும் வாயுவினால் கண்ணில் வீக்கம், பூ விழுதல் போன்ற கண் நோய்கள் வரும் என்றும் கூறியுள்ளார்..
திருமந்திரத்தில் குறிப்பிடாத மருத்துவக் குறிப்புகளே இல்லை. இதை மனதில் நிறுத்தி "திரு மந்திரம்" போன்ற பொக்கிஷ நூல்களைப் போற்றிப் பாதுகாப்பதுடன், நேரம் கிடைக்கும் போது படிக்கலாம்.

Tuesday, April 11, 2017

நகரத்தார் திருமண நடைமுறைகள்...

நகரத்தார் திருமண நடைமுறைகள்...


 திருமணத்திற்கு முதல் நாள்

கூடி ஆக்கி உண்ணுதல்:
திருமணத்திற்கு முதல்நாள் உறவினர்கள் எல்லோரும் கூடி ஆக்கி உண்ணும் நிகழ்ச்சி. நம்மில் பெரும்பாலோர் 'படைப்பு' என்று நம் முன்னோரை வழிபடுகின்ற நாளாக இதனை அமைத்துள்ளனர். அன்றைய தினம் அவரவர் பழக்கப்படி குல தெய்வங்களுக்கு பணம் முடிப்பார்கள்.

திருவிளக்கு ஏற்றுதல்:
அப்பத்தாள் அல்லது அத்தையை அழைத்து நடுவீட்டில் விளக்கு ஏற்றுவது திருவிளக்கு ஏற்றுதல் என்று அழைக்கப்படுகிறது.

கொளுமேளம்:
மேளக்காரர்கள் வந்ததும் சங்கு ஊதி நல்ல காரியத்தை கொளு மேளத்தை வாசிக்கச் செய்யவேண்டும்.

மணை போடுதல்:
பெண் வீட்டில் சுமங்கலிப் பெண்கள் ஊருணியிலிருந்து மணைக்கு மண் அவரவர்கள் ஊர் வழக்கப்படி எடுத்து வருவார்கள். எடுத்து வந்த மண்ணை குழைத்து ஐந்து செங்கற்களின் மேல் வைத்து சங்கு ஊதி அதன் மேல் மணையை எடுத்து வைக்கவேண்டும்.வெளியூர் திருமணமாக இருந்தால் பெண் வீட்டில் மட்டுமே இச்சடங்கு நகழும். உள்ளூராக இருந்தால் இருவீட்டிலும் நடக்கும். பங்காளி மற்றும் உறவினர் வீட்டுப் பெண்கள் வளவுக்குள் திருமண வீட்டிற்கு எதிரே மணை போடுவார்கள். பெண் வீட்டில் இரட்டை மணையும், மாப்பிள்ளை வீட்டில் ஒற்றை மணையும் வைப்பது மரபு.

மாப்பிள்ளைக்கு மிஞ்சி அணிவித்தல்:
திருமணத்திற்கு இரண்டொரு தினங்களுக்கு முன் மணமகன் கால்களில் இரண்டாவது விரல்களில் வெள்ளியினாலான மோதிரம் ஆசாரியை வரச் சொல்லி அணிவிப்பார்கள்.

தும்பு பிடித்தல்:
முதல் நாள் இரவு படைப்பு முடிந்ததும் இருவீட்டாரும் திருமணம் நிகழ்கின்ற நடு (அறையில்) வீட்டில் அன்று காலை குத்துவிளக்கு ஏற்றி வைத்து அந்த அறையின் வெளிச் சுவற்றிலும், உள்வீட்டுச் சுவற்றிலும், கதவிலும் மங்கலத்தைக் குறிக்கும்படி கோலக் கூட்டினால் ஏட்டுக்கயிறு கொண்டு (படத்தில் காட்டியது போன்ற) வடிவத்தில் வரைவார்கள். இதை கணவன் மனைவியோ அல்லது இரண்டு மங்கலப் பெண்டிரோ செய்வது வழக்கம். இதன் வடிவத்தைப் பார்க்கும்போது இறைவனை அந்த நடுவீட்டைக் கோவிலாக எண்ணி எழுந்தருளச் செய்வது போலத் தோன்றும்.

மாற்றுக்கட்டுதல்:
திருமண மேடைக்கு மேலே நீல நிறம் அல்லது பிற நிறங்களில் (கருப்பு நிறம் தவிர) மாத்துச் சேலை இரண்டை சலவைத் தொழிலாளி (தற்பொழுது பங்காளிகள்) திருமணத்திற்கு முதல் நாள் கட்டிவிடுவார்கள். அக்காலத்தில் பல்லி முதலான பூச்சிகளோ, தூசியோ மணமக்கள் மீது விழுந்துவிடாமல் பாதுகாப்பதற்காகவே இப்படி மாற்றுக் கட்டியிருக்கிறார்கள்.


அரசாணிக்கால் கட்டுதல்:
முன்காலத்தில் மன்னர்கள் நேரில் வந்து அவர்கள் முன்னிலையில் திருமணம் நடைபெற்றதாகவும் ஒரே நேரத்தில் பல திருமணங்கள் நடைபெறும் அளவு மக்கள் தொகை பெருகியதும் அரசன் நேரில் வர இயலாத நிலையில் அரசன் ஆணையை முன்னிறுத்தித் திருமணங்கள் நடைபெற்றிருக்கலாம். அதுவே பின்னர் அரசாணிக்காலாக மாறியிருக்கலாம்.பெண் வீட்டில் மணைக்கு எதிரில் கோலமிட்ட இடத்தில் பங்காளிகளைக் கொண்டு அரசாணி மேடையை வைத்து அதிலுள்ள பள்ளத்தில் பாலை ஊற்றி பவளத்தைப் போட வேண்டும். அதன் மேல் மூங்கில் கம்பை ஊன்றி அதனைச் சுற்றிலும் கம்பு தெரியாதவாறு கிளுவை, பாலை இரண்டு குச்சிகளையும் இணைத்து அரச இலை, மாவிலை முதலியவற்றால் சுற்றி கீழிருந்து மேலாக கயிறு கொண்டு கட்டவேண்டும்.இதன் அருகில் உயரம் குறைந்த ஸ்டூலில் சரவிளக்கு வைத்து நல்லெண்ணை தீபமிடவேண்டும். விளக்கை திருமணத்தன்று காலையில் ஏற்றி நிகழ்ச்சிகள் முடியும் வரை எரியவிடவேண்டும்.

