Monday, February 27, 2017

மந்திரங்கள் ...!



ஏழு முடிவுகளை உடைய மந்திரங்கள் ...!
அவையாவன- நமஹா, சுவாஹா, சுவதா, பட், உம்பட், வௌஷட், வஷட் என்பனவாகும்.
நமஹா - ஐஸ்வர்யம் அளிப்பது.
சுவாஹா - தேவதைகளைத் திருப்தி செய்வது.
சுவதா - தைரியம், வசீகரம் கொடுப்பது.
பட் - விக்கினங்களைத் துரத்துவது.
உம்பட் - காமாதிகளைப் போக்குவது.
வௌஷட் - தேவதைகளை இழுப்பது.
வஷட் - தேவதைகளை வசம் செய்வது.

Friday, February 24, 2017

முக்தி அளிக்கும் சிவராத்திரி





மகா சிவராத்திரி நாளில் சிவன் கோயில்களுக்குச் சென்று ஈஸ்வரனை வழிபட்டால் மன அமைதி, முன்னேற்றம், தீய சக்திகள் வேரோடு அகலுதல் போன்ற நன்மைகள் நமக்கு உண்டாகும்.
மாசி அல்லது மகா மாதத்தில் அமாவாசையில் இருந்து 14வது சதுர்த்தசியன்று வருவது மகா சிவராத்திரியாகும். இந்த நாளின் சிறப்புகள் குறித்து கருட புராணம், கந்த புராணம், பத்ம புராணம், அக்னி புராணம் உள்ளிட்ட பல்வேறு நூல்களிலும் குறிப்பிடப்பட்டுள்ளது. மகா சிவராத்திரி நாளில் விரதம் இருப்போருக்கு கிடைக்கும் மகத்துவங்கள் என்ன என்பது பற்றியும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சிவராத்திரி வரலாறு
மாசிமாதம் தேய்பிறைச் சதுர்த்தசி திதியில் அம்பிகை சிவபெருமானை வணங்கியதாலேயே இந்த நாளில் மகா சிவராத்திரி கொண்டாடப்படுகிறது.
பிரளய காலத்தின் போது பிரம்மனும், அவரால் சிருஷ்டிக்கப்பட்ட அனைத்து ஜீவராசிகளும் அழிந்து விட்ட நிலையில், இரவுப் பொழுதில் அம்பிகை உமாதேவி, பரமேஸ்வரனை நினைத்துப் பூஜை செய்தார். நான்கு ஜாமங்களிலும் இரவு முழுவதும் ஆகம விதிப்படி அர்ச்சனை செய்தார். பூஜையின் முடிவில் அம்பிகை ஈஸ்வரனை வணங்கி, அடியேன் தங்களைப் பூசித்த இந்த இரவை, தேவர்களும் மனிதர்களும் தங்கள் திருநாமத்தாலேயே - அதாவது ‘சிவராத்திரி‘ என்றே - கொண்டாட வேண்டும் என்று வேண்டினார்.
சிவராத்திரி அன்று, சூரியன் மறைந்தது முதல் மறுநாள் காலை சூரியன் உதயமாகும் வரை, சிவனைப் பூஜிப்பவர்கள் யாராக இருந்தாலும், அவர்களுக்கு எல்லா விதமான பாக்கியங்களையும் தந்து முடிவில் மோட்சத்தையும் அளிக்க வேண்டும் என்று அன்னையானவள் வேண்டிக் கொண்டாள்..
சிவபெருமானும், அப்படியே ஆகட்டும் என்று கூறி அருள் புரிந்தார். அந்த இரவே சிவராத்திரி என வழங்கப்பட்டு, அனைவராலும் கொண்டாடப்படுகிறது. பகல் பொழுது பரமேஸ்வரனுக்கும், இரவுப்பொழுது அம்பிகையான உமாதேவிக்கும் உரியது என்பது நியமம். ஆனால் சிவராத்திரி என்பது அம்பாளின் வேண்டுதலின்படி கொண்டாடப்படுவதால் அது சிவனுக்கு உரியதாயிற்று.
கடைபிடிக்க வேண்டிய விரத முறை
சிவராத்திரி விரதம் இருப்பதால் தெரியாமல் செய்த பாவங்களுடன், தெரிந்தே பாவங்கள் செய்திருந்தாலும் அவை நம்மை விட்டு நீங்கிப் போகும். இவர்தான் சிவராத்திரி விரதம் இருக்கலாம். இவர் இருக்கக் கூடாது என்ற விதியெல்லாம் கிடையாது. யார் வேண்டுமானாலும் சிவராத்திரி விரதத்தை மேற்கொள்ளலாம்.
புராணங்களில் சொல்லப்பட்ட மற்றைய பல விரதங்களை நெடுங்காலம் கடை பிடிப்பது, நூறு அசுவமேத யாகம் செய்வது, பல முறை கங்கா ஸ்நானம் செய்வது ஆகிய அனைத்தையும் மேற்கொண்டாலும், ஒரு சிவராத்திரி விரதத்தை அனுஷ்டிப்பதற்கு ஈடாகாது.
சிவராத்திரிக்கு முதல் நாள் ஒரு வேளை மட்டுமே உணவு உண்ண வேண்டும். சிவராத்திரி அன்று அதிகாலையிலேயே எழுந்து குளித்து விட்டு, சூரிய உதயத்தின்போது காலையில் வீட்டில் செய்ய வேண்டிய பூஜையை முடிக்க வேண்டும்.
அதன் பின் சிவன் கோவிலுக்குப் போய் முறைப்படி தரிசனம் செய்ய வேண்டும். பூஜை செய்யும் இடத்தை மலர்களால் அலங்கரித்து நண்பகலில் குளித்து மாலையில் சிவார்ச்சனைக்கு உரிய பொருட்களோடு சிவன் கோவில் சென்று ஏற்பாடுகளைச் செய்யலாம். மாலையில் மீண்டும் குளித்து வீட்டில் சிவ பூஜை செய்ய வேண்டும். வீட்டிலேயே இரவின் நான்கு ஜாமங்களிலும் முறைப்படிப் பூஜை செய்தலும் நலம். வில்வ இலைகளால் அர்ச்சனை செய்தல் கூடுதல் உத்தமம்.
விரதத்தின் அம்சங்கள்
மகா சிவராத்திரி விரதம் மேற்கொள்பவர்கள் கோபத்தைக் கட்டுப்படுத்துவதுடன், பிரம்மச்சரியத்தைக் கடைபிடிக்க வேண்டும். சிந்தையில் அமைதியுடன் சிவ புராணத்தைப் பாடிக்கொண்டிருக்க வேண்டும். பற்றற்று இருப்பதுடன் பேராசைகளைக் கைவிட்டுப் பிறருக்குத் தீங்கிழைக்காமல் இருத்தல் வேண்டும்.
மாலையில் குளித்து உலர்ந்த ஆடையணிந்து நெற்றியில் திருவெண்ணீறு அணிந்து, கையில் ருத்திராட்ச மாலையுடன் வீடுகளில் சிவ பூஜை செய்தோ அல்லது கோயில்களுக்குச் சென்றோ சிவனை வழிபடுதல் வேண்டும். கோயில்களிலும் சிவ பூஜை செய்யலாம். ஐந்தெழுத்து மந்திரமான சிவாய நம என்ற சொல்லை உச்சரித்துப் பூஜிக்க வேண்டும். கலச பூஜையுடன் லிங்கத்தை வைத்தும் பூஜை செய்யலாம். பூக்கள் மற்றும் அபிஷேகப் பொருட்களைக் கோயில்களுக்கு வாங்கிக் கொடுத்தல் நலம்.
பின்னர் சிவபெருமானின் வெவ்வேறு பெயர்களான பவ, சர்வ, ஈசான, பசுபதி, உக்ர, ருத்ர, பீமா மற்றும் மகாதேவா என்று கூறிப் பூஜிக்க வேண்டும். சிவ பெருமானின் சகஸ்ர நாமத்தை சொல்வதுடன், வில்வ இலைகளைக் கொண்டும் பூஜிக்கலாம். வில்வ இலைகளைக் கோயில்களுக்கும் வழங்கலாம்.
பின்னர் நைவேத்யம் படைத்து வழிபட வேண்டும். சிவ, ருத்ர, பசுபதி, நீலகண்டா, மகேஸ்வரா, ஹரிகேசா, விருபாக்ஷா, சாம்பு, சூலினா, உக்ரா,பீமா, மகாதேவா ஆகிய 12 பெயர்களை உச்சரித்து பூக்களால் அர்ச்சிக்க வேண்டும். கோயில்களில் பிரதட்சிணமாக வந்து சிவபெருமானின் மூல மந்திரத்தை 108 முறை பாராயணம் செய்ய வேண்டும்.
அன்றைய தினம் இரவில் நான்கு ஜாமங்களிலும் தூங்காமல் பூஜை செய்து, மறுநாள் விடியற்காலையில் நீராடி, காலை அனுஷ்டானத்துடன் உச்சிக்கால அனுஷ்டானத்தையும் அப்போதே முடிக்க வேண்டும். அதன் பின் தீட்சை தந்த குருவைப் பூஜை செய்துவிட்டு, உடைகள் மற்றும் உணவினை அந்தணர்க்கு தானமாக அளித்து விரதத்தை நிறைவு செய்யும் விதமாக உணவு உண்ண வேண்டும். சிவராத்திரி நாளில் முழுவதும் உபவாசம் இருக்க முடியாதோர், ஒவ்வொரு ஜாமப் பூஜை முடித்த பிறகும் தண்ணீர், பால், பழங்களை உண்ணலாம்.
பூஜை செய்ய முடியாதவர்கள் நான்கு ஜாமத்திலும் சிவ புராணம் கேட்டும், சிவத்துதிகளைச் சொல்லியும், சிவன் கோயிலுக்குச் சென்று அவ்விரவைக் கழித்தும் சிவனை வழிபடலாம். சிவராத்திரிக்கு மறுநாள் சிவபுராணம் படித்தோ அல்லது கேட்டோ, பகல் பொழுதைக் கழிக்க வேண்டும். பிறகு மாலை நெருங்கியதும் மாலை அனுஷ்டானங்களை முடித்து, அன்றிரவும் எதுவும் உண்ணாமல் இருந்து உறங்க வேண்டும்.
சிவராத்திரி தினத்தன்று முழு உபவாசத்தைக் கடைபிடித்தால் எம்பெருமான் வாழ்நாள் முழுவதும் காப்பாற்றுவதுடன் மகிழ்ச்சியையும், வாழ்வில் முன்னேற்றத்தையும் அளிப்பார் என்பது ஐதீகம். தவிர மகா சிவராத்திரி விரதம் இருப்போருக்கு நற்கதி கிடைப்பதுடன் இப்பூத உடல் மடிந்த பின் சொர்க்கத்தையும் இறைவன் அளிப்பான் என்பதே பின்னணித் தத்துவம்.
இப்படி இருபத்து நான்கு வருடங்கள் சிவராத்திரி விரதமிருந்தால் அவர்கள் சிவகதி அடைவார்கள். அத்துடன் அவர்களின் மூவேழு தலைமுறைகளும் நற்கதி அடைந்து, முக்தியை அடைவது சத்தியம் என்று புராணங்கள் கூறுகின்றன.


