Saturday, May 28, 2016

“எல்–நினோ” என்றால் என்ன?


“எல்–நினோ” என்றால் என்ன? அது எப்படி ஏற்படுகிறது? தமிழ் நாட்டின் அதன் பாதிப்புக்கள் என்ன? என்பதை இந்த கட்டுரையில் பார்ப்போம். “எல்–நினோ” என்பது, பூமத்திய ரேகைக்கு அருகில் இருக்கும் பசிபிக் கடலில், வெப்ப சலனத்தால் ஏற்படும் பருவ நிலை மாற்றம். இது ஸ்பெயின் வார்த்தை. இந்த பருவ மாற்றத்தால், பசுபிக் கடலில் ஏறத்தாழ 50 ஆயிரம் சதுர கிலோ மீட்டர் பரப்பளவில், கடல் நீர் சூடாகி, அதன் மூலம் பருவ நிலையில் மாற்றத்தை ஏற்படுத்துகிறது. அதே நேரத்தில் வளி மண்டலத்திலும் பாதிப்பை ஏற்படுத்துகிறது. இதில் குறிப்பாக பெரு நாட்டின் கடல் பகுதியில், சூடேறிய கடல் நீரின் நீரோட்டம் பொதுவாக, டிசம்பர் மாதம் உருவாகிறது. பசுபிக் கடலில் உருவாகும் இந்த எல்-நினோ” பருவ மாற்றம், இந்திய மகாசமுத்திரம், அரபிக்கடல், வங்க கடல் போன்ற பகுதிகளிலும் பருவ மாற்றத்தை ஏற்படுத்தி விடுகிறது. இதன் மூலம், மழை பெய்ய வேண்டிய இடத்தில் மழை பெய்யாத நிலையும், தேவையற்ற இடத்தில் மிகவும் அதிகமான மழையும், சில இடத்தில், ஒரே நேரத்தில் மழை கொட்டோ கொட்டு என்றும் கொட்டும்.
“எல்–நினோ” காரணமாக, பருவ காற்றுகள் திசை மாறும்., பருவ காற்றுகளின் பலம் குறையலாம்., அல்லது அதிகரிக்கலாம். கடலில் மீன்கள், ஓரிடத்தை விட்டு, வேறொரு இடத்துக்கு இடம் மாறிச்செல்லும்.இதனால் மீன்பிடி தொழிலும், மீனவர்களும் பாதிப்புக்கு உள்ளாவார்கள். “எல்–நினோ”-பருவ மாற்றத்திற்கு உதாரணமாக, பெரு நாட்டில் எப்போதும் வறண்டு கிடக்கும் அப்யூரிமேக் நதிப்பகுதியில், அளவுக்கு அதிகமாக மழை பெய்து, பெரும் சேதத்தை விளைவித்துள்ளது. அந்த ஆறு கரை புரண்டு ஓடி இருக்கிறது., இதனால் லட்சக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டனர். இது போல, சாச்சுரா பாலை வனப்பகுதியில் பெரு மழை பெய்து, அங்கு பெரிய ஏரியை உருவாக்கி விட்டது. இந்த “எல்–நினோ” பருவ மாற்றத்தினால், பசுபிக் கடலில் இருந்த சில சிறிய தீவுகள், காணாமல் போய் விட்டன., அதே நேரத்தில் புதிதாக சில தீவுகள் உருவாகியுள்ளன. மேலும் “எல்–நினோ” உருவாகும் கடல் பகுதிக்கு மேலே வானில் பாறை போன்ற மேகங்கள் உருவாகி, மழை தரும் மேகங்களை தடுத்து நிறுத்தியும், அவற்றை திசை மாற்றிடவும் செய்வதால், மழை பெய்ய வேண்டிய இடத்தில் மழை பெய்யாமல் போகும். திசை திரும்பிய மழை மேக கூட்டம், வேறு ஒரு பகுதிக்கு சென்று கொட்டி, பெருத்த சேதத்தை ஏற்படுத்தி விடும். இந்த செயலை “ஜெட் டிரீம்ஸ்” என்று ஆங்கிலத்தில் குறிப்பிடுகிறார்கள்.