முதல்சீர் வைத்தல்:
கல்யாணத்திற்கு முதல்நாள் காலையில் பெண் வீட்டிலிருந்து பெண்கள் மட்டும் மாப்பிள்ளை வீட்டிற்கு, இருவீட்டாரும் பேசிக் கொண்டபடி குடம், செம்பு, விளக்கு ஆகியவற்றுடன் மஞ்சள், உப்பு, புளி, பஞ்சு, விபூதி, பச்சரிசி, பாக்கு ஆகிய சாமான்களுடன் செல்லவேண்டும். இந்நகழ்ச்சி உள்ளூராக இருந்தால் மட்டும் நடைபெறும்.


மறுசீர் வைத்தல்:
திருமணத்திற்கு முதல்நாள் மாலையில் பெண் வீட்டிலிருந்து மறுசீர் வைக்க ஆண்களும், பெண்களும் போகவேண்டும். ஆண்கள் தேங்காய் சட்டி, சரிகை வேஷ்டி, துண்டு, சங்கிலி, மோதிரம், கைக்கெடிகாரம், எலுமிச்சம்பழம், பூச்செண்டு, சீர்வைத்த சாமான் நோட்டு, மாமியார் சாமான், பணம் ஆகியவற்றைக் கொண்டு போகவேண்டும். இந்நிகழ்ச்சி இப்பொழுது கல்யாணத்தன்று காலையில் நடைபெறுகிறது

கழுத்துரு வாங்கச் செல்லுதல்:
வள்ளுவப் பையில் வெற்றிலை பாக்கு, விரலி மஞ்சள், எழுத்தாணி, குலம் வாழும் பிள்ளை, சிவப்புத் துண்டு ஆகியவற்றை வைத்து பங்காளிகள் இருவர் திருமணத்திற்கு முதல் நாள் பெண் வீட்டிற்குச் சென்று கழுத்துஉரு உருப்படிகள் 31-ம் (சில ஊர்களில் 29-ம்), குச்சி, தும்பு, துவாளை உருப்படி ஆக 3ம், பிள்ளைத் தும்பு-1ம் தாலிச் சங்கிலியையும் சிகப்புத் துண்டில் முடிந்து வள்ளுவப் பையில் வைத்து வாங்கிவர வேண்டும்.

திருமணத்தன்று பெண் வீட்டில் நடைபெறும் நிகழ்ச்சிகள்

பூரம் கழித்தல்:
மணமகளின் கன்னித் தன்மையை நீக்கி அவளை இல்லறத்திற்கு உரியவளாக மந்திரப் பூர்வமாக ஆக்குதலே இதன் நோக்கம். திருமணத்தன்று அதிகாலையில் மணமகளை நீராடச் செய்து, ஒரு சரமாலை மட்டும் கழுத்தில் அணிவித்து மணமேடைக்குப் பக்கத்தில் தடுக்கில் நிற்கச் செய்து மணமகளின் அம்மான் மனைவி அல்லது அத்தையோ அல்லது தாயோ பூரம் கழிப்பார்கள்.மணமகளின் உடலில் ஏழு இடங்களில் அதாவது தலையிலும், தோள்பட்டைகள் இரண்டிலும், இடுப்பில் இரண்டு பக்கங்களிலும், இரண்டு பாதங்களிலும் வேப்பிலையை வைத்து இரும்பு சத்தகத்தினால் அல்லது மரக் குச்சியினால் தட்டி விடுவார்கள். சில வட்டகைகளில் புரோகிதர் விநாயகர் பூஜை, வருண கும்ப பூஜை செய்து பூரம் கழிப்பார்கள். இதன் பிறகு மீண்டும் மணமகள் ஒரு முறை நீராடவேண்டும்.

மாப்பிள்ளை வீட்டிலிருந்து புறப்படுதல்:
மணமகன் தன் வீட்டிலிருந்து புறப்படும்போது, மணமகனுக்கு அப்பத்தாள் மணமகனை நடுப்பத்தியில் கோலத்திற்கு முன் நிறுத்தி அழகு ஆலத்தி எடுப்பார்கள். அழகு ஆலத்தியில் மூன்று ஆலத்திகள் இருக்கும். சதுர வடிவில் 4 திரிகளும், கூம்பு போன்ற இரு ஆலத்திகளிலும் ஒவ்வொரு திரியும் இருக்கும். மணமகனுக்கு முன்பு ஸ்லேட் விளக்கு  , அரிக்கேன் விளக்கு வைத்து ஆலத்தி எடுத்து விபூதி பூசி வழியனுப்பி வைப்பார்கள். அப்பத்தாள் இல்லையென்றால் மணமகனுக்கு அத்தை அல்லது வீட்டிற்குப் பெரிய பெண்டிர்கள் செய்வார்கள்.உள்ளூர் திருமணமாக இருந்தால் மாப்பிள்ளை திருமணத்தன்று காலையில் பங்காளிகள் உறவினர்களுடன் பிள்ளையார் கோவிலுக்குச் சென்று அர்ச்சனை செய்து சாமி கும்பிடுதல் மரபு. வெளியூர்த் திருமணமாக இருந்தால் மாப்பிள்ளை அழைப்பு நிகழும் கோவிலிலேயே இந்த அர்ச்சனை வழிபாடுகள் நிகழும்.மாப்பிள்ளையின் தகப்பனார் அல்லது வீட்டிற்கு பெரியவர்கள் தேங்காய் சட்டியுடனும், திருப்பூட்டுத் தாம்பளத்துடனும், தாயார் சடங்குத் தட்டுடனும், சகோதரி பால் பானையுடனும், சங்கு ஊதி, வள்ளுவப்பையுடன் மாப்பிள்ளையை அழைத்துச் சென்று மாமக்காரர், தாயார், சகோதரியுடன் புறப்பட்டுச் செல்லவேண்டும்.