Tuesday, February 21, 2017

பாவம், நோய் போக்கும் திருவண்ணாமலை தீர்த்தங்கள்...!


Image may contain: one or more people, mountain and outdoor


Image may contain: outdoor



பாவம், நோய் போக்கும் திருவண்ணாமலை தீர்த்தங்கள்
திருவண்ணாமலையில் தோன்றிய தீர்த்தங்கள் 320 ஆகும். இங்கு இந்திரலிங்கமும், இந்திர தீர்த்தமும் பல நூற்றாண்டுகளாக சிறந்து விளங்குகின்றன.
இந்திரன் இந்த தீர்த்தத்தில் குளித்துத்தான் தான் செய்த குற்றங்கள் நீங்கப் பெற்றான். மேலும் இந்திர பதவியில் நீடிப்பதற்கும் உரிமை பெற்றான். இந்த இந்திர தீர்த்தத்தில் தான் ரமணர் துறவு பூண்டார்.
அருணாச்சலேஸ்வரருக்கு தென்கிழக்கில் அக்னி லிங்கமும், அக்னி தீர்த்தமும் உள்ளது. இந்த தீர்த்தத்தில் தான் அக்னி தேவன் நீராடி, நினைப்பால் உண்டான பாவத்தை நீக்கிக்கொண்டான்.
பங்குனி மாதம் பவுர்ணமியில் இந்த தீர்த்தத்தில் நீராடினால் மாதர்களால் வந்து பொருந்திய பாவம் தீரும். மலையின் தெற்கு திசையில் ‘எமன் தீர்த்தம்’ அமைந்து உள்ளது. இந்த தீர்த்தத்தில் நீராடினால், உடல் பொன் வடிவம் பெறும். உடலில் உள்ள அனைத்து நோய்களும் ஒழிந்து போகும்.
எமன் தீர்த்தத்திற்கு தெற்கு திசையில் அகத்தியரால் ஏற்படுத்தப்பட்ட ‘அகத்திய தீர்த்தமும்’ அமைந்துள்ளது. இந்த தீர்த்தத்தில் புரட்டாசி மாதத்தில் நீராடி, தண்ணீரை உட்கொண்டால் நம் முகத்தை பார்ப்பவர்களும் தமிழ் கவி அரசர்கள் ஆவார்கள். திருமகளும், கலைமகளும் அவரிடத்தில் வந்து தங்கி இருப்பார்கள்.
இந்த தீர்த்தம், நிருதி மூலையில் அமைந்துள்ளது. இந்த தீர்த்தத்தில் மூழ்குபவர்களுக்கு ஏற்பட்ட அரிய பகைகள் எல்லாம் நீங்கும்.
மேற்கு திசையில் ‘வருண தீர்த்தம்’ அமைந்துள்ளது. இந்த வருண தீர்த்தத்தில் நீராடினால் 9 கிரகங்களும் நன்மையை கொடுக்கும். இந்த தீர்த்தத்திற்கு வாயு திசையில் ‘வாயு தீர்த்தம்’ உள்ளது. அதில் நீராடினால், எல்லா துன்பங்களும் தீரும். வடக்கு திசையில் குபேர லிங்கமும், குபேர தீர்த்தமும் அமைந்துள்ளது. இந்த தீர்த்தத்தில் நீராடினால், வறுமை எல்லாம் நீங்கி, சிவபெருமான் திருவடியை அடையலாம்.
ஈசான்ய திசையில் ஈசான்ய லிங்கம் மற்றும் ‘ஈசான்ய தீர்த்தம்’ அமைந்துள்ளது. இந்த தீர்த்தத்தில் நீராடி, ஈசான்ய லிங்கத்தை வழிபட்டால் மாபெரும் ஞானியாக விளங்குவார்கள். அருணாச்சலேஸ்வரர் ஆலயத்தில் ‘சிவகங்கை தீர்த்தம்’ அமைந்துள்ளது. இந்த தீர்த்தத்தை தினமும் மனதில் நினைத்தாலே கங்கையில் நீராடிய பலன் உண்டாகும். அநேக உருத்திரர்கள் இந்த தீர்த்தத்தில் மூழ்கித்தான் பெரும் பயன் அடைந்தார்கள்.
இந்த சிவகங்கை தீர்த்தத்திற்கு கிழக்கில் ‘சக்கர தீர்த்தம்’ அமைந்துள்ளது. திருமால் ‘வராக’ அவதாரம் எடுத்த போது, இந்த சக்கர தீர்த்தத்தில் தான் மூழ்கினார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த தீர்த்தத்தை வலம் வருவோரும், இதில் நீராடியவர்களும், இந்த தீர்த்தத்தை உட்கொண்டவர்களும் துன்பக் கடலில் இருந்து வெளியே வந்து சிவபெருமானின் இரண்டு திருவடிகளையும் இடமாகப் பெறுவார்கள்.
மற்றொரு தீர்த்தமான பிரம்ம தீர்த்தத்தில் நீராடினால், கடந்த பிறவிகளில் செய்த தீவினைகள் நீங்கும். இந்த தீர்த்தத்தில் நீராடி, ஓர் அணு அளவு தங்கத்தை தானம் செய்கிறவர்கள் பெரும் பதவியை அடைவார்கள்.
ராஜகோபுரத்திற்கு வடக்கு திசையில் அமைந்துள்ளது, சிவாஞ்சி தீர்த்தம் (சிவன் அணைந்த தீர்த்தம்). இந்த தீர்த்தத்தில் குளித்தாலும், அல்லது தண்ணீரை எடுத்து தன் தலையில் தெளித்துக்கொண்டாலும், நாம் செய்த பாவங்கள் எல்லாம் நீங்கும். சிவன் நல்ல வழி காட்டுவார். இந்த தீர்த்தத்திற்கு அடியில் ஒரு சிவன் கோவில் உள்ளது என வரலாறு கூறுகிறது.

