Wednesday, August 29, 2012

முதன்முதலாய் அம்மாவுக்கு .....வைரமுத்துக்கவிதை

முதன்முதலாய் அம்மாவுக்கு .....வைரமுத்துக்கவிதை  - வாழ்க்கை கவிதை




முதன்முதலாய் அம்மாவுக்கு .....வைரமுத்துக்கவிதை  

ஆயிரம்தான் கவி சொன்னேன் 
அழகழகாய்ப் பொய் சொன்னேன் 
பெத்தவளே ஓம்பெருமை 
ஒத்தைவரி சொல்லலையே! 
எழுதவோ படிக்கவோ 
ஏலாத தாய்பத்தி 
எழுதியென்ன லாபமென்று 
எழுதாமல் போனேனோ ? 
பொன்னையாதேவன் பெற்ற 
பொன்னே குலமகளே 
என்னைப் புறந்தள்ள 
இடுப்புவலி பொறுத்தவளே 
வைரமுத்து பிறப்பான்னு 
வயிற்றில்நீ சுமந்ததில்லை 
வயிற்றில்நீ சுமந்தஒண்ணு 
வைரமுத்து ஆயிடுச்சு 
கண்ணுகாது மூக்கோட 
கருப்பா ஒருபிண்டம் 
இடப்பக்கம் கிடக்கையிலை 
என்னன்னா நினைச்சுருப்ப ? 
கத்தி எடுப்பவனோ ? 
களவாடப் பிறந்தவனோ ? 
தரணியாள வந்திருக்கும் ? 
தாசில்தார் இவன்தானோ ? 
இந்த விபரங்கள் 
ஏதொண்ணும் தெரியாமை 
நெஞ்சூட்டி வளத்த உன்னை 
நினச்சா அழுகைவரும் 
கதகதண்ணு கழிக்கிண்டி 
கழிக்குள்ளே குழிவெட்டி 
கருப்பட்டி நல்லெண்ணெய் 
கலந்து தருவாயே 
தொண்டையில அதுயிறங்கும் 
சுகமான இளஞ்சூடு 
மண்டையில இன்னும் 
மசமசன்னு நிக்குதம்மா 
கொத்தமல்லி வறுத்துவச்சிக் 
குறுமொளகா ரெண்டுவச்சு 
சீரகமும் சிருமிளகும் 
சேர்த்துவச்சு நீர்தெளிச்சு 
கும்மி அரச்சு நீ 
குழகுழன்னு வழிக்கையில 
அம்மி மணக்கும் 
அடுதத்தெரு மணமணக்கும் 
தித்திக்கச் சமைச்சாலும் 
திட்டிகிட்டேச் சமைச்சாலும் 
கத்திரிக்காய் நெய்வடியும் 
கருவாடு தேனொழுகும் 
கோழிக் கொழம்ம்புமேல 
குட்டிக்குட்டியா மிதக்கும் 
தேங்காய்ச் சில்லுக்கு 
தேகமெல்லாம் எச்சிஊரும் 
வருமையில நாமபட்ட 
வலிதாங்க மாட்டாம 
பேனா எடுத்தேன் 
பிரபஞ்சம் பிச்செரிஞ்சேன் ! 
பாசமுள்ள வேளையில 
காசுபணம் கூடலையே ! 
காசுவந்த வேளையிலே 
பாசம்வந்து சேரலையே ! 
கல்யாணம் நான்செஞ்சு 
கதியத்து நிக்கயிலே 
பெத்தஅப்பன் சென்னைவந்து 
சொத்தெழுதிப் போனபின்னே 
அஞ்சாறு வருசம்உன் 
ஆசைமுகம் பாக்காமப் 
பிள்ளைமனம் பித்தாச்சே 
பெத்தமனம் கல்லாச்சே 
படிப்புப் படிச்சுக்கிட்டே 
பணம் அனுப்பி வச்சமகன் 
கைவிட மாட்டான்னு 
கடைசியில நம்பலையே ! 
பாசம் கண்ணீரு 
பழையக்கதை எல்லாமே 
வெறிச்சோடி போன 
வேதாந்த மாயிருச்சே ! 
வைகயில ஊர்முழுக 
வல்லாரும் சேர்ந்தொழுக 
கைப்பிடியாக் கூட்டிவந்து 
கரைசேத்து விட்டவளே 
எனக்கொன்னு ஆனதுன்னா 
உனககுவேற பிள்ளை உண்டு 
உனக்கொண்ணு ஆனதுன்னா 
எனக்குவேற தாயிருக்கா ? 
.............................................. வைரமுத்து 

No comments:

Post a Comment