கழுத்து உருவிற்குப் பொன் கொடுத்தல்:
கழுத்துரு என்பது மணமகள் வீட்டார் செய்யவேண்டிய அணிகலன்களில் ஒன்று. ஆயினும் மணமகன் வீட்டாருடைய தாலிதான் அணிவிக்கப்பட வேண்டும் என்ற பழக்கத்தின் காரணமாக அவர்களுடைய பொன்னும் இந்த பெரிய தாலியில் சேர்ந்திருக்கவேண்டும் என்ற எண்ணத்தில் ஒரு குறிப்பிட்ட நல்ல நாளில் மணமகன் வீட்டார் பங்காளிகளையும், சொந்தக்காரர்களையும் அழைத்துக் கொண்டு, பொன், சந்தனம், குங்குமம், பூ, வெத்திலை, பாக்கு, தேங்காய் முதலியவைகளைக் கொண்டு வருவார்கள். மணமகள் வீட்டில் அவர்களுடைய பங்காளிகள், உறவினர்கள், நண்பர்கள் முன்னிலையில் பொற்கொல்லர் ஒருவர் வந்து அவர்கள் தருகின்ற பொன்னை வாங்கித் தட்டிக் கொடுப்பார். இந்த கழுத்து உரு செய்வதற்கு நீண்ட நாட்கள் ஆகும் என்பதால் முன்கூட்டியே தங்கம் சேர்ப்பதற்கு இடம் வைத்து செய்து விடுவதால் திருமணத்தன்று காலை இந்நகழ்ச்சியை நடத்தி மணமகன் வீட்டார் தரும் தங்கத்தை கழுத்திருவில் சேர்த்து விடுகிறார்கள்.

மாப்பிள்ளை அழைப்பு:
திருமணத்தன்று காலையில் மாப்பிள்ளை வீட்டார்கள், ஊர்ப் பொது இடத்தில் (கோவிலில்) வந்து இருப்பார்கள். மணமகள் வீட்டார் ஒரு பெரிய தட்டில் மணமகனுக்கு ஜரிகை வேஷ்டி, துண்டு, மாலை, சங்கிலி, கெடிகாரம், மோதிரம் முதலியவைகளை எடுத்துக் கொண்டு மணமகன் தங்கியிருக்கும் இடத்திற்கு மேளவாத்தியம், சங்கு முதலியன ஒலிக்க மணமகள் வீட்டு உறவினர்கள் ஊர்வலமாக வந்து அவற்றை அணிவித்து அழைத்துச் செல்வார்கள். மணமகனின் தந்தை ஒரு சட்டியில் பாக்கு, மஞ்சள் இரு தேங்காய்களை வைத்து எடுத்துக் கொண்டு வருவார்.

பெண்ணெடுக்கிக் காட்டுதல்:
மாப்பிள்ளை, பெண்வீட்டிற்குள் நுழையும்போது பெண்ணைப் பெண்ணின் அத்தை அழைத்துவந்து மாப்பிள்ளைக்குக் காட்டுதல் இச்சடங்கு ஆகும்.

விளக்கு வைப்பது:
மாப்பிள்ளையை அழைத்து பெண் வீட்டிற்குள் கூட்டி வரும்போது நடுப்பத்திக் கோலத்தின் முன் நிற்க வைத்து பெண்ணின் அப்பத்தாள் அல்லது அத்தை வந்து ஆரத்தி எடுத்து விபூதி பூசி, மாப்பிள்ளையை நடுவாசலில் கிழக்கு முகமாக உட்கார வைப்பார்கள்.

பகவத்யானமும் காப்புத் கட்டுதலும்:
திருமண வாழ்வு சிறக்க இறைவனை எண்ணி வழிபடுதலே பகவத்யானம். மணமகனுக்கு முதலிலும் மணமகளுக்குப் பிறகும் தனித்தனியே புரோகிதர் ஒருவர் சங்கல்பம் செய்துவைத்து கணபதி பூஜை செய்வார். பிறகு தாய் மாமன், மணிக்கட்டில் ஒரு சிறு வெள்ளி நாணயத்தை (தற்போது 50 காசு) சிகப்புத் துணியில் முடிந்து நுனி உடையாத விரலி மஞ்சளையும் சேர்த்துக் கட்டிவிடச் செய்வார்.திருப்பூட்டுதலுக்கு ஆசீர்வாதம் வாங்குதல்:இருவருக்கும் காப்புக்கட்டி முடிந்ததும் மணமகன் வீட்டிலிருந்து கொண்டுவந்த தாம்பளத்தில் உள்ள திருமாங்கல்யத்திற்கு (கழுத்துரு) இலட்சுமி பூஜை செய்து மணமகளுடைய தாய்மாமனும் அவர்தம் மனைவியும் வீட்டுப் பெரியவர்களிடம் காட்டி வாழ்த்துப் பெற்று நடுவீட்டில் கொண்டுபோய் வைத்துவிடுவார்கள். மணமக்கள் இருவருக்கும் பகவத்யானமும், காப்புக்கட்டுதல் நடைபெறும்பொழுது அவரவர்கள் வீட்டுப் பெரியவர்கள், சுற்றத்தார்கள் அவர்களைப் பூமணம் இட்டு வாழ்த்துவார்கள்.