Tuesday, February 7, 2017

தெரிந்து கொள்ள வேண்டியவை ....!



1. இரவு ஒன்பது மணி முதல் அதிகாலைமூன்று மணிவரை, நதிகளில் குளிக்கக்கூடாது.
2. மாலை6 முதல் காலை 6 வரை இரவுபொழுதாகும். இந்தநேரத்தில் குளிக்கக்கூடாது.
கிரகண காலத்தில் இந்த கணக்கு இல்லை.
3. அமாவாசை அன்று நமது வீட்டில் தான் சாப்பிடவேண்டும்.
முடிந்தால் அன்று நாம் சாப்பாடு அடுத்தவருக்கு போடவேண்டும்.
4. காயத்ரி மந்திரத்தை
பிரயாணத்தின்போது, சொல்லுதல்கூடாது
சுத்தமானஇடத்தில்தான் ஜபிக்கவேண்டும்.
5. கற்பூர ஹாரத்தி - சூடம்காண்பித்தல் பற்றி ..
சூடம் காண்பிக்கும்போது, கடவுளின் காலிற்கு நான்கு தடவை சுத்தி காண்பிக்கவேண்டும்.
தொப்பிளுக்கு இரண்டு தடவை காண்பிக்கவேண்டும்
முகத்துக்கு ஒரு தடவை
கடைசியாக, முழு உருவத்துக்கும் மூன்று தடவை காண்பிக்க வேண்டும்.
6. தனது வீட்டில் கோலம் போடாமலும் விளக்கேற்றாமலும் ஆலயங்களுக்கு செல்லக்கூடாது.
7. எரியும் விளக்கில் எண்ணெய் அல்லது நெய்யை கையால் தொடுவதும் அதன் பிறகு அதைத் தன் தலையில் தடவிக் கொள்வதும் கூடாது.
8. சிவனுக்கு உகந்தது = வில்வம் ஆகும்
விஷ்ணுவிற்கு உகந்தது = துளசி ஆகும்
விநாயகருக்கு = அருகம்புல் ஆகும்
பிரும்மாவிற்கு உகந்தது = அத்தி இல்லை ஆகும்
இவைகளை மாற்றி மற்றவருக்கு வைத்து வணங்க கூடாது.
9. கலசத்தின் அா்த்தங்கள்
கலசம்(சொம்பு) − சரீரம்
கலசத்தின் மேல் சுற்றியிருக்கும் நூல் − நாடி & நரம்பு
கலசத்தின் உள் இருக்கும் தீா்த்தம் (நீர்) − இரத்தம்
கலசத்தின் மேல் உள்ள தேங்காய் − தலை
கலசத்தின் மேல் உள்ள தேங்காயை சுற்றியிருக்கும் மாவிலை − சுவாசம்
கலசத்தின் அடியில் இருக்கும் அரிசி & இலை − மூலாதாரம்
கூர்ச்சம் − ப்ராணம்(மூச்சு)
உபசாரம் − பஞ்சபூதங்கள்.
10.தமிழ் மாதம் பன்னிரண்டிலும் செய்ய வேண்டிய தானம்...
சித்திரை – நீர்மோர், விசிறி, செருப்பு, குடை,
தயிர் சாதம், பலகாரம்
வைகாசி – பானகம், ஈயப்பாத்திரம், வெல்லம்
ஆனி – தேன்
ஆடி – வெண்ணெய்
ஆவணி – தயிர்
புரட்டாசி – சர்க்கரை
ஐப்பசி – உணவு, ஆடை
கார்த்திகை – பால், விளக்கு
மார்கழி – பொங்கல்
தை – தயிர்
மாசி – நெய்
பங்குனி – தேங்காய்.
11. திருநீற்றை வில்வ பழ ஓடில் வைத்து பூசி கொள்ள சிவ கதி எளிமையாக
கிடைக்கும்.
12. அடியார்கள் மற்றும் சிவ தீட்சை பெற்றவர்கள் தவிர மற்றவர் தண்ணீரில் திருநீற்றை குழைத்து புசிகொள்ள கூடாது.
13. பெண்கள் வேல் மற்றும் சிவலிங்கத்தை அபிஷேகம் செய்யகூடாது (ஆகம முறைக்கு உட்பட்டது )
14. கோவில்களில் சூடம் மற்றும் தீபத்தை கைகளில் ஏற்றி காண்பிக்க கூடாது.
15. நிவேதனம் செய்த தேங்காயை சமையலில் சேர்த்து அந்த உணவை மறுபடியும் சாமிக்கு நிவேதனம் செய்யக்கூடாது.
எந்தெந்த கிழமையில் எந்தெந்த கடவுளை வணங்குவது சிறப்பு? கடவுளை வணங்குவதற்கு நாள் நட்சத்திரம் ஏன் பார்க்க வேண்டும்?
ஞாயிறு – கண்ணுக்குத் தெரிந்த கடவுளான சூரியனை வணங்க ஏதுவான நாள். ஆதித்ய ஹ்ருதயம் ஸ்லோகம் சொல்லி வணங்கலாம்.
திங்கள் – சிவாலய தரிசனம் நன்மை தரும். தேவாரம், திருவாசகம், அபிராமி அந்தாதி பாடல்களைக் கொண்டு அம்பிகையையும், சிவபெருமானையும் வழிபடுவது நல்லது.
செவ்வாய் – சுப்ரமணிய ஸ்வாமி ஆலயத்தில் ஆறு விளக்குகள் ஏற்றி வழிபடுவதால் நினைத்தது நடக்கும். எதிரிகள் காணாமல் போவார்கள். கந்தசஷ்டி கவசம் படிப்பதும் நன்மை தரும்.
புதன் – பெருமாளை சேவிப்பது நன்மை தரும். துளசிமாடத்திற்கு பூஜை செய்ய உகந்த நாள். விஷ்ணு ஸஹஸ்ரநாமம், நாலாயிர திவ்யபிரபந்த பாடல்களைப் படிப்பதும் நன்மை தரும்.
வியாழன் – நாம் குருவாக எண்ணும் மகான்களைப் போற்றுவதற்கு உகந்த நாள். சாயிபாபா, ராகவேந்திரர், ராமானுஜர், காஞ்சி பரமாச்சார்யாள் போன்ற மகான்களை ஆராதனை செய்ய உகந்த நாள் பகவத்கீதையைப் பொருள் புரிந்து படிப்பது நன்மை தரும்.
வெள்ளி – மஹாலக்ஷ்மி வழிபாடு நன்மைதரும். கோபூஜை செய்வது, பஞ்சமுக குத்துவிளக்கினை ஏற்றி வைத்து பூஜிப்பது மிகவும் விசேஷம். அம்பிகையின் ஆலயங்களை தரிசிப்பது நன்மை தரும். மஹாலக்ஷ்மி ஸ்தோத்ரம், மஹிஷாசுரமர்த்தினி ஸ்தோத்ரம், அன்னபூர்ணா அஷ்டகம் ஆகியவற்றைப் படிப்பதும் நல்லது.
சனி – ஆஞ்சநேயர், கருடாழ்வார், நந்திகேஸ்வரர், நாயன்மார்கள், ஆழ்வார்கள் என இறைவனுக்குத் தொண்டு செய்து இறைநிலை அடைந்த அடியவர்களை வணங்குவதற்கு உகந்தநாள். ராமாயணம், மகாபாரதம், சுந்தரகாண்டம், பெரியபுராணம் முதலான நூல்களைப் படித்தறிதலுக்கு உகந்த நாள். விநாயகப்பெருமானை எல்லா நாட்களிலும், எல்லா நேரத்திலும் வணங்கலாம். நினைத்தவுடன் நம் மனக்கண் முன் தோன்றுபவர் விநாயகர்

Thursday, February 2, 2017

சுப்பிரமணியம் என்பது என்ன ?

