Friday, May 17, 2013

செவ்வாய் கிரகத்தில் உயிரினங்கள் வாழ முடியுமா?




செவ்வாய் கிரகத்தில் நீரோடை இருப்பதை கியூரியா சிட்டி விண்கலம் கண்டுபிடித்துள்ளது.

செவ்வாய் கிரகத்தில் உயிரினங்கள் வாழ முடியுமா? என்பது குறித்து ஆய்வு நடத்த அமெரிக்காவின் ‘நாசா’ மையம் கியூரியாசிட்டி என்ற ஆய்வு விண்கலத்தை செவ்வாய் கிரகத்துக்கு அனுப்பியது. அது கடந்த ஆகஸ்டு 6-ந் தேதி வெற்றிகரமாக அங்கு தரை இறங்கி ஆய்வு மேற்கொண்டு வருகிறது.

செவ்வாய் கிரகத்தின் நிலப்பரப்பை போட்டோ எடுத்து அனுப்பியது. மேலும், அங்குள்ள மலையின் பாறையை படம் எடுத்து ஆய்வு மேற்கொண்டு வருகிறது. செவ்வாய் கிரகத்தில் தண்ணீர் இருப்பது எற்கனவே நடந்த ஆய்வில் தெரிய வந்தது.

தற்போது அங்கு மிகப் பெரிய அளவில் நீரோடை சரளை கல் படுகை இருப்பதை கியூரியா சிட்டி விண்கலம் கண்டுபிடித்துள்ளது. இவை காலே கிராடர் எரிமலையின் வட பகுதியில் உள்ளது. அதன் மூலம் இங்கு நீரோடை மற்றும் சிற்றாறுகள் இருப்பது தெரிய வந்துள்ளது.

இதை ‘கேத்தாக்’ என நாசா விஞ்ஞானிகள் அழைக்கின்றனர். இந்த சரளை கற்களின் பாறைகள் உருண்டை வடிவத்தில் உள்ளன. காற்றின் மூலம் அடித்து வரப்பட்டால் இது போன்று உருவம் கிடைக்காது. நீரோட்டத்தின் வேகத்தை பொறுத்து வடிவம் மாறியிருக்கலாம் என கருதப்படுகிறது.

மேலும், அந்த பாறைகளின் வடிவத்தின் அடிப்படையில் நீரோடை மற்றும் சிற்றாறுகளில் வினாடிக்கு 3 அடி தண்ணீர் ஓடியிருக்கும் என கணக்கிடப்பட்டுள்ளது.

கியூரியாசிட்டி விண்கலம் ஆய்வுக் கூடத்தின் இந்த கண்டுபிடிப்பு மிக முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. அது இன்னும் 2 ஆண்டுகள் செவ்வாய் கிரகத்தில் தங்கி ஆய்வு மேற்கொள்ளும். எனவே, செவ்வாய் கிரகத்தில் இருந்து இன்னும் பல அதிசய தகவல்கள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

No comments:

Post a Comment