பூமணம் இடுதல்:
பகவணம் செய்யும்போது மலர்களை பசும்பாலில் நனைத்து மணமக்கள் உடலில் மணிக்கட்டு, முழங்கை, தோள்பட்டை ஆகிய மூன்று இடங்களிலும் தொட்டு வாழ்த்துதலே பூமணமாகும். இதை மூன்று முறை செய்யவேண்டும். முதலில் மாமக்காரர்தான் செய்யவேண்டும். அதேபோல் மாமக்காரர்தான் முடித்து வைக்கவேண்டும். மணவறையிலும் பூமணம் இடவேண்டும்.

அரிமணம் இடுதல்:
முளைப்பாலிகை கிண்ணங்கள் ஐந்திலிருந்தும் முளைவிட்ட தானியங்களைக் கொஞ்சம் கொஞ்சம் எடுத்துப்போட்டு வாழ்த்துதல் அரிமணமாகும். பகவணத்தின் போது மணமக்கள் இருவருக்கும் அரிமண இடுதல் நடைபெறும். பின்னர் மணவறையின் போதும் தம்பதிகளுக்கு எல்லோரும் அரிமணம் இடுவார்கள்.

திருப்பூட்டுதல்:
மணமகளுக்கு, மணமகனின் வீட்டார் கொண்டுவந்த ஆடைகளை அணிவித்து நன்கு அலங்கரித்து மணமேடை மீது கிழக்கு முகமாக நிற்கச் செய்வார்கள். பின்னர் மணமகனை அழைத்து மணமகளுக்கு எதிரே நிற்கச் செய்வர். மணமகளின் கைகள் இரண்டையும் ஏந்தச் செய்து அதில் பச்சரிசி, தேங்காய் முதலியவற்றைக் கொடுப்பார்கள். தேங்காயின் குடுமிப்பகுதி மணமகனை நோக்கி இருக்கவேண்டும். மணமகன் கோவிலில் இருந்து வந்துள்ள திருநீற்றை, தான் பூசிக் கொண்டு, மணமகள் நெற்றியிலும் பூசவேண்டும். பிறகு கோவில் மாலையை மணமகள் கழுத்தில் அணிவிக்க வேண்டும். பின்பு பெரியவர் ஒருவர் துணையுடன் அவர் எடுத்துத் தருகின்ற கழுத்துருவை வாங்கி மேல்பாகத்தில் திருமாங்கல்யம் உள்ள பகுதி வருமாறு பெண்ணுக்கு அணிவித்துக் கழுத்தின் பின்புறம் மூன்று முடிச்சு போடவேண்டும். முதல் இரண்டு முடிச்சுக்களை மாப்பிள்ளையும் மூன்றாவது முடிச்சை நாத்தனாரும் போடுவது மரபு. பிறகு தாலியை அணிவிக்க வேண்டும். அதன் பின்னர் திருமாங்கல்யத்திலும் மூன்று முடிச்சுகளின் மீதும் சிறுதாலியிலும் மஞ்சள் தொட்டு வைத்து குங்குமம் இடவேண்டும்.மணமகள் கையில் உள்ள பச்சரிசி, தேங்காய் முதலியவற்றை தாம்பாளத்தில் வைத்துவிட்டு, மணமக்கள் இருவரும் மூன்று முறை மாலை மாற்றிக் கொள்ளவேண்டும். மணமகன்தான் முதலில் மாலையிட வேண்டும். பிறகு தம்பதிகள் ஒருவருக்கொருவர் இனிப்பை பரிமாறிக் கொள்வது இன்றைய வழக்கம்.திருப்பூட்டி முடிந்ததும், மணமக்கள் மாமக்காரருடன் வளவு, முகப்பிலுள்ளவர்களிடம் போய் வணங்கி ஆசீர்வாதம் பெறவேண்டும்.திருப்பூட்டுதலின் போதும், மாலைமாற்றும் போதும் கெட்டிமேளம் வாசிக்கச் சொல்லவேண்டும். பிறகு அனைவருக்கும் ரொட்டி, மிட்டாய், சர்பத் கொடுக்கவேண்டும்.

திருப்பூட்டும் முறைகள்:
நகரத்தார் திருமணங்களில் திருப்பூட்டுதல் மூன்று விதமாக நிடைபெறுகிறது. மேலவட்டகை எனப்பெறும் வலையபட்டி, மேலைச்சிவல்புரி, குழிபிறை ஆகிய பகுதிகளில் மாப்பிள்ளை மணையில் நிற்க, பெண் கீழே நிற்க திருப்பூட்டப்படுகிறது. கீழ்வட்டகை எனப்பெறும் காரைக்குடி, தேவகோட்டை, பள்ளத்தூர் ஆகிய பகுதிகளில் பெண் மணைமீது நிற்க, மாப்பிள்ளை கீழே நிற்க திருப்பூட்டப்படுகிறது. தெற்கு வட்டகை எனப் பெறும் நாட்டரசன் கோட்டை, ஒக்கூர், அலவாக்கோட்டை ஆகிய பகுதிகளில் அறைக்குள் மாப்பிள்ளையும் பெண்ணும் சரிசமமாக நின்று திருப்பூட்டுதல் நடைபெறுகிறது.

இசைவு பிடிமானம் எழுதுதல்:
இசைவு பிடிமான புத்தகங்கள் அச்சிடப்பட்டு கிடைக்கின்றன. அதில் தனித் தனியே இருதரப்பாரும் அவரவர்கள் கோவில் பிரிவுகள் விவரத்தினைப் பங்காளியைக் கொண்டு எழுதி மணமக்களின் தந்தைமார்கள் இருவரும் நடுவீட்டில் அமர்ந்து கையெழுத்துச் செய்து, மாப்பிள்ளை வீட்டார் எழுதியது பெண் வீட்டிலும் பெண் வீட்டார் எழுதியது மாப்பிள்ளை வீட்டிலும் இருக்கும்படியாக மாற்றிப் பெற்றுக் கொண்டு, வைத்துக் கொள்ள வேண்டியது. இதில் எழுதிய பங்காளிகளும் கையொப்பம் இடவேண்டும் 