நமது புருவ மத்தியில் ஆறு பட்டையாய் உருட்சியுள்ள ஒரு மணி பிரகாசம் பொருந்தி இருக்கின்றது , இந்த ஜோதி மணியை ஷன்முகமென்று பெரியோர்கள் சொல்லுவார்கள்.
நமது மூலாதாரத்திற்கு மேல் மூன்றிடந்தாண்டி விசுத்தியாகிய இருதய ஸ்தானத்தில் இடது புறத்தில் ஆறு தலையுடைய ஒரு நாடி இருக்கின்றது , இதைச் சுப்பிரமணியம் என்று சொல்லுவார்கள் .இந்த தேகத்திலுள்ள ஆறறிவும் ஒருங்கே சேர்ந்த சுத்த விவேக மென்பதையும் சண்முகம் என்பார்கள் , ஆயினும் சர்வ தத்துவங்கிளனது அந்தத்தில் உண்மணிக்கப்பால் சாந்த நிறைவாய் உள்ள ஆறு தலையாகிய சுத்த ஆன்ம அறிவான உள்ளமே சுப்பிரமணியம் .
ஆறு ஜோதியாயும் , ஆறு அறிவாயும் , ஆறு தலை உடையதாயும் இருப்பதால் முகம் ஆறு . கால் இரண்டென்பது தோன்றும் அறிவு , தோற்றுவிக்கும் அறிவு என்னும் இரண்டறிவாகிய விஷய உணர்ச்சியும் , நிர் விஷய உணர்ச்சியும் ஆகும் , கை பன்னிரெண்டு என்பது ஆறு ஆதாரங்களில் உள்ள பிரகாசம் , அப்ப்ரகாசமாகிய பன்னிரெண்டாம்.
தசாயுதம் , அபய வரதம் என்பது என்பவை யாவை எனில் வஜ்ஜிரம் என்பது தீக்ஷன்யா உணர்ச்சி , வேல் என்பது சக்தி , அருள் , அறிவு . மணி என்பது ஆன்ம விளக்கமாகிய நாதம் .த்வஜம் என்பது கீர்த்தி . சரசிஜம் என்பது தயவு . குக்குடம் என்பது மாச்சரியம் இல்லாத நிறைவு , பராகம் என்பது பாச நீக்கம் , தண்டம் என்பது வைராக்கிய அறிவு , பாணம் என்பது அன்பு , அபயம் என்பது சமாதான உணர்ச்சி வரதம் என்பது நிராபாரமாகிய ஆதரவென்னும் சகிப்பு , கடப்ப மாலை என்பது சர்வ தத்துவ கண்டனம் , பல வர்ணமுள்ளதும் , விசித்திர வடிவமானதும் , மறதி முதலிய குணங்களுக்கு காரணமானதும் ,, மாயைக்கு இருப்பிடமாயுள்ளதும் ஆன மூலப்ரகிருதியே மயில் என்பது .
மயில் மேல் சுவாமி எறிக்கொண்டிருத்தல் முதலியவற்றிற்கு காரணம் என்னவென்றால் பிண்டாண்டமாகிய இந்த தேகத்திலும் அண்டத்திலும் மூலக்ஞான காரணமாயுள்ள கேவலமாகிய பிரகிருதி மாயை இன் அசுத்தகேவலமாகிய அசுத்தாசுத்த மகா அகங்காரம் என்னும் ராக்ஷச அம்சமான சூரதத்துவம் அதின் சேதரமான மூவகைத் தத்துவத்தோடு , அக்ஞான திசையல் , ஆன்ம அறிவையும் , பிண்ட விளக்கமான தேவர்களயும் , விஷய விளக்கமான இந்திரியங்களையும் , நாடி விளக்கமான யந்திரங்களையும் , பிராண விளக்கமாகிய உயீர்யையும் , விழுங்கித் தன்னரசு செலுத்தும் .அந்த சூர தத்துவத்தை வதைக்கும் , தத்துவம் மகாமாயையாகிய மாமரமாயும் , மாச்சரியமாகிய கோழியையும் , விசித்திர மாயை என்னும் மயில் ஆகவும் மகாமதமாகிய யானை முகமாயும் , அதிக்ரோதமாகிய சிங்க முகமாயும் விளங்கும் .
சர்வ தத்துவங்களயும் தன்வசமாக்கி , அகங்கார கொடி கட்டி , அக்ஞான நாடகம் செய்த தத்துவ அகங்கரிப்பை அடக்கி , பதி , பசு , பாசம் , அநாதிநித்யம் என்னும் சித்தாந்தத்தை விளங்கிக் காட்டுவதற்காக , மாச்சரிய குக்குடத்தை போதமாகிய கையால் அடக்கியும் , விசித்திர மாயையாகிய மயிலைக் கீழ்படுத்தி மேலிருந்து அடக்கியும் , ஆபாச தத்துவங்களைச் சம்மரித்தும் , சுத்த விஷய புவனமாகிய தேவலோகத்தை நிலை பெறச் செய்தும் இந்தரபதியான ரூபேந்த்ரனுடைய பெண்ணாகிய தத்துவ என்னும் தெய்வானையை இடப்பாலமைத்தும் , இந்த்ரியங்கள் ஆகிய வேடர்களின் கண்ணிற் புலப்பட்டமான சமென்னும் மானினது கற்பத்திலுண்டான வள்ளியாகிய சுத்த மனதை வலத்தில் வைத்தும் , நவ தத்துவ காரணமாகிய , நவவைராக தத்துவமாகிய வீரர்களைச் சமீபத்திலிருத்தியும் , சகல கேவலங்களுக்கும் நினைப்பு மறப்புக்கும் இடையில் விவேக வடிவாயும் பாதம் முதல் நாபி வரையில் உஷ்ண உருவாயும் , நாபி முதல் கண்டம் வரையில் ஆதார நாடி உருவாயும் கண்டம் முதல் புருவமத்தி வரையில் மணி உருவாயும் உச்சியில் ஓளி உருவாயும் புத்தியில் சுத்த அறிவாயும் , அனுபவத்தில் நித்தியமாயும் , எங்கும் நிறைவாயும் , கோணத்தில் ஆறாயும் , ஜாதியில் ஆறின் கூட்டமாயும் விளங்குகின்ற உண்மைக்கடவுளே சுப்ரமணியம்

சித்தர்களால் சொல்லப்பட்ட 20 பரிகார முறைகள்....!