பூமியை சுற்றிய வளி மண்டலத்தில் மீத்தேன், நீராவி, கரியமில வாயு, ஓசோன், நைட்ரஸ் ஆக்ஸைட் ஆகிய வாயுகள் உள்ளன.இவற்றின் மீது பட்டுதான், சூரிய ஒளி பூமி மீது படுகிறது. இதனால், சூரிய ஒளியின் வெப்பம் குறைந்து விடுகிறது. இந்த இயற்கையான பருவ செயலை, “எல்–நினோ” மாற்றி விடக்கூடிய சக்தி கொண்டது. இப்படி மாறி விடும் பட்சத்தில், பூமியின் ஒரு பகுதியில் உஷ்ணம் அதிகரிக்கும்., மற்றொரு பகுதியில் உஷ்ணம் குறைந்து, பனிக்கட்டிகள் படரும். இப்படித்தான், ஆர்டிக், அண்டார்டிக் கண்டம் பகுதியில் பனிக்கட்டிகள் உறைந்துள்ளன. இதில், நாளுக்கு நாள் ஆயிரக்கணக்கான டன் பனிக்கட்டிகள் உஷ்ணத்தால் தண்ணீராக மாறி, கடலில் கலக்கிறது. இதனால், கடலின் நீர் மட்டம் அதிகரிக்கும்.உலகில் பருவத்தில் மாற்றங்கள் ஏற்படுவதால், தட்ப வெட்ப நிலை சீர்குலையும் ஆபத்தும் உள்ளது. நன்கு சிந்தித்து பார்த்தால், இந்த பருவ நிலை மாற்றத்தாலும், “எல்–நினோ” தாக்கத்தாலும், இமய மலையிலுள்ள பனிக்கட்டிகள் மொத்தமாக உருகினால், கங்கை, பிரம்ம புத்திரா போன்ற ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்படும். இதே பருவ மாற்றத்தால், இமய மலையில் பனிக்கட்டிகள் உருவாக வில்லை என்றால், கங்கையும், யமுனாவும், காவிரியும், வறண்டு போய் விடும். இது போன்ற ஆபத்துக்களும், இந்தியாவை மிகப்பெரிய அளவில் எதிர் நோக்கி இருக்கின்றன. வறட்சி ஏற்பட்டால், விவசாயம் குறையும்., பஞ்சம் ஏற்படும்.
இந்த “எல்—நினோ”, தமிழ்நாட்டையும் பாதிக்கும் அபாயம் இருக்கிறது. வங்க கடலில், 2 லட்சத்துக்கும் அதிகமான வகைகளில், பவள பாறைகள் இருக்கின்றன. இதில் பல லட்சம் டன் மீன்கள் வளருகின்றன. இந்த பகுதியில் பவள பாறைகள் 0.5 டிகிரி வெப்பம் அதிகரித்தால் கூட, மீன்கள் இந்த பவளப்பாறை பகுதியில் வாழ முடியாது. ஏற்கனவே இந்த பகுதியில் மூன்றில் இரு மடங்கு மீன்கள் அழிந்து விட்ட நிலையில், மேலும் பருவ மாற்றம் ஏற்பட்டால், இந்த பகுதியில் மீன்பிடி தொழில் கேள்விக்குறியாகி விடும்.
“எல்—நினோ” தாக்கத்தின் காரணமாக, தமிழ்நாட்டில் இந்த ஆண்டு மழை இன்னும் ஒரு மாதம் வரை ஆங்காங்கு நீடிக்கலாம். அடுத்த ஆண்டு மார்ச் வரை தமிழ்நாடு உள்ளிட்ட தென்மாநிலங்களில் நல்ல மழை இருக்கும் என்றும் ஐ.நா. ஆய்வறிக்கை கூறுகிறது. அதே நேரத்தில் “எல்—நினோ”வின் தாக்கம் அடுத்த ஆண்டு (2016) மிக பெரிய அளவில் இருக்கும் என்றும், ஐ.நா. அறிக்கை கூறுகிறது. கம்போடியா, மத்திய மற்றும் தென் இந்திய பகுதிகள், கிழக்கு இந்தோநேஷியா, பிலிப்பைன்ஸ், தாய்லாந்து ஆகிய நாடுகளில் அடுத்த ஆண்டு “எல்—நினோ”வின் பாதிப்புகளை உணர முடியும் என்றும் ஐ.நா. ஆய்வறிக்கை கூறுகிறது. தென் கிழக்கு ஆசிய நாடுகளில் குறிப்பாக இந்தியாவின் தென் பகுதி, இலங்கை ஆகிய நாடுகள், வெள்ளத்தை சந்திக்க வேண்டியது இருக்கும் என்றும் ஐ.நா. அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. அதே நேரத்தில், பசுபிக் நாடுகள், பபுவா நியூகினியா, திமோர், உள்ளிட்ட பல நாடுகளில் வறட்சி காணப்படும் என்றும், 2015—16—ல் ஏற்படும் “எல்-நினோ” தாக்கம், முந்திய 1997—98—ல் ஏற்பட்டதை விட அதிக சக்தியுள்ளதாக இருக்கும் என்றும் இந்திய தென் பகுதியில் பெருமழை பெய்யும் என்றும், இதனால் மேலும் வெள்ள சேதம் ஏற்படும் என்றும் , ஐ.நா. அறிக்கையின் மூலம் தெரிய வருகிறது. பிலிப்பைன்ஸ், இந்தோ னேஷியா போன்ற நாடுகளில் வறட்சியும் ஏற்படலாம்.