திருப்பூட்டுச் சடங்கு:
மணமகனின் தாயார் அல்லது சகோதரி அல்லது இருவரும் செய்கின்ற சடங்கு இது.ஒரு சடங்குத் தட்டில் ஏழு கிண்ணங்கள் இருக்கும். அவற்றில் பிள்ளையார், வெத்திலைபாக்கு ஒன்றிலும், மற்றவை ஒவ்வொன்றிலும் மஞ்சள், விபூதி, பச்சரிசி, உப்பு, புளி, பஞ்சு முதலியனவும் வைத்திருப்பார்கள். ஒரு படியில் நிறைய நெல் வைத்து அதன்மேல் கத்தரிக்காய் ஒன்று வைத்திருப் பார்கள் (இதனை 'நிறை நாழி' என்பர்) ஒரு கெண்டிச் செம்பில் (மூக்கு வைத்த செம்பு) தண்ணீர் வைத்திருப்பார்கள். இவைகளை மணையின் மீது கிழக்கு முகமாக நிற்க வைத்து, கீழே தடுக்கு போட்டு அதில் சடங்கு செய்கிறவர்கள் நின்று கொள்வார்கள். முதலில் சடங்கு தட்டில் உள்ள விபூதியை வலது கரத்தால் எடுத்து சடங்கு செய்கிறவர்கள் தான் பூசிக் கொண்டு, பிறகு பெண்ணுக்கும் பூச வேண்டும். இந்த ஏழுகிண்ணங்கள் ஒவ்வொன்றையும் மூன்று மூன்று முறை தொட்டு விபூதியைத் தானும் கழுத்தில் பூசிக் கொண்டு பெண்ணுக்கும் கழுத்தில் பூசவேண்டும். இவ்வாறு இருபத்தியொரு முறை பூசியதும் வலது கரத்தில் கெண்டிச் செம்பை எடுத்துக் கொண்டு மணமகள் கையில் ஒரு வெற்றிலையைக் கொடுத்து முதலில் நிறை நாழியை சடங்கு செய்பவர் இடது கையால் பிடித்துக் கொண்டு வலது கையினால் கெண்டிச் செம்புத் தண்ணீரை மணமகள் கையில் உள்ள வெற்றிலையில் ஊற்றுவார். மணமகள் அந்த நீரைப் பாதங்களில் வடித்துவிட்டு இரு கைகளினாலும் வெற்றிலையை நெற்றியில் வைத்து வணங்குவாள். இச்சடங்கு மூன்று முறை நிகழும். இது போலச் சிலேட்டு விளக்கு, பிள்ளைக் குழவி முதலியவற்றை வைத்துக் கொண்டு சடங்கு செய்வர். சடங்குகள் முடிந்ததும் சிலேட்டு விளக்கை நேராக வீட்டுக்குள் வைக்கவேண்டும். மற்ற பொருள்களை மணமகளின் பின்புறமாகச் சுற்றி இடவலமாகக் கொடுத்து வீட்டுக்குள் வைக்கவேண்டும்.

மணவறைச் சடங்கு:
புரோகிதர் இச்சடங்கை நடத்தி வைப்பார். விநாயகர் பூசை, வர்ணகும்ப பூசை, அக்கினி வளர்த்து நவக்கிரக ஓமம், ஆயுள் ஓமம், தீவலம் வருதல், அரிமணம் இடுதல், பூமணம் இடுதல் ஆகியவை நிகழும். இத்தகைய நிகழ்ச்சிகள் எல்லாம் மாமக்காரர்கள் முதலில் செய்த பிறகே மற்றவர்கள் செய்ய வேண்டும். பிறகு மணமகளின் உடன் பிறந்தவரில் ஒருவர் மணமகனுக்கும், மணமகனின் உடன் பிறந்தவர்களில் ஒருவர் மணமகளுக்கும் திரட்டுப்பால் தடவுவார்கள்.வாழ்க்கை வளமுடன் இனிமை பொருந்தியதாக அமையட்டும் என்பதற்கு அறிகுறியாக திரட்டுப்பாலுக்குப் பதிலாக வாழைப்பழத்தை தின்பதற்குக் கொடுக்கின்ற நிகழ்ச்சிதான் இது. காலப்போக்கில் வாழைப்பழத்தை மணமக்களின் வாயில் தடவி, வேடிக்கையாகச் சிரித்து மகிழ்கின்ற நிகழ்ச்சியாக மாறியிருக்கிறது.பிறகு மாப்பிள்ளை தலையில் எண்ணெய் சீயக்காய், தண்ணீர் முதலிய வற்றைப் பெண்ணும், பெண்ணின் தலையில் மாப்பிள்ளையும் மாவிலையால் தொட்டு வைப்பார்கள்.அதன் பிறகு மாப்பிள்ளையின் எதிரில், ஒரு முக்காலி வைத்து அதன் மீது ஒரு சட்டியை வைத்து அதில் சோறு, பருப்பு, நெய், வாழைப்பழம் முதலிய வற்றைப் பரிமாறிய பின் மாப்பிள்ளை அதைச் சுவைத்துப் பார்க்க வேண்டும். பிறகு மாப்பிள்ளை கை அலம்புவதற்கு பெண் நீர் ஊற்ற வேண்டும்.பிறகு மாமக்காரர்கள் இருவரும் மணமக்கள் தலைகளில் கொண்டை மாலைகளை மூன்று முறை மாற்றி மாற்றி வைப்பார்கள். பின்னர் பெண்ணின் தந்தை தலைச் சீலையில் பணம் முடிதல் வேண்டும்.மணமக்கள் முன் இருக்கின்ற முக்காலி மீது உள்ள சட்டியில் அரிசி, மஞ்சள், தேங்காய் இவைகளை வைத்து ஒரு பட்டுத்துணியால் (மாமப்பட்டு) இரு மாமக்காரர்களும் மூடினாற்போலப் பிடித்திருக்க, மணமக்கள் இருவரும் அதை எடுத்து மூன்று முறை மாற்றிக் கொள்ள வேண்டும்.பட்டுத் துண்டு போர்த்திய நிலையிலேயே மணமக்கள் இருவரும் எழுந்து அரசாணைக்காலையும் அக்னியையும் சுற்றி வலம் வந்து, நடு வீட்டில் சென்று அமர வேண்டும். மாமக்காரர் அந்தப் பட்டுத் துணியை விலக்கிய பிறகு அந்தப் பொருள்களை அங்கு வைத்துவிட்டு எழுந்து வெளியே வரவேண்டும்.