(1) முக்கியமான காரியங்களுக்கு வெளியில் செல்லும் பொழுது சிறிது மஞ்சள் தூள் அல்லது ஒரு மஞ்சள் கட்டை எடுத்து செல்ல, போகிற காரியம் தடையில்லாமல் முடிவடையும்.
(2) புதிய வீடு அல்லது கடைகளுக்கு : முழு மஞ்சள் 7, கொட்டை பாக்குகள் 7, சிறிய வெள்ளி தகடு,உலோகத்தால் ஆன நாகர்-2, இவற்றை எல்லாம் மூடியுடன் கூடிய வெண்கல கலசத்தில் இட்டு மேற்கு புறமாக வைத்திருக்க சகல நன்மைகளும் உண்டாகும்.
(3) வீட்டில் உள்ளவர்க்கு ஏதேனும் தொற்று நோய் வந்து அவதிப்பட்டால்-சிறிய மண் சட்டியில் மஞ்சள் லட்டு,ஒரு முட்டை, 2 நாணயங்கள் மற்றும் சிறிது குங்குமம் வைத்து நோய்வாய்பட்டவரின் தலையை 3 முறை வலமாக மட்டும் சுற்றி 4 ரோடுகள் சேரும் இடத்தில் மதியம் 12 மணிக்கு எறிந்து விட, நோய் விலகும்.
(4) கடன்களால் வெகு காலம் துன்பப்படும் நபர்களுக்கு : ஒன்னேகால் அடி வெள்ளை துணியை எடுத்து அதில் நான்கு பக்கங்களிலும் சிகப்பு ரோஜாவை வைத்து கட்டி, பின்பு நடுவிலும் ஒரு ரோஜாவை வைத்து அதை 3 நதிகள் சங்கமிக்கும் இடத்தில் விட, கடன்கள் அடியோடு அழியும்.
(5) வியாபாரம் செழிக்க, வியாபார போட்டி,வியாபாரத்தில் செய்வினை அகல : ஒரு ஞாயிறு அன்று ஐந்து எலுமிச்சைகளை பாதியாக வெட்டி, அத்துடன் சிறுது வெண்கடுகு மற்றும் மிளகு தூவி பின்பு மூடி விடவும். மறு நாள் திறந்தவுடன், அனைத்தையும் கூட்டி இடத்தை விட்டு சிறிது தூரம் சென்று அனைத்தையும் எரித்து விடவும். எரிப்பதற்க்கு மண்எண்னை அல்லது பெட்ரோல் உபயோகிக்க கூடாது. அனைத்தும் எறிந்ததும் வியாபார இடத்தில் உள்ள அனைத்து எதிர் மறை சக்திகளும் அழிந்து போய், வியாபாரம் செழிக்கும்.
(6) வேலை இண்டெர்வியூ அல்லது ஏதேனும் புதிய தொழில், முயற்சி தொடங்குமுன், சம்பந்தபட்டவரை கிழக்கு முகமாக நிற்க வைத்து மூன்று முறை தலையை வலது புறமாக சிறிது பச்சை பயிரை வைத்து சுற்றி பின்பு அவர் மேல் தூவி விட வேண்டும். அவர் சென்றதும் அவற்றை கூட்டி வெளியில் பறவைகளுக்கு கொட்டி விடலாம். இது செயலில் வெற்றியை தேடித்தரும்.
(7)அரச மரத்தை சனிக்கிழமை காலை 8 மணிக்குள் 108 முறை வலம் வந்து பின்பு தூப,தீபம்-நிவேதனம் செய்து வழிபட்டால் பண புழக்கம் அதிகரிக்கும். தொடர்ந்து ஒவ்வொரு வாரமும் செய்து வரலாம்.
(8)செவ்வாயின் பாகமான தெற்கில் 7 நல்லெண்ணை விளக்கு (மண்) வைத்து தூபம் காட்டி வேண்டி வர, வருடக்கணக்கில் வராத கடன்களும் வந்து சேரும். ஏமாற்றப்பட்ட பொருட்களும் திரும்ப சேரும்.வீட்டிலேயே செய்யலாம்.
(9) 7 பற்கள் மட்டுமே உள்ள வெள்ளை பூண்டு வாங்கி வந்து அதுதான் 7 காய்ந்த மிளகாகளையும் சேர்த்து ஒரு நூலில் கட்டி வீடு,கடை,ஆபீஸ் வாசல்களில் தொங்க விட திருஷ்டிகள் சகலமும் விலகி நன்மை சேரும்.
(10)வீட்டை விட்டு வெளியே கிளம்பும் பொழுது அருகம் புல் நுனி ஒன்று பறித்து எடுத்து பாக்கெட்டில் வைத்து செல்ல செல்லும் காரியம் வெற்றி அடையும்.
(11)ஆரஞ்சு மரத்தில் வேரை பாக்கெட்டில் வைத்து செல்ல எதிரிகளும் வசியமாவார்கள்.
(12)படிக்கும் பிள்ளைகள் இடது கையை டேபிள் மீது வைத்து படிக்க,எழுத தொடங்கினால் படித்த பாடங்கள் நினைவில் நிற்கும். தேர்வெழுதும் போதும் இதை செய்யலாம்.
(13)வீட்டில் வாடிய செடிகள் இருந்தால் நல்லதல்ல.வீட்டின் முன்பகுதியில் வாடிய செடிகள் இருந்தால் அது செல்வவரவை,வசீகர சக்தியைப் பாதிக்கும்.
வீட்டின் பின்புறம் வாடிய செடிகள் இருந்தால் அது பேய்,பிசாசு போன்ற துர்ச்சக்திகளை ஈர்க்கும்.இது பூமி தோஷத்தை உண்டாக்கும்.எனவே இதுபோன்ற பாதிப்பு உள்ளவர்கள் வீட்டில் உள்ள வாடிய செடிகளை ஒரு செவ்வாய்க்கிழமை அன்று வேரடி மண்ணுடன் பிடுங்கி ஓடும் நீரில் அல்லது கடலில் விட்டு விட மேற்சொன்ன பாதிப்புகள் தீரும்.
(14)உங்கள் வீட்டு பணப்பெட்டியில் மல்லிகைபூ ஏலக்காய் பச்சைகற்பூரம் சந்தனம் வில்வ இலை இவைகளை வெள்ளிக்கிழமை களில் காலை சூரிய உதயத்தில் வைத்தால் பணவரவு ஏற்படும் ..
(15)உங்களின் வீட்டு படுக்கை அறையில் கண்ணாடி இருக்கக்கூடது , மூன்றாம் மனிதனின் குறுக்கீடு இருக்கும் ,அல்லது குழந்தை வாய்பேசாமல்
போகவும் வாய்ப்புவுண்டு .அப்படி இருந்தால் இரவில் மூடி வைத்து விடுங்கள்
(16)சிறிது கல் உப்பை ஒருகின்னத்தில் போட்டு ,கழிவறையில் வைத்தால் கெட்டசக்திகளை இழுத்து கொள்ளும் ஆனால் அடிக்கடி உப்பை மாற்ற வேண்டும் .
(17)வீட்டு வாயிற்படி அருகே அல்லது வீட்டின் முன்புறத்தில் எப்பொழுதும் நீர் தேங்க விடக் கூடாது.இது உடல் சார்ந்த பாதிப்பு, நோய்களைத் தொடர்ந்து ஏற்படுத்தும்.தவிர்க்க முடியாத பட்சத்தில் வீட்டின் வாசற்கதவில் மஞ்சளால் ஸ்வஸ்திக் வரையலாம்.இது பாதிப்பை பெருமளவில் குறைக்கும்
(18)கோவில் கொடி,கொடிமரம்,கோவில் கோபுரம் இவற்றின் நிழல் வீட்டின் மேல் படியக்கூடாது.தாந்த்ரீக நூல்கள் இது ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட வியாதிகளால் பாதிக்கப்பட்டுத் தொடர் சிகிச்சை பெற்றும் பலனளிக்காமல் கஷ்டப்படுவார்கள்.இது ப்ருத்வி தோஷங்களில் ஒன்று.
இதற்குப் பரிகாரம்:
வீட்டில் வடக்கிருந்து தெற்கு நோக்கிய படி பைரவர் படம் வைத்து தினமும் வெல்லம்,கற்கண்டு அல்லது இனிப்புகள் படைத்து வணங்கி வர 12 நாட்களுக்குப் பின் கொஞ்சம் கொஞ்சமாகப் பாதிப்புகள் நீங்கி நலம் ஏற்படும்.மேற்கண்ட பாதிப்பு உள்ளவர்கள் பைரவ மந்திரம் அல்லது பைரவ காயத்ரி ஜெபித்து விபூதி அணிந்து வர நன்று
(19)சுடுகாட்டுக்கு சமீபத்தில் வீடு உள்ளவர்கள் வீட்டில் இருந்தபடி சுடுகாட்டில் பிணம் எரிவதைப் பார்க்கக்கூடாது.இது அக்னி தோஷத்தை உண்டாக்கும். இதனால் வீட்டில் உள்ள சுப தெய்வங்களை வெளியேறும்.முகத்தில் தேஜஸ் ,கவர்ச்சி குறைந்து நம்மைப் பார்ப்பவர்களிடம் வெறுப்பை உண்டுபண்ணும். வறுமை,அவமானம் உண்டாக்கும்.பேய்,பிசாசுகள் நம்மைப் பீடிக்க நாமே வழியமைத்துத் தருவதாக அமைந்து விடும்.
இதற்குப் பரிகாரம்:
ஒரு ஞாயிற்றுக்கிழமை தொடங்கி மறு ஞாயிற்றுக்கிழமை வரை தினமும் சூரியனுக்கு அல்லது துளசிச் செடிக்கு 3 கை ஜலம் தர்ப்பணம் செய்ய வேண்டும்.மேலும் சூரியனையும், அக்னி தேவரையும் பிரேத தோஷம் நீங்க வேண்டிக் கொண்டு பின் வலது உள்ளங்கையில் நீர் வைத்துக்கொண்டு “ஓம் ரம் அக்னி தேவாய சர்வ தோஷம் நிவாரய நிவாரய” என 3 தடவை ஜெபித்து அந்த நீரைத் தலையில் தெளித்துக் கொள்ளவும்
(20)கோதுமை மாவினால் சிறு சிறு உருண்டைகளாக 7 அல்லது 14 அல்லது 7ன் மடங்குகளில் உருண்டை செய்துகொள்ளவும்.குங்குமத்தில் கொஞ்சம் நீர் விட்டு அதை வெள்ளிக்குச்சி அல்லது மாதுளைமரக் குச்சியால் தொட்டுக் கோதுமை உருண்டையில் ஸ்ரீம் என்று எழுதி அதைக் குளம்,ஆறு அல்லது கோவில் தெப்பக்குளத்தில் உள்ள மீன்களுக்குப் போடவும்.எழுதிய பின்னர்ஸ்ரீம் என்பது அழிந்து விட்டாலும் பரவாயில்லை. இவ்வாறு வெள்ளிக்கிழமை அல்லது ஞாயிற்றுக்கிழமைகளில் செய்து வர லக்ஷ்மியின் அருள் உண்டாகி பணத்தட்டுப்பாடு நீங்கி செல்வம் சேரத் தொடங்கும்.

ராசிக்குரிய பீஜ மந்திரங்கள்

அவரவர் ராசிக்குரிய பீஜ மந்திரங்கள்
பீஜ மந்திரங்கள் மிக சக்தி வாய்ந்தவை. அவற்றுடன் பிரணவ மந்திரமும் சேரும் பொழுது மிக சக்திவாய்ந்த ஒன்றாகிறது. கிரந்தங்களில் கொடுக்கப்பட்டுள்ள அவரவர் ராசிக்கு உரிய மந்திரங்கள் இங்கே கொடுக்கப்பட்டுள்ளன. இதை தினசரி எண்ணிக்கை வைக்காமல் எவ்வளவு முறை மனதினுள் கூறி வர செய்கிறோமோ, அதற்குரிய நன்மைகள் வந்து சேரும்.
மேஷம் : ஓம் ஐம் க்லீம் சௌம் 
ரிஷபம் : ஓம் ஹ்ரீம் க்லீம் ஸ்ரீம்
மிதுனம் : ஓம் ஸ்ரீம் ஐம் சௌ
கடகம் : ஓம் ஐம் க்லீம் ஸ்ரீம்
சிம்மம் : ஓம் ஹ்ரீம் ஸ்ரீம் சௌ
கன்னி : ஓம் ஸ்ரீம் ஐம் சௌ
துலாம் : ஓம் ஹ்ரீம் க்லீம் ஸ்ரீம்
 விரிச்சிகம் : ஓம் ஐம் க்லீம் சௌ
தனுசு : ஓம் ஹ்ரீம் க்லீம் சௌ
மகரம் : ஓம் ஐம் க்லீம் ஹ்ரீம் ஸ்ரீம் சௌ
கும்பம் : ஓம் ஹ்ரீம் ஐம் ஹ்ரீம் க்லீம் ஸ்ரீம்
மீனம் : ஓம் ஹ்ரீம் க்லீம் சௌ

அகத்தியப் பெருமான் அருள் வாக்கு

இறைவன் அருளால் சொல்வது என்னவென்றால், லலிதா சஹஸ்ரநாமத்தை, 1,3,5 மண்டலம் பிரார்த்தனையாகவோ, யாகமாகவோ, ஆலயத்திலோ, இல்லத்திலோ, அதிகாலை துவங்கி பூர்த்தி செய்வது, பல்வேறு பிறவிகளில் செய்த பிரம்மஹத்தி தோஷத்தை அகற்றும் ! இது பக்தி வழி. யோகா மார்க்கம் என்று எடுத்துக் கொண்டால், குண்டலினி சக்தியை மேலே எழுப்புவதற்கு சரியான உச்சரிப்பைக் கற்றுக் கொண்டு, மனதை ஒரு நிலைப்படுத்தி அதிகாலைப் பொழுதில், வடகிழக்கு திசை நோக்கி அமர்ந்து, நித்தமும் உச்சரித்து வந்தால், மூலாதாரத்தில் உறங்கி கொண்டிருக்கும் குண்டலினி சர்ப்பமானது எழுவதை உணரலாம். எனவே, எல்லா வகை மந்திரங்களும் மனித உடலின் 72000 நாடி, நரம்புகளின் ரத்த ஓட்டத்தை சரி செய்வதும், அவனின் உள்முக சக்தியையும் தட்டி எழுப்பும் !

நித்திய சுத்தி முறைகள்

பிறந்தவர்கள் அனைவரும் இறக்க வேண்டும் என்பது விதி. மரணத்திலிருந்து யாரும் தப்ப முடியாது. மரணத்திற்கு பல காரண காரியங்கள் இருக்கிறது. ஆனால் பொதுவாக பெருவாரியான உயிர்கள் உடலை விட்டு பிரிந்து போவதற்கு எது காரணமாக இருக்கிறது என்பதை பற்றி நம்மில் பலர் சிந்திப்பது கிடையாது. ஆற்றில், குளத்தில் விழுந்து சாகிறவன் விபத்துகளில் இறந்து போகிறவர்கள், படுகொலை செய்யப்படுபவர்கள் இவர்களுடைய உயிர் எதனால் பிரிகிறது என்பது ஓரளவு நமக்கு தெரியும். ஆனால் நோய்பட்டு இறப்பவர்களுடைய உயிர் எதனால் போகிறது என்று கேட்டால் அதற்கு ஒரே பதில் கபம் என்ற சளியால் போகிறது என்று மட்டும் தான் கூறமுடியும். ஒருவருக்கு இதய நோய் வரலாம், புற்றுநோய் வரலாம் வேறு எந்தவிதமான நோய்களும் வரலாம். இந்த நோய்களின் இறுதி வடிவம் அதாவது உயிரை பறிக்கும் நிலை கப வடிவம் என்று தான் கூறவேண்டும்.
அதனால் தான் சித்தர்கள் நுரையீரலில் உருவாகும் கோழையை யமன் என்ற பெயரில் அழைத்தார்கள். உடம்பில் சளியானது சேர சேர உடல் இயக்கம் குறைகிறது. இரத்த ஓட்டம் தடைபடுகிறது. எலும்புகள் வலுவிழக்கிறது. நாடி நரம்புகள் எல்லாம் தளர்ந்து போய் நடமாடும் பிணமாக மனிதன் ஆகிவிடுகிறான். எனவே சளித்தொல்லை இல்லாமல் வாழுகிற மனிதன் தான் நிஜமான ஐஸ்வர்யவனாவான் எனலாம். இந்த சளித்தொல்லையை முற்றிலுமாக நீக்குவதற்கு சித்தர்கள் கபசுத்தி என்ற பெயர் கொடுத்து கரிசாலை நெய் என்ற அற்புதமான மருந்தையும் கூறி இருக்கிறார்கள். கரிசாலை நெய்யை பற்றி பேசாத சித்தர்களே இல்லை என்று சொல்லலாம் சித்தர்களின் மருத்துவ முறையில் மணிமகுடமாக இருப்பது கரிசாலை நெய் என்றால் அது மிகையில்லை.
இந்த நெய்யை சற்று முயற்சி செய்தால் யார் வேண்டுமானாலும் செய்யலாம். கரிசலாங்கண்ணி கீரையை வேரோடு பிடுங்கி வந்து நன்றாக கழுவி அம்மியில் வைத்து அரைக்க வேண்டும். இந்த இடத்தில் கவனிக்க வேண்டிய பகுதி கீரையை அம்மியில் அரைக்க வேண்டுமே தவிர நமது சவுகரியத்திற்காக மிக்ஸியில் போட்டு அரைக்ககூடாது. கையின் வேகத்திற்கு கல் சுழன்று வந்து அரைத்தால் அரைபடும் பொருளின் இயற்கை தன்மை கெடுவதில்லை. மின்சார இயந்திரத்தின் அதீத வேகத்தில் அரைபடும் பொருளின் ஜீவன் போய்விடுகிறது. சக்கை மட்டுமே மிஞ்சுகிறது. இதற்கு உதாரணமாக சொல்வது என்றால், கையால் அரைக்கும் தேங்காய் சட்டினி சுவையும், மிக்ஸியில் அரைக்கும் சட்டினியின் சுவையும் ஒப்பிட்டாலே போதுமானது.
அரைக்கப்பட்ட கீரை விழுதை உருண்டையாக பிடித்தால் ஒரு தேங்காய் அளவு வரவேண்டும். அதாவது அந்த அளவிற்கு கீரை தேவை இந்த விழுதை சுத்தமான பசுநெய்யில் போட்டு கலக்கி ஐந்துகிராம் அளவிற்கு சீனி காரத்தை போட்டு விறகு அடுப்பில் ஏற்றி மிதமான நெருப்பில் மெழுகு பதமாக காய்ச்சி வடிகட்டி பத்திரபடுத்தி கொள்ள வேண்டும். இந்த மெழுகை சூரியன் உதிக்கும் முன் எழுந்து வலது கை பெருவிரலால் தொட்டு வாயை நன்றாக திறந்து உள்நாக்கில் பின்புறம் உள்ள மேல்நோக்கி அமைந்த துவாரத்தில் தடவி அரைமணிநேரம் காத்திருக்க வேண்டும். இந்த நேரத்தில் ஊர்த்துவ நாடி, சுழுமுனை நாடி என்றெல்லாம் சித்தர்களால் சொல்லப்படும் சூட்சம நாடிக்குள் அடங்கி கிடக்கும் கோழை நூல் நூலாக வெளியே வந்து விழும். இப்படி நாற்பத்தி எட்டு நாட்கள் தொடர்ந்து செய்தால் உடம்பில் உள்ள தேவையற்ற சளி வெளியேறி, ஆரோக்கியமான நுரையீரல் உடல் முழுவதும் நல்ல பிராணக்காற்றை தரும். இந்த முறையை மூன்று வருடத்திற்கு ஒருமுறை செய்து வரவேண்டும். இத்தோடு ஆறுமாதத்திற்கு ஒருமுறை பேதிக்கு மருந்து உண்டு குடலை சுத்தப்படுத்தி கொள்ள வேண்டும்.
இவைகள் தான் தினசரி நமது உடம்பை பராமரிக்க சித்தர்கள் கூறிய நித்திய சுத்தி என்ற காயசித்தி முறையாகும்.

பித்துருதோஷம்

குடும்பத்தில் வாழ்ந்து மறைந்த முன்னோர்களை பித்துருக்கள் என்கிறோம்.அவர்களுடைய ஆத்மா சாந்தி அடையாததால் வருகிற தோஷம் பித்துருதோஷம்.
ஜாதகத்தில் கண்டறிவது :
ஜாதகத்தில் சூரியன் அல்லது சந்திரன் ராகுவுடனோ அல்லது கேதுவுடனோ எந்த இடத்தில் சேர்ந்திருந்தாலும் பித்துருதோஷம் உண்டு.
பரிகாரம் :
ராமேஸ்வரம் சென்று திலஹோமம் செய்வதும், கயா சிரார்த்தம் செய்வதும்,காசி, அலகாபாத் சென்று திவசம் செய்வதும் , திருவெண்காடு சென்று திதி கொடுப்பதும் இந்த தோஷத்திற்குப்பரிகாரம்.
திலஹோமம் :.
குடும்பத்தில் யாரேனும் விபத்துக்களில் இறந்திருந்தாலோ அல்லது தற்கொலை செய்துகொண்டிருந்தாலோ மட்டும் தில்ஹோமம் செய்ய வேண்டும்.
அனைவரும் இயற்கை மரணம் அடைந்திரிந்தால் திலஹோமம் செய்ய வேண்டியதில்லை.
தோஷ்த்தினால் ஏற்படும் தீயவிளைவுகள் :
தோஷம் உள்ளவர்களுக்கு
1.திருமணம் நடக்காது அல்லது மிகவும் தாமதமாக நடக்கும்.
விவாகரத்து ஏற்படலாம் அல்லது அன்னியோன்னியம் இராது.அல்லது குழந்தைபாக்கியம் இருக்காது.
2. ஒரு சிலருக்கு கடுமையான உடல் உபாதை.மனநோய் காரணமாக தாம்பத்ய வாழ்க்கை பாதிக்கும்.
3.ஒரு சிலருக்கு பலமுறை திருமணம் நடக்கவும் வாய்ப்புண்டு.
4. கலப்புத்திருமணம் , ரகசியதிருமணம் நடக்கவும் வாய்ப்புண்டு.
தோஷம் வரக்காரணம் :
1.கருச்சிதைவு
2. பெற்றோர்களை இறுதிக்காலத்தில் கவனிக்காதது.
3.இளைய தாரத்துப்பிள்ளைகள் மூத்தோருக்கு திதி தராதது.
4.தந்தைக்கு எத்தனை தாரம் இருந்தாலும் அனைவருக்கும் தவறாமல் திதி தர வேண்டும்.
5. ஆண்வாரிசு இல்லாத சித்தப்பா, பெரியப்பா, அத்தை, சகோதரர், ஆகியோருக்கு திதி கொடுக்காவிட்டால் வரும்.
6. துர்மரணம் அடைந்தவர்களுக்கு திதி கொடுப்பதோடு மட்டுமின்றி கயாசென்று கூபசிரார்த்தம் செய்யாவிடில் பித்துரு தோஷம் வரும்.
7. தோஷத்தில் மிக கொடிய தோஷம் பித்துரு தோஷம்.
இவர்களது குடும்பம் ஜோதிட ரீதியில் எவ்வளவு அதிஷ்டமான கிரகநிலைகள் பெற்று இருந்தாலும் அந்தப்பலனை இவர்கள் அடைய முடியாமல் பித்துருக்களும், பித்துரு தேவதைகளும் தடை செய்கிறார்கள்.
பித்துருக்களின் சாபம் கடவுள் நமக்கு தரும் வரங்களையே தடுத்து நிறுத்தும் தன்மையுடையது.
பரிகாரம்:
சிவபெருமானுக்கு சந்தன அபிஷேகம் செய்யவும்.இந்த அபிஷேகம் அமாவாசையன்று செய்யவும்.இந்த அபிஷேகத்தைப்பார்த்த நாள் முதல் உங்கள் பித்துருதோஷம் விலகும்.
சிவன் கோயில் சென்று அபிஷேகம் செய்ய இயலாதவர்கள் 100 கிராம் பச்சரிசி, அகத்திக்கிரை, 50 கி கருப்பு எள், 100 கி வெல்லம், வாழைக்காய் ஆகியவற்றை அமாவாசை அன்று பசுமாட்டிற்கு கொடுக்க பித்துரு தோஷம் நீங்கும்.
தொடர்ந்து 9 அமாவாசைக்கு இந்த எளிய பரிகாரத்தை செய்ய வேண்டும்.இதனால் பித்துரு தோஷம் முழுமையாக நீங்கும்.
திருவருளால் ஜெயம்