சங்க காலத்தில், மாதம் மும்மாரி பொழிந்தது என்று குறிப்பிடப்பட்டுள்ளது. முற்காலத்தில் சம்பா பயிர் 6 மாத பயிராகும். அந்த அரிசியே மிகவும் சத்தானதாகவும் இருந்தது. இப்போது அது போன்ற 6 மாத பயிரை பயிரிட இப்போது முடிய வில்லை. காரணம், பருவ நிலை மாற்றம் காரணமா, மாதம் மும்மாரி என்பது, மாதம் ஒரு முறை மழை பெய்வதே கேள்விக்குறியாகி விட்டது முந்திய ஆண்டுகளை நாம் மறந்திருக்க மாட்டோம். இதனையும் தவிர, தற்போது தமிழ் நாட்டில் குளிர்காலத்தின் அளவு 11 நாட்கள் குறைந்து விட்டது என்பதையும் கவனிக்க வேண்டும். கோடைகாலத்தின் அளவு அதிகரித்து விட்டது. காரணம், பருவ நிலை மாற்றமே.
முற்காலத்தில் மழை பெய்ததும், கிராமப்பகுதிகளில் சிவப்பு நிற பட்டுடல் கொண்ட சிறிய உயிரினங்கள் (பட்டுப்பூச்சி) தரையில் ஊர்ந்து செல்வதை நாம் பார்த்திருக்கலாம். இப்போது அது போன்ற உயிரினங்களை காண முடிய வில்லை. ஏன் ? பருவ நிலை மாற்றத்தால், இது போன்ற பட்டுப்புழுக்கள் உள்பட 50 வகையான உயிரினங்கள் அழியும் நிலைக்கு சென்று விட்டன. வாழை இலையில் சாப்பிட்ட நாம், இன்று “பிளாஸ்டிக்” வாழை இலையில் சாப்பிடுகிறோம். எந்த ஒரு பொருளையும் பார்சல் செய்ய பிளாஸ்டிக் தாளை பயன் படுத்துகிறோம். இவையெல்லாம் நமது நாட்டில் சுற்றச்சூழலை காலப்போக்கில் மிகப்பெரிய அளவில் பாதிக்கும் என்பதில் மாற்றமில்லை.எனவே, “எல்-நினோ” காரணமாக, தமிழ்நாடு உள்பட இந்தியா பாதிப்புக்கு உள்ளாகாதவாறு, நாம் தான் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். இதற்கு, பூமி சூடாகாதவாறு காப்பது, மனிதர்களின் கடமை. இந்த நிலையில் பாரீஸ் நகரில் நடந்த பருவ நிலை மாற்ற மாநாட்டில்,” புவி வெப்ப மயமாதலை 2 டிகரி செல்சியசுக்கு கீழாக குறைக்க வேண்டும்” என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது, மரம் வளர்ப்போம்! சுற்றுச் சூழலை காப்போம்!!!!!!!.
“எல்-நினோ”வினால் ஏற்பட்ட பாதிப்புகள்
*பெரு நாட்டில் 1525-ல் முதல் எல்-நினோ கண்டுபிடிக்கப்பட்டது.
*1789–93:இந்தியாவில் 60 ஆயிரம் பேர் மரணத்துக்கும், தென் ஆப்பிரிக்காவில் கடும் பஞ்சத்துக்கும் எல்-நினோ காரணமாக இருந்தது.
*1982–83:வெப்ப மண்டல பிரதேசங்களில் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் இறந்தனர். ரூ. 1,300 கோடி மதிப்புள்ள பொருட்சேதமும் ஏற்பட்டது.
*1990–95:இந்திய உள்பட உலகம் முழுவதும் பருவ நிலை மாற்றங்கள் ஏற்பட்டது.
*1997–98:எல்-நினோ காரணமாக உலகின் ஒரு பகுதியில் வெள்ளப்பெருக்கும், வேறு சில பகுதிகளில் வறட்சியும் ஏற்பட்டு ஏறத்தாழ 2,100 பேர் இறந்துள்ளனர். உலகம் முழுவதும் ஏற்பட்ட சேத மதிப்பு ரூ. 3,300 கோடி டாலர்.
*2003: ஐரோப்பாவில் ஏற்பட்ட வெப்ப அலையால், 80 ஆயிரம் பேர் உயிரிழந்தனர்.

No comments:

Post a Comment