தலைச்சீலையில் முடிதல்:
மணமகளின் தந்தை தன் மகளை மணமகன் வீட்டிற்கு அழைத்துச் செல்லும்போது வழிச் செலவுகளுக்கு கொடுக்கின்ற முதல் பணப் பரிசுதான் 'தலைச்சீலையில் முடிதல்' என்பதாகும். மணமகளின் தந்தை ஒரு சிறு தொகையை மணமகனின் தலையில் வைப்பார். அதனை எடுத்து மாமக்காரர் மணமகன் தந்தையிடம் கொடுத்துவிடுவார். பின்னர் இந்தத் தொகை மணமகளுக்கு கொடுக்கின்ற ஸ்ரீதனப் பணத்துடன் சேர்த்துக் கொள்ளப்படும்.

வேவு எடுத்தல்:
தலைப்பிள்ளைக்கு மட்டும் முதலில் மாம வேவு எடுத்தல் வேண்டும். அதற்கு பெண் வீட்டார் தயாரித்துள்ள பச்சரிசி, இலைக்கட்டு, பரங்கிக்காய், வாழைப்பழம், கற்கண்டு, மஞ்சள், பழங்கள் முதலியவற்றைப் பணியாட்கள் தலைமேல் வைத்து பெண்ணுக்கு ஆயாள் வீட்டுப் பங்காளிகள் எல்லோரும் மேள தாளத்துடன் கொண்டு வருவார்கள். பெண் வீட்டு முகப்புப் பத்தியில் கோலத்திற்கு முன்பாக அவர்களை நிற்கச் செய்து, பெண்ணின் அப்பத்தாள் குத்து விளக்கு வைத்து பின் தாய் மாமன் வீட்டு ஆண்கள் தலையில் புழுங்கலரிசி படி 2, தேங்காய் 2, கத்திரிக்காய் 2 கொண்ட வேவுக்கடகத்தைத் தலையில் வைத்துக் கொள்ள, முதலில் பெண்ணும், பிறகு அவள் குடும்பத்தைச் சேர்ந்த பெண்களும் ஒவ்வொருவராக வந்து 5, 7, 9 என்ற ஒற்றைப் படை எண்ணிக்கையில் இறக்கி நடு வீட்டில் கொண்டு போய் வைத்து விடவேண்டும்.மாப்பிள்ளை தலைப் பிள்ளையாக இருந்தால் மாப்பிள்ளையின் ஆயாள் வீட்டாரும் இந்த வேவு எடுத்தல் வேண்டும். ஆயாள் வீட்டு ஆண்கள் தலையிலிருந்து மாப்பிள்ளை வீட்டுப் பெண்கள் இறக்கவேண்டும்.பிறகு பெண் வீட்டார் 'கல்யாண வேவு' எடுத்தல் வேண்டும். கல்யாண வேவின் போது பெண் வீட்டு ஆண்களான பெண்ணின் தந்தை, பெண்ணின் பெரியப்பா, சித்தப்பா, பெண்ணின் அண்ணன், தம்பிகள், பெண்ணின் அண்ணன் தம்பி மகன்கள், பெண்ணின் அய்யாக்கள், வீட்டுப் பங்காளிகள், கூடிக்கிற பங்காளிகள், பெரும் பங்காளிகள் ஆகியோர் தலையில் வேவு கடகத்தை வைத்துக் கொள்ள மாப்பிள்ளை வீட்டுப் பெண்களான கல்யாணப் பெண், மாப்பிள்ளையின் தாயார், மாப்பிள்ளையின் ஆச்சி, தங்கைமார், மாப்பிள்ளையின் ஆச்சி தங்கச்சி மக்கள், மாப்பிள்ளையின் பெரியப்பச்சி, சித்தப்பார் மகள்கள் இறக்கி இருவருமாக நடு வீட்டிற்குள் கொண்டு போய் வைத்தல் வேண்டும்.மாப்பிள்ளை தலைப் பிள்ளையாக இருந்தால் மாப்பிள்ளையின் ஆயாள் வீட்டாரும் இந்த வேவு எடுத்தல் வேண்டும். ஆயாள் வீட்டு ஆண்கள் தலையிலிருந்து மாப்பிள்ளை வீட்டுப் பெண்கள் இறக்கவேண்டும்.பிறகு பெண் வீட்டார் 'கல்யாண வேவு' எடுத்தல் வேண்டும். கல்யாண வேவின் போது பெண் வீட்டு ஆண்களான பெண்ணின் தந்தை, பெண்ணின் பெரியப்பா, சித்தப்பா, பெண்ணின் அண்ணன், தம்பிகள், பெண்ணின் அண்ணன் தம்பி மகன்கள், பெண்ணின் அய்யாக்கள், வீட்டுப் பங்காளிகள், கூடிக்கிற பங்காளிகள், பெரும் பங்காளிகள் ஆகியோர் தலையில் வேவு கடகத்தை வைத்துக் கொள்ள மாப்பிள்ளை வீட்டுப் பெண்களான கல்யாணப் பெண், மாப்பிள்ளையின் தாயார், மாப்பிள்ளையின் ஆச்சி, தங்கைமார், மாப்பிள்ளையின் ஆச்சி தங்கச்சி மக்கள், மாப்பிள்ளையின் பெரியப்பச்சி, சித்தப்பார் மகள்கள் இறக்கி இருவருமாக நடு வீட்டிற்குள் கொண்டு போய் வைத்தல் வேண்டும்.