விநாயகர்



இருக்கும்  இடத்திற்கேற்ப அருள் வழங்குபவர்விநாயகர்..! அரச மரத்தடி விநாயகரை வணங்கினால் குழந்தைப்பேறு விரைவில் உண்டாகும். வன்னி மரத்தடி விநாயகர், கிரஹ தோஷங்கள் விலக்குவார். ஆலமரத்தடி விநாயகரை வழிபடுவதால் சூன்யங்கள் அகலும். வேப்பமர விநாயகர் அருளால் தீராத, நாட்பட்ட நோய்கள் மறையும். ஆலயங்களில் உள்ள கோஷ்ட விநாயகரை வணங்க, அனைத்து தெய்வங்களின் திருவருளும் கிடைக்கும். நாவல் மரத்தடி விநாயகரை வழிபடுவதால் பிள்ளைகளுக்கு அறிவு வளரும். நடன கணபதி, கலைகளில் சிறந்து விளங்கச் செய்வார்.
ஆற்றங்கரை விநாயகர், பாவங்களை எளிதாகக் கரைத்துவிடுவார். இடத்திற்கேற்றபடி அமர்ந்தருளும் ஆனைமுகனைப் பற்றி ‘ஆலயமும் கணபதி அம்சங்களும்’ என்ற விதிகளின்படி, சிவாலயங்களில் அம்மன் சந்நிதானத்தின் பக்கவாட்டிலும் முருகன் சந்நதி முகப்புகளிலும் பிரதிஷ்டை செய்யப்பட்டிருக்கும் கணபதி மூர்த்தங்கள், சக்தி வாய்ந்தவை. இந்த மூர்த்தங்களில் தோரண வாயில்களுக்கு நேராக அமர்ந்திருப்பவர் தோரண கணபதி எனப்படுகிறார். தோரண கணபதியின் அருட்தன்மை சக்தி தேவி தனியாகக் கோயில் கொண்டிருக்கும் திருத்தலங்களில் தோரண வாயில் என்ற அமைப்பு உள்ளது.
அதனுள் பிரவேசிக்கும்போது பலிபீடத்திற்கு அருகில் வலப்பாகத்தின் மேகலையில் ஸ்ரீதோரண கணபதியை பிரதிஷ்டை செய்திருப்பார்கள். அனைத்து வகையான கணபதி மூர்த்தங்களுக்கும் இல்லாத ஒரு சிறப்பு இந்தத் தோரண கணபதிக்கு இருக்கிறது. ஜடாமகுடமும் கழுத்தில் ருத்ராட்ச மாலையும் வலக்கரத்தில் அங்குசமும் இடது மேற்கரத்தில் பாசமும், இடது கீழ்க்கரத்தில் மோதகமும் வலக்கரத்தில் தந்தமும் வைத்துக்கொண்டு வலக்கையில் உள்ள தந்தத்தைப் பயன்படுத்தி தன்னை வணங்குவோர் வாழ்வில் உள்ள கடன் என்கின்ற ருணத்தைத் தீர்த்து அருள் செய்கிறார் என்று சிவாகமத் துதிகள் சொல்கின்றன.
மூல ஆலயத்திலிருந்து நோக்கும்போது இவர் அமர்வது பிரம்ம ஸ்தானமாக அமைவதால் கடனைத் தீர்ப்பதில் இவர் கறாராக இருக்கிறார். எப்போதுமே வலம்புரி கணபதியாக இருப்பவர்; அதிக சாந்நித்தியம் உடையவர். பத்ம பீடம் என்கிற தாமரை பீடத்தில் அமர்ந்தவராய் அதிர்ஷ்டம் மற்றும் லட்சுமி கடாட்சத்தை அருளும் சக்தி கொண்டவர் இவர். கோஷ்டங்களை ஒட்டிய மேகலைப் பகுதியிலும் தோரண வாயிலுக்கு எதிராகவும் அமரும் கணபதிக்கு இந்த விசேட சக்தி உள்ளதால், அத் தலங்களுக்குச் சென்று வணங்கினால் பலனும் கிடைத்து விடுகிறது.
பிள்ளையார்பட்டி, மயிலாடுதுறை, வாரணாசி ஆகிய இடங்களிலும், சிரு ங்கேரி சாரதா பீடத்துடன் கூடிய சாரதாம்பாள் சந்நதியிலும் தோரண கணேசர் அமர்ந்துள்ளார். கடன் தீர்க்கும் கணபதி வழிபாடு மனிதர்களாகப் பிறந்தவர்கள் தேவகடன், பித்ருகடன், மானுடக் கடன்களைத் தீர்ப்பதில் கவனத்துடன் இருக்க வேண்டும். மானுட கடனைத் தீர்க்கக் கணபதி வழிபாடு உகந்தது. ருணம் என்ற கடனைத் தீர்க்காதுவிட்டால் நம் மனமும், வாழும் காலமும் ரணமாகிவிடக்கூடும். இரு தரப்பினருக்கும் பாதிப்பு ஏற்படுத்தாமல் நலம் தரவல்லது இந்த கணபதி வழிபாடு.
தோரண கணபதி சந்நதிக்கு செவ்வாய், சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் ஏதேனும் ஒருநாள் என்று ஆறு வாரங்கள் சென்று கணபதியின் மேகலை முன்பாக மூன்று நெய்தீபங்கள் ஏற்றி முப்பழங்களாக மாதுளை, மா, கொய்யா இவற்றை (தோரண கணபதிக்கு பிடித்த பழங்கள்) வைத்து அறுகம்புல்லைச் சாற்றி அர்ச்சனை செய்ய வேண்டும். பிறகு தோரண கணபதி மூல மந்திரத்தை 12 முறை சொல்லி தோப்புக்கரணம் செய்து ஆத்ம பிரதட்சிணமும் (தன்னையே சுற்றுதல்) செய்து நமஸ்கரித்தல் வேண்டும்.
‘‘ஓம் ஸ்ரீம் ஹ்ரீம் க்லாம் க்லௌம் கம் தோரண கணபதியே சர்வகார்ய கர்த்தாய, சகல சித்திகராய, ஸர்வஜன வசீகரணாய, ருணமோசன வ ல்லபாய, ஹ்ரீம் கம் கணபதயே ஸ்வாஹா’’ என்றும், தமிழில் ஒரு விசேடப் பாடலான தோரண கணபதி துதியையும் கூறவேண்டும்:
முக்தியின் பொருள் சொன்ன மூத்தக் கரிமுகவாய்
காரணணே புகழ்ப்பொருளே கடன்தீர் வீரனே!
தோரண கணபதயே! தோன்றிடுக என் கண்முன்னே!
வாங்கிய கடனை அடைக்க இயலாமல் அவஸ்தைபடுவோரும், கொடுத்த கடனைத் திரும்பப் பெற முடியாமல் அல்லல்படுவோரும் முதலுக்கு மோசம் இன்றி பணம் திரும்ப வந்தால் போதும் என்று நினைப்பவர்களும், இந்த விசேட கணபதிப் பெருமானை வழிபட்டுப் பலன் அடைய முடியும். நமது பூஜையால் மகிழ்ச்சி அடையும் தோரண வாயில் கணபதி தன்னுடைய எழுத்தாணிபோல் உள்ள தந்தத்தால் நம்மை நெருக்குகிற கடன் தீரும்படி தீர்ப்பு எழுதிவிடுவார் என்பது நம்பிக்கை.
திருவருளால் ஜெயம்

அழகர்கோவில் வரலாறு!!!.............. பதினெட்டாம் படி காவல் ஏன்?!?


வளம் மிக்க கேரள தேசத்தை ஆட்சி செய்து வந்த அரசன் ஒருவன் ,ஒருமுறை பாண்டிய நாட்டில் உள்ள திருமாலிருஞ்சோலை என்னும் திவ்விய தேசமான அழகர்கோவில் வந்தான் பள்ளிகொண்ட ,அழகே உருவான கள்ளழகரை தரிசித்தான் . அழகரின் அழகை கண்ட அந்த அரசன் அதை உருவேற்றி சக்தியேற்றி தம் தேசமான கேரளாவுக்கு கொண்டு செல்ல திட்டம் தீட்டினான் . நாடு திரும்பிய அரசன் ,மந்திர ,தந்திரங்களில் நன்கு தேர்ச்சி பெற்ற 18 கேரள மந்திரவாதிகளை தேர்வு செய்து அழகரின் சக்தியை எடுத்து அழகரை கேரளம் தூக்கி வரும்படி கட்டளையிட்டான்.
பதினெட்டு மந்திரவாதிகளும் மன்னனின் கட்டளையை நிறைவேற்ற அழகர்மலை வருவதற்கு ஆயத்தமானார்கள் . பதினெட்டு மந்திரவாதிகளுக்கு காவலாக மலையாள தேசத்தின் காவல் தெய்வமான கருப்பும் வெள்ளை குதிரை மீதேறி அவர்கள் முன்னே சென்றது. காவல் தெய்வத்தின் பின்னே இவர்கள் அழகர்மலை நோக்கி புறப்பட்டனர்.
அனைவரும் அழகர் மலையை அடைந்தனர். அழகர் மலையை அடைந்த காவல் தெய்வம் ,அழகரின் அழகில் மயங்கி தன்னை மறந்து நின்றது . அழகரின் அழகிய தங்க ஆபரணங்களை கண்ட 18 மந்திரவாதிகளும் தன்னுடன் வந்த காவல் தெய்வத்தை மறந்து ,ஆபரணங்களையும் அழகரையும் தூக்கி செல்லும் எண்ணம் கொண்டு கருவறை நோக்கி சென்றனர்.
இவர்களின் கெட்ட நோக்கத்தை கண்ட அடியார் ஒருவர் ,ஊரில் உள்ள மக்களிடம் சொல்ல ,மக்கள் அனைவரும் திரண்டு வந்து ,அந்த 18 பேரையும் கொன்று ,களிமண்ணால் படிகள் செய்து ,படிக்கு ஒருவராக பதினெட்டு படிகளிலும் பதினெட்டு பேரையும் புதைத்தனர் .
தன்னிடம் மயங்கி நின்ற காவல் தெய்வத்திற்கு கருணை புரிய இறைவன் கருணை கொண்டார் . காவல் தெய்வம் கருப்பசாமிக்கு காட்சி தந்து, அருள் புரிந்து ,வரம் தந்து ,"என்னையும் மலையையும் காவல் புரிந்து வருவாய் என அருள் புரிந்தார் ".காவல் தெய்வமான கருப்பசாமி இம்மலையில் தங்கி இருந்து அழகர் மலையை இன்று வரை காத்து வருவதாக நம்பிக்கை உள்ளது.
காடு வீடெல்லாம் முன்னோடியாய் காவல் புரிந்து மக்களை காப்பாய் என இறைவன் கட்டளையிட்டார் . 18 பேருடன் வந்த தெய்வமாதலால் ,பதினெட்டு படிகளின் மீது நின்று காவல் தெய்வமாய் காட்சி தந்தார் . ஒருநாள் கோவில் பட்டர் கனவில் தோன்றிய கருப்பசாமி ,திருமால் பள்ளிகொண்ட திருவாயிலையும் மலையையும் காப்பேன் ,திருமாலின் அர்த்த ஜாம பூஜை பிரசாதங்களை தனக்கு படைக்குமாறு வேண்ட அன்று முதல் அழகருக்கு படைக்கப்படும் அர்த்த ஜாம பூஜை பிரசாதங்கள் பதினெட்டாம் படி கருப்பசாமிக்கு படைக்கப் படுகிறது .
அழகர் தானும் ஒரு சபதம் செய்தார்.
தன் கோவில் பொருட்களை கருப்பசாமியிடம் காவலுக்கு ஒப்படைத்து விட்டு...தான் இனிமேல் கோபுர வாசல் வழியாக வெளியே வரமாட்டேன் என்று முடிவு செய்தார்....ஆடி 18 ம் தேதி மட்டும்..கோபுரக்கதவைத்திறந்து வைத்தவுடன் ..சுந்தரராஜப்பெருமாள் சுதர்சன சக்கரம் வெளியே சென்று வருவதாக ஐதீகம்.