கும்பிட்டுக் கட்டிக் கொள்ளுதல்:
மணவறை முடிந்து நெற்கோட்டை தாண்டி வீட்டிற்குள் சென்று வந்ததும், நடுவாசலில் மணமக்கள் வந்து, ஆளுக்கொரு நாற்காலியில் அமரவேண்டும். மாப்பிள்ளை, பெண் இரு வீட்டுப் பெற்றவர்களும், பெரியோர்களும் ஒவ்வொருவராக அவர்கள் முன்வந்து நின்றவுடன் மாப்பிள்ளை, பெண் இருவரும் கீழே விழுந்து வணங்கி வாழ்த்துப் பெறுதலே இந்நிகழ்ச்சி.

சீராட்டுக் கொடுத்தல்:
மணமகளுக்கு அவர் தகப்பனாரும் அவருடைய சகோதரர்களும் தருகின்ற பணம்தான் சீராட்டு. மணமகனை மணையில் உட்காரச் செய்து வள்ளுவப்பையில் (பாக்கு, மஞ்சள், எழுத்தாணி முதலியன வள்ளுவப் பையில் இருக்கும்) ஒவ்வொரு பெயராக படிக்க, மணமகளின் தந்தை ஒவ்வொரு பெயருக்கும் ஒவ்வொரு பிடிபாக்கு போடுவார்கள். இப்படி பிடிபாக்கு வள்ளுவப்பையில் போட்டதும் அதை கட்டி முடிந்து, தாம்பாளத்தில் வைத்துப் பெரியவர்களிடம் கொடுத்து, மணமகன் திரும்ப பெற்றுக் கொள்வார். கடைசியாக மணமகனை விட இளையவர் ஒருவர் மணமகனை வணங்க இருவரும் அதை கொண்டுபோய் நடுவீட்டில் வைத்துவிட்டு வருவார்கள். கடைசியாக கணக்குப் பார்த்து சீராட்டுப்பணம் ஸ்ரீதனத்துடன் சேர்த்துக்கொள்ளப்படும்.

மஞ்சள் நீராடுதல்:
மணமக்கள் இருவரும் நல்ல உடைகளைக் களைந்து விட்டு வேறு சாதாரண உடைகள் அணிந்து கொண்டு நடு வாசலில் ஒரு பெஞ்சின் மீது அமர வேண்டும். உள்ளூர் கோயில் வயிராவி மாப்பிள்ளைக்கு எண்ணை தொட்டு வைப்பார். பிறகு வயிராவி, கரைத்து வைத்திருக்கும் மஞ்சள் நீரை மாப்பிள்ளை, பெண்ணின் பாதங்களில் ஊற்றுவார். அப்போது மணமக்கள் தந்தையார் இருவரும் தங்களது ஆடை நுனிகளை மஞ்சள் நீரில் நனைத்துக் கொள்ளல் வேண்டும். இதுபோல் தாயார் இருவரும் மஞ்சள் நீரில் சேலை நுனிகளை நனைத்துக் கொள்ளல் வேண்டும். பிறகு மணமக்கள் நாணாளைக்குரிய புதிய ஆடைகளை அணிந்து கொள்ளவேண்டும். அதன் பிறகு மணமகள் வீட்டுப் பெரியவர்கள் நீராலாத்தி எடுப்பார்கள்.

நீராலாத்தி:
ஒரு சிறிய தாம்பாளத்தில் கொஞ்சம் தண்ணீர்விட்டு அதில் மஞ்சள் தூளையும், சுண்ணாம்பையும் கலந்து வெத்திலையை கிள்ளிப்போட்டிருப்பார்கள். இது செந்தூர் நிறத்தில் இருக்கும். இதுவே நீராலாத்தியாகும்.

காப்புக் கழற்றிக் கால் மோதிரம் அணிதல் (நாணாளைச் சடங்கு):
பெண்ணை மணை மேல் நிற்க வைத்து மாப்பிள்ளையின் தாயார் பெண்ணுக்குத் தன் கையில் அணிந்துள்ள காப்பைக் கழற்றி அணிவித்து, பெண்ணின் (இரண்டாவது) கால் விரல்களின் மிஞ்சி (கால் மோதிரம்) அணிவிக்கவேண்டும். பிறகு திருப்பூட்டிய பிறகு செய்து கொள்ளும் சடங்கைப் போல் மாப்பிள்ளையின் தாயார் சடங்கு செய்து கொள்ள வேண்டும்.

 காப்பு அவிழ்த்தல்:
மாப்பிள்ளை பெண் இருவருக்கும் அவரவர் மாமக்காரர்கள், இருவர்கையிலுள்ள ஐயரால் முடியப்பட்ட
 காப்பு இரண்டையும், தனித் தனியாகஅந்தந்த மாமக்காரர் அவிழ்த்து ஒரு தாம்பாளத்தில் 
வைத்துவிடவேண்டும்.

பிள்ளை எடுக்கிக் கொடுத்தல்:
சடங்குக் குழவியை சிகப்புத் துணியில் வைத்து அதைக் குழந்தையாகவேகருதி பெண்ணின் தந்தை 
எடுக்கிக் கொடுக்க, பெண் நமஸ்காரம் செய்துவாங்கிக் கொள்வதுதான் இச்சடங்கு. இதுபோல் பெண் வீட்டு 
ஆண்களில்முக்கியமானவர்கள் எல்லோரும் பிள்ளை எடுக்கிக் கொடுத்துஆசீர்வாதம் செய்யவேண்டும்.

அரசாணிக்குப் பொங்கல் இடுதல்:
பெண்ணின் அம்மான் மனைவி அரசாணிக்காலுக்கு முன் பொங்கல் இட்டுஇறக்கவேண்டியது. 
பிறகு அதை வண்ணாத்தியிடம் கொடுக்க வேண்டும்.

பெண் சொல்லிக் கொள்வது:
பெண் தாய் வீட்டிலிருந்து கணவன் வீட்டுக்குச் செல்ல இருப்பதால் தன்தாயிடமும் தாயதிகளிடமும்
 சொல்லிக் கொள்ள வேண்டும். பெண் நடுவீட்டுக்குப் பக்கத்தில் உள்ள பத்தியில் விரித்திருக்கும் பாய்
 ஒன்றில்கிழக்கு முகமாக கையில் வெற்றிலை பாக்குத் தாம்பாளத்துடன் நிற்கவேண்டும். 
பெண்ணின் பெற்றோர், உறவினர், பங்காளிகள்ஒவ்வொருவராக அந்தப் பாயின் மீதுஎதிரில் நிற்க, அவர்களிடம்வெற்றிலை
 பாக்குத் தாம்பாளத்தைக் கொடுத்து, அவர்கள் காலில்விழுந்துவணங்கி, சென்று வருகிறேன் என்று 
சொல்லி வாங்கிக் கொள்ளவேண்டும்.

குடி அழைப்பு:
பெண் சொல்லிக் கொண்டதும் மணமக்கள் இருவரும் நடு வீட்டில்உட்கார்ந்து இருந்து எழுந்து வந்து
 முகப்பு நடுப் பத்தியில் கோலத்திற்குமுன் வந்து நிற்பார்கள். பெண்ணுக்கு ஆயாள் வந்து சிலேட் விளக்குவைத்து, 
அழகு ஆரத்தி எடுத்து, விபூதி பூசி கட்டுச் சோறுடன் வழியனுப்பிவைப்பார்கள். மாப்பிள்ளைக்கு வலது பக்கம் நிற்கும்படியாக 
பெண்அழைத்துச் செல்ல வேண்டியது. இது சமயம் பெண்ணின் தாயார் பால்பானையை கையில் கொண்டு வரவேண்டும்.
மாப்பிள்ளையின் ஊருக்குச் செல்லும் வழியில் ஒரு ஊரணிக் கரையில்இறங்கி, கட்டுச் சோறு சாப்பிட்டு விட்டு மாப்பிள்ளை 
வீட்டுப் பங்காளிஒருவரது வீட்டில் தங்கி இருக்கவேண்டும். தற்பொழுது மாப்பிள்ளையின்ஊரில் கோவிலிலோ அல்லது பொது இடத்திலோ
 இருக்கிறார்கள்.

அரசாணிக்கால் அவிழ்த்தல்:
பெண்ணின் அம்மான் மனைவி அரசாணிக் காலுக்கு முன் பொங்கல்இட்டு இறக்கியதும், பெண் வீட்டுப் பங்காளிகள் 
அல்லது பெண்ணின்சகோதரர்களே சர விளக்கை மலை ஏற்றிவிட்டு சரவிளக்கை எடுத்துவைத்துவிட்டு அரசாணிக் காலில்
 உள்ள அரச இலை, மா இலை,கிளுவைக் கம்பு உள்பட யாவற்றையும் அவிழ்த்து விடவேண்டியது. பின்பங்காளி வீட்டுப் பையன்களில்
 ஒருவரை அழைத்து முளைப்பாரியைசர்வச் சட்டியில் வைத்து சிகப்புத் தோம்புத் துணி கொண்டு மூடி,ஊரணியில் அல்லது கிணற்றில் சங்கு
 ஊதிக் கொண்டுபோய்விட்டுவரவேண்டியது. கிளுவை பாலைக் கம்புகளை வீட்டுத்தோட்டத்தில் ஊன்றி வைக்கவேண்டியது.

திருமணத்தன்று மாப்பிள்ளை வீட்டில் நடைபெறும்நிகழ்ச்சிகள்
மாப்பிள்ளை வீட்டில் பெண்ணழைப்பு:
பெண் வீட்டிலிருந்து திருமணம் முடிந்து விடைபெற்று வந்த மாப்பிள்ளை வீட்டுப் பெண்கள், மாப்பிள்ளை வீட்டு வளவு வாசலில் கோலமிட்டு பெண்ணழைத்த பொங்கல் இட்டு, அடுப்பை அகற்றிவிடலாம். பெண்ணை அழைத்து வரும் சமயம் மூன்று இலையில் சாதம் படைத்து, ஒரு இலைக்கு 4 வாழைப்பழம், பருப்பு, நெய் ஊற்றிப் படையல் செய்து படைத்த இலைகளுக்கு முன் மூன்று தவலைகளில் தண்ணீர் வைத்து ஒன்றில் குலம் வாழும் பிள்ளையும், மற்றொன்றில் எழுத்தாணியையும் போட வேண்டும். பெண் மாப்பிள்ளை இருவரும் திருமணம் முடிந்துவந்து தங்கி இருக்கும் இடத்திலிருந்து, எல்லோரும் மேள வாத்தியங்களுடன் மணமக்களை ஊர்வலமாக மாப்பிள்ளை வீட்டுக்கு அழைத்து வரவேண்டும். வீட்டிற்குள் நுழையும் பொழுது முதலில் வலது காலை எடுத்து வைத்து நுழையும்படி முன்னதாகவே சொல்லி வைத்து அதன்படி மணமக்கள் செய்தல்வேண்டும்.பெண்ணும், மாப்பிள்ளையும் வீட்டிற்கு வந்ததும் முகப்பு நடுப்பத்தியில் கோலத்துக்கு முன்பாக நிறுத்தி, மாப்பிள்ளையின் அப்பத்தாள் அழகு ஆரத்தியும், பிள்ளையார் ஆரத்தியும் எடுத்து, விபூதி பூசி உள்ளே வந்ததும் படைத்த இலைக்கு முன்பாக கிழக்கு முகமாக நிற்கும்படி இரு தடுக்கைப் போட்டு ஒன்றில் சடங்கு செய்து கொள்பவர்களும், மற்றொன்றில் பெண்ணும் நிற்க வேண்